வெள்ளி, 4 அக்டோபர், 2024

ஏ, சரஸ்வதியே உனக்கு… கல்வி நிறைந்த மேனாட்ல் பூசையில்லையே! கல்வி மறுக்கப்படும் இங்கே விழா எதற்கு?


 – கைவல்யம்

விடுதலை நாளேடு
Published September 29, 2024

“நவராத்திரி” என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள் படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் – இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில ஆண்டுகளில் அய்ப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்பத்தில் எல்லோர் வீட்டிலும் அவரவர்கள் நிலைக்கேற்ப பொம்மைகள் கடவுள்களின் உருவான படங்கள் வைத்து, ஒவ்வொரு சாயங்காலமும் ஒன்பது நாள் வரையில் பாட்டு முதலியவை பாடி, ஆரத்தி முதலியவைகள் சுற்றி, இந்த உற்சவத்தைப் பெண்கள் கொண்டாடுவது வழக்கம். இதில் புருஷர்கள் கொலு முதலியவைகளைக் கவனியாவிட்டாலும் நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள்.

வேத பாராயணம், சூரியநமஸ்காரம் முதலியவைகளை நடத்த பார்ப்பனர்களை ஏற்படுத்தி, இந்த ஒன்பது நாள்களில் நமது வீடு வேத முழக்கத்தில் நிறைந்து மங்களகரமாகும் படியாகச் செய்ய வேண்டுமாம். ஆனால் இந்த விதி பார்ப் பானுக்கும், அதிகாரம் படைத்த இராஜாக்களுக்கும், பணம் படைத்த வைசியனுக்கும் மாத்திரமாம்; மற்றவர்கள் பக்தி யோடு சுந்தரகாண்டம் பாராயணம் செய்து முடித்து பார்ப் பானுக்குச் சாப்பாடு, தட்சணை கொடுத்து ஆசீர்வாதம் பெற வேண்டுமாம்.

சரஸ்வதி பூஜை அல்லது ஆயுத பூஜை
நவராத்திரியில் கடைசி நாளாகிய நவமி தினத்தில் புருஷர்கள் தமது வீட்டிலிருக்கும் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கிவைத்து, காலை முதல் உபவாசமிருந்து சரஸ்வதியை பூசை செய்யவேண்டும்.

இந்த நவமி அன்றைய தினமாவது அல்லது அடுத்த தினமாவது, தொழிலாளிகள் ஆயுதத்தையுடையவர்கள் ஆகியவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்களை வைத்து பூசை செய்வது வழக்கம். அதனாலேயே இந்தப்பூசைக்கு ‘ஆயுதபூசை’ என்றொரு பெயரும் உண்டு.
இந்த நவராத்திரியை இந்துமதப்பிரிவுகள் என்று சொல்லும் எல்லா மதத்தவர்களும் கொண்டாடுகிறார்கள். அன்றியும் சிவ, விஷ்ணு ஆலயங்களிலும் இதைப் பெரும் உற்சவமாகக் கொண்டாடுகிறார்கள். அங்கு அம்மனை அலங்கரித்து அநேக தீப அலங்காரங்கள் செய்து, ஒன்பது நாள் இரவும் ஆராதனை நடத்துவார்கள்.

இந்த வேடிக்கைகளைப் பார்க்கவே அனேகர் மைசூருக்குப் போவது வழக்கம். இதனால் கடவுள் பக்தி பரப்பும் தொழிலையுடைய பார்ப்பனரும் இவ்வுற்சவத்தால் தங்களுக்கு இலாபமிருப்பதால் அவர்களே ஊர் ஊராய் நவராத்திரி உற்சவத்தைப் பற்றி விளம்பரப்படுத்துவார்கள். நிற்க; இதைச் சைவர், ஸ்மார்த்தர், வைஷ்ணவர், மாத்வர் முதலிய எல்லா மதத்தவர்களும் கொண்டாடக் காரணம் என்னவென்றால், கல்வியும் ஆயுதமும் அதற்குக் கற்பிக் கப்பட்ட தேவதையான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்று சொல்லப்பட்டவர்கள் – ஒவ்வொரு மதத்தினுடைய தெய்வங் களின் அம்மன்களானதனாலும், இந்து மதத்தவர்களுக்கெல் லாம் இது சம்பந்தப்பட்ட புராணக் கதைகளிலிருப்பதாலுமே யாகும். துர்க்கை முதலிய அம்மன்களை வைஷ்ணவர்கள் பூசிக்காவிட்டாலும் இது சம்பந்தமான கதைகள் அவர்களி டையேயும் உண்டு.
மற்றவர்கள் ‘சரஸ்வதிபூசை’யன்று ‘துர்க்கா லட்சுமி ‘ஸரஸ்வதீப்யோ நம’ என்று கூறிப் பூசை தொடங்குவார்கள்.

முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் அவன் பரிவாரங் களும் விருத்தியாகி கடவுள் வரத்தால் சிறந்த பதவியை அடைந்து உலகை இம்சித்துக் கொண்டிருந்ததால், இந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி ஒன்பது நாள் சிவபிரானைக் குறித்துத் தவமிருந்து, அவரிடமிருந்து தகுந்த சக்திபெற்று, ஒன்பதாம் நாள் மகிஷாசூரனைக் கொன்று, பரிவாரங்களை நாசம் செய்து சாந்தமடைந்தார். மகிஷாசூரனைக் கொன்றதனால் பார்வதி தேவிக்கு மகிஷா சூரமர்த்தினி என்கிற பெயரும் வந்தது என்பர். எனவே இந்தக் கதையின் ஆதாரத்தைக் கொண்டு அம்மன் தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாள் வேண்டிய வரங்கள் கொடுப்பார் என்னும் கருத்தை கொண்டே இவர்கள் இந்த உற்சவத்தைக் கொண்டாடுகிறார்கள்.

புராணக் கதைகள்
நம்முடைய உற்சவத்திற்கும் மூடநம்பிக்கைகளுக்கும் புராணக் கதைகளுக்கும் பாமரர்களே பங்காளிகள். படித்தவர்களுக்கு இதில் வயிறு வளர்க்கும் பிரத்தியட்ச அனுகூலமிருந்தாலும் கூட இதுபோன்ற கதைகளைப் பற்றிய விவகாரங்கள் எழும்போது “தங்களுக்கெல்லாம் வேறு கருத்தை இதில் பெரியவர்கள் அமைத்திருக்கிறார்கள்” என்று எதற்கும் ‘தத்துவ’ நியாயம் சொல்வது போல் இதற்கும் ஒரு ரகசிய அர்த்தம் உண்டாம்! வேத பாராயணம், கோயிலில் நடக்கும் பூசை, ஆராதனைகள், ஒன்பது நாளும் பார்ப்பானுக்குப் போடும் சோறு, அம்மன் விழித்தவுடன் செய்யும் தானம் முதலியவைகளால் பாமரர்களுக்கு இகலோக சுகம் சித்திக்க வேண்டுமாம். அதனால் மனம் சுத்தப்பட்டுப் பின்னால் மோட்சத்திற்கு வருவார்களாம்.

படித்த பண்டிதர்கள் இந்த ஆடம்பரத்தில் சோறும் தட்சணையும் வாங்கிக் கொண்டாலும் அவர்கள் சொல்லும் உள் கருத்தென்னவென்றால் மகிஷாசூரன், அவன் பரிவாரங்கள் முதலியவைகள் என் பதை அஞ்ஞானமும் அதன் காரியங்களுமாக வும், பார்வதியை சித்சக்தியாகவும் அது பரம் பொருளாகிய ஆத்ம ஸாசாத்கார விசேடத்தால் அஞ்ஞானத்தை வேரறுப்பதாகவும் கொள்ள வேண்டுமாம். ‘துர்க்காலட்சுமி சரஸ்வதீப்யோ நம’ என்னும் மந்திர மடத்து சாஸ்திரிகள் வரையிலும் மக்களிடமிருந்து கிடைக்கும் வரையிலும் தங்கள் லவுகீக சுகத்திற்காக அவர் களை வேரறுக்கிறார்களே ஒழிய, அவர்களது அஞ்ஞானத்தை வேரறுப்பதாகத் தத்து வார்த்தம் சொல்லும் சமயவாதிகளெல்லாம் மகிஷா சூரனிடமல்லவா (அதாவது ஆசையில்) மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்?

முன்னொரு காலத்தில் லட்சுமிதேவி உலகில் அலர்மேலுமங்கையாக வந்து, பரம பதவாசியாகிய விஷ்ணுவான திருப்பதி பெரு மாளை அடைந்து ஆனந்திக்க இந்த ஒன்பது நாள் தவமிருந்தாராம். இதன் முடிவில் அவர் எண்ணம் முற்றுபெற விவாகம் பெரிய ஆடம் பரமாக முடிந்ததாம். இந்த விசேடத்தை முன் னிட்டுதான் வைணவ மாத்வர்கள் இந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்நாள் களில் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடக்கிறது. பிரம்மாவின் பத்தினியான சரசுவதியும் இந்த தவமிருந்தாள் என்னும் கதையைக் கொண்டு, கடைசி மூன்று நாள்களும் சரசுவதிக்கு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி வாசிப்போருக்குக் கல்வி நன்றாக வருமாம். தொழில் செய்கிறவர்கட்குக் காரியங்கள் கைகூடி வருமாம்.

மேனாட்டில் உண்டா?
இதை நம்பி நடக்கும் நம்மை விட, மற்றத் தேசங்களில் எல்லாம் சரஸ்வதி எந்நாளும் திருப்தியோடு கூடின சந்தோஷத்துடன் இருக்கிறாள். நம் தேசத்தில் ஆண்டுக்கு ஒரு நாள்தான் கண்ணைத் திறந்து திருப்திப்படுகிறாள். இதற்குக் காரணம், பார்ப்பானுக்குக் கொடுப்பது சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்று பார்ப்பதற்காகவோ அல்லது பூசையின் திருப்திக் குறைவாலோ அல்லது நம்மிடம் ஆயிரமாயிரம் வருடமாக வாங்கியுண்ட நன்றிகெட்ட குணத்தை மறைப்பதற்கோ அல்லது தன் மொழியான சமஸ்கிருத இலக்கணத்தை தன் முதற் பிள்ளைகள், மற்றப் பிள்ளைகளுக்கு எங்கே சொல்லி வைத்து விடுவார்களோ? என்னும் அஞ்ஞானத்தாலோ என்பதை நாம் அறியோம்.
கிரேதாயுகத்தில் சுகேது என்னும் ஒரு அரசன் இருந்த தாகவும், அவன் சத்துருக்களால் அடிபட்டு காட்டை அடைந்து, காயத்தாலும், பசிப்பிணியாலும் நோய்வாய்ப் பட்டு அவதிப்பட்டதாகவும், அங்கு வந்த அங்கிரஸ் என்னும் ரிஷி, அரசன் பெண்சாதியான சுவேதி என்பவ ளுக்கு லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என்கிற இவர்கள் செய்த மாதிரி நீயும் தவம் செய்வாய் என்று இந்தப் பூசையை உபதேசித்ததாகவும், அவ்வாறே அவள் செய்து அரங்கிரஸ் என்னும் புத்திரனும் பிறந்து அவன் சத்துருக்களை ஜெயித் துத் தகப்பனுக்கு ராஜ்யத்தை வாங்கிக்கொடுத்தாகவும் சொல்லப்படுகின்றது.

