புதன், 27 ஆகஸ்ட், 2025

குமார சம்பவம் என்கின்ற காவியத்தில் கந்தன் பிறப்பு !

 'சொல்வனம்' இணைய இதழிலிருந்து எடுக்கப்பட்டது....

கவி காளிதாசர் இயற்றிய குமார சம்பவம் என்கின்ற காவியத்தில் கந்தன் பிறப்பு பற்றிய பகுதிகள் தொகுத்து அப்படியே இங்கு அளிக்கப்படுகிறது.

குமார சம்பவம் மஹா காவ்யம்

அத்யாயம்-8

(விவாகத்திற்கு பிறகு தனிமையில் தம்பதிகளின் இடையே நடக்கும் சம்பவங்களையும் விவரிக்க விரும்பி காளிதாச கவி,  தொடருகிறார்)

இளம் பிராயத்தினளான பார்வதி முதல் நாள் அனுபவங்களை பயத்துடனே எதிர் கொண்டாள்.  சங்கரன் கேட்ட கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்ல முடியாத தயக்கமே மேலோங்கியது, முகத்தை மூடிக் கொண்டு படுத்தாள்.  மெள்ள மெள்ள இருவரும் ஒருவரையொருவர் நெருங்கி அமரவும், நேருக்கு நேர் பார்க்கவும் துணிவு பெற்றாள்.  

சகிகள் சொன்னபடி பணிவிடை செய்ய துணிந்தாலும், நேர் எதிரே கணவனைக் கண்டால் பதற்றமே மிகுந்தவளாக சகிகள் சொன்னதெல்லாம் மறந்து போனது. 

அவளை அவள் போக்கிலேயே விட்டுப் பிடிக்கலாம் என எண்ணியவராக அவரும் அனாவசிய விஷயங்களையும் கூட ஹாஸ்யமாக பேசி சகஜநிலைக்கு கொண்டு வந்தார். 

புது மண தம்பதிகளின் ஒவ்வொரு செயலையும் விவரமாக   காளிதாசர் எழுதியது.  அதரங்களில் முத்தமிடும் பொழுது பற்கள் பட்டாலோ,  மார்பில் விரல் நகங்கள் பட்டாலோ அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமல் பயந்தாள்.  விடிந்ததும் சகிகள் வந்து விசாரித்தனர்.  அவர்களுடன் தாயாரும் வந்து விசாரித்தாள். புது மணப் பெண் கணவனுடன் முதல் நாள் அனுபவம் என்பதால் அந்தரங்கமாக  விசாரித்தார்கள்.  

சில நாட்கள் இவ்வாறு சென்றன.  அவளும் மெள்ள மெள்ள கூடலை ரசிக்கத் தெரிந்து கொண்டு விட்டாள். எதிர்பார்ப்பும்,  பலமாக கட்டி அணைத்தாலும், தன் சரீரத்தில் அதன் தாக்கமாக அயர்வு, வலிப்பதாக இருந்தாலும்  தானும் முழு  ஈடுபாட்டோடு மண வாழ்க்கையை சுகமாக உணரலானாள்.   உடன் இருக்கும் சமயங்களில் முழு ஆதரவுடன் தன் உடலை அனுபவிக்க இடம் கொடுத்தாள்.  மண வாழ்க்கை இருவருக்குமே பிடித்தமாகவும், ஒவ்வொரு நொடியும் அருகிலேயே இருக்கும் ஆவலையும் உண்டாக்கியது. இயல்பாக அணு அணுவாக ரசிக்கத் தொடங்கிய பின் பிரிவு என்பது சில நொடிகளே ஆனாலும் தாங்க 

முடியாததாக ஆயிற்று. கங்கை சாகரத்தை அடைவதே குறிக் கோளாக ப்ரவஹித்து ஓடி சாகரத்தில் கலந்து விடுகிறாள்.  சாகரம் அவளை தன்னுள் அரவணத்து கொண்டு விடுகிறது போல  பரஸ்பரம் அவர்களின் அனுராகமும் அதே போல ஆழ்ந்ததாக இருந்தது.

இரவும் பகலும் இணை பிரியாமல் இருந்தாலும் பேசிக் கொள்ள விஷயங்கள் இருந்தன.  ஒருவருக்கொருவர் தவிர உலகில்  எதுவே இல்லை என்பது போல.  மகளை பிரிய தயங்கிய இமவானுக்காக  ஒரு மாதம் அங்கு தங்கியிருந்தார்.  மாத  முடிவில் இமவானின்  மாளிகையில் பார்வதியுடன் இருந்த சங்கரர் புறப்பட்டார்.  நந்தி வாகனத்தில் இமாலய பர்வதத்தைச் சுற்றிவந்து, பார்வதியுடன் மந்தராசலம் என்ற இடம் வந்தார். பாற்கடலைக் கடைந்த சமயம் இந்த மந்தராசலம் தான் மத்தாக நின்றிருந்தது. அதனால் அவ்வப்பொழுது தெறித்த அம்ருதத்தின் சுவையை பருகியிருந்தது என்பர்.  மலயுச்சியில் நின்று மனைவியின் கமலம் போன்ற முகத்தை ரசித்தார்.  வண்டாக அந்த கமலத்தை அவர் கண்கள் வட்டமடித்தன.

அங்கிருந்து கிளம்பி குபேர பவனம் சென்றனர்.  குபேர பவனம் அலகாபுரி என்ற இடம். அங்கு வந்து சேர்ந்தனர். அங்கு திடுமென ஒருநாள் ராவணன் மலையை அசைத்து பயங்கரமாக கர்ஜித்ததில் பயந்து அவர் கழுத்தை இறுக கட்டிக் கொண்டவள், உடலோடு உடலாக ஒன்றி விட்டாள்.  குபேர பவனத்தில்  சந்திரன் மிக அருகில் இருப்பது போல உதயமாயிற்று.  அதன் குளுமையான கிரணங்களில் அதிக ப்ரகாசத்தையும், அதன் குளிர்ந்த அனுபவத்தையும் வெகுவாக ரசித்தனர். ( சந்திரனின் அருகாமையால் அந்த இடம் பொன் நிறம் பெற்றது. அதனால் குபேர புரியே பொன்னால் ஆனது என்று பெயர் பெற்றது) 

(குபேரன் அதை அருகில் இருந்து கண்டான். சற்றே பொறாமை கொண்டான் என்று அவன் கண்கள் பார்வையை இழந்தன. பின்னர் பகவான் சங்கரரின் அருளால்  பார்வையை திரும்ப பெற்றான் ஆனால் ஒரு கண் மஞ்சள் நிறமாயிற்று என்பது வரலாறு. அதனால் குபேரன் பெயரே ஏகபிங்களன் என்றாயிற்று. அதனால் குபேர பவனம் ஏகபிங்கள கிரி என்றே அறியலாயிற்று) 

தென் திசையில் இருந்து காற்று லவங்க வாசனையையும், சில சமயம் கேஸர வாசனையையும் சுமந்து வந்தது.  அந்த காற்றில் எந்த வித உடல் அலுப்பையும், சோர்வையும்  நீக்கும் தன்மை இருக்கவே அங்கு சில நாட்கள் தங்கினர். ஆகாய கங்கையில் மூழ்கி நீராடினர்.  மனோ ரஞ்சக மான சூழ்நிலையும் ஏகாந்தமான இடம். எனவே அவர்கள் எந்த வித கவலையுமின்றி  நீரில் விளையாடி மகிழ்ந்தனர். செந்தாமரை தண்டுகளால் ஒருவரையொருவர் சீண்டியும், நீரை வாரியடித்தும், விளையாடி மகிழ்ந்தனர்.  நந்தன வனத்தில் இருந்து பாரிஜாத புஷ்பங்களை பறித்துக் கொண்டு வந்தனர்.  தேவ லோக பெண்கள், இந்திராணி போன்றோர்  அங்கு வந்து இவைகளை பயன் படுத்துவார்கள்.  இவ்வாறு கணவனின் பரி பூர்ண அன்புக்கு பாத்திரமான பார்வதி அதற்கு சற்றும் குறையாத அன்புடன் பிரிய சகியாக, மனைவியாக இருந்து பல இடங்களுக்கும் சென்று திரும்பி கந்தமாதன பர்வத வனத்தில் நுழைந்தனர்.  அங்கு பொன் மயமான பாறையில் அமர்ந்து அஸ்தமன ஸூரியனின் பொற் கிரணங்களைக் காண, தர்ம பத்னியான பார்வதியை அணைத்தபடி அமர்ந்திருந்தவர்  அவளிடம் சொன்னார்:

ஹே ப்ரியே! இந்த ஆதவன் என்ன செய்கிறான் தெரியுமா?  கமலத்தின் இதழ்கள் விரிந்து இருப்பதை  தோற்கடிக்கும் உன் கண்களைப் பார்த்து அவசரமாக பகல் பொழுதை முடித்துக் கொண்டு திரும்புகிறான். அது எப்படி இருக்கிறது என்றால், ப்ரஜாபதியான பகவான் ப்ரளய காலத்தில் மூவுலகையும் சுருட்டி தூக்கிக் கொண்டு போவது போல இருக்கிறது.  பின் குறிப்பு -பார்க்கவும்

ஹே! பார்வதி, கொடி போன்ற  உன் சரீரத்துடன் போட்டி போடுவது போல  இந்த  வான வில், வளைந்து நிற்கிறது பார். இதை இந்திரனின் வில் என்பர்.  எப்படி வந்தது தெரியுமா ? சூரியனுடைய கிரணங்கள்  நீர் துளிகளில் வழியே நுழைந்து வெளி வந்தது.  ஸுரியனின் ப்ரகாசம் அதிகமானதும் கலைந்து விட்டது பார்.  இதோ உன் தந்தை இமவானின் மலையில் இறங்கி வரும் அருவிகள் அந்த வான வில்லின் ஒளியை ப்ரதி பலித்தன. அது மறைந்தவுடன்,ஏன் வந்தது. எப்படி மறைந்தது என்று  எதுவும் புரியாமல் அமைதியாக இருக்கின்றன போலும்.

இதோ பார், சக்ரவாக பக்ஷிகள் தாமரையின் தண்டில் முகத்தை வைத்து எம்பி மகரந்தத்தை உண்கின்றன. திரும்பி பார்த்தால் அதன் இணையான மற்றொரு சக்ரவாகம் சற்று தூரத்தில் இருக்கிறது. அதை அழைக்க கடுமையான அதன் குரலில் சத்தமாக அழைக்கிறது பார்.  அதிக தூரம் கூட இல்லை. கத்துவானேன்.

யானைகள் தாகத்துடன் வேகமாக வந்து நீரை பருகுகின்றன. இவ்வளவு தூரம் வருவானேன்.  சல்லகி என்ற நீர் அல்லி தாமரை போலவே யானைகளுக்கு பிடிக்குமாம். सल्लकी स्याद् गजप्रिया- ஸல்லகி ஸ்யாத் கஜ ப்ரிய: – என்பது ஒரு செய்தி. இந்த மலர்களின் மணம் அவைகளை எங்கு இருந்தாலும் இழுக்கும் போலும். யானைகள் ஒரு முறை மாலையில்  ஒரே முறையில் வேண்டிய அளவு நீரை பருகி விடும் என்பது ப்ரசித்தம். 

