செவ்வாய், 2 ஜூலை, 2024

சுப்பிரமணியனது பிறப்பு

 

பெரியார் பேசுகிறார் : சுப்பிரமணியனது பிறப்பு

நவம்பர் 01-15 2019

விஸ்வாமித்திரன் சுப்ரமணியனது பிறப்பைப் பற்றி ராமனுக்குக் கூறியது:-

1. சிவபெருமான் உமாதேவியைத் திருக்கலியாணம் செய்து, மோகங்கொண்டு அவளுடன் 100 தேவ வருஷம் (மனித வருஷத்தில் பல யுகம்) புணர்ந்து கொண்டிருந்தனர். அவ்வளவு காலம் கழிந்தும் பார்வதி கர்ப்பம் அடையவில்லை. அது கண்டு நான்முகன் முதலிய தேவர்கள் சிவனிடத்தில் வந்து, இவ்வளவு காலம் புணர்ந்த உம்முடைய தேஜஸ்ஸாகிய விந்து வெளிப்படுமானால் உலகம் பொறுக்கமாட்டாது. உம்முடைய விந்துவை தயவு செய்து விடாமல் நிறுத்திக் கொள்ளும் என்று வேண்டவும், அதற்கிசைந்த சிவன் தனது விந்துவை மற்றபடி யார் தரிப்பது? எங்கு விடுவது? என்று கேட்க, தேவர்கள் பூமியில் விடும்படி சொல்ல, அந்தப்படியே சிவன் பூமியின் மீது விட்டுவிட்டார்.

பூமி அதை தாங்க மாட்டாமல் பூமி முழுதும் கொதிகொண்டு எழ, தேவர்கள் அந்த வீரியத்தை பூமி தரிக்க முடியாது எனக் கருதி அக்கினியிடம் சென்று வேண்ட, அக்கினி வாயுவின் உதவியால் அவ்வீரியத்திற்குள் பிரவேசித்து பிரமதேவன் கட்டளைப்படி அதை கங்கையில் கொண்டு சேர்த்து, அவ்வீரியத்தைப் பெற்று ஒரு குழந்தைப் பெற வேண்டுமென்று கங்கையை வேண்ட, கங்கையும் அதற்குச் சம்மதித்து அவ்வீரியத்தைப்பெற, அவ் வீரியமானது கங்கை முழுவதும் பரவி நிறைந்துவிட, கங்கை அதை தாங்கமாட்டாமல் மறுபடியும் அக்கினியை வேண்ட, அக்கினி மனமிரங்கி கங்கையை நோக்கி  ஏ கங்கையே! நீ அடைந்த சிவனின் வீரியத்தை தாங்க முடியாவிட்டால் பனிமலை அருகில் விட்டுவிடு என்று சொல்ல, கங்கையும் அவ்வாறே அவ்வீரியத்தை பனிமலையின் அருகில் விட, அங்கு அது குழந்தையாகத் தோன்ற, அதை இந்திரன் பார்த்து அக்குழந்தைக்கு பால் கொடுத்து வளர்க்க கிருத்திகா தேவிகளை ஏவ, அவர்கள் அதற்கு பால் கொடுத்து வளர்த்து வரலானார்கள். பல இடத்தில் சிவனது வீரியம் ஸ்கலிதமானதன் பலனாக அக் குழந்தை உற்பத்தியானதால் அக்குழந்தைக்கு ஸ்கந்தன் என்றும், கிருத்திகா தேவிகள் ஆறுபேர்களுடைய பால் சாப்பிட்டதால் கார்த்திகேயன் என்றும், மேல்கண்ட ஆறுபேரின் முலையிலும் ஆறுமுகம் கொண்டு ஏககாலத்தில் பால்குடித்ததால் ஷண்முகன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

இவ்வரலாறு வால்மீகி ராமாயணத்தில் “சிவன் பார்வதியை புணர்ந்தது’’ என்று தலைப்பெயர் கொண்ட 36ஆவது சருக்கத்திலும் “குமாரசாமி உற்பத்தி’’ என்கின்ற 37ஆவது சருக்கத்திலும் காணப்படுகின்றது.

இரண்டாவது வரலாறு, தேவர்கள் சிவனிடம் சென்று அசுரர்களை அழிப்பதற்கு தகுந்த சக்தி கொண்ட ஒரு குழந்தையைப் பெற்றுத்தர வேண்டுமென்று வேண்ட, சிவன் அருள்கூர்ந்து தனது அய்ந்து முகங்களுடன் மற்றும் ஒரு முகத்தையும் சேர்த்துக் கொண்டு தோன்ற அவ்வாறு முகங்களில் உள்ள நெற்றிக்கண் ஆறிலிருந்தும் ஆறு தீப்பொறிகள் வெளியாக, அப் பொறிகளைக் கண்டு தேவர்களும் மனிதர்களும் நடுங்கி பரமனை வேண்ட, பரமன் அப் பொறிகளை கங்கையில் விடும்படி சொல்ல அவர்கள் அப்படியே செய்ய, கங்கை அது தாங்க மாட்டாமல் அவற்றைக்கொண்டு சரவணத்தில் செலுத்த, அங்கு ஆறு குழந்தைகள் தோன்ற, அந்த ஆறு குழந்தைகளையும் கிருத்திகைப் பெண்கள் அறுவரும் பால் கொடுத்து வளர்த்து வந்தார்கள்.

பிறகு சிவன் பெண்ஜாதி பார்வதி தேவி இந்த ஆறு குழந்தைகளையும் சேர்த்துக் கட்டி அணைத்து முத்தமிட்டு பாலூட்டுகையில் அவ்வாறு குழந்தைகளும் ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும் கொண்ட ஒரே குழந்தையாக ஆகிவிட்டது. இதற்கு ஆறுமுகமுடையதால் ஆறுமுகன் என்றும் கங்கையாறு ஏந்திச் சென்றதால் காங்கேயன் என்றும் சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. இது கந்தபுராணத்திலும் முருகன் கதையிலும் உள்ளது.