நவராத்திரிக்கு இன்னும் இதுபோன்ற பல கதைகளும் உண்டு.
கிரேதாயுகம் முதற்கொண்டு, இதுநாள் பரியந்தம் செய்த பூசைகளும், மந்திரங்களும் அதைச் செய்த ஜன சமூ கங்களும் நம் நாடும், அதை ஏற்றுக் கொண்ட தெய்வங்களும் அய்நூறு ஆண்டுகளாக அன்னியர் படையெடுப்பால் சின்னாபின்னப்பட்டு, வெள்ளைக்கார மந்திரத்தால் வெளி யேற்றப்பட்டிருக்கையில் நமது ‘சரஸ்வதியும், லட்சுமியும் , பார்வதியும்’ அவர்களுக்குப் பூசையும், அதற்காகப் பார்ப்பனனுக்குப் பணமும், தட்சணையும் எதற்கு என்று ‘குடிஅரசு’ கேட்டு விட்டால் சமயவாதியும், சாஸ்திரவாதியும் ‘அது சமயத்தை அடியோடு தூஷிக்கின்றது’ என்று சொல்லுவதானாலும் படித்தவர்கள் என்பவர்களான ஆங்கில, சரித்திர, சயின்ஸ் பி.ஏ, எம்.ஏ, வாதிகளுக்குப் புத்தி இருக்கிறதா, இல்லையா? என்றுதான் கேட்கிறோம்.

விஜயதசமி
மேலும் விஜயதசமி அன்று சிவன் கோயிலில் ‘பரிவேட்டை உற்சவம்’ என்பதாக ஒன்று நடத்துகின்ற வழக்கமுண்டு. அன்று ‘பகவான்’ எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு போடுவது வழக்கம். வன்னி மரத்தில் நெருப்பிருக்கிறதாம். அதில் அம்பு பாய்ச்சினால் அந்த வேகத்தால் நெருப்புண்டாகி, அந்த மரத்தை எரித்து விடுமாம். அதனால் வேடடையாடுவோருக்கும், ராஜாக்களுக்கும் எளிதில் ஜெயத்தைக் கொடுக்குமாம். இந்த காரணத்தால், இந்த வேட்டைத் தினத்திற்கு விஜயதசமி அதாவது, ஜெயத்தைக் கொடுக்கும் நாள் என்று பெயர். என்றாலும் இதற்கும் உள்கருத்தை வைத்து வைத்துத் தான் நம் நாடு உள்ளேயே போயிற்று . பாமரர்களுக்கு உள்கருத்து ஸ்தூலமாகவும் படித்தவர்களுக்குச் சூட்சுமமாகவும் இருப்ப தாகச் சொல்லுகிறார்கள். (எந்த சூட்சுமமும் பாமரர்களைப் படித்தவன் ஏமாற்றவே உபயோகப்படுகிறதே ஒழிய, காரியத்திற்கு ஒன்றும் உபயோகப்படுவதில்லை) அதாவது, நெருப்பிலடங்கிய வன்னி மரத்தையே ஆத்மாவோடு கூடிய தேசமாகவும், அம்பை ஞானமாகவும், வேட்டையில் அம்புவிடுவதை ஞானோபதேசமாகவும், மரம் எரிந்து விழுவதை கரும சம்பந்தமானவைகளை ஞானத்தணல் சுட்டு வெண்ணீறாக்குவதாகவும் கொள்ள வேண்டு மென்பார்கள். இந்த உள்கருத்து உபதேசம் கேட்டுத்தான் ராஜவம்சமெல்லாம் நடுத்தெருவில் நின்ற தான வடதேசத்துக் கதைகள் அநேகம்.

மைசூர் மகாராஜா பரிவேட்டையால் அய்தருக்கு அடிமையானார். ஆனால், வெள்ளைக்காரப் பரிவேட்டைதான் அதை விடுவித்துக் கொடுத்தது. தஞ்சாவூர் ராஜா செய்த சரஸ்வதி பூசையும், ஆடிய பரிவேட்டையும், சரஸ்வதி மகாலில் அடுக்கி வைத்த குப்பைக் கூள ஏடுகளும், ஆயுதங்களும், முன்வாயிலில் துளசியைக் கொட்டி விட்டு, பின் வாயிலில் ராஜாவை ஓடச் செய்து விட்டது. அது போலவே திப்பு காலத்தில் திருவனந்தபுரத்து ராஜாவிற்கு வெள்ளைக் காரர்கள் அபயம் கொடுத் தார்களே ஒழிய சரஸ்வதி பூசையும், பரி வேட்டையும் ஒன்றும் செய்யவே இல்லை. அந்தப்படி அபயம் கொடுத்திராவிடில் அனந்த சயனப் பிரபுவும், அவர் பெண் சாதியும், அவர் மருமகளும் ஓடிப்போ யன்றோ இருக்க வேண்டும்? அனந்தசயனப் பிரபு பின்னும் ஓடி வந்து தங்கள் சொத்தென்று அங்கு சயனித்துக் கொண்டிருப்பதாக இப்பொழுதும் சொல் கிறார்கள்.

கல்வி கற்றவர்கள்
கடவுளையும் பெரியவர்களையும் தூஷிக்கிறவர்கள் காட்டும் ஆதாரங் களையும், அதன் நியாயவாதங்களையும் கூட்டி ஆலோசியுங்கள், சரஸ்வதியைக் கொலுவிருத்தி, பெரிய உற்சவங்கள் செய்யும் நமது நாட்டில் ஆயிரத்துக்கு 50 பேருக்குக் கூட கல்வி இல்லை. சரஸ்வதியே இல்லாத நாட்டில் ஆயிரத்துக்கு 996 பேர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள்.

நாம் சரஸ்வதிக்குச் செய்த தொண்டு சாமானியமல்லவே! ஒரு ஏட்டைக் கிழியோம்; ஒரு எழுத்தை மிதியோம்; இறைந்து கிடக்கும் இதழில் துப்போம்; கால்பட்டால் தொட்டுக் கும்பிடுவோம்; கைப்பட்டால் கண்ணில் ஒத்திக் கொள்வோம்; எந்த ஏட்டிற்கும் காப்பு சொல்வோம்; செல்லரித்த ஏட்டையும் ‘புண்ணிய தீர்த்தத்தில்’ கொண்டு போய் போடுவோமே ஒழிய தெருவில் போடோம்; கற்றவர் நாவின் கருத்தும் கம்பன் கவித்திறனும் அவளே என்போம். இத்த னையும் போதாமல் ஆண்டுக்கு ஒரு தரம் பத்து நாள் பள்ளி யறையில் வைத்துக் கும்பிடவும் செய்கிறோம். இத்தனையும் நாம் இங்கு செய்ய,இந்த சரஸ்வதி கொஞ்சமும் நன்றி விசுவாசம் இல்லாமல் மேனாட்டில் குடிபுகுந்த காரணம் என்ன என்பதை வாசகர்கள் சரஸ்வதியையே கேட்கட்டும் ‘ஏ சரஸ்வதி! மேனாட்டில் உனக்கு என்ன மரியாதை இருக்கிறது? உன்னைப் படித்து எறிகிறார்கள்; காலில் மிதிக்கிறார்கள்; செருப்புக் கட்டு கிறார்கள்; மலம் துடைக்கிறார்கள்; உன் பெயர் சொல்லுவதில்லை; நீ ஒருத்தி இருக்கின்றாய் என்று கூட நினைப்பதில்லை; உனக்கு பூசை இல்லை; புருஷன் இல்லை; வீணை இல்லை; எல்லா வித்தைக்கும் அவர்கள் தாங்களே எஜமானர்கள் என்கிறார்கள். எனவே, நீ செய்வது நியாயமாகுமா?’ என்று நாங்கள் சொல்லிவிட்டால் உன் பாஷையான சமஸ் கிருத இலக்கணத்தை எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படாதென்று நீ சொன்னதாகச் சொல்லும் சாஸ்திரிகளே எங்களை நாஸ்தி கர்கள் என்று சொல்லுகிறார்கள். உன் முதற் பிள்ளையான பார்ப்பனர்களின் தாசிப்பிள்ளை, அடிமை, வேலையாள், ஒழுக்க மற்றவன் என்று எங்களில் படித்த உணர்ச்சியற்ற பண்டிதர்களையும் கூட நீ சொல்லியிருப்பதாக உன் முதற்பிள்ளைகள் சொல்லும் ஏட்டைக் கூட கிழித்தெறி யாமல் சற்றும் விசுவாசமற்றுப் போனாயே என்று நாங்கள் சொல்லி விட்டால், தூஷித்தவர்களாகி விடுவோமா? நீயே சொல்லு?

கோயிலும் பூசையும் எதற்கு?
நீ வாசம் செய்யும் மேனாட்டில் உனக்குப் பூசையில்லை. நைவேத்தியமில்லை. பூசாரி, குருக்களுக்குக் காணிக்கையு மில்லை. பஞ்சமும் படியாமையுமுடைய இந்த நாட்டின் பேரில் மாத்திரம் உனக்கு வந்த வயிற்றெரிச்சல் என்ன? உன் முதற் பிள்ளை களுக்கெல்லாம் உன் பேராலேயே அளித்தளித்து ஆண்டியானோமே என்று நாங்கள் சொல்லு வதாலேயே உன் பக்தகோடிகள், உன் புருஷனுடைய பிரம்மலோகத்திற்கும் உன் மாமனுடைய வைகுண்டத்திற் கும் உன் பாட்டனும் மகனுமான சிவனுடைய கைலாசத் திற்குப் போகும் கதவுகளை (சமயதூஷணையால்) சாத்தினவர்களாகி விடுகிறோமாம். நீயும் உன் குடும்பத்துப் பெண்களும் குடி போயிருக்கும் நாட்டில் உங்கள் புருஷர் களுக்குக் கோயில் கிடையாது. கும்பாபிஷேகமில்லை. அப்படியிருக்க, நீங்களில்லாத நாட்டில் உங்களுக்குக் கோயிலும் கும்பாபிஷேகமும் பூசையும் எதற்கு?