மித பாஷிணீ!  அளவாக பேசத் தெரிந்தவள் நீ.  மேற்கு திசையில் ஸுரியன் மறையத் தயங்கிக் கொண்டு இருக்கிறான். ஏன் தெரியுமா? இந்த குளத்தில் பார். அவனுடைய வண்ண மயமான கிரணங்களின் ப்ரதி பிம்பம்  குளத்து நீரில் பல விதமான  கோலங்களை போட்டிருக்கிறது. அதை ரசித்துக் கொண்டிருக்கிறான் போலும்.

தாமரைத் தண்டின் ம்ருதுவான பாகங்களை கடித்து குதறும் இந்த வன – நீர் வராகங்களைப் பார். (வனம்-காடு,நீர்  இரு பொருள் உடையது) இவைகள் கூட்டமாக வந்து நிறைந்துள்ளன. இரவில் நிலத்தில் வாழ்பவை. அதன் தலைவன் கரையேறியதும் மற்றவை அனைத்தும் உடன் வந்து விட்டன. 

ஹே! அழகியே! இந்த மரத்தின் நுனியில் பார்.  மஞ்சள் நிறத்தில் மயில்கள் வந்துள்ளன. இவைகளின் தோகை எப்படி பொன் வண்ணம் பெற்றன? அவைகளும்  மாலை வெய்யிலில் இளைப்பாறிக்  கொண்டிருக்கின்றன. 

வானமும் சில இடங்களில் தெளிவாக அதன் நீல நிறத்திலும், சில இடங்களில் மேகம் மறைக்க சாம்பல் நிறமாகவும் இருட்டு மெள்ள மெள்ள நுழைவது போல இருக்கிறது.  சிறிதளவே நீர் அதுவும் சேறாகி கிடக்கும் குளம் போல காணப் படுகிறது.

பர்ண சாலைகளில் அக்னி மூட்டப் பட்டுள்ளது பார்.  பசுக்கள் வந்து சேர்ந்து விட்டன. கிழங்குகளை சுடும் வாசனை வருகிறது.   இந்த பசுக்கள் தான் ஆசிரமங்களில் அக்னி ஹோத்ரம் செய்யத் தேவையான பொருட்களைத் தருபவை. பால், நெய் போன்றவை, அதனாலே அவை இருக்குமிடம் லக்ஷ்மி கடாக்ஷம் பெறுகின்றன. 

இரவு நெருங்குகிறது. தாமரை மலர்கள் இதழ்களை மூடிக் கொண்டிருக்கின்றன. உள்ளே நுழைந்து விட்ட வண்டு வெளி வர சிறிது இடைவெளி விட்டிருக்கிறதா? சிறிதே திறந்த வாசல் போல அந்த இடைவெளி தெரிகிறது.  ஆதவனும் அனேகமாக மறைந்து விட்டான். தூரத்தில் பெண்ணின் நெற்றியில் உள்ள திலகம் போல ஒரு ஒளி கோடு போல தெரிகிறது.  அவனுடைய சஹ சரர்கள் வாலகில்யர்கள் எனப் படுபவர். இவர்களும் மகரிஷிகளே. அக்னி ஸ்வரூபம்- அக்னிக்கு சமமான தேஜஸ் இவர்களுடையது. இரவில் ஆதித்யனின் தேஜஸ் அக்னியில் ப்ரவேசிக்கிறது என்பது மறை என்ற வேதம்.  இரவில் அக்னி ஆதவனின் பொறுப்பை ஏற்று வெப்பமும், ஒளியும் தருகிறது.  ஆதவன் அக்னியிடம் பொறுப்பை ஒப்படைக்கும் மாலை நேரத்தில் இவர்கள் சாம கானம் செய்கிறார்கள்.  மந்திரங்கள் முழங்க பொறுப்பு கை மாறுகிறது என்று வேத வாக்கியம்.  அந்த இதயத்தை தொடும் இனிய கானம்.  ஆதவனின் குதிரைகள் கனைப்பது போல ஒலிக்கும் மந்திரங்கள், ஆயிரக் கணக்கான இந்த வாலகில்ய ரிஷிகள் பாடுகிறார்கள். 

மகான் இந்த ஆதித்யன். நாள் முழுவதும் ஒளியைத் தந்தவன். அவன் குதிரைகளும் களைத்தவை போல முகத்தை கவிழ்த்துக் கொண்டு காதுகள் காற்றில் விசிறி போல விரிந்து நிற்க, அன்றைய செயல்களை முடித்து திரும்பும் இல்லறத்தார்கள் போல அஸ்தமன பர்வதத்தில் இறங்குகின்றன.   இரவு முழுவதும் வானமும் ஓய்ந்து தூங்கும்.  ஓளியின் இயல்பே அது தானே. தான் இருக்கும் இடத்தை பிரகாசமாக ஆக்கும், தன்னுடனே அந்த ஒளியை எடுத்துச் சென்று விடும். மீதி அந்த காரம்- இருட்டே.  இந்த இருட்டும் சாயங்காலத்தில் ஆதித்யனை- ஓளியை  வழி அனுப்புவது போல கூடவே சென்று அஸ்தமனம் ஆன பின் காத்திருந்து சூரியோதயம் ஆகும் சமயம் முன்னால் வழி காட்டுவது போல, அணுக்க சேவகர்கள் போல உடன் வரும்.

மெள்ள  மேற்கு மலையின் பின்னால் இறங்கிக் கொண்டிருக்கும் ஆதவனின் கிரணங்கள் வானில் வண்ணங்களை வாரி இறைத்தது போல் இருக்கிறது பார்.  மீதி இருக்கும் மேகங்கள், சுருள் சுருளான உன் கேசங்களைப் பார்த்து தானும் வானத்தில் தூரிகைகளைக் கொண்டு வண்ணமயமாக சித்திரங்களை வரைந்து விட்டது போலும். அதுவும் உன்னை மகிழ்விக்கவே முயலுகிறது.  சிங்கத்தின் கேஸரி- பிடரி மயிரின் நிறம், சுத்தமான அருவி நீரின் வெண்மை, துளிர்களின் சிவந்த வண்ணம், மரங்கள், மலைகளின் சரிவில் தாதுக்களின் பெயர் அறியாத பல வண்ணங்கள், இவைகளுடன்  சாயங்காலமே அழகாக ரசிக்கும் படி இருக்கிறது பார். 

நதிக் கரைகளில் தபஸ்விகள், சந்த்யா வந்தனம் செய்கிறார்கள். காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது ரஹஸ்யமாக ஏதோ சொல்வது போல கேட்கிறது பார்.  வா, கிளம்பலாம். எனக்கும் என் நியமங்களை செய்ய வேண்டும். நீ அழகாக பேசி இந்த இடங்களை வர்ணித்துச் சொல்வதைக் கேட்க உன் சகிகளும் காத்திருப்பார்கள். போகலாம் என்றபடி, எழுந்தார்.  சகி விஜயாவும் அருகில் வந்தாள். அனைவருமாக கிளம்பினர். மந்திரங்கள் சொல்லி  தினாவசானம்- தினம் முடிந்த சாயங்கால நியமங்களை அவர் செய்து முடிக்கும் வரை காத்திருந்த அவ்விருவரும் வந்து சேர்ந்து கொண்டனர். 

பேசாமலே சற்று தூரம் நடந்தனர். சஹ தர்ம சாரிணீ, நீ. நான் சாயங்கால வந்தனம் செய்யும் நேரம் நீ பேசாமல் இருந்த வரை சரி. இனி எதற்கு மௌன விரதம்.  சுதனு! அழகிய உடலுடையவளே!  காலையும் மாலையும் பகலுக்கும் இரவுக்கும் இடைப்பட்ட காலம் என்ற காரணத்தால் நாம் அதற்கான மந்திரங்கள் சொல்லி நம்மை படைத்தவர்களுக்கு, ப்ரும்மா முதல், நம் முன்னோர்கள் இவர்களை நினைத்து வணங்குகிறோம்.     பித்ருக்களுக்கு –(பூலோகத்தில் வாழ்ந்து மறைந்த குல மூத்தவர்கள்- அவர்கள் இருக்கும் இடம் பிதுர்லோகம் எனப்படும். )   அவர்களுக்கு உயிரினங்களை  படைப்பவரான ப்ரும்மா ‘அவர்கள் தியாகம் செய்த சரீர ரூபியாக  இந்த பிரும்ம சரீரத்தை வகிக்கிறேன்.’ என்று வாக்கு கொடுத்தார்.   அதன் பின்   உலகில்  அவர்களின் சந்ததிகளான  ஜீவன்களுக்கும்  பிரும்மா ஒரு வாக்கு கொடுத்தார்.  ‘ பகல்-இரவின் இடைப்பட்ட சந்தி கால நியமங்களை அனுசரிப்பவர்கள், தீர்காயுளும், வியாதி இன்றி உடல் நலமும் பெறுவார்கள்’ என்பது. 

நீ  ஏன் உத்சாகமின்றி இருக்கிறாய்? நாம் என்ன சக்ரவாக பறவைகளா ?   ஒன்று சற்று அகன்றால் மற்றொன்று கூக்குரல் போடும்.  

(படைக்கும் தொழிலைச் செய்யும் பிரும்மா, அடுத்தடுத்து புது உடல்கள் தோன்றச் செய்வார் என்பது தெரியும்.ஜீவன்களின் மறு பிறவி அவரிடமே இருந்து வருவதாக பொருள். அதனால் பழைய உடல்களை தன்னிடமே வைத்து பாதுகாப்பதாக பித்ருக்களுக்கு உறுதி அளிக்கிறார்.  வம்சம் வளரச் செய்ய பித்ருக்கள் எனப் படும் நமது முன்னோர்கள் ஆசீர்வதிப்பார்கள் என்பது நம்பிக்கை) 

ஹே மானினீ,  பிரும்மா வழியாக, நமது முன்னோர்கள் உடலின்றி சூக்ஷ்ம ரூபமாக  காலை மாலை சந்த்யா ஜபங்களை செய்து வருவதால், எனக்கும் இங்கு விசேஷமான கௌரவம் உள்ளது.  சரி, வா, போகலாம். இரவு நேரம். தமால மரங்கள்  அடர்த்தியாக இருந்தால் அதிக இருளாகத் தெரியும். மேற்கு திசையில் ஸூரிய அஸ்தமனம் ஆன பின் இந்த சந்தி காலத்தின்  வண்ண மயமான வானமும் தற்சமயம் கண்ணுக்கு புலனாகாமல் இருளில் மூழ்கி விட்டது.  திசைகள் தோறும் பரவிக் கொண்டு செல்லும் இருள், மேரு மலையையே மறைத்து விட்டது பார்.  தாயின் கர்பத்தில் இருக்கும் சிசு போல எதுவும் அறியாத நிலைக்கு உலகமே சென்று விட்டது போலும். 

இந்த இருளின் சக்தியைப் பார். உருவங்களா, அசையும் அசையா பொருளா, நேரான வழியா, குறுக்குத் தெருவா, அனைத்தையும் ஒன்றாக்கி விட்டது.  துஷ்டர்கள் அனைவரையும் அடக்கி ஆள்வதைப் போல.

புண்டரீகம் என்ற கமலம் போன்ற முகத்தையுடையவளே,  யாகம் செய்யும் அந்தணர்களின் தலைவன் சந்திரன், இந்த இருட்டிலிருந்து பாதுகாக்க தன் கிரணங்களுடன்  தலை எடுத்து விட்டான்.  கீழ் திசையில் பார். தாழம்பூ நிறத்தில், ப்ரகாசமாக ஒளி வீசிக் கொண்டு வந்து விட்டான்.  