இருக்கிற கோயில்களில் நீங்கள் குடியிருந்தால் போதாதா? காணிக்கையையும் நிறுத்தி, கும்பாபிஷேகத் தையும் விட்டு, கோயிலுக்கு எழுதி வைப்பதையும் நிறுத்திப் பணத்தையெல்லாம் படிப்பிற்கே வைத்துவிட்டுப் போங்கள் என்றால், பாமர மக்களுக்காக ஏற்பாடு செய்து வைத்த சமய ஒழுக்கங்களையெல்லாம் தடுத்து மோட்ச வாசலை அடைக்கும் தாசர்களென்று எங்களை ராஜீயவாதிகள் கூடச் சொல்லலாமா?
ஆச்சாரிகளுக்கும் குருக்களுக்கும் அதைச் சேர்ந்த பார்ப்பனர்களுக்கும் கொடுப்பதை நிறுத்திவிட்டுப் பக்கத்து ஏழைக்குப் படிப்பும், தொழிலும் கற்பியுங்களென்றால் ஆச்சாரிகளையும் பெரியவர்களையும் நாங்கள் குற்றம் சொல்லு கிறவர்களாகி விடுவோமா?

ஆயுத பூஜை
அறுப்பறுக்கும் காலத்தில் கருக்கரிவாள் கூட ஒரு மூலையில் கவலையற்றுத் தூங்குகிறதே! வருண பக வானுக்கும் சூரிய பகவானுக்கும் ஏற்பட்ட சண்டையில் வருண பகவான் முறியடிக்கப்பட்டு, ஓடி மறைந்து விட்டானே! சூரியனே இப்போது கழனியில் உள்ள எல்லாவற்றையும் காய்ந்து தொலைத்துவிட்டானே!

உன் ஆயுதங்களுக்குக் காட்டிலும் கழனியிலும் கூட வேலையில்லை என்றால், பின்னை கருமார் வீட்டிலும் வேலை என்ன? எனவே வேலையில்லா ஆயுதத்திற்குப் பூசை ஏன்?

சரஸ்வதி மகாலும், லட்சுமி விலாசமும், பார்வதி மண்டபமும் கட்டி வைத்த தஞ்சாவூர் மகாராஜா குடும்பம் எங்கே? தப்பித் தவறி அந்த வம்சத்திற்கு ஒரு டிப்டி சூப்ரண்டெண்டெண்ட் வேலைக்குக்கூட எவ்வளவு கஷ்டமாய் இருக்கிறது? காரணமென்ன? வீண் பூசைகளும் கோயில் கும்பாபிஷேகமும் அல்லவா? அவர்கள் செய்த பிராமண போஜனமும், தட்சணையும், கோயில் பூசையும் என்ன பலனை அளித்தது? சரஸ்வதி பூசையின் கொலுவால் அல்லவா நாயுடுகளின் அரசாட்சி தஞ்சாவூரில் ஒழிந்தது? கிளைவும், டூப்ளேயும் எந்தச் சரஸ்வதியைப் பூசித்தார்கள்? அவரவர்கள் முயற்சியும் கடமையும் எந்தக் கஷ்டத்திலும் செய்து முடிக்கும் தைரியமும் இருந்தால் எல்லா லட்சுமியும் அங்கே வந்து தீர்வார்கள் . இதுவே உலக அனுபோகமும் சாஸ்திரத்தின் கருத்துமாகும்.

‘இந்துமதப் பண்டிகைகள்’ நூலிலிருந்து…

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

மும்மூர்த்திகளில் ஒருவனான சிவனுக்குள்ளும் தீண்டாமையா??

 சூத்திரக் கடவுள் என்று பார்ப்பனர்களால் கூறப்படும் சிவனும் தீண்டாமையைக் கடைப்பிடித்தானா? ஆமாம். நந்தனுக்காக கோவிலை விட்டு வெளியே வராமல் தீயை வளர்த்து அதில் இறங்கி பூணூல் போட்ட பார்ப்பனராக வா என்று கூறினானாம். அதாவது விதிப்படி இந்த பிறவியில் நீ செய்த நற்செயலால், தீயில் இறங்கி இறந்து மறுபிறவி எடுத்தால் பார்ப்பனராக பிறப்பாய் பிறகு உள்ளே வா என்கிறான் சிவன்.

காரணம், நந்தன் தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்தவன். இதே தில்லை அம்பலவாணன் என்று கூறப்படும் சிவன் ஒரு பார்ப்பனச் சிறுவனுக்காக கோவிலை விட்டு வெளியே வந்தானாம்.

இதோ அந்த கதை

கும்பகோணம் – சீர்காழி – சிதம்பரம் வழியில் உள்ள ஊர் ஆற்றூர். அதனை தாண்டி நந்தனார் பிறந்த ஆதனூர் உள்ளது. ஆற்றூரில் அமைந்துள்ள சொர்ணபுரீஸ்வரர் கோயில் தலபுராணம் என்று சொல்லப்படும் கட்டுக்கதை இதோ
ஆற்றூரில் வாழ்ந்த சுகேது என்ற பார்ப்பனனின் மகன் சங்கரன் நாள்தோறும் தில்லைக்கு சென்று சிவனின் நடனத்தை கண்டு வருவது வழக்கம். ஒரு நாள் கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடவே மிகுந்த சிரமத்திற்கு நடுவே தில்லையை சென்றடைந்தான். ஏனப்பா இப்படி வெள்ளத்தை உருவாக்கி என்னை தில்லைக்கு வர விடாமல் செய்கிறாய் என அழுது புரண்டான். சங்கரன் நாள்தோறும் தில்லைக்கு வருவதில் உள்ள சிரமத்தை உணர்ந்த நடராஜர், ஒரு நாள் சங்கரனின் கனவில் தோன்றி ‘கவலையை விடும். ஆற்றூரிலேயே எமது திருநடனம் காணலாம்’ என்று சொல்ல பரவசமடைந்த சங்கரன் ஆற்றூருக்கு திரும்பினான்.

நாள்தோறும் சங்கரனுக்காக நடராஜர் தில்லையிலிருந்து நந்தனார் பிறந்த ஆதனூர் வழியாக ஆற்றூருக்கு வந்து பார்ப்பனச் சிறுவனுக்கு முன்பு அடவுகட்டி ஆடினார்
அந்தணனின் மகன் தில்லைக்கு வருவதில் சிரமத்தை உணர்ந்த சிவன் அவன் வாழும் ஊருக்கு தானே வரும் போது, நந்தனாருக்காக ஏன் கோயிலுக்கு வெளியே வராமல்

நந்தியை விலக சொல்ல வேண்டும்?

நந்தனார் தில்லைக்கு வருவதில் உள்ள சிரமத்தை உணர்ந்த சிவன் ஏன் தில்லையிலிருந்து ஆதனூருக்கு செல்லவில்லை?

ஆதனூருக்கும், ஆற்றூருக்கும் இடையே சில கி.மீ. தான் தொலைவு. மேலும் ஆதனூரை தாண்டித்தான் ஆற்றூருக்கே செல்ல முடியும் என்கிற போது நந்தனாருக்காக ஏன் சிவன் ஆதனூர் செல்லவில்லை? தில்லையை சுற்றிச் சுற்றி நந்தனார் வந்த போது தில்லையின் எல்லைக்கே ஏன் சிவன் வரவில்லை?

நந்தனாரை தீக்குளிக்க வைத்தது ஏன்?

திருப்புன்கூர் நந்தியை விலக சொல்வதற்கு பதிலாக பார்ப்பனச் சிறுவன் சங்கரனுக்காக பல கி.மீ. நடந்த கால்கள் கோயிலுக்கு வெளியே வருவதில் என்ன சிக்கல்? ஆற்றூருக்குச் சென்ற சிவன் ஆதனூருக்குச் செல்ல முடியாதா – முடியாது. காரணம், நந்தன் ஆதிதிராவிடர் சங்கரன் பார்ப்பனர்
சிவன் கூட தீண்டாமைத் தீட்டு பார்த்திருக்கிறான்.

திங்கள், 2 செப்டம்பர், 2024

கோகுலாஷ்டமியா? - மின்சாரம்

 


Published August 26, 2024, விடுதலை நாளேடு

மின்சாரம்

இன்று கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாளாம். பிறப்பு இறப்பு அற்றவர் உருவம் அற்றவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் வாய்ப்பறை கொட்டுவோர் அதற்கு நேர் எதிராக அறிவு நாணயமற்ற முறையில் கடவுள் பிறந்தார் என்றும், இந்த உருவத்தில் உள்ளார் என்றும், அந்தக் கடவுளுக்கும் பெண்டாட்டிகள், வைப்பாட்டிகள், பிள்ளை குட்டிகள் உண்டு என்றும் கூறும் அபத்தத்தை ஆபாசத்தை என்னவென்று சொல்ல!
கடவுள் சண்டை போட்டார்; கொலை செய்தார் விபச்சாரம் செய்தார்; சூழ்ச்சி செய்தார்; தந்திரம் செய்தார் என்றெல்லாம் கடவுள்கள் இந்து மதத்தில் கற்பிக்கப்பட்ட திலிருந்து இந்து மதத்தின் சாக்கடை நாற்றத்தையும் இவ்வாறெல்லாம் தெருப்புழுதியாக எழுதி வைத்துள்ள ஆசாமிகளின் ஆபாச சேட்டைகளையும் ஆறறிவுள்ள மனிதர்கள் எண்ணிப் பார்க்கவேண்டாமா?

இன்றைக்குக் கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடு கிறார்களே இந்தக் கிருஷ்ணன் எப்படிப் பிறந்தானாம்?
தேவர்கள் எல்லாம் போய் உலகில் அதர்மம் அதிகமாகிவிட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்கவேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கறுப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயினவாம் இவ்வாறு கூறுவது இந்து மதத்தின் அபிதானகோசம்தான்.
எவ்வளவுக் காட்டுமிராண்டித்தனத்தில் கடவுளின் கீழ்த்தர உற்பத்தி நடந்திருக்கவேண்டும்?
கடவுள்தானே தேவர்களையும், ராட்சதர்களையும் படைத்தான் என்கின்றனர். அப்படி இருக்கும்போது கடவுளால் படைக்கப்பட்ட ராட்சதன், கடவுளால் படைக் கப்பட்ட இன்னொரு தேவர்களை எப்படித் துன்புறுத்துவான்? கடவுளின் வளர்ப்பு சரியில்லையா?

எந்த அவதாரம் எடுத்தாலும் ராட்சதனைக் கொன்றான் ராட்சதனைக் கொன்றான் என்று எழுதி வைத்துள்ளார் களே, அந்த ராட்சசன் வம்சம் அழிந்து போய்விட்டதா அல்லது தொடர்கிறதா?
வரலாற்று ஆசிரியர்கள் எல்லாம் பார்ப்பன பி.டி. சீனிவாசய்யங்கார் உள்பட, இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று விநியோகம் செய்து வந்த விவேகானந்தர் வரை ராட்சதர்கள் என்று இதிகாசங்களிலும், வேதங்களிலும், புராணங்களிலும் சொல்லப்படுபவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று எழுதியுள்ளார்களே இதன் பொருள் என்ன?
திராவிடர்களை இழிவுபடுத்த, மட்டந்தட்ட, கொன் றொழிக்க, இட்டுக்கட்டி எழுதப்பட்ட சரக்குகள்தான் இவை என்பது விளங்கவில்லையா?

நாட்டில் நடப்பது ஆரியர் திராவிடர் போராட்டம் என்று தந்தை பெரியார் சொன்னதும் தேவர்கள் அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை என்று சி. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) 18.9.1953 அன்று திருவொற்றியூரில் பேசியதும் இதனை நிரூபிக்கின்றனவே!
பார்ப்பனர்களுக்காகப் போரிட்டவர்களுக்கு விழா கொண்டாடும்போது அவர்களை எதிர்த்துப் போரிட்ட திராவிடர்கள் என்ன செய்யவேண்டும்? அந்தக் கடவுள் களை வீதிக்கு வீதி போட்டுக் கொளுத்தவேண்டாமா?
தந்தை பெரியார் இராமன் படத்தை எரிக்கச் சொன்னதும், பிள்ளையார் பொம்மைகளை வீதிகளில் போட்டு உடைக்கச் சொன்னதும் இந்த அடிப்படையில் தானே?
புத்த மார்க்கத்தை ஒழிக்கத்தான் கிருஷ்ண அவதாரம் கற்பிக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

புத்தர் ஒழுக்க நெறிகளைப் போதித்தார் கட்டுப் பாடுகளை, நியதிகளை வரையறுத்தார். ஆரியர்களின் யாகங்களை எதிர்த்தார். அவர்கள் வகுத்த வருணாசிரம அமைப்பை நிர்மூலப்படுத்தினார்.
அந்த ஒழுக்க நெறிகளுக்கு மாறாக ஆபாச உணர் வையும், விபச்சாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் ஒரு கதாபாத்திரத்தை (கிருஷ்ணனை) உருவாக்கி கவர்ச்சியைக் காட்டி மக்களை மதிமயங்கச் செய்த ஏற்பாடுதான் இது.
சினிமாக்காரர்களைக் காட்டியும், பாலுணர்வைத் தூண்டும் சமாச்சாரங்களை ஒளிபரப்பியும் மக்களை இப்பொழுது திசை திருப்பவில்லையா? மதி மயக்கம் செய்யவில்லையா? இந்த ஒழுக்கங்கெட்ட விவகாரங்களை இந்து மதத்தின் கிருஷ்ணாவதாரத்திலிருந்து கற்றுக் கொண்டவர்கள்தான் இவர்கள்.

குளிக்கும் பெண்களின் ஆடைகளைத் திருடிச் செல்வ தும், நிர்வாணமாகக் கரைக்கு வந்து இரு கைகளையும் உயரே தூக்கிக் கும்பிட்டால்தான் ஆடைகளைக் கொடுப் பேன் என்று அடாவடித்தனம் செய்ததும் தான் கிருஷ்ணக் கடவுளின் சிறப்பாம்.
இந்தக் கேவலமான கடவுளின் பிறந்த நாள் என்று கூறி அரசு விடுமுறை வேறு விடுகிறது. செல்வி ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த இந்த விடுமுறை இப்பொழுதும் தொடர்வது நியாயந்தானா?


கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவோரே கிருஷ்ணன் லீலைகளை ஏற்றுக் கொள்கிறீர்களா?

 


விடுதலை நாளேடு

சித்திரபுத்திரன்

கிருஷ்ணன் – அர்ஜூனன்
சம்பாஷணை!
கிருஷ்ண ஜெயந்தியாம்! அதுவும் எது கிருஷ்ணனின் பிறப்பு என்பதில் கூட சந்தேகமாம் – இரண்டு கிருஷ்ண ஜெயந்தி என்று முரண்பாடான செய்திகள். அது எப்படியோ தொலையட்டும்
தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

அர்ஜூனன்: ஹே! கிருஷ்ணா! புராணங்களில் தேவர்களுக்கோ, இந்திரனுக்கோ, பரமசிவனுக்கோ கஷ்டமும் ஆபத்தும் வந்த காலங்களில் எல்லாம் நீ (அதாவது விஷ்ணு) பெண் வேஷம் போட்டுக் கொண்டு போய் அவர்களின் எதிரிகளை மயக்கி வஞ்சித்து வசப்படுத்தியதாகவே காணப்படுகின்றனவே! அது மாத்திரமல்லாமல் அந்தப் பெண் வேஷத் தோடேயே நீ ஆண்களிடம் சம்போகம் செய்ததாகவும் அதனால் உனக்குப் பிள்ளைகள் கூடப் பிறந்ததாகவும் காணப்படுகின்றதே! இது உண்மையா? அல்லது இதற்கு ஏதாவது தத்துவார்த்தம் உண்டா? தயவு செய்து சொல் பார்ப்போம்.

கிருஷ்ணன்: ஓ! அர்ஜூனா! நீ சொல்லுகிறபடி புராணங்களில் இருப்பது உண்மையே. ஆனால் நான் அந்தப்படி ஒரு நாளும் செய்ததே இல்லை. அன்றியும் நானே பொய்யாக இருக்கும்போது பிறகு நான் பெண் வேஷம் எப்படி போடமுடியும்? அப்படியே போட்டாலும் எப்படி கலவி செய்ய முடியும்? ஒரு சமயம் திரு. அ.இராகவன் சொல்லுவது போல் ஆண் – ஆண் கலவி செய்ததாகவே வைத்துக் கொண்டாலும் பிள்ளை எப்படிப் பெற முடியும்? கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால் கேட்பவருக்கு மதி வேண்டாமா? சொல்லுகிறவன் சொன் னால் கேட்பவருக்கு மதி வேண்டாமா? சொல்லுகிறவன் சொன்னால் கேட்ப வனுக்கு புத்தி வேண்டாமா? பின்னை ஏன் புராணங்களில் அந்தப்படி எல்லாம் சொல் லப்பட்டு இருக்கின்றது என்று கேட்டால் அதற்குத் தத்துவார்த்தம் உண்டு.
அரு: அந்த தத்துவார்த்தம் என்ன? எனக்கு சற்று சொல்லு பார்ப்போம்!
கிரு: அந்த மாதிரி எழுதின தத்து வார்த்தம் என்ன வென்றால் மனிதன் பெண் இச்சையில் கட்டுப்பட்டவன் என்பது நிச்சயம். நேர்வழியில் வேலை செய்து வெற்றி பெற முடியாத காரியங்களிலும், எதிரியை ஜெயிக்கப் போதிய சக்தி இல்லாத காலங்களிலும் ஒருவன் வெற்றி பெற வேண்டுமானால் இந்த வழி மிகச் சுலபமான வழி என்பது பெரியோரின் கருத்து. அதாவது ஒரு நல்ல அழகிய பெண்ணை கூட்டிப் போய் காட்டியோ, அல்லது அவனுக்குக் கூட்டிவிட்டோ அதன் மூலம் எவ்வித வெற்றியையும் பெறலாம் என்பதே இதன் தத்துவார்த் தமாகும். இது முக்தி அல்லது வெற்றி பெறும் ரகசியங்களில் ஒன்று என்பதைக் காட்டுவதற்காக எழுதப்பட்டதாகும். இப்பவும் உலக வழக்கில் சக்தியில்லாத வன், தகுதி இல்லாதவன் ஏதாவது ஒரு பதவியையோ, பொருளையோ அடைந் திருந்தால் அதற்குப் பொது ஜனங்கள் திடீரென்று கற்பிக்கும், அல்லது நம்பியே சொல்லும் வழக்கச் சொல்லைப் பார்த்தால் நன்றாய் விளங்கும். அதாவது சக்கரத் தின் மகிமையினால் சம்பாதித்துதான் வெற்றி பெற்றான் -பதவி பெற்றான் என்று சாதாரண பாமர மக்களே கூடச் சொல்லு வதைப் பார்க்கிறோம். சக்கரம் என்றால் என் (விஷ்ணு) ஆயுதத்திற்குப் பெயர். பெண்கள் . . . க்கும் பெயர். எவ்வளவோ பேருக்கு இந்த தத்துவார்த்தம் இப்போது உண்மையிலேயே பயன்படுவதையும் பார்க்கின்றோம்!