உன் சகியும், நாம் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டே சந்திரன் பின்னாலேயே வந்து விட்டான் பார். இரு மலைகளுக்கிடையில் அவன் தாரகைகளுடன் சேர்ந்து கொண்டு  நம்மை நோக்கியே வருவது போல தெரிகிறது பார்.  ரஹஸ்யமாக திசைகளுடன் வேடிக்கையாக பேசிக்  கொண்டு வருகிறான் போலும். திசைகளின் முகம் பிரகாசமாகிறது பார். ( ராத்ரியும், திசைகளும் சம்ஸ்க்ருதத்தில் பெண் பால். அதை வைத்து அந்த பெண்களுடன் பேசுவதாக கவியின் அலங்காரம் என்ற வர்ணனை)

இந்த குளத்தில் முழு சந்திரனின் உருவம் தெரிகிறது பார். இரண்டும் ஒன்றே போல தோற்றம் அளிப்பதால் குளத்தில் பிம்பம் தான் என்று அறியாமல் பழம் என்று நினைத்து சக்ரவாகங்கள் பிடிக்க முயலுகின்றன.

சந்திரனின் ஒளியே நாயகன். ராத்ரி தான் நாயிகா. இவர்களை வைத்து ஸ்ருங்கார பரமாக வர்ணிக்கிறார். 

ஹே! பார்வதி, திடுமென அந்தகாரம் மறைந்து வானம் சந்திரனின் ஒளி நிரம்பி நிர்மலமாகத் தெரிவதைப் பார். யானைகள் குளித்து குளத்தை சேறாக்கி விட்டு சென்ற பின் சற்று நேரத்தில் குளத்து ஜலம் சுத்தமாக ஆவது போல இருள் சேறு போல வானத்தை மறைத்திருந்தது.  சந்திரனின் வரவால் தூய்மையாகி விட்டது. தூய்மையான எண்ணங்கள் கொண்ட நல்லவர்கள் கால வசத்தால் கஷ்டங்கள் அனுபவிப்பதும், பின் நன்மை அடைவதும் போல இருக்கிறது.  அதிலும் செக்கச் சிவக்க வந்தவன் இப்பொழுது பொன் நிறமாக குளுமையாக ஆகி விட்டான். இதுவும் நல்லவர்களின் குணமே. கால வசத்தால் நியமங்களை விடும் படி சோதனைகள் வந்தாலும் அவர்கள் அதையும் தாண்டி தன் இயல்பு நிலைக்கு வந்து விடுவார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. பிரும்மாவின் படைப்பிலேயே நல்ல குணங்கள் மேலாகவும், மற்ற தீய குணங்கள் படிப் படியாக குறைந்து கொண்டே வந்து அடியில் வந்து விடும்.  

சந்திர காந்த கல் தெரியுமா? சந்திரனின் ஒளி பட்டால் அதில் நீர் வரும். இந்த மயில்கள் பாவம், அதையறியாமல் மரத்தடியில் தூங்கின. சந்திரகாந்த கற்கள் உள்ள பாறையிருந்து நீர் மரத்தில் விழுந்து கிளைகள் அசைய, நீர் வழிந்து இவைகளின் மேல் பட்டு எழுப்பி விட்டு விட்டன.  

கற்பக மரங்களும்  இந்த மலையில் நிரம்ப காணப் படுகின்றன.  அதன் புஷ்பங்கள் இறைந்து கிடக்கின்றன.  யானைகள் படுத்துக் கிடப்பது போல இன்னமும் அடி வாரம் இருண்டே தெரிகிறது. வண்டுகள் ரீங்காரம் செய்வது கேட்கிறதா? இவைகளுக்காக குமுத மலர்கள் மலர்ந்திருக்கின்றவா? சந்திரன் ஒளியில் குமுதம் மலரும் என்று வண்டுகளுக்கு தெரியும் போலும்.

சற்று நேரத்தில் சந்திரனின் பவனி வானத்தை வியாபித்து காணும் இடமெல்லாம் மங்கிய அதன் ஒளி நிறைந்து  கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், வெண் நிறமாகவும் பரவியது. அவர்களின் உத்சாகம் அதைக் கண்டு மேலும் அதிகரிக்க அங்கிருந்து செல்ல மனமின்றி சுற்றிக் கொண்டே இருந்தனர். பூக்கள் குவியலாக விழுந்த இடங்களில் வித்தியாசம் தெரியாமல், ஒளியா, மலரா என்பது கூட கூர்ந்து கவனித்தால் தான் புரிந்தது. உன் சகிகளிடம் இந்த பூக்களை பறித்து மாலையாக கட்டி  தலையில் ஸூடிக் கொள்.   உன் கண்களின் வழியே கன்னங்களில் ப்ரதி பலிக்கும் சந்திரனின் ஒளிக்கு அவை ஈடாக இருக்கும் என்றார்.

கந்த மாதன மலையின் தேவதை உன்னை வரவேற்க காத்திருக்கிறாள்.  தேடுகிறாள் போலும். உன் இயல்பான சௌந்தர்யமே இந்த மலையின் கேசர மணத்தையும், அருண நிறத்தை கண்களிலும் காண விழைகிறாள்.  இதற்குள் சகிகள் மதுவைக் கொண்டு வந்து கொடுத்தனர். இந்த மனோகரமான சூழ் நிலைக்கு ஏற்ற பானமே இது. இதை ஏற்றுக் கொள். உத்சாகமும், கிளர்ச்சியும் வரும் என்று சொல்லி தானே வாங்கி அவளை குடிக்க வைத்தார்.   வசந்த காலம் வந்ததுமே மாமரத்தில் தோன்றும் வித விதமான மாறுதல்கள், இனிமையான மாம்பூ வாசனையும் கொண்டு மன்மதனுக்கு ஊழியம் செய்வது போல இருந்தாலும் அதன் பலன் அனைவருக்குமே.    

உடல் அயர்வும் மதுவை குடித்து உண்டான ராகமும், வெட்கமும் சயனத்தை நாடின.  அவரும்  அதே உணர்ச்சியுடன் இருப்பது தெரிந்து, இருவரும் ஏகாந்தமான மணி சிலா என்பதைக் கொண்டு நிர்மாணிக்கப் பட்ட குடிலுக்குள் நுழைந்தனர்.  எப்படி சந்திரனின் கிரணங்கள், முன் பனிக் காலமான அந்த இரவில் மேகங்களின் இடையில் ரோஹிணியைத் தேடிக் கண்டு ஓய்வு கொள்கிறானோ, அது போல, ஹம்ஸம் போன்ற வெண் நிற விரிப்புகளுடன் இருந்த கட்டிலில் தன் பிரியமான பார்வதியுடன் படுத்தார். 

 இருவரும் மனம் ஒருமித்து கொண்ட உடல் உறவு.  திடமான தேகமும், உள்ளத்தில் அன்பும் நிறைந்த இருவரும் பரஸ்பரம் அறிந்து விழைந்த செயல் ஆனதால் ரசித்து மகிழ்ந்தனர்.  இரவு நகர்வதே தெரியாமல் நகர்ந்தது. பின் களைத்து உறங்கினர்.  துதி பாடல்களும், கந்தர்வர்களின் வீணா கானமும், கமலங்கள் மலர்ந்து வீசிய மணமும் அவர்களை எழுப்பியது.  கந்தமாதன மலையின் சுகந்தமான மென் காற்றும் சுகமாக வீசியது.

பக்த ஜனங்கள் தரிசனம் செய்ய வந்து விட்டார்கள்.  அவர்களை வரவேற்க தயாராக ஆனார். இவ்வாறு நூறு சரத் ருதுக்கள் ஒரு இரவு போல கடந்தது. அவர்களிடையே தாம்பத்ய உணர்வு சற்றும் குறையவில்லை.  தீயின் நாக்குகள்  போல வளருவது தானே காமனின் இயல்பு. 

(இது வரை ஸ்ரீ காளிதாசனின் குமார சம்பவம் மகா காவியத்தில்  उमा सुरत वर्णणम् – உமா சுரத வர்ணனம் என்ற எட்டாவது அத்யாயம்) 

அத்யாயம்-9  

ஒரு நாள், சர்வாந்த்ர்யாமியான பகவான், தன் அறையில் அன்னிய ஜீவன் ஏதோ ஒன்று வந்திருப்பதை உணர்வால் அறிந்தார்.  ஒரு புறா தன் சிறகுகளை விரித்துக் கொண்டு அப்பொழுது தான் வந்து இறங்கியது போல தென் பட்டது. பார்த்தவுடன் தெரிந்து கொண்டார் யார் என்று.   புறாவின் வேஷத்தில் வந்திருப்பது அக்னியே.  அதைக் கண்டதும், அகாலத்தில், எந்த முன்  அறிவிப்பும் இன்றி வந்து நின்றதால் பயங்கரமாக கோபம் கொண்டார்.   அக்னி தன் ஸ்வரூபத்தை எடுத்துக் கொண்டான். பயத்தால் நடுங்கியவன், அழும் குரலில் தான் வந்த தூது செய்தியைச் சொன்னான். ஸ்மராரி அவர். காமனையே தகித்தவர். தடுமாறியபடி பேசலானான். 

ப்ரபோ! உலக நாயகன் தாங்களே. தேவ லோக வாசிகளின் கஷ்டங்களையும் தீர்ப்பவர். அதனால் தான் சுரேந்திரன் முதலானோர் உங்களிடம் என்னை அனுப்பி உள்ளார்கள். தைத்யர்களால் துன்புறுத்தப் பட்டு உங்களை சரணடைகிறார்கள்.  ஆபத்பாந்தவன், ஆபத்து வந்தால் பந்துவாக காப்பவன் தாங்களே. 

மனைவியுடன் நீங்கள் இருக்கும் இடம் தெரியாமல் தேடித் தேடி கண்டு கொண்டோம். நூறு ருதுக்கள் கடந்து விட்டன. (நூறு வருஷங்கள்)  உங்கள் தரிசனம் பெறாமல் தேவர்கள் தவிக்கிறார்கள். தீனர்களாக உங்களுக்கு செய்யும் சேவைகளும் செய்யாமல் இந்திரன் முதலான அனைவரும் வருந்துகிறார்கள்.  நேரில் காண்போமா என்று எதிர் நோக்கி என்னை இந்த புறா வேடத்தில் உங்களிடம் தூது அனுப்பி இருக்கிறார்கள்.  ஹே வித்வன்! இது தான் காரணம், நான் முன் அறிவிப்பின்றி இங்கு வந்து சேர்ந்தேன். 

ப்ரபோ! பகவன்! க்ஷமஸ்வ. பொறுத்தருள வேண்டும். தேவேந்திரனின் ஆணையை ஏற்று செயல்படும் தூதனாக வந்த நானும் உங்களையே சரணடைகிறேன்.  தவறான காலத்தில், அனுமதியின்றி வந்த என்னையும் பொறுத்தருள  வேண்டும். 

பகவானே! எங்கள் வேண்டுகோளையும் கேளுங்கள். உங்கள் மகனை வேண்டுகிறோம்.  இந்திரன் படைக்கு சேனானி- தலைவனாக இருந்து தேவலோகத்தை காக்க அவனால் தான் முடியும். தேவ லோக தலைவனாக, தேவ ஐஸ்வர்யத்தை ராஜ்ய லக்ஷ்மியை அவன் பொறுப்பில் விட தேவராஜன் காத்திருக்கிறான். மூவுலக நாயகனாக, காக்கும் பொறுப்பை உங்கள் மகன் தான் ஏற்று செய்ய வேண்டும்.  உங்கள் அருளால் தான் இவையனைத்தும் சாத்யமாகும்.