ஆதலால் வெற்றி பெறுவதற்கு வழி எனப்தைக் காட்டும் தத்துவப் பொரு ளாகவே பெரியோர்கள் இப்படி எழுதி வைத்தார்கள். இது போலவே தத்துவார்த் தங்கள் உண்டு. அது தெரியாமல் நமது சுயமரியாதைக்காரர்கள் அவற்றைப் பரிகாசம் செய்கின்றார்கள். ஆனால் அந்தப் பழக்கமும், வழக்கமும் தத்து வார்த்தத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியமும், அவைகளெல்லாம் சுயமரியாதைக் காரர்களுக்கல்ல. புராண மரியாதைக்காரருக்கு என்பதை மறந்துவிடாதே.
அரு: சரி, சரி! இப்போது எனக்கு விளங்கிற்று. ஆனால் இது போலவே இன்னும் ஒரு சந்தேகம்! சற்று தயவு செய்து அதையும் விளக்கினால் உனக்கு புண்ணியம் உண்டு.
கிரு: அதென்ன சொல்லு பார்ப்போம்!
அரு: அதே மாதிரி மற்றும் பல புராணங்களில் சிவன் ஒரு சன்னியாசி ரூபமாக வந்து ஒருவனின் பெண்சாதியை கேட்டான் என்றும், அந்தப்படியே அவன் கொடுத்தான் என்றும் சொல்லப்படுகின் றதே! அதன் ரகசியம் என்ன?
கிரு: இது தெரியவில்லையா?
அரு: தெரியவில்லையே!
கிரு: சன்னியாசிகளுக்குச் சாப்பாடு போட வேண்டியது கிரகஸ்தன் கடமை. பிறகு பெண் வேண்டுமானால் சப்ளை செய்யவேண்டியதும் கிரகஸ்தன் கடமையாகத்தானே இருக்க வேண்டும்! அதனால்தானே 32 தர்மங்களில் பெண் போகமும் ஒன்று என்று சொல்லப்பட்டிருக் கின்றது! ஆகவே அந்தப்படி சன்னியாசிக்குப் பெண்களைக் கொடுக்கும்போது மனதில் சங்கடம் இல்லாமல் தாராள மனதுடன் உதவுவதற்காகவே சிவன் சன்னியாசி ரூபமாய் – ஒரு சிவனடியார் ரூபமாய் வந்து கேட்டார் என்று அதாவது சன்னியாசி யாகவோ, சிவனடியாராகவோ ஒருவன் வீட்டுக்கு வந்தால் அவன் கேட்டவு டனேயே கொடுக்க வேண்டும் என்பதற் காகவே அதாவது இந்த சன்னியாசி – சிவனடியார் ஒரு சமயம் சிவபிரானே இந்த வேடம் தரித்து வந்தானோ என்று எண்ணிக் கொண்டு பேசாமல் கொடுத்து விடட்டும் என்றும் அதற்காக மனதில் எவ்வித விகல்ப புத்தியும் இருக்கக் கூடாது என்றும் கருதியே இந்தப்படி சொல்லப் பட்டிருக்கிறது. இது இப்போதும் சில புராண மரியாதைக் காரர்கள் வீடுகளில் நடைபெற்று வருகிறதை நான் அடிக்கடி பார்க்கின்றேன்.
தவிரவும், குருசாமியார், பாகவதாள், பரதேசி, அடியார்கள் இப்படிப்பட்டவர்கள் அநேக வீடுகளில் இருந்து கொண்டு நன்றாய் சாப்பிட்டுக் கொண்டு அந்தந்த வீட்டுக்காரருக்கு இந்த புண்ணியமும் கொடுத்துக் கொண்டு வருவதைப் பார்க்கின்றேன். சிலர் தெரிந்தே விட்டுக் கொண்டிருக்கின்றார்கள், சிலர் தெரி யாதது போலவே காட்டிக் கொண்டிருக் கிறாகள். இதெல்லாம் அவரவர்கள் புராணங்களில் வைத்திருக்கும் பக்திக்கும், மரியாதைக்கும் தகுந்தபடி இருக்கும்.
அரு: சரி, இந்த சந்தேகமும் ஒருவாறு விளங்கிற்று. இன்னமும் ஒரு சந்தேகம் இருக்கின்றது. அதை இப்போது விளக்கு கின்றாயா?
கிரு: என்ன அது! சொல் பார்ப்போம்!
அரு: அதாவது புராணங்களில் அக்கிர மமான, வஞ்சகமான புரட்டான காரியங் கள் செய்யவேண்டிய பொழுதெல்லாம் கடவுள் பார்ப்பன வடிவமாகவே வந்த தாகக் காணப்படுகின்றதே! இதன் தத்துவ மென்ன?
கிரு: இந்த மாதிரி காரியங்கள் செய்வதற்கு அவனே (பார்ப்பனனே) தகுந்தவன் என்பதும், அது அவன் சுபாவம் என்பதும், அப்படிச் செய்வதினால் வேறு எவ்விதமான பாவமோ, நரகமோ ஏற்படு மென்று எழுதி இருக்கும் சாஸ்திரங்கள் எல்லாம் பொய், புரட்டு, சுயநலத்திற்காக எழுதப்பட்டவை என்பதை அவன் தெரிந்தவன் என்றும் இப்போதும் யாருக் காவது இந்த மாதிரி அக்கிரமமான காரியங்கள் செய்து ஏதாவது ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் அவற்றிற்கு பார்ப்பனர்களே தகுந்தவர்கள் என்றும், அவர்கள் எவ்வித பாதகமான, அவமானமான காரியங்களையும் செய்ய பயப்படமாட்டார்கள் என்றும் அவற்றில் கைதேர்ந்தவர்கள் என்றும் காட்டுவதற் காகவே அந்தப்படி எழுதப்பட்டதாகும். இதை அறிந்தே அநேக புராண மரியா தைக்காரர்கள் இப்படி காரியங்கள் செய்வதற்காகப் பார்ப்பனர்களைத் தங்கள் காரியஸ்தராகவோ, மற்ற காரியங்களுக்குப் பொறுப்பாளிகளாகவோ வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சம்பளத்துக்கு வைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். சம்பளத்துக்கு வைத்துக் கொள்ள சக்தி இல்லாதவர்கள் சிநேகிதர்களாகவாவது வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். கவனித்துப் பார்த்தால் இது நன்றாய் விளங்கும்.
அரு: இன்னம் ஒரு சந்தேகம்?
கிரு: என்ன சொல்லு?
அரு: கடவுளைப் படைத்தார்களல்லவா மனிதர்கள்!
கிரு: ஆம்.
அரு: அப்படிப் படைத்தவர்கள் கடவுள் மனிதனுக்குள் இருப்பதாகவோ அல்லது மனிதனுக்குள் இருக்கும்படியாக ஆவா கனம், கும்பாபிஷேகம் முதலி யவை செய்து மனிதனுக்குக் கொடுப்பதும், மனிதனுக்குச் செய்வதும் கடவுளுக்குச் செய்தது, கடவுளுக்குக் கொடுத்தது என்று கருதும்படி செய்யாமல் கல்லுக்குள் கடவுளை ஆவாகனம் செய்து, அதற்குக் கும்பாபிஷேகம் செய்து கல்லைக் கும்பிடும்படி ஏன் செய்தார்கள்?
கிரு: அதன் ரகசியம் என்னவென்றால், மனிதனுக்குள் கடவுளை ஆவாகனம் செய்தால் நைவேத்தியம் செய்யும் சாமானையெல்லாம் மனிதன் சாப்பிட்டு விடுவான். அணிந்து கொள்வான். அப்புறம் நடுவில் இருப்பவனுக்கு ஒன்றும் கிடைக்காமல் போய்விடும். ஆதலால்தான் கல்லிலும், செம்பிலும் ஆவாகனம் செய்து அதற்குத் தனக்கு வேண்டியதையெல்லாம் நைவேத்தியம் செய்யச் செய்து, தான் எடுத்துக் கொள்வது. ஆகவே இந்த மாதிரி கடவுளை உண்டாக்க வேண்டிய அவசிய மும் ஏற்பட்டது. ஆகவே பூசாரி ஆதிக்கம் குறைந்தால்தான் கடவுள்கள் உற்பத்தியும் குறைந்துவிடும், கடவுள் மஹிமைகளும் ஒழிந்துவிடும்.
அரு: சரி, இவை எனக்கு ஒரு மாதிரி விளக்கமாயிற்று. இன்னும் சில விஷ யங்கள் தெரிய வேண்டியிருக்கின்றன. ஆனால் அவைகளை சாவகாசமாய் பேசுவோம்.
கிரு: சரி.
21-12-1930 – குடிஅரசு இதழில் சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது.

எப்புடிடா? – ‘கிருஷ்ண ெஜயந்தி’’
கிருஷ்ணன் பிறப்பு என்னவென்றால், தேவர்கள் எல்லாம் போய், ‘உலகில் அதர்மம் அதிகமாகி விட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும்’ என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு என்ன செய்தான் தெரியுமா? தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கறுப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயின என்றும் அபிதான கோசத்தில் உள்ளது.

இந்த மாதிரி காரியங்கள் செய்வதற்கு அவனே (பார்ப்பனனே) தகுந்தவன் என்பதும், அது அவன் சுபாவம் என்பதும், அப்படிச் செய்வதினால் வேறு எவ்விதமான பாவமோ, நரகமோ ஏற்படுமென்று எழுதி இருக்கும் சாஸ்திரங்கள் எல்லாம் பொய், புரட்டு, சுயநலத்திற்காக எழுதப்பட்டவை என்பதை அவன் தெரிந்தவன் என்றும் இப்போதும் யாருக்காவது இந்த மாதிரி அக்கிரமமான காரியங்கள் செய்து ஏதாவது ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் அவற்றிற்கு பார்ப்பனர்களே தகுந்தவர்கள் என்றும், அவர்கள் எவ்வித பாதகமான, அவமானமான காரியங்களையும் செய்ய பயப்படமாட்டார்கள் என்றும் அவற்றில் கைதேர்ந்தவர்கள் என்றும் காட்டுவதற்காகவே அந்தப்படி எழுதப்பட்டதாகும்.

கடவுளின் யோக்கியதை
– சித்திரபுத்திரன் –

கேள்வி : கடவுள் நன்மையே உருவாய்க் கொண்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு.
பதில் : நல்ல காற்று, நல்ல தண்ணீர், வாசனையுள்ள புஷ்பம், ருசியுள்ள ஆகாரம், சத்துள்ள பழ வகை, மழை, நதி, நந்தவனம், பால், பசு, நல்ல பெண்கள், சந்திரன், சூரியன் முதலிய அனேக அருமையான வஸ்துக்களை உற்பத்தி செய்து நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆதலால் கடவுள் நன்மையே உருவாகக் கொண்டவர்.
கேள்வி: கடவுள் கெடுதியையே உருவாய்க் கொண்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு..
பதில்: கெட்ட காற்று, விஷப் புகை, நோய்க் கிருமிகள் உள்ள தண்ணீர், துர் வாடையுள்ள மலம், கசப்பான ஆகாரம், உபயோகமற்றதும் நோயை உண்டாக்குவதுமாக பழம், துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், கொடிய வியாதி, கடும் வெய்யில், இடி, பூகம்பம், முரட்டு வெள்ளம், இருட்டு, நோய் உள்ள பெண்கள், தரித்திரம், முள்ளுள்ள புதர்க்காடுகள் முதலானவை களையெல்லாம் கடவுள் உற்பத்தி செய்திருக்கிறார். ஆதலால் கடவுள் கெடுதியே உருவாய்க் கொண்டவர்.
கேள்வி: இந்தக் கெடுதிகளை யெல்லாம், கடவுள் தான் உற்பத்தி செய்தார் என்பதற்கு என்ன ருஜு?
பதில்: முன் சொல்லப்பட்ட நன்மை களை எல்லாம் கடவுள் தான் உற்பத்தி செய்தார் என்பதற்கு என்ன ருஜுவோ, அந்த ருஜுவைத்தான் கெடுதிகளையும் கடவுள்தான் உண்டாக்கினார் என்று சொல்வதற்கும் ருஜுவாக ஏற்றுக் கொள்ளக் கோருகிறேன்.
கடவுள் படைத்த படைப்பெல்லாம் மனிதனுக்காகவே.