ஜாதவேதன் எனப்படும் அக்னியின் வேண்டுகோளைக் கேட்டு பகவான் ஸ்ரீ சங்கரன் மகிழ்ந்தார்.  தகுதியான வேண்டுகோளை தகுதியான சொற்களுடன் சொன்னதாக பாராட்டினார்.  அழகிய சொற்களால், தங்கள் தலைவர்களை  விவரங்கள் அறிந்தவர்கள் மகிழச் செய்கின்றனர்.   காரியத்தின் சித்தி- நிறைவேறுதலும் அதைச் சார்ந்தே இருக்கும் என்பதாக. 

மதனனை வென்றவர் எனப் புகழப் படும் பகவான் ஈசன், மனம் நிறைந்து வாழ்த்தினார். தாரகாசுரனை வெற்றி கொள்ள வேண்டும் என்பது தானே அவர்கள் எதிர்பார்ப்பு.  சக்ரன்-இந்திரனின் சேனாபதியாக, வெற்றி வீரனாக, அகில லோக நாயகனாக விளங்கப் போகும் தன் மகனை மனதிலேயே திட்டமிட்டுக் கொண்டார். 

யுகாந்தாகால அக்னி போன்ற தன் வீர்யத்தை அக்னியிடம் அளித்தார்.  (மனைவியுடன் கூடலுக்குக் பின் வெளி வந்த ரேதஸ்) மற்ற எவராலும்  தாங்க முடியாத அமோகமான அவருடைய வீர்யம். (ஊர்த்வ காமினி – மேல் நோக்கிச் செல்வது அவருடைய வீர்யம், கீழே விழாது எனப்படுகிறது- அக்னியின் கதி மேல் நோக்கியே செல்லும் என்பதாலும்) 

அதை அக்னி மிகுந்த பயத்துடனும், கவனத்துடனும் ஏற்றுக் கொண்டான். தன்னுடைய மூச்சுக் காற்று பட்டே மலினமான கண்ணாடியை, தூக்கிச் செல்பவன் போல, தன்னையே மலினமாக்கிய சங்கரரின் தேஜஸை கவனமாக பாதுகாத்து வைத்துக் கொண்டான். 

சர்வபக்ஷன்- கிடைத்ததை உடனடியாக முழுவதுமாக உண்பவன் என்று அக்னிக்கு பெயர். பகவான் சொன்னார், சர்வபக்ஷ! மிகப் பெரும் செயலை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.   என்றார். தேவி மலைமகளோ சபித்தாள்.  எனக்குரியது என் மகனைப் பெறுவது என்ற செயல், அதைப் பறித்த உன்னை குஷ்டம் வந்து ஸூழட்டும் (புகை அக்னியுடன் இணைந்தே இருப்பது)  

தேவியின் சாபத்தை ஏற்றுக் கொண்ட அக்னி, தன் இயல்பான ரூபம் இல்லாமல், பனி ஸூழ்ந்து மனினமாக சரோஜ மலரின் கோசம் மகரந்தங்களுடன் இருப்பது போல, அக்னி ரூபமே போல உக்ரமான சங்கர வீர்யத்தை மறைத்து எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றான்.  தக்ஷணின் சாபத்தினால் க்ஷயம்- குறையும் தன்மையை- பெற்ற சந்திரன் போல ஒளி இழந்து வெளியேறியது போல என்று உதாஹரணம். 

கிரிஜா- மலை மகள் பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆளானவளாக இருந்தாள். தனிமையில் இருந்த தங்கள் இருவருக்கும் இடையில் வருவதாவது என்று அக்னியிடம் வெட்கம், அதனால் கோபம்,  அவளைச் சமாதானப் படுத்த கிரீசன் முயன்றார். 

அவள் கண்ணீரை தன் மேலாடையால் துடைத்து, சந்திரனுடன் ஒப்புவமையாகச் சொல்லப் படும் அவள் முகத்தை தன் கையில் ஏந்தி, கண்ணீரால் கலைந்து வழிந்த அஞ்சனம் -கண் மை- துடைத்து பலவாறாக சமாதானம் செய்தார். 

சமாதானமாக சொல்லாலும், செயலாலும் அவள் மனக் குறையைத் தீர்த்தார்.  காற்று வீசி தாபம் குறைவது போல. (காளிதாசனை’ உபமா காளிதாஸஸ்ய’ என்பர். உவமைகள் அவருடைய சிறப்பு) 

கேசமும், அதில் ஸுடியிருந்த மலர் மாலைகளும் அவிழ்ந்து தொங்கின.  அதை சரி செய்தபடியே பேச்சுக் கொடுத்தார்.  சந்திரனை தன் தலையில் ஸுடிய பெருமான், பாரிஜாத மலர்கள் தரையில் சிதறிக் கிடப்பது போல அவள் கேசத்தின் மலர்கள் உடல் முழுவதும் இரைந்து பாதங்களில் வணங்கி கிடக்கும் பக்தர்கள் போல பாதங்களில் விழுந்து கிடந்ததாக கவியின் வர்ணனை. 

கன்னங்களின் வாசனை திரவியங்கள் பூசியிருந்தது, அதன் மேல் வழிந்த கண்ணீரால் கலைந்து கிடந்ததை கை விரல்களால் அளைந்தது மந்த்ராக்ஷரங்களை எழுதுவது போல இருந்ததாம். இதுவும் காவ்யாலங்காரம். இவரால் சபிக்கப் பட்டு மறைந்திருந்த காமன், இது தான் சமயம் என்று அவள் முகமாகிய சக்கரத்தில்  வந்து இறங்கியது போல் இருந்ததாம். 

காங்கேயன் எனப்படும் ஹரன், மேரு மலையின் மகள் அவள் என்பதையும், குரல் வளைவில் ஸ்வர ப்ரஸ்தாரங்கள் இருப்பதையும் சுட்டிக் கேட்டு, திடமான ஸ்தனங்களையும் புகழ்ந்து பேசி சமாதானம் செய்தார். கங்கா ப்ரவாஹம் போல அழகின் பெருக்கு லக்ஷ்மீ கரமாக இருப்பதாகச் சொன்னார்.  மனோ பவன் எனும் மன்மதனின் பாசத்தால் கட்டப் பட்டவர் போல ஒவ்வொரு அங்கமாக வர்ணித்தார். 

தன் மூன்றாவது கண் அக்னியே என்பதைச் சொல்லி, புத்தம் புது நீலோத்பல புஷ்பம் போன்ற அவள் கண்களில் இயல்பான சோபையை வரவழைத்தார்.  தன் உயிருக்குயிரான வாழ்க்கைத் துணைவி, அவள் முகம் வாட பொறுக்காத சாதாரண ஆண் மகன் போல அவளை சமாதானப் படுத்தினார்.  சௌபாக்யவதி சதி, மெள்ள மெள்ள இயல்பானவள் ஆனாள்.  சதி பதிகள் அன்யோன்யமாக இருப்பவர்களில்  அம்பாவான சதிக்கு இணை யாரும் இல்லை என்பது பொதுவான கருத்து.  அதைத் தான் கவி சௌபாக்யவதீஷு துர்யாம் என்று வர்ணிக்கிறார். 

அவள் சகிகள் விஜயா, ஜயா என்பவர்கள் வந்தனர்.  வழக்கமாக செய்யும் பணிவிடைகளைச் செய்தனர். நீராடவும், அலங்கரித்துக் கொள்ளவும் உதவினர்.  ராஜ சபைக்கு செல்லத் தயாராக ஆனவளை வந்திகள் பாடியும், வாத்யங்கள் வாசித்தும் வரவேற்றனர்.  தாள வாத்யங்களுடன் கந்தர்வர்கள் வந்தார்கள். சங்க த்வனியும், பினாக  பாணியை துதிக்கும் சுப்ரபாதங்களும் சுஸ்வரமாக  கேட்டன.   

தேவர்கள் அனைவரும் கூடியிருந்தனர். வாசலில் காவல் இருந்த நந்தி அவர்களை கிரமமாக உபசரித்து அழைத்து வந்தார்.  அவர்கள் தங்கள் வணக்கத்தை தெரிவிக்க வந்திருப்பதை பகவான் ஹரனிடம் வந்து தானும்  கை கூப்பி வணங்கியபடி தெரிவித்தார். 

மஹேஸ்வரன், தன் மானஸ ராஜ ஹம்ஸீ என ஹிமாத்ரி மகளை கைப்பற்றி அழைத்துக் கொண்டு வந்திருந்த தேவர்களை சந்திக்க சபைக்கு வந்தார்.  மஹேந்திரன் முதலான தேவர்கள் தலையில் கூப்பிய கைகளை வைத்த படி வந்து வணங்கி மூவுலகத்துக்கும் தாயான பார்வதி தேவியையும் வணங்கி நின்றனர். 

அவர்களிடம் குசலம் விசாரித்து விட்டு அவர்கள் அகன்றதும்,  தன் வ்ருஷப வாகனத்தில் நந்தியின் உதவியுடன் சைல புத்ரியும் ஏறிக் கொண்ட பின் புறப்பட்டார்.  மனோ வேகத்தில் இருவருமாக வானத்தில் செல்லும் சமயம் எதிர் பட்ட மற்ற தேவர்களும், கந்தர்வர்களும் தங்கள் விமானங்களில் சஞ்சரித்தவர்கள் வணங்கியதை ஏற்றுக் கொண்ட படி சென்றார். 

உடல் ஆயாசங்களை நீக்கும் சக்தி வாய்ந்த ஆகாய கங்கை ஜலத்தில் மூழ்கி எழுந்து, பாரிஜாதம் முதலான மலர்களின் மணத்தையும் ஏந்தியபடி வந்த காற்றை அனுபவித்தபடி கிரிஜா,கிரீச என்ற இருவரும் சென்றனர். கைலாச மலை, ஸ்படிகம் போல தெரிந்தது. மலையரசன் என்படும் கைலாச மலை.  வானத்தை தொட்டு விடும் போன்ற உயர்ந்த மலை.  சந்திரனை சிரஸில் தரித்த பகவான் ஹரனைப் போலவே, அதன் முடியிலும் சந்திர பிம்பம் தெரிந்தது.  இவர் போகி- பாம்புகளை தரித்திருப்பது போல அந்த மலையின்  சாரலில் உல்லாசமாக பொழுதைக் கழிக்க வந்த போகிகள் நிரம்பியிருந்தனர்.  பஸ்மத்தை -விபூதியை தரித்த பகவான் ஹரன் போலவே வெண்மையான பனி மூடிய சிகரத்தோடு மலையும் காணப்பட்டது. ஸ்படிக மலையில் தங்கள் பிம்பத்தைப் பார்த்து அந்த உல்லாச பயணிகள் ஒருவரையொருவர் சீண்டி மகிழ்ந்தனர்.  அதில் சந்திரனின் தோற்றம் மேலும் ப்ரகாசமாகத் தெரிவதைக் கண்டு மகிழ்ந்தனர்.  அதன் களங்கமும் கஸ்தூரியின் கருமையுடன் மணமும் உள்ளதா என்று சோதித்து பார்ப்பது போல பார்த்தனர்.  அவர்கள் ஏறி வந்த யானைகளும் தங்கள் பிரதி பிம்பத்தைக் கண்டு ப்ரமித்தன.  சித்தர்களும், அவர்களைச் சார்ந்த பெண்களும் அந்த ஸ்படிக மலையில் சாரலில் இருந்தவர்கள், இரவில்  தாரகைகளைப் பார்த்து தங்களுடைய முத்து மாலைகளோ என சந்தேகம் தோன்ற தங்களுடைய உடலில் அவை இருக்கின்றனவா என பார்த்துக் கொண்டனர். அத்புதமான அந்த காட்சியை கண்டும் மன நிறைவை அடையாதவர்கள், இரவில் தலையில் சூடாமணி போல மலையுச்சியில் சந்திரன் உதித்ததைப் பார்த்து பரவசமானார்கள்.  தம்பதிகள் அந்த இரவின் அழகில் சுற்றி வந்தபடி இருந்தனர்.  தேவர்கள் பிரிய மனைவிகளுடன் ப்ரதி பிம்பங்களைப் பார்த்தபடி ஒன்றே பலவாக தெரிகிறது, அதுவே இந்த ஸ்படிக மலையின் விசேஷம் என பேசிக் கொண்டனர்.  அவர்களுடன் தேவ தேவனும், கௌரியுடன் அவர்களின் சேஷ்டைகளை ரசித்தபடி சென்றனர்.  நந்தி முன்னால் வழி காட்டுவது போல செல்ல, மெதுவாக பின் தொடர்ந்தனர்.  முன் நெற்றியில் குழல்கள் அலைய சுகமான அந்த ஸூழ்நிலையை இருவரும் அனுபவித்தனர்.  காலிகா வாக கபால மாலை தரித்து ஆடும் தேவி, நடனமாடினாள்.  அவளை அணைத்தபடி ஈசனும் உடன் ஆடி, காமனை வென்றவரே, காம வசம் ஆனது போல ஆனார்.  

அந்த மலைச் சாரலில் அத்புதமான இயற்கை எழில் கொஞ்சும் இடம், அந்த சமயம்  நந்தி முதலான மற்றவர்களும் அனுசரணையாக  பாடியும், தாளங்கள் இசைத்தும், வாத்யங்களை வாசித்தும் ஆடலுக்கு துணை போவது போலவும்  மனோஹரமாக விளங்கியது. 

(இது வரை ஸ்ரீ காளிதாஸரின் குமார சம்பவ காவ்யத்தின் கைலாஸ கமனம் என்ற ஒன்பதாவது அத்யாயம். )

அத்யாயம்-10

அக்னி தேவன், தாங்கமுடியாத மகேஸ்வர வீர்யத்தை தாங்கியபடி, தேவர்கள் அனைவரும் இருந்த , மகேந்திரன் தலைமை தாங்கிய சபையில் நுழைந்தான். பத்து திசைகளின் தலைவர்களும் புகை மூடிய அக்னி மண்டலத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.  தன் ஆயிரம் கண்களால் இந்திரன் கண்டான்.  அந்த நிலையில் அக்னியைக் கண்டதும் அவன் மனதில் முதலில் தோன்றிய எண்ணம் காமதகனான – காமனை எரித்த, பகவானிடம் சென்றவன், எளிதில் வெகுளும் பரமேஸ்வரனிடம் சாபம் பெற்று விட்டானோ என்றே ஐயமே. அவசரமாக  ஆசனம் அளித்து அக்னியை அமரச் செய்தான். அனைவரும் கண் கொட்டாமல் பார்த்தபடி இருந்தனர். 

ஹவ்யவாஹ! அக்னியின் பெயர்- யாகத்தில் பெறும் ஹவ்யத்தை கொண்டு செல்பவன் என்ற பொருளில்-என்ன நேர்ந்தது ? உன்னைக் காண மிகவும் வேதனையுடன் இருப்பவன் போல தெரிகிறது.  என்ன நடந்தது என்று சுரேந்திரன் வினவினான். அக்னி தேவன் தன்னை ஆஸ்வாச படுத்திக் கொண்டு பதில் சொன்னான்.

சுர நாயக! உன் ஆணையின் படி நான் ஒரு புறாவின் உருவில் ப்ரபுவின் அந்த:புரத்தில் நுழைந்து விட்டேன்.  

பயத்துடன் என்ன சொல்வாரோ என்று கவலையுடன் நின்றேன். தேவி கௌரி அறையில்  இருந்தார், இருவருமாக அறைக்குள் கூடியிருந்திருக்க வேண்டும். பாதியில் ப்ரபு ஏதோ சந்தேகித்து எழுந்து வந்து விட்டார்.  அவர் முன் நான் என்ன செய்ய முடியும்? என் சுய ரூபத்திலேயே பதில் சொன்னேன். 

என் வேஷம் அவர் முன் எடுபடவில்லை. கண்டு கொண்டு விட்டார்.   இந்திரனே, விநாடி நேரம் அவர் கோபத்தால் தகித்து விடுவது போல் இருந்தார். அவரை சரணடைந்தேன். ஒரே மூச்சில் உன் கட்டளை, என்ன காரணம் அனைத்தையும் ஒப்பித்தேன்.  துதி செய்யலானேன். அதைக் கேட்டபின் அவர் சாந்தமாக என்ன என்று விசாரித்தார்.  மகா காருண்யம் மிகுந்த  பிரபு, வணக்கத்துடன் முறையாக பேசினால் யார் தான் கேட்காமல் இருப்பார்கள்.

பயப்படாதே, சொல் என்றார். சரண்யன்- அடி பணிந்தவர்களை காப்பவர்.  இதோ தகித்து விடுவார் என்று இருந்தவர், என்னிடம் சாதாரணமாக பேசியதால் நானும் தைரியம் பெற்று வந்த காரியத்தைச் சொன்னேன். 

அசந்தர்பமாக நான் அவரை சயனத்திலிருந்து எழுப்பி மகா அபராதம் செய்திருந்தேன். ஆனால் அவர் எதையும் காட்டிக்கொள்ளாமல் கௌரி தேவி அறையில் இருந்தவரை திரும்பி பார்த்துவிட்டு சற்று யோசிப்பவர் போல இருந்தார். 

அந்தரங்கமாக மனைவியுடன் இருந்தவர்,  கூடலின் முடிவில் வெளியான தனது ரேதஸ் என்ற வீர்யத்தை என்னிடம் அளித்தார். அமோகமான வீர்யம், யாராலும் தாங்க முடியாத, மூவுலகையும் எரித்து அழிக்கக் கூடிய அவரது வீர்யம், என்னிடம் அளித்து விட்டார்.   அந்த தேஜஸை பெற்ற நான் தவித்தேன். என் உடலே பற்றி எரிவது போல ஆயிற்று. புகை சூழ்ந்து சக்தியின்றி இதோ உன்னிடம் வந்து விட்டேன். வாஸவ! என்னை காப்பாற்று. ருத்ர வீர்யம், என்னையே தகிக்கிறது.  நான் இதை நிர்வகித்துத் தான் ஆக வேண்டும்.

இந்திரன் என்ன செய்யலாம் என்று யோசித்தான்.  அக்னியின் தாபத்தை போக்கக் கூடியவர் யாருண்டு?  தீயின் சாதாரணமாக தீக் காயம் பட்டு அல்லது தீயில் எரிந்த உடல்களை நீரால் சரி செய்வோம். மிக அரிய செயலை செய்தவன் நீ. உன்னை எப்பாடு பட்டும் காப்பாற்றவே முயலுவோம். பயப்படாதே என்று ஆதரவாக தடவிக் கொடுத்தான்.

அடுத்த ஏழு ஸ்லோகங்களால் அக்னியை பாராட்டினான் இந்திரன். அக்னியே, நான் மிகவும் மகிழ்ந்தேன். ஸ்வாஹா ,ஸ்வதா – என்பவைகளின் மூலம்   நீ தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் என்ற அனைவருக்கும் பிரியமானதைச் செய்பவன்.  அதனால் அவர்களின் முகமாக சொல்லப் படுகிறாய்.  (ஹோமம் என்ற செயலில் ஸ்வஹா என்று சொல்லி தேவதைகளுக்கும், ஸ்வதா என்று சொல்லி குல மூத்தவர்களுக்கும் பொருட்களை ஹோமத்தீயில் இடுவர்.  இந்த பெயர்களுடைய  தீயின் பிழம்புகள் அந்தந்த தேவதைகளுக்கு கொண்டு செல்வதாக சொல்வர்)   

யாகம் செய்பவர்கள் பொருட்களை உன்னிடம் அளித்து ஹோமம் செய்கிறார்கள்.  அவை உன்னிடம் தூய்மையாகின்றன.  அவர்களும் சுவர்கம் அடைகின்றனர். அப்படி ஸ்வர்கம் என்ற நல்கதியை அடைய நீ அனைவருக்கும் உதவி செய்கிறாய்.

தபஸ்விகளும், மந்திரங்களால் பாவனமாக்கிய பின் பொருள்களை யாக குண்டத்தில் சமர்ப்பிக்கிறார்கள்.   அவர்களும் தவத்தின் பலனை நன்மையை அடைகிறார்கள். ஒரு வகையில்,  நீ தான் அவர்கள் தவத்தின் பலனைப் பெற்றுத் தரும் பிரபு.

ஸூரியனுக்கு என்று அவர்கள் அளிப்பதை கொண்டு சேர்க்கிறாய். அதை பெற்ற ஸூரிய பகவான் மழை என்பதன் மூலம் பூமியில் பொழிகிறான். அதிலிருந்து அன்னம் விளைகிறது. அதன் மூலம் பிறவிகள் உலகில் உயிர் வாழ்கின்றன. 

பஞ்ச பூதங்கள் என்ற இயற்கை தத்துவங்களும்  உள்ளூற நீ இருந்து இயக்குவதாலேயே தங்கள் கடமைகளைச் செய்ய முடிகிறது.  எனவே உலகில் அனைத்துக்கும் உயிரைத் தருபவன் நீயே. 

( உரையாசிரியரின் விளக்கம்:  உயிரினங்களின் உள் இருந்து அவைகளின் செயல்களை ஊக்குவிக்கிறாய்.  அவைகளின் சந்ததி உருவாகவும் நீயே காரணமாகிறாய்.  இப்படி இருவிதமாகவும் அவைகள் ஜீவிக்கவும், தங்கள் ப்ரஜைகளை அவை பெருக்கவும் காரணமாவதால் நீ உலகில் ப்ராணன்-உயிர் தருபவன் நீயே.  அக்னி இருப்பதாலேயே ப்ராணிகள் உயிருடன் உலவுகின்றன. உள்ளூற இருப்பது உடன் இருந்து உதவுவது என்றும்,  அக்னி சம்பந்தம் விடாமல் இருந்து கர்பத்தில் உள்ள சிசுக்கள் வளர்ச்சிக்கும் உதவுகிறாய்.  (குயவன் மண் பாண்டம் செய்வது போல.  வடவாக்னி என்று கடலிலும் உள்ளே இருந்து நீர் வாழ் பிறவிகளுக்கும் உணவை சமைப்பதாக பாகவதம் சொல்கிறது)   

உபகாரம் செய்வதில் உன்னைப் போல மற்றொருவர் இல்லை. எங்களுக்கும் தற்சமயம் தேவையான நன்மையை செய்யவும் உன்னையே தேர்ந்தெடுத்திருக்கிறார்.   