மனிதனைப் படைத்தான் தன்னை வணங்க என்று ஒரு மதம் சொல்லுகின்றது. ஆகவே, கடவுளை வணங்குவதற்கு என்று கடவுளாலேயே மனிதன் படைக்கப் பட்டிருப்பானேயானால் கடவுளின் இழி தன்மைக்கு வேறு என்ன சாட்சியம் வேண்டும்?
தன்னை வேறு ஒரு மனிதன் வணங்க வேண்டும் என்று ஒரு மனிதன் நினைத்தானேயானால் அவனை நாம் எவ்வளவு அயோக் கியன் என்றும், ஆணவக்காரனென்றும், இழிகுணம் படைத்தவ னென்றும், ஈனன் என்றும் சொல்லுகின்றோமா இல்லையா?
அப்படியிருக்க, ஒரு கடவுள் என்று சொல்லப்பட்டவர் தன்னை வணங்கு வதற்கு என்று பலகோடி மக்களைப் படைப்பித்து அவர்களை பலவிதமான கஷ்டங்களும், குறைகளும் அனுபவிக்க விட்டு வேடிக்கை பார்த்தால் அப்படிப்பட்ட கடவுள் நல்லவர், பெருந்தன்மை உள்ளவர், தயாபரர், கருணாமூர்த்தி, விருப்பு, வெறுப்பு, தற்பெருமை இல்லாதவர் என்றெல்லாம் அறிவுள்ள மனிதனால் சொல்லமுடியுமா?

அன்றியும், கடவுள் மனிதனைப் படைத்தது உண்மையாய் இருக்கு மானால் அந்த ஒரு காரி யமே பெரிய தொரு அயோக்கியத்தனமும், அக்கிர முமானதென்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், மனிதனால் மற்ற மனிதர்களுக்கும், மற்ற ஜீவராசிகளுக் கும் எவ்வளவு துன்பங்கள் நிகழ் கின்றன?
மனிதன் எவராவது யோக்கியமாய் இருக்க முடிகின்றதா?
இவைகளையெல்லாம் மனிதனைப் படைப்பதற்கு முன் கடவுளுக்குத் தெரியாதா?
மனிதனுக்குக் கொடுத்திருக்கும் புத்தி, அறிவு என்பதை அவன் எப்படி உபயோகிப்பான் என்பதை கடவுளுக்கு ஆரம்பத்தில் அறிய முடியவில்லையா? அல்லது அறியும் சக்தி இருந்தும் கவலையீனமாய் இருந்து விட்டாரா?
இவைகளையெல்லாம் பார்த்தால் கடவுளின் யோக்கியதையும் அவர் இருக்கும் லட்சணமும் நன்றாய் விளங்க வில்லையா?

– குடிஅரசு – உரையாடல் – 12.05.1935

ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

பிள்ளை யார்?

 


விடுதலை நாளேடு Published September 1, 2024

கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப்பல விதமாகச் சொல்லப்படுவதும். அவைகளிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால் மற்ற கடவுள்கள் சங்கதியைப்பற்றி யோசிக்கவும் வேண்டுமா?

*தந்தை பெரியார்

இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண் ணிக்கை “எண்ணித் தொலையாது, ஏட்டிலடங்காது” என்பதுபோல் எண்ணிக்கைக்கு அடங்காத கட வுள்கள் சொல்லப்பட்டிருப்பதும், அத்தனை கடவுள் களுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை, பாட்டு முதலியதுகள் ஏற்படுத்தி இருப் பவை அவைகளுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக் கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பெரும்படியான நேரங்களும், பல கோடி ரூபாய் பெரும்படியான அறிவுகளும் வெகு காலமாய் பாழாய்க்கொண்டே வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்கக் கூடிய காரியமல்ல.

இக்கடவுள்களில் முதன்மை பெற்றதும் மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும் இந்துக்கள் என்ப வர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக் கொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது. இதனைக் கணபதி என்றும் விநாயகன் என்றும் விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதுண்டு.

நிற்க, இந்தப் பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும் கடவுள் களுக்கெல்லாம் முதல் கடவுளாக வணங்கு வதுமாக இப்போது அமலில் இருக்கும் பழக்கத்தை எந்த இந்து என்பவனாலும் மறுக்க முடியாது. ஆகவே இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புக்கொள்ளக் கூடியதும் அதிக செல்வாக்குள்ளதும் முதற்கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைப் பற்றி சற்று கவனிப்போம். ஏனெனில் கடவுள்களின் சங்கதி தெரிய வேண்டுமானால் முதல் முதலாக முதல் கடவுளைப்பற்றித் தெரிவதுதான் நன்மையானதாகும். ஏனெனில் முதல் கடவுள் என்று சொல்லப்படுவதின் சங்கதி இன்ன மாதிரி என்பதாகத் தெரிந்தால் மற்ற கடவுள்கள் சங்கதி தானாகவே விளங்க ஏதுவாயிருக்கலாம். அன்றியும் எந்தக் காரியம் ஆரம்பித் தாலும் முதலில் பிள்ளையார் காரியத்தை கவனிக்க வேண்டியது முறையென்று சொல்லப்படுவதால் நாமும் கடவுள்களின் கதைகளைப் பற்றி விளக்கப் போவதில் முதல் கடவுளைப்பற்றி ஆரம்பிக்க வேண்டியதும் முறையாகுமன்றோ. இல்லா விட்டால் “அக்கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு எடுத்த இக்காரியத்திற்கு விக்கினம் ஏற்பட்டாலும் ஏற்படக் கூடும்” அன்றியும் சமீபத்தில் அக்கடவுளின் உற்சவம் (பிள்ளையார் சதுர்த்தி) ஒன்று வரப்போவதால் இந்தச் சமயம் ஒரு சமயம் பொருத்தமானதாகவும் இருக்க லாம். ஆதலால் தொடங்குதும்.

பிள்ளையார் பிறப்பு

1. ஒரு நாள் சிவனின் பெண்ஜாதியான பார்வதிதேவி தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்கு களைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளை யாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து “நான் குளித்துவிட்டு வெளியில் வரும் வரை வேறு யாரையும் உள்ளே விடாதே” என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்த தாகவும் அந்த சமயத்தில் பார்வதி புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்த தாகவும், அழுக்குருண்டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்தப் பரமசிவனையும் பார்த்து “பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால் உள்ளே போகக் கூடாது என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்கு, கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து “காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்” என்று கேட்டதாகவும் அதற்கு சிவன் “காவல்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன்” என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி தான் உண்டாக்கின குழந்தை வெண்டுண் டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தை தணிக்க வேண்டி வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்டவைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியில் வந்து பார்க்க வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி முண்டமாக கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்ட வைத்து அதற்கு உயிரைக் கொடுத்து பார்வதியை திருப்தி செய்ததாகவும்” கதை சொல்லப் படுகின்றது. இக்கதைக்கு சிவ புராணத்திலும், கந்த புராணத்திலும் ஆதாரங்களுமிருக்கின்றனவாம்.

2. ஒரு காட்டில் ஆண் பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகமேற்பட்டுக் கலந்ததால் யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.

3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றிருக்கையில் ஒரு அசுரன் அக்கருப் பைக்குள் காற்று வடிவமாக சென்று அக் கருச்சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும் அதற்கு பரிகாரமாகப் பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.

4. தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பிய தாகவும் தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்ட தாகவும் சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பினதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய்க் கிடந்ததாகவும் உடனே ஒரு யானை யின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகின்றது. இது தக்க யாகப்பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்.

5. இன்னும் பல வழிகள் சொல்லப்படுகின்றன. அதனைப் பற்றியும் இப்பிள்ளையாரின் மற்ற கதைகளைப் பற்றியும் மற்றொரு சமயம் கவனிக்கலாம்.
எனவே பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக் கோ பார்வதிக்கோ மகனாக பாவிக்கப்பட்டவர் என்பதும் அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயமாகும்.
கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப்பல விதமாகச் சொல்லப்படுவதும், அவைகளிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு வளர்ப்பு உடையவ ராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால் மற்ற கட வுள்கள் சங்கதியைப்பற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க, ஒரு கடவுளுக்குத் தாய் தகப்பன் ஏற்பட்டால் அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் தகப்பன்கள் ஏற்பட்டுதானே தீரும் (இவைகளைப் பார்க்கும்போது கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? ஆகவே இந்தக் கடவுள்களும் உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதா யிருக்கின்றது. இதனைப் பின்னால் கவனிக்கலாம்)

கோடிக்கணக்கான கடவுள்கள்

கடவுளைப் பற்றிய விவகாரங்களோ சந்தே கங்களோ ஏற்படும்போது மாத்திரம் “கடவுள் ஒருவர் தான் அவர் நாம ரூப குணமற்றவர், ஆதியந்தமற்றவர், பிறப்பு இறப்பு அற்றவர் தானாயுண்டானவர்” என்று சொல்லுவதும் மற்றும் “அது ஒரு சக்தி” என்றும், “ஒரு தன்மை அல்லது குணம்” என்றும் பேசி அந்த சமயத்தில் மாத்திரம் தப்பித்துக் கொண்டு பிறகு இம்மாதிரிக் கடவுள்களைக் கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இதுபோன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய் கற்பித்து அவற்றை யெல்லாம் மக்களை நம்பவும் வணங்கவும் பூசை செய்யவும் உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும் புரட்டும் கஷ்டமும் நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.

உதாரணமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிடு கின்றோம். சிதம்பரம் கோவிலில் யானை முகங் கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து அதன் தும்பிக்கையை மற்றொரு பெண்சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு இக்காட்சியை யாவருக்கும் தெரியும்படியாகச் செய்திருப்பதுடன் இந்தக் காட்சிக்கு தினமும் முறைப்படி பூசையும் நடந்து வருகின்றது. பல ஆண் பெண் பக்தர்கள் அதை தரிசித்து கும்பிட்டும் வருகின்றார்கள்.