அனைத்து தேவர்களிலும் நீ ஒருவனே செயல் வீரன். விபத்துகளும் உன் போன்ற வீரர்களுக்கு, உயர்வே.  வரவேற்கத் தக்கதே. ஹே அக்னியே! நீயும் உபகாரம் செய்யவே துடிப்புடன் இருப்பவன்.  பரோபகாரி நீயே.

தேவி பாகீரதியை காலம் காலமாக  நாம் அனைவரும் பக்தியுடன் உபாசித்து வந்திருக்கிறோம்.  மிக சக்தி வாய்ந்த உன்னால் தாங்க முடியாத இந்த தாபத்தை அவள் தான் ஏற்றுக் கொள்ள தகுதி உடையவள். அந்த ப்ரவாகத்தில் மூழ்கி உன் பொறுப்பை அவளிடம் அளித்து விடு. ஹவ்யவாஹனா! தாமதிக்காதே, உடனே செல். அவசியமான செயல்களை தள்ளிப் போடக் கூடாது.  சுபஸ்ய சீக்ரம்- என்பது ஒரு வசனம். நற்காரியங்களை உடனடியாக செய்வதே நல்லது. 

போ அக்னியே! சம்புவின் தேவி அம்போ மயி- நீர் ரூபமாக ப்ரவகிக்கும் சுராபகா – தேவ லோக நதியே கங்கை.  உன்னிடமிருந்து காம விரோதியான சம்புவின் பீஜத்தை அவள் தாங்குவாள்.  அவள் வேகம் அதற்கு ஈடு கொடுக்கும்.   

இவ்வாறு இந்திரன் சொல்லவும், அக்னி தேவனும் உடனே புறப்பட்டான்.  கங்கையை சென்றடைந்தான்.

தன் நீரில்  மூழ்கி நீராடின மாத்திரத்தில், ஜீவன்களின் அனைத்து பாபங்களையும் நாசம் செய்யும் பாவனமான கங்கா தேவியைக் கண்டான். சுவர்கத்தில் இருந்து இறங்கி வருபவள்,  மோக்ஷம் அளிப்பவள், உதார குணமுள்ள தேவதா, உடனடியாக பலன் தருபவள், துர்கதாரிணி- துன்பங்களை கடக்கச் செய்பவள்,

மகேஸ்வரனின் ஜடையில் வசிப்பவள், பாப நாசினி, அன்புடன் பாலிப்பவள், நிர்வாணம் என்ற மோக்ஷம் தருபவள், தர்ம சாரிணீ,

விஷ்ணுவின் பாதத்தில் இருந்து பிரவகித்தவள், பிரும்ம லோகத்தில் இருப்பவள், மூன்று கிளைகளாக பிரிந்து பூமியில் ஓடும் சமயம், சுற்றி இருப்பவர்களின் களைப்பை நீக்கி, புத்துயிர் அளிப்பவள், மூவுலகையும் பாவனமாக்கும் பாவனி என்று பலவாறாக என்று துதி செய்தான். 

கங்கா தேவி,  அக்னியைக் கண்டவுடன் தன் அலைகளே கையாக உயர எழுந்த அலைகளால் எடுத்த காரியம் நலமாக நிறைவேறட்டும் என்று ஆசீர்வதிப்பது போல,  வரவேற்றாள். 

நீர் வாழ் பறவைகள் மதம் கொண்டு கூச்சலிட்டன. அதன் வழியாக நன்மையே நடக்கும், வா, என்று அழைப்பது போலவும், அபயம் அளிக்கிறேன், உன் துன்பம் நீங்கும் என் சமாதானமாக சொல்வது போலவும் இருந்தன. 

அலைகள் மேலும் உத்சாகமாக நீரை வாரியடித்தன.  கரையைத் தொட்டு திரும்பி வரும் அலைகள் மேலும் வேகம் கொண்டது போல இருந்தன. பிரியமான பந்துக்களை வரவேற்கும் மனிதர்கள் போலவே சுரலோக கங்கை, ஜாத வேதஸ் என்ற அக்னியை வரவேற்றாள். 

குளிர்ந்த நீரில் இறங்கிய அக்னி தேவன், தன் தாபம் தீர அளைந்து களைப்பும், பயமும் நீங்கப் பெற்றான். பெரும் விபத்திலிருந்து மீண்டவர்கள் செய்வது தானே.  ஆபத்தை நீக்கும் என ஏதோ ஒரு  துரும்பை கூட பிடித்துக் கொள்வது இயல்பு. 

கங்கா வாரிணி, கல்யாண காரிணி, ஸ்ரம ஹாரிணீ.- எனப் படும் கங்கையிலிருந்து வெளிவர மனமில்லாதவன் மூழ்கியே இருந்தான்.  புண்ய பாரிணீ- புண்யம் நிரம்பியவள், பவ தாரிணியான கங்கை அக்னிக்கு அமைதியை அளித்தாள். 

தன்னிடம் ஒப்படைக்கப் பட்ட மகேஸ்வரனின் பீஜத்தை நீரில் வைத்தான்.  உடனே கங்கையின் பிரவாகமும், அலைகளின் ஆர்பாட்டமும் மிக அதிகமாக ஆயின.  கங்கா தேவி மரியாதையுடன் ஏற்றுக் கொண்டு விட்டாள் என்று  அமைதி அடைந்த ஹவ்ய வாஹனன், மன நிம்மதியோடு நீரிலிருந்து வெளியேறினான்.  அம்ருத மயமான கங்கையால் குளிப்பாட்ட பட்டவன் போல மகிழ்ந்தவன் எடுத்த காரியம் முடிந்த திருப்தியுடன் தன் வழியில் சென்றான். 

கங்கையால் அந்த பாரத்தை தாங்க முடியவில்லை.  காமனை வென்றவனின் மிகப் பெரிய, அளவிடமுடியாத சக்தி அது.  அறியாமல்  ஏற்றுக் கொண்டு விட்டோமே என்று பரிதவிக்கச் செய்தது.  ஆகாயத்தில் பிரவகிக்கும் கங்கையே தடுமாறினாள்.

தண்ணீர் கொதிப்பது போல இருக்கவும், நீர் வாழ் பிறவிகள் அலை பாய்ந்தன. யுக முடிவில் வரும் பிரளயமோ என பயந்தன. பல நூறு நாக்குகளுடன் தீயின் வேகமோ, நீரினுள் அக்னியின் வெப்பம் எப்படி சாத்யம் ?

ஸ்ரீ ருத்ரனின் வீர்யம்.  சாதாரணமாக அக்னியை அணைக்கும் நீரையே கொதிக்க வைத்து விட்டது.  கங்கை சண்ட மாருதமாக மாறி விட்ட அலைகளால் கங்கை செய்வதறியாது திகைத்தாள்.

மாக-மாசி மாதம் அது. ஸூரியன் மெள்ள உதிக்கும் நேரம். தன் சண்ட கிரணங்களை மெள்ள எழுப்பி, பூமியின் கண்கள் போன்ற ஸூரியன் மலை அடிவாரத்திலிருந்து தலையைத் தூக்கியது போல ஓரளவு தெரிந்த சமயம், திசைகளும் ப்ரகாசமாயின. ஆறு க்ருத்திகா பெண்கள் கங்கையில் ஸ்னானம் செய்ய வந்தனர். 

சுவர்கத்தில் வசிப்பவர்கள், தூய வெண் நிற கங்கை நீரில் வழக்கமாக செய்யும் ஆசமனங்கள் செய்த பின்,  ஆழ்ந்து நீராடத் தயாராக வந்தவர்கள், அலைகளின் வேகத்தாலேயே தன் துக்கத்தை கங்கா தேவி சொல்வது போல இருக்க தயங்கி நின்றனர். 

வழக்கமாக சப்த ரிஷிகள் நீராடி முடித்து, மலர்களையும், தூர்வா என்ற புல்லையும் வைத்து அர்ச்சனை செய்தவை மட்டுமே இருக்கக் கண்டவர்கள், நதியின் வெண் மணலையே கண்டனர்.  யோக சாதனைகள் செய்பவர் மூடிய கண்களுடன் தங்கள் தியானத்தில் ஆழ்ந்து இருந்ததையும் கண்டனர்.  பாதங்களின் கட்டை விரல் மட்டுமே பூமியை தொடுவதாக நின்றபடி ஸூரியனையே நோக்கியபடி ப்ரும்ம ரிஷிகள் தவம் செய்தபடி நின்று கொண்டு இருந்ததைக் கண்டனர். 

திரும்பி நதியைப் பார்த்து வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்தவர்கள், அம்ருத மயமானவள் ஏன் பதில் வணக்கம் சொல்லவில்லை என்று யோசித்தனர்.  சந்திரசேகரனின்  தலையில் இருந்து பிரவகித்து வருபவள்.  கண்ணால் காண்பதே புண்யம் என்பர்.  இவளை சாதுக்கள் போற்றி புகழ்ந்து பேசுவர்.  அலைகளுடன் இவளைக் காணவே மகிழ்ச்சியாக இருக்கும்.

மகா விஷ்ணுவின் பாதங்களில் இருந்தவள். அவர் பாதங்களைப் பணிந்தவர்களே மோக்ஷம் பெறுவர். தானும் தூய்மையானவள்.  நீராடுபவர்களின் பாபம் என்ற களங்கத்தையும் நீக்குபவள் என்பர். முதலில் வணங்கி விட்டுத் தானே நீரில் இறங்குவோம் என்று சொல்லிய படியே தலை வணங்கினர். 

பக்தியுடன் துதித்தனர். உன்னில் நீராடுவதே ஒரு சௌபாக்யம்.  மோட்சம் பெறுவது போல ஆனந்தம் அளிப்பது. சதி நீ. சுவர்க லோக நதியே! என பாடினர்.  பின் நதியில் மூழ்கி நீராடினர். நம் நல் வினைப் பயனே இந்த நதியில் நீராடும் பாக்யத்தை கொடுத்தது என்பது போல அலுக்கும் வரை நீரில் இருந்து விட்டு எழுந்து வந்தனர்.  க்ருஸாணு- மகேஸ்வரனின் பெயர். அவருடைய பீஜத்தின் உஷ்ணத்தால் ஜலமே வற்றி அடி மணல் ஒட்டிக் கொண்டு விட்டதோ என்பது போல தங்கள் சரீரத்தில் மணல் துகள் போல பரவி இருந்ததைக் கண்டனர்.  கங்கையிடமிருந்து விலகி அவை க்ருத்திகா ஸ்த்ரீகளின் உடலில் ப்ரவேசித்து விட்டன. 

ரௌத்ரம்- ஸ்ரீ ருத்ரனின் வீர்யம், இவர்களையும் தாங்க முடியாத வெப்பத்துடன் தாக்கியது.  என்ன ஏது என்று புரியாமல் திகைத்தனர். 

பர பரப்புடன் வெளியேறி வந்து உடலின் உள் தகிக்கும் அக்னியால் தாக்கப் பட்டது போல தவித்தனர். திடுமென தாங்கள் கர்பவதிகளாக ஆனதை உணர்ந்தனர்.  கங்கையிடமிருந்து நடந்த விவரங்களைத் தெரிந்து கொண்டார்கள். சம்புவின் சந்ததி என்று அறிந்து மகிழ்ச்சியும், திடுமென தோன்றியதால் லஜ்ஜையும், மறுத்து பேச பயமும்,  இது நியாயமா, உலகில் ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகமும் ஒரு பக்கம் இருக்க, கர்பத்தின் கனத்தால் உடல் வருத்தமும் அனுபவித்தனர். 

அதன் பின் அவர்கள்  சரவண பொய்கையை அடைந்தனர்.  பயமும் வெட்கமும் அவர்களை வாட்டியதை அந்த பொய்கையில், தங்கள் கர்பத்தை  தியாகம் செய்து விட்டு சென்று விட்டனர்.  

பார்வதி தானே சரவண பொய்கையாக ஆனாள்.  சிதைந்த ஸ்கந்த – துண்டுகளாக இருந்ததை இணைத்து ஓருருவாக ஆக்கினாள்- ஸ்கந்தன் என்ற பெயர் வரக் காரணமும் அதுவே. 

அந்த க்ருத்திகா பெண்கள் சரவணத்தில் விடப்பட்ட நளினமான இளம் கர்பத்தின் பாகங்கள், சந்திரனின் முதல் கலை போல காண குளுமையாகவும், அதி கோமளமுமாக இருந்தவைகள்,  ஆறு முகங்களும், நூறு ஸுரியங்களுக்கு  சமமான ப்ரகாசமும் உடையவனாக, ,   உனக்கு நாலு தானே, எனக்கு ஆறு என்று ப்ரும்மாவைப் பார்த்து ஏளனம் செய்வது போலவும்,  ஒரு சிசுவாக உருக் கொண்டன.  ( பின்னால்  காமனை எரித்த பகவானுக்கும் குருவாக ஆனான். – அதனால் ஸ்வாமி நாதன் என்று பெயர் பெற்றான் என்பது பிரசித்தம்)

|| குமாரோத்பத்தி என்ற பத்தாவது அத்யாயம் நிறைவுற்றது.||

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

சபரிமலை அய்யப்பன் யார்?- நேயன்


 சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவன் அய்யப்பன் என்று அறிவுக்கு ஒவ்வாத ஒரு கதையைச் சொல்லி, அண்மைக்காலமாக கேரள சபரிமலை அய்யப்பனுக்கு ஒரு மகத்துவத்தை உண்டாக்கி யுள்ளனர்.

ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்குமா?

அதுவும் பெண் வடிவில் இருந்த விஷ்ணுவின் கையைச் சிவன் பிடித்தவுடன் கையில் குழந்தை
பிறந்தது என்பது அறிவியலுக்கு ஏற்புடையதா?

இப்படிப்பட்ட முட்டாள்தனமான ஒரு புனைவை கடவுள் என்று நம்பி இந்த அறிவியல் உலகத்திலும் அலைவது சரியா? சிந்திக்க வேண்டாமா?
அய்யப்பன் என்பது கையில் பிறந்ததல்ல. அய்யனார் என்ற காவல் தெய்வமே அய்யப்பனாக ஆக்கப்பட்டுள்ளது. அய்யனார் என்பது ஒவ்வொரு ஊரிலும் உள்ள காவல் தெய்வம். அப்படிப்பட்ட ஒரு காவல் தெய்வந்தான் சபரிமலை அய்யப்பனும்.

கிராமங்களில் வீரன் வழிபாடு, அய்யனார் வழிபாடு, அம்மன் வழிபாடு என்பவை வாழ்ந்து மறைந்த பெரியோரின் வழிபாடே. நிலத்தலைவர் வழிபாடு, பெண்டிர் வழிபாடு போல, வீரர் வழிபாட்டின் ஒரு பிரிவே அய்யனார் வழிபாடு. விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர், வேடப்பர் போன்ற காவல் தெய்வமே சபரிமலை அய்யப்பனும் என்ற உண்மையை அனைவரும் கருத்தில்கொள்ள வேண்டும். ஊரைக் காப்பவர்கள் என்ற வகையிலே இக்காவல் தெய்வங்கள் வழிபடப்படுகின்றன.

தமிழகத்தின் கிராமங்கள்தோறும் அய்யனார் சாமிகள் காவல் தெய்வமாக இருப்பதைப் போலவே, ஆரியங்காவு பகுதியில் இருந்த அய்யப்பன் கோவிலும் முன்னொரு காலத்தில் எல்லை காவல் தெய்வமாக, சிறு தெய்வ வழிபாட்டில் முக்கிய பங்கு வகித்த தெய்வமாக இருந்தது. வழிபாடுகளில் இரண்டு கடவுள்-களுக்கும் அதிக அளவில் ஒற்றுமைகள் இருக்கின்றன. பழங்குடிகளின் ஊர்க்காவல் தெய்வமாக இருந்த இக்கோவில் பிற்காலத்தில் உயர்ஜாதி மலையாள இந்துக்களாலும், பந்தளம் ராஜ குடும்பத்தாலும் பராமரிக்கப்பட்டு, அக்கோவிலின் நிர்வாகத்தினை அவர்கள் ஏற்று நடத்தத் தொடங்கினார்கள் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் இருக்கும் பல்வேறு அய்யப்பன் கோயில்களில் அய்யப்பன் திருமணமான கடவுளாகவே காட்சி அளிக்கிறார். அச்சன்கோவில், கோவை போன்ற கேரளத்தை ஒட்டிய தமிழ்நாட்டுப் பகுதிகளில் இருக்கும் அய்யப்பன் கோவில்களில் பெண்கள் வழிபட முழு உரிமையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களைத் தடுப்பது குற்றம்!

சபரிமலையில் பெண்கள் நுழையக் கூடாது என 1972ஆம் ஆண்டுதான் தடையே விதித்தார்கள். அதற்கு முன்புவரை ஆண்களைப் போலவே பெண்களும் சென்று அய்யப்பனை வழிபட்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1972இல் தடை விதிக்கப்பட்டாலும் அதைப் பெரிதாக நடைமுறைப்படுத்தவில்லை.

பெண்கள் வழிபாடும்
கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பும்

1990ஆம் ஆண்டு போடப்பட்ட பொது நல வழக்கின் காரணமாக 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் கோவிலுக்குள் செல்லக் கூடாது என கேரள உயர்நீதிமன்றம் 1993ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது. அதற்குப் பிறகுதான் பெண்கள் இக்கோவிலுக்கு வருவதில்லை. ஆனால், ஆதிகாலத்தில் இருந்தே சோறுண்ணும் சடங்கிற்காக பெண்கள் இந்தக் கோவிலுக்கு வருவது வழக்கமான ஒன்றாகவே இருந்தது.
1939ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத் தில் ராணியாக இருந்தவர் அய்யப்பன் கோவிலில் வழிபாடு நடத்தி யிருக்கிறார் என்பதற்கான சான்றுகளும் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

மேனாள் பிரதமரின் செயலாளர் டி.கே.ஏ.நாயரின் அனுபவம்

இந்தியாவில் இருக்கும் மற்ற கோவில்களைப் போலவே இங்கும் பெண்கள் வந்து வழிபாடு செய்து வந்தனர். பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் செயலாளராக பணியாற்றி வந்த டி.கே.ஏ.நாயர் இதுகுறித்து கூறுகையில், ‘‘எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் முதன்முறையாக சபரிமலை சென்றபோது நான் என் அன்னையின் மடியில் அமர்ந்திருந்தேன். அன்று எடுத்துக் கொண்ட நிழற்படம் இன்றும் எங்களிடம் இருக்கிறது’’ என்று கூறினார். அவர் காட்டிய அந்த நிழற்படத்தில் ஓர் இளம்பெண், கருவறை முன்னால் நின்றுகொண்டு கடவுளை வேண்டிக் கொண்டிருப்பதாக உள்ளது.
கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பின், சமூக நல ஆர்வலர்களும், பெண்ணுரிமைப் போராளிகளும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தனர். இருதரப்பு வாதங்களும் கேட்கப்பட்டு, அதன் பிறகுதான் அனைத்துப் பெண்களும் அய்யப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. ஆனால், அத்தீர்ப்பை கொஞ்சங்கூட மதிக்காமல் அடியாட்
களை அமர்த்தி பெண்களைத் தாக்கித் தடுத்து வருகிறது பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். கூட்டம்.

பிரம்மச்சரியம், மரபு என்பது பித்தலாட்டம்

அய்யப்பன் பிரம்மச்சாரி என்பது பெரிய பித்தலாட்டம். அய்யப்பனுக்கு ஒரு பெண்டாட்டி அல்ல. இரு பெண்டாட்டி. பூரணி, புஷ்கலை என்று இரண்டு மனைவிகள். இதை மறுக்க முடியுமா?- அப்படியிருக்க அய்யப்பன் பிரம்மச்சாரி. அதனால் பெண்கள் செல்லக் கூடாது என்பது பித்தலாட்டமாகும்.
அதேபோல் பெண்கள் செல்லக்கூடாது என்பது மரபு என்பதும் பெரிய மோசடி.

பெண்ணின் மாதவிடாய் தீட்டு என்றால், அதனால் கோயில் புனிதம் கெடும் என்றால் மற்ற கோயில்களில் பெண்கள் அனுமதிக்கப்-படுவது ஏன்? அங்கு புனிதம் கெடாதா? மற்ற கோயில்களில் பெண்கள் அனுமதிக்கப்படும்-போது, அய்யப்பன் கோயிலிலும் அனுமதிப்பது-தானே சரியாகும்?
அய்யப்பன் பிரம்மச்சாரி என்ற ஒரு பொய்யைச் சொல்லி அதனால் பெண்களைச் செல்லக் கூடாது என்பது வாதப்படியே தப்பாகும்.
பெண்களுக்கு மத்தியில், உள்ளக் கட்டுப் பாட்டோடு உறுதியாய் இருப்பவனே பிரம்மச்சாரி, பெண்களே இல்லாத இடத்தில் கட்டுப்பாடுக்கும், உள்ள உறுதிக்கும் என்ன வேலை? எனவே, அய்யப்பன் பிரம்மச்சாரி என்பது மோசடி வாதம்.

மும்பையில் நீதிமன்ற ஆணை நிறைவேற்றம்!

மகாராஷ்டிராவில் உள்ள சில கோவில்களில் நூற்றாண்டு காலப் பரம்பரை வழக்கம் என்ற பெயரில் பெண்கள் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. அந்த நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள அனைத்துக் கோவில் களிலும் பெண்கள் சென்று வழிபடலாம் என்றும், அதை அரசே நேரடியாகக் கண்காணித்து தடை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

சிங்கனாப்பூர் சனிக் கோவிலில் பெண்கள் நுழைவது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் தடையை நீக்கியும்,
தடை செய்யும் நிருவாகத்திற்கும் நிருவாகிகளுக் கும் தனி நபர்களுக்கும் சிறைத் தண்டனை விதிக்கலாம் என்றும், இவ்விவகாரம் குறித்து மாநில அரசிடம் பதில் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் அறிக்கைக்கு மகாராஷ்டிர அரசு தரப்பில் தரப்பட்ட பதில் மனுவில் கூறியுள்ளதாவது, ‘‘சிங்கனாப்பூரில் உள்ள சனிக்கோவில் பெண்கள் நுழைவதற்கு யாரும் தடை செய்ய முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக சனிக்கோவில் நிருவாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இனி பெண்கள் கோவிலுக்குள் நுழைவதை யாரும் தடை செய்ய மாட்டார்கள் என்றும், அதற்கான அறிவிப்பு விரைவில் கோவிலின் வெளியே வைக்கப்படும் என்றும், கோவிலில் நுழைவதைத் தடுப்பவர்கள் மீது 6 மாத சிறை தண்டனை குறித்து சிறப்பு சட்டமியற்றவும் ஆலோசனை செய்து வருகிறோம். கோவில் மற்றும் பொது இடங்களில் பாலின பேதம் கூடாது என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது என்று அந்தப் பதில் மனுவில் கூறியுள்ளது.