சில தேர்களிலும் ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண்குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும் அந்தப் பெண் இரண்டு காலையும் அகட்டிக் கொண்டு அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக்கப்பட்டிருக்கின்றது. இவைகளைப் பார்த்து யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்ப தாகவும் சொல்லப்படுகிறது.

ஆபாசக் கதைகள்

அதாவது ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும் அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களை யெல்லாம் அந்த கடவுள் கொன்று கொண்டே வந்தும், தன்னால் முடியாத அளவு சூரர்கள் ஒரு அசுர ஸ்திரீயின் பெண் குறியில் இருந்து ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்படுவது போல் பல லட்சக்கணக்காய் வந்து கொண்டே இருந்ததாகவும், இதை அறிந்த அந்தக் கடவுள் பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும் உடனே பிள்ளையாரானவர் ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல்களை உறிஞ்சுவதுபோல் தனது தும்பிக்கையை அந்த ஸ்திரீயின் பெண் குறிக்குள்விட்டு அங்கிருந்த அசுரர்களையெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டதாகச் சொல்லப்படு கின்றது. எனவே இம்மாதிரியான காட்டுமிராண்டித் தன்மையான ஆபாசங் களுக்கு கண்டவைகளையெல்லாம் கடவுள் என்று சொல்லும் “ஆஸ்திகர்கள்” என்ன பதில் சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம்.

“எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான்” என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினமும் அவ்வெ ழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா அன் றியும் பல கோவில்களில் உருவங்களாகத் தோன்ற வில்லையா? இதை “எவனோ ஒருவன் செய்து விட்டான்” என்று சொல்வதானால் இவைகளுக்குத் தினமும் பெண்டு பிள்ளை வாகனம் முதலியவை களுடன் பூஜைகள் நடக்கவில்லையா? என்பது போன்றவைகளைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்கின்றோம்.

சீர்திருத்தக்காரர்கள் “அப்படி இருக்க வேண்டும் – இப்படி இருக்க வேண்டும்” என்றும் “மதத்திற்கு ஆபத்து, சமயத்துக்கு ஆபத்து” கடவுள்களுக்கு ஆபத்து என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும் கடவுளையும் காப்பாற்ற வென்று அவைகளிடம் “வக்காலத்து பெற்று” மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன்வந்தார்களா என்றும் கேட்கின்றோம்.

இவற்றையெல்லாம் பற்றி எந்த ஆஸ்திக சிகாமணி களுக்கும் ஒரு சிறிதும் கவலையில்லாவிட்டாலும் பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் வாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் குறைவில்லை என்று சொல்வதோடு இந்த ஆபாசங் களையெல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல் சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களை பிரசங்கம் பண்ணிக் கொண்டும் இருந்துவிட்டு இதை எடுத்துச் சொல்லுபவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லி விடுவதாலேயே எந்தக் கடவுளையும் எந்தச் சமயத் தையும் காப்பாற்றிவிட முடியாதென்றோ சொல் லுவோம். இனி அடுத்த முறை அடுத்தக் கடவுளைப் பற்றிக் கவனிப்போம்.

– ‘குடிஅரசு’ – கட்டுரை – 26.08.1928

ஞாயிறு, 28 ஜூலை, 2024

கந்தபுராணத்தில் இல்லாத புளுகு எந்த புராணத்திலும் இல்லை

எப்போதும் வென்றான் 

"#கந்த_புராணத்தில்லாத_புளுகு
#எந்தப்_புராணத்திலுமில்லை !"

வள்ளியின் பிறப்பு எவ்வாறு ?

தொல்கதைக் கட்டு

தமிழ நாகரிகத்தையும் மதங்களையும் ஆரியப்படுத்தற்கும் , தமிழனைத் தாழ்த்திப் பிராமணனை உயர்த்தற்கும் ,
பதினெண்(18) தொன்மங்களையும் 
(புராணங்களையும்) பதினெண் துணைத் தொன்மங்களையும் இயற்றிக் கொண்டனர்.அவற்றுள் 
" கந்தபுராணம் " என்னும் ஒன்றுமட்டும் , ஓரரசிப் பதம் பார்ப்பாக இங்கு ஆராயப்படும்.

முருகன் பிறப்பு

" இறைவன் உமையை வதுவை செய்துகொண்ட நாளிலே , இந்திரன் சென்று நீ
புணர்ச்சி தர வேண்டுமென்று
வேண்டிக் கொள்ள , அவனும்
அதற்கு உடம்பட்டு அது தப்பானாகிப் புணர்ச்சி தவிர்ந்து கருப்பத்தை இந்திரன் கையிற் கொடுப்ப ,
அதனை இருடிகளுணர்ந்து
அவன் பக்கனின்றும் வாங்கித் தமக்குத் தரித்தல் அரிதாகையினாலே , இறைவன் கூறாகிய முத்தீக்கட் பெய்து அதனைத் தம் மனைவியர் கையிற் கொடுப்ப, அருந்ததி யொழிந்த
அறுவரும் வாங்கிக் கொண்டு
விழுங்கிச் சூன் முதிர்ந்து சரவணப் பொய்கையிற் பதுமப் பாயலிலே பயந்தாராக,
ஆறு கூறாகி வளர்கின்ற காலத்து , இந்திரன் தான் இருடிகளுக்குக் கொடுத்த நிலையை மறந்து ஆண்டு வந்து வச்சிரத்தான் எறிய ,
அவ்வாறு வடிவும் ஒன்றாய்
அவனுடனே பொருது , அவனைக் கெடுத்துப் பின் 
சூரபன்மனைக் கொல்லுதற்கு
அவ் வடிவம் ஆறாகிய வேறுபட்ட கூற்றாலே மண்டிச்
சென்றதென்று , புராணங் கூறி்ற்று "என்பது திருமுருகாற்றுப்படை நச்சினார்க்கினியருரை(58)

இது,

"உமையொடு புணர்ந்த காம
                                       வதுவையுள்
..........................................................
பயந்தோ ரென்ப பதுமத்துப் 
                            பாயல் ."(5:28--49)
என்னும் பரிபாடற் பகுதியைத்
தழுவியது.

வள்ளி பிறப்பு

தொண்டை நாட்டில் , வௌ்ளிமலை யருகில் மேற்பாடி என்னுஞ் சிற்றூரை ,
நம்பியரசன் என்னும் வேடர் மன்னன் ஆண்டு வந்தான்.
அவனுக்குப் பெண்மக வின்மையால் , ஒரு பெண்மகப் பேறு வேண்டி மலைத்தெய்வத்தை வழிபட்டு
வந்தான்.

அக்காலத்தில் , சிவமுனி என்பவன் , அம் மலையருகில் 
ஐம் புலனையும் அடக்கிச் சிவன்மேல் மனத்தைச் செலுத்தித் தவஞ் செய்துகொண்டிருந்தான்.ஒரு நாள் ஓர் அழகிய பெண்மான்
அவனருகில் வந்து உலாவியது.அதைக் கண்டு ,
அவன் கரையிறந்து காமுற்று
மதிமயங்கிப் பேரிடர்ப்பட்டான்.
அவன் காமக் காட்சியினால்
அம் மான் கருவுற்று , உரிய காலத்தில் ஒரு பெண்மகவையீன்று , வள்ளிக்கிழங் ககழ்ந்த ஒரு குழியில் இட்டுச் சென்றது.
அக் குழவியைக் கண்ட நம்பியரசன் எடுத்து, வள்ளிக்
கிழங்குக் குழியிற் கிடந்ததுபற்றி வள்ளியென்றுபெயரிட்டுத் தன் தேவியிடங் கொடுத்தான்.
அவள் வளர்ந்தாள்.

சிவமுனிவன் இளம்பிணையைக் கண்டு மையல் கொண்டு பட்ட பாட்டை

" போர்தொழில் கடந்த
                                             வைவேற்
      புங்கவ னருளால் வந்த
சீர்த்திடு நவ்வி தன்னைச்
      சிவமுனி யென்னுந்
                                            தூயோன்
பார்த்தலு மிளைமைச் செவ்வி
       படைத்திடும் பிறனிற்
                                                    கண்ட
தூர்த்தனின் மைய லெய்திக்
     காமத்தான் சுழல லுற்றான்."

" ஏமத்தின் வடிவஞ் சான்ற
இலங்கெழிற் பிணையின் 
                                                  மாட்டே
காமத்தின் வேட்கை வைத்துக்
 கவலையா லவல மெய்தி
மாமத்த மளைபுக் கென்ன
     மனக்கருத் துடைந்த வேறா
யூமத்தம் பயன் றுய்த் தார்போ
லுனமத்த னாகி யுற்றான்."
(கந்தபு.வள்ளி.21 - 2) என்று ,
கச்சியப்ப சிவாசாரியார் என்னும் புலவர் சிறிதும் நாணமின்றிப் பாடியிருக்கின்றார்.இடக்கர் மிகுந்தனவும் இயற்கைக்கு மாறானவுமான இக்கதைகள்,
அகக்கரண வளர்ச்சியும் ஒழுக்க வுயர்வு மில்லாத ஒருவன் கட்டியன வாகும்.

முதலிலிருந்து முடிவுவரை ,
கந்த புராணம் முற்றும் கட்டுக் கதையாகும்.முருகனும் வள்ளியும் , குமரிநாட்டிலேயே
குறிஞ்சி மக்கள் உள்ளத்தில் தோன்றிவிட்டனர்.

" இந்தப் புளுகு கந்த புராணத்திலுமில்லையே !",
" கந்த புராணத்திலில்லாத புளுகு எந்தப் புராணத்திலுமில்லை " என்னும் பொதுமக்கள் கூற்றும் பழமொழியும் இங்கு கவனிக்கத்தக்கன.

முருகன் 'சரவணம் ' என்னும் நாணற்காட்டுப் பொய்கையிற்
பிறக்கவில்லை.அவனுக்கு ஓரே முகமும் இரு கையுந்தான்.
அவன் சூரபதுமன் என்வனைக் கொல்லவுமில்லை ; தேவயானை(தெய்வயானை)
என்பவளை மணக்கவு 
மில்லை.

காங்கேயன், சரவணன்,(சரவணபவன்)
ஆறுமுகன்,(சண்முகன்),
பன்னிரு கையன், கார்த்திகேயன் முதலிய கந்த புராணத்துப் பெயர்களெல்லாம் முருகனுக்கு ஒரு சிறிதும் ஏற்கா.நாற்றிசையுடன் மேலுங் கீழுஞ் சேர்ந்த அறுதிசைகளை,
முகமாகக் கொள்ளின் ,
ஆறுமுகம் என்னும் பெயர்மட்டும் முருகனுக்குப் பொருந்தும்.