அரசின் இந்த முடிவை அடுத்து வழக்கை விசாரணை செய்துவரும் நீதிபதி வகேலா கூறியதாவது, ‘‘கோவிலுக்குள் ஆண் சென்று கடவுளைப் பூசை செய்து வழிபட முடியும் என்றால், பெண்களால் ஏன் முடியாது, ஆகவே, பாலின பேதம் ஏற்க முடியாத ஒன்றாகும். மகாராஷ்டிராவில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் பெண்கள் சென்று வழிபாடு நடத்தலாம். பெண்கள் நுழைய இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். இதை மகாராஷ்டிர அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறினார். கோலாப்பூர், கண்பதிபுலே நகர், நாசிக், சனிசிங்னாப்பூர் உட்பட தடை செய்யப்பட்டு இருந்த 27 கோவில்களிலும் பெண்கள் சென்று வழிபடலாம். ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. காலிப் பட்டாளமும்,  கூலிப் பட்டாளமும் அங்கு சென்று ஏன் தடுக்கவில்லை?

மகர ஜோதிப் புரட்டு

மகரஜோதி என்பது தானாகத் தெரிவதல்ல, அது மனிதர்களால் ஏற்றப்படுவதுதான், சபரிமலை தேவஸ்வம்போர்டே இந்தக் காரியத்தைப் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறது என்பது பகுத்தறிவாளர்களின் ஆதாரப்பூர்வக் குற்றச்சாட்டு. ஆனால், இதற்கு இதுவரைக்கும் நேர்மையான எந்தப் பதிலையும் அய்யப்பன் வியாபாரிகள் சொன்னதில்லை. இந்நிலையில் இப்போது நடந்த விபத்து தொடர்பான விசாரணையில், பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? அல்லது வானத்தில் தோன்றும் நட்சத்திரமா? என்பதை திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டுவிட்டது.

நீதிமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டதால், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு கூட்டம் அதன் தலைவர் எம்.ராஜகோபாலன் நாயர் தலைமையில் ஜனவரி 31 அன்று நடந்தது. இதில் சபரிமலை அய்யப்பன் கோயில் மேல் சாந்தி கண்டரரு ராஜீவரரு, கன்னிபையூர் நாராயணன் நம்பூதிரி (வாஸ்து) மற்றும் பல உயர் பூசாரிகள், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு உறுப்பினர்கள், பந்தளம் அரச குடும்பத்தினர், அய்யப்பன் கோவில் நிருவாகிகள், கட்டடக்கலை வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்வம் போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர் நீண்ட நாட்களாக மறைத்து வைத்திருந்த அந்த ரகசியத்தை(?)உடைத்தே விட்டார். பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியை மனிதர்கள்தான் ஏற்றுகிறார்கள். இது எல்லோருக்கும் தெரியும். அதை திருவாங்கூர் தேவஸ்வம் போர்டும் அங்கீகரித்து உள்ளது எனக் கூறினார்.

-உண்மை இதழ், 16-31.12.24

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

பஞ்சமா பாதகத்திற்கும் பரிகாரம் திருநீறா? -- கவிஞர் கலி.பூங்குன்றன்

 


விருத்தாசலம் புராணம், விபூதிச் சருக்கம், 14ஆம் பாட்டு.-

“நீறுபுனைவார் வினையை நீறு செய்தலாலே

வீறுதனி காமமது நீறென விளம்பும்

சிறுநரகத்துயிர் செலாவகை மருந்தாய்க்

கூறுடைய தேவிகையில் முன்னிறை கொடுத்தார்.”

இதன் பொருள்:- “திருநீறு தரித்தவர்களுடைய தீவினையை நீறாகச் செய்கிறபடியினாலே, வெற்றியுள்ள அதின் பெயரும் நீறென்று சொல்லப்படும். பொல்லாத நரகத்தில் உயிர்கள் போய் விழாதபடிக்கு ஒரு மருந்தாகத் தனக்கொரு பாகமான பார்வதி கையிலே முன்பு சிவன் கொடுத்தது இந்தத் திருநீறு” என்பதாம்.

கதை:- ஒரு காலத்தில், மகாபாவங்களைச் செய்த ஒருவனுடைய ஆயிசு முடிவிலே, யமதரும ராஜா அவனைக் கொண்டு வந்து நரகத்திலே போடு கிறதற்கு தூதர்களைஅனுப்பினான். அவர்கள் வருகிற சந்தடியைக் கண்டு, அவனுடைய வீட்டுக்கு முன்னே குப்பை மேட்டுச் சாம்பலிலே புரண்டு கிடந்த ஒரு நாய் பயந்தெழுந்து, சாகக்கிடந்த அவன் மார்பிலும தலையிலும் ஏறி மிதித்துக்கொண்டு போய்விட்டது. அப்பொழுது அந்த நாயின் காலிலே ஒட்டின சாம் பல் அவனுடைய மார்ப்பிலும் நெற்றியிலும் பட்டது. அதைக்கண்டு, யமதூதர்கள் கிட்டப்போகப் பயந்து, விலகி விட்டார்கள். உடனே சில கணங்கள் வந்து அவ னைக் கயிலாயத்திலே கொண்டு போய் வைத்தார்கள்” என்று சில புராணக் கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

தெளிதல்:- இதை வாசிக்கிற என் ஜென்மதேச வாசிகளாகிய கனதனவான்களும் கற்றோரும் கல்லாதோருமாகிய அன்பர்களே! வெந்து சாம்பலாய்ப் போன சாணத்திற்கு உண்டாயிருக்கிற மகத்துவம் எத்தனை? சிவனும் சத்தியும் ஆத்ம வருக்கங்களின் பாவவினை தீர அதைத் தரித்துக் கொண்டார்கள் என்று சொல்லியிருக்கிறதே, இப்படிக்கொத்த உபதேசத்தை நம்புகிறவர்கள் தங்கள் மனதின்படி சகல பாவங்களையும் செய்து, அன்றன்று கொஞ்சம் நீற்றை (சாம்பலை) பூசிக் கொண்டால், தாங்கள் அன்றாடஞ் செய்கிற பாவ கருமம் தொலைந்து போம் என்றெண்ணார்களோ?

அப்படியே தாங்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் நீறு பூசாமல் விட்டு விட்டா லும், தாங்கள் சாகும்பொழுது கொஞ்சம் நீற்றைப் பூசிக் கொண்டால் போதுமல்லவா? அப்படி இல்லாவிட்டாலும், தங்கள் உறவின் முறையார் தங்களைத் தகனிக்கக் கொண்டு போகிற பொழுது, எப்படியும் தங்கள் நெற்றியிலே கொஞ்சம் நீறு பூசி எடுத்துப் போவார்கள். அதனாலேயாவது கயிலாயம் சேரலாம் என்று கவலையற்று பாவம் செய்து கொண்டிருக்க மாட்டார்களா?

இதெல்லாம் வீணென்று நமது முன்னோர்களில் அனேகர் சொல்லி எச்சரித்துமிருக்கிறார்கள். அவைகளில் சிலவற்றை யிதனடியில் குறிப்பிடுகிறோம்.

சிவவாக்கியர்:-

இருக்கு நாலு வேதமும் எழுத்தை அறவோதிலும்

பெருக்க நீறு பூசிலும் பிதற்றிலும் பிரான் இரான்

உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல் என்கிறார்.

சுருக்கம் அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே!

பட்டணத்தார்:-

“நீற்றைப் புனைந்தென்ன? நீராடப் போயென்ன? நீ மனமே

மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல்

ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்?

ஆற்றில் கிடந்தும் துறையறி யாமல் அலைகின்றையே! என்கிறார்.

நெஞ்சறி விளக்கம்

“வேடத்தைத் தரித்தாலென்ன வெண்பொடி யணிந்தாலென்ன,

நாடொத்து வாழ்ந்தா லென்ன கதிகலங் கண்டாலென்ன …” என்கிறது.

கவனிப்பு: “நீறு பூசிக் கொண்டால் எல்லாப் பாவமும் போய் முக்தியடைவாய்” என்கிற உபதேசம் கடவுளை பைத்தியக்காரனாக்குகிறது போலாகிறதல்லவா? எப்படியெனில், ஒரு நியாயாதிகாரி ஒரு கொலை பாதகனை நோக்கி “அடா! அங்கே கொஞ்சம் சாணியுண்டு; அதைச் சுட்டுப் பொடியாக்கிப் பூசிவா, உன்னை மன்னித்து விடுதலையாக்குவேன்” என்று தீர்ப்புப் பண்ணினால், அதைக் கேட்டவர்கள், அவரைப் பயித்தியம் பிடித்தவன் என்று நிந்திப்பார்களல்லவா? அப்படியே ‘விபூதி பூசுதல் பாவத்தைச் சாம்பலாக்குமென்று சிவன் சொன்னார்’ என்று சொல்லுகிறவர்கள் சிவனை பயித்தியக்காரனாக்குகிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் சிவனுக்கு எப்படி அஞ்சி பயப்படுவார்கள்? பக்தியாய் இருப்பார்கள்? ஆன்றோர்கள் “பரிசுத்தம் (ஒழுக்கம்) இல்லாதவன் கடவுளை தரிசிக்க மாட்டான்” என்கிறபடியால், விபூதி பூசுதலுக்கும் பரிசுத்தத்திற்கும் சம்பந்தம் என்னயிருக்கிறது? ஒன்றுமில்லை. விபூதி பூசுதல் பரிசுத்தத்திற்கு காரணம் என்று எவ்வளவேனும் நினைக்கலாகாது, அப்படியே காரணமாயிருந்தால், திருடன் ஒரு கையினாலே திருடி மறு கையினாலே விபூதி பூசி, புண் ணியசாலியாயிருப்பான் அல்லவோ?ஆகையால் இப்படிப்பட்ட பொய்யுபதேசத்தை விட்டு விட்டு, பரிசுத்தமாகிறது எப்படி என் று கவனியுங்கள்.

பிரபு லிங்கலீலை:-

“எண்ணரும்அன்புளத் தில்லையேயெனில் பண்ணிய பூசனை பயன் தராதரோ;” என்றெச்சரிக்கிறது.

வாயுசங்கிதை:-

“கருமம் தவம் செபம் சொல்காச சமாதி ஈனம் புரிபவர் வசமதாகிப் பொருந்திடேம் புரையொன்றின்றி திரிகூறும் அன்புசெய்வோர் வசமதாய்ச் சேர்ந்து நிற்போம்” என்று பகிரங்கமாகப் போதிக்கிறது.

ஆதலால் “அன்புள்ளவன் இடத்தில் பரிசுத்தம் இருக் கும், பரிசுத்தமுள்ளவனிடத்தில் கடவுளும் இருப்பார். மோட்சமுண்டு” என்பது நிச்சயமாகிறது.

– ‘குடிஅரசு’ – 24.7.1928 – கட்டுரை

இதுதான் திருநீற்றின் மகிமை! ஒழுக்கக் கேட்டை வளர்க்கும் தன்மை! ஆதாரத்துடன் பேசுகிறோம் – பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்!

 - விடுதலை நாளேடு, 24.04.25