கந்தபுராணம் போன்றே ,
ஏனைப் புராணங்களும் தமிழருக்கு வேண்டுவனவும்
ஏற்பனவும் அல்ல எனக்கூறி
விடுக்க.

பிராமணனுக்கு நல்லவன் என்று பொருள்படும் சுப்பிரமணியன் என்னும் வடசொற் பெயர் , முன்பு திருமாலுக்கும் சிவனுக்கும்
பெயராக வழங்கி , இன்று முருகனுக்குச் சிறப்பாக வங்கி வருகின்றது.

சான்று: பக்கம் 84 - 86,
" தமிழர் மதம் "
ஞா.தேவநேயப் பாவாணர்
பூம்புகார் பதிப்பகம்,
சென்னை 600 108
தொலைபேசி : 044 25267543.
- 'கிறுக்கு பூனை' முகநூல் பதிவு, 22.07.24

செவ்வாய், 2 ஜூலை, 2024

சுப்பிரமணியனது பிறப்பு

 

பெரியார் பேசுகிறார் : சுப்பிரமணியனது பிறப்பு

நவம்பர் 01-15 2019

விஸ்வாமித்திரன் சுப்ரமணியனது பிறப்பைப் பற்றி ராமனுக்குக் கூறியது:-

1. சிவபெருமான் உமாதேவியைத் திருக்கலியாணம் செய்து, மோகங்கொண்டு அவளுடன் 100 தேவ வருஷம் (மனித வருஷத்தில் பல யுகம்) புணர்ந்து கொண்டிருந்தனர். அவ்வளவு காலம் கழிந்தும் பார்வதி கர்ப்பம் அடையவில்லை. அது கண்டு நான்முகன் முதலிய தேவர்கள் சிவனிடத்தில் வந்து, இவ்வளவு காலம் புணர்ந்த உம்முடைய தேஜஸ்ஸாகிய விந்து வெளிப்படுமானால் உலகம் பொறுக்கமாட்டாது. உம்முடைய விந்துவை தயவு செய்து விடாமல் நிறுத்திக் கொள்ளும் என்று வேண்டவும், அதற்கிசைந்த சிவன் தனது விந்துவை மற்றபடி யார் தரிப்பது? எங்கு விடுவது? என்று கேட்க, தேவர்கள் பூமியில் விடும்படி சொல்ல, அந்தப்படியே சிவன் பூமியின் மீது விட்டுவிட்டார்.

பூமி அதை தாங்க மாட்டாமல் பூமி முழுதும் கொதிகொண்டு எழ, தேவர்கள் அந்த வீரியத்தை பூமி தரிக்க முடியாது எனக் கருதி அக்கினியிடம் சென்று வேண்ட, அக்கினி வாயுவின் உதவியால் அவ்வீரியத்திற்குள் பிரவேசித்து பிரமதேவன் கட்டளைப்படி அதை கங்கையில் கொண்டு சேர்த்து, அவ்வீரியத்தைப் பெற்று ஒரு குழந்தைப் பெற வேண்டுமென்று கங்கையை வேண்ட, கங்கையும் அதற்குச் சம்மதித்து அவ்வீரியத்தைப்பெற, அவ் வீரியமானது கங்கை முழுவதும் பரவி நிறைந்துவிட, கங்கை அதை தாங்கமாட்டாமல் மறுபடியும் அக்கினியை வேண்ட, அக்கினி மனமிரங்கி கங்கையை நோக்கி  ஏ கங்கையே! நீ அடைந்த சிவனின் வீரியத்தை தாங்க முடியாவிட்டால் பனிமலை அருகில் விட்டுவிடு என்று சொல்ல, கங்கையும் அவ்வாறே அவ்வீரியத்தை பனிமலையின் அருகில் விட, அங்கு அது குழந்தையாகத் தோன்ற, அதை இந்திரன் பார்த்து அக்குழந்தைக்கு பால் கொடுத்து வளர்க்க கிருத்திகா தேவிகளை ஏவ, அவர்கள் அதற்கு பால் கொடுத்து வளர்த்து வரலானார்கள். பல இடத்தில் சிவனது வீரியம் ஸ்கலிதமானதன் பலனாக அக் குழந்தை உற்பத்தியானதால் அக்குழந்தைக்கு ஸ்கந்தன் என்றும், கிருத்திகா தேவிகள் ஆறுபேர்களுடைய பால் சாப்பிட்டதால் கார்த்திகேயன் என்றும், மேல்கண்ட ஆறுபேரின் முலையிலும் ஆறுமுகம் கொண்டு ஏககாலத்தில் பால்குடித்ததால் ஷண்முகன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

இவ்வரலாறு வால்மீகி ராமாயணத்தில் “சிவன் பார்வதியை புணர்ந்தது’’ என்று தலைப்பெயர் கொண்ட 36ஆவது சருக்கத்திலும் “குமாரசாமி உற்பத்தி’’ என்கின்ற 37ஆவது சருக்கத்திலும் காணப்படுகின்றது.

இரண்டாவது வரலாறு, தேவர்கள் சிவனிடம் சென்று அசுரர்களை அழிப்பதற்கு தகுந்த சக்தி கொண்ட ஒரு குழந்தையைப் பெற்றுத்தர வேண்டுமென்று வேண்ட, சிவன் அருள்கூர்ந்து தனது அய்ந்து முகங்களுடன் மற்றும் ஒரு முகத்தையும் சேர்த்துக் கொண்டு தோன்ற அவ்வாறு முகங்களில் உள்ள நெற்றிக்கண் ஆறிலிருந்தும் ஆறு தீப்பொறிகள் வெளியாக, அப் பொறிகளைக் கண்டு தேவர்களும் மனிதர்களும் நடுங்கி பரமனை வேண்ட, பரமன் அப் பொறிகளை கங்கையில் விடும்படி சொல்ல அவர்கள் அப்படியே செய்ய, கங்கை அது தாங்க மாட்டாமல் அவற்றைக்கொண்டு சரவணத்தில் செலுத்த, அங்கு ஆறு குழந்தைகள் தோன்ற, அந்த ஆறு குழந்தைகளையும் கிருத்திகைப் பெண்கள் அறுவரும் பால் கொடுத்து வளர்த்து வந்தார்கள்.

பிறகு சிவன் பெண்ஜாதி பார்வதி தேவி இந்த ஆறு குழந்தைகளையும் சேர்த்துக் கட்டி அணைத்து முத்தமிட்டு பாலூட்டுகையில் அவ்வாறு குழந்தைகளும் ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும் கொண்ட ஒரே குழந்தையாக ஆகிவிட்டது. இதற்கு ஆறுமுகமுடையதால் ஆறுமுகன் என்றும் கங்கையாறு ஏந்திச் சென்றதால் காங்கேயன் என்றும் சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. இது கந்தபுராணத்திலும் முருகன் கதையிலும் உள்ளது.

குறிப்பு:-சுப்பிரமணியன் பிறப்புக்கு மேல்கண்டபடி இரண்டு கதைகள் காணப்பட்டாலும் கந்த புராணத்தின் கதைப்படி பார்த்தாலுமே, வால்மீகி ராமாயணத்தில் விஸ்வாமித்திரர் ராமருக்குச் சொன்னதாகச் சொல்லப்படும் மேற்கண்ட கதைதான் உறுதியாகின்றது. ஏனெனில், கந்தபுராணத்திலும் பார்வதியானவள் தன் மூலியமாய் பிள்ளை பெறுவதை தடுத்ததற்காக தேவர்கள் மீது கோபித்து தேவர்களை “பிள்ளையில்லாமல் போகக் கடவது’’ என்று சபிக்கின்றாள் என்று காணப்படுகின்றது. சிவனது நெற்றிக் கண்ணி லிருந்து தீப்பொறி வெளியாகி அதிலிருந்து பிள்ளை உண்டாகியிருக்கும் பட்சத்தில் பார்வதிக்கு தேவர்களிடத்தில் கோபம் உண்டாகக் காரணம் ஏற்பட நியாயம் இல்லை.

இந்தக் கோபம் உண்டாவதற்குக் காரணம், வால்மீகி ராமாயணத்தில் சொல்வது போல், அதாவது 100 தேவ வருஷம் சிவன் பார்வதியைப் புணர்ந்து கடைசியாக வீரியம் வெளிப்பட்டு கருதரிக்கும் சமயத்தில் தேவர்கள் குறுக்கிட்டு சிவனை தனது வீரியத்தை பார்வதி கர்பத்துக்குள் விடாமல் நிறுத்திக் கொள்ளும்படி வேண்டினதால் சிவன் அதை எடுத்துக் கொண்டதற்கு பார்வதி கோபித்து வீரியம் ஸ்கலிதமாக்கும் சமயத்தில் கொடுமை செய்ததற்காக அவர்களைச் சபித்தது, அதாவது தன்னைப் போலவே தேவர்களுடைய பெண்சாதிகள் எல்லோரும் பிள்ளையில்லாமல் மலடிகளாக வேண்டுமென்று சபித்ததாகக் காணப்படுவது நியாயமாக இருக்கின்றது.

அன்றியும் பார்வதி தனது கர்ப்பத்தில் விழ வேண்டிய வீரியத்தை பூமி பெற்றுக் கொண்டதால் பூமியையும் பார்வதி தனது சக்களத்திபோல் பாவித்து அவளையும் (பூமியையும்) பலபேர் ஆளவேண்டுமென்று சபித்ததாகவும் அதனாலேயே பூமிக்கு அடிக்கடி அரசர்கள் மாறுகிறார்கள் என்றும் வால்மீகியில் காணப்படுகின்றதும் பொருத்தமாயிருக்கின்றது.

கந்தப்புராணமோ, மேல்கண்ட சிவன் 100 வருஷம் புணர்ந்த விஷயம் ஒன்றைத் தவிர மற்றவைகளையெல்லாம் ஒப்புக்கொள்ளுகின்றது.

ஆகவே சுப்பிரமணியன் என்றும், சண்முகன் என்றும், கார்த்திகேயன் என்றும், ஸ்கந்தன் என்றும் சொல்லப்படும் சாமியானது மேல்கண்ட மாதிரி ஒரு பிறப்பு வளர்ப்புக்கு உள்பட்டது என்பது வைணவப் புராணங்களிலும் சைவப் புராணங்களிலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

( தந்தை பெரியார் – ‘குடிஅரசு’ – 2.9.1928)