குறிப்பு:-சுப்பிரமணியன் பிறப்புக்கு மேல்கண்டபடி இரண்டு கதைகள் காணப்பட்டாலும் கந்த புராணத்தின் கதைப்படி பார்த்தாலுமே, வால்மீகி ராமாயணத்தில் விஸ்வாமித்திரர் ராமருக்குச் சொன்னதாகச் சொல்லப்படும் மேற்கண்ட கதைதான் உறுதியாகின்றது. ஏனெனில், கந்தபுராணத்திலும் பார்வதியானவள் தன் மூலியமாய் பிள்ளை பெறுவதை தடுத்ததற்காக தேவர்கள் மீது கோபித்து தேவர்களை “பிள்ளையில்லாமல் போகக் கடவது’’ என்று சபிக்கின்றாள் என்று காணப்படுகின்றது. சிவனது நெற்றிக் கண்ணி லிருந்து தீப்பொறி வெளியாகி அதிலிருந்து பிள்ளை உண்டாகியிருக்கும் பட்சத்தில் பார்வதிக்கு தேவர்களிடத்தில் கோபம் உண்டாகக் காரணம் ஏற்பட நியாயம் இல்லை.

இந்தக் கோபம் உண்டாவதற்குக் காரணம், வால்மீகி ராமாயணத்தில் சொல்வது போல், அதாவது 100 தேவ வருஷம் சிவன் பார்வதியைப் புணர்ந்து கடைசியாக வீரியம் வெளிப்பட்டு கருதரிக்கும் சமயத்தில் தேவர்கள் குறுக்கிட்டு சிவனை தனது வீரியத்தை பார்வதி கர்பத்துக்குள் விடாமல் நிறுத்திக் கொள்ளும்படி வேண்டினதால் சிவன் அதை எடுத்துக் கொண்டதற்கு பார்வதி கோபித்து வீரியம் ஸ்கலிதமாக்கும் சமயத்தில் கொடுமை செய்ததற்காக அவர்களைச் சபித்தது, அதாவது தன்னைப் போலவே தேவர்களுடைய பெண்சாதிகள் எல்லோரும் பிள்ளையில்லாமல் மலடிகளாக வேண்டுமென்று சபித்ததாகக் காணப்படுவது நியாயமாக இருக்கின்றது.

அன்றியும் பார்வதி தனது கர்ப்பத்தில் விழ வேண்டிய வீரியத்தை பூமி பெற்றுக் கொண்டதால் பூமியையும் பார்வதி தனது சக்களத்திபோல் பாவித்து அவளையும் (பூமியையும்) பலபேர் ஆளவேண்டுமென்று சபித்ததாகவும் அதனாலேயே பூமிக்கு அடிக்கடி அரசர்கள் மாறுகிறார்கள் என்றும் வால்மீகியில் காணப்படுகின்றதும் பொருத்தமாயிருக்கின்றது.

கந்தப்புராணமோ, மேல்கண்ட சிவன் 100 வருஷம் புணர்ந்த விஷயம் ஒன்றைத் தவிர மற்றவைகளையெல்லாம் ஒப்புக்கொள்ளுகின்றது.

ஆகவே சுப்பிரமணியன் என்றும், சண்முகன் என்றும், கார்த்திகேயன் என்றும், ஸ்கந்தன் என்றும் சொல்லப்படும் சாமியானது மேல்கண்ட மாதிரி ஒரு பிறப்பு வளர்ப்புக்கு உள்பட்டது என்பது வைணவப் புராணங்களிலும் சைவப் புராணங்களிலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

( தந்தை பெரியார் – ‘குடிஅரசு’ – 2.9.1928)

ஞாயிறு, 16 ஜூன், 2024

உலகப் பொதுவான சூரியன் குந்திக்குக் கணவனா ? – குடந்தை வய்.மு.கும்பலிங்கன்


2024 ஏப்ரல் 1-15, 2024 கட்டுரைகள் மற்றவர்கள்

மகாபாரதக் கதையில் குந்திதேவி, அவள் மகன் கர்ணன் இருவருக்கும் சூரியன் உரிமையாக்கப்பட்டுள்ளான்.
சூரியன் என்பது ஒரு நட்சத்திரம் (விண்மீன்). அறிவியலுக்கு உட்பட்ட ஓர் ஆய்வுப் பொருள் இஃது உலகிற்கே சொந்தமானது. பொதுவானது நாடு, மொழி, மதம், இனம், ஜாதி, சமயம், குலம், கோத்திரம் அனைத்தும் கடந்தது.

இயற்கையில் உருவான இந்த உலக பொதுச் சூரியனை, செயற்கையான இந்துமதக் கற்பனைக் கதையாக வருகிற மகாபாரதத்தில் ஒரு பாத்திரமான – குந்திதேவியின் கணவனாக – கர்ணனின் தந்தையாகக் காட்டவும், வர்ணிக்கவும் எந்த அடிப்படையும் இல்லை.

சூரியனின் தோற்றம் எப்போது? மகாபாரதக் கதை நடந்தது எப்போது? இந்தியாவின் இதிகாசத்தில் மகாபாரதக் கதையின் காலத்தில் சூரியனின் மனைவி குந்திதேவி என்றால், அதற்கு முன்னர் சூரியனின் மனைவிகள் யார்? அவர்களின் பெயர்கள் என்ன? குந்திதேவி வருகைக்கு முன் ஒரு மனைவியுடன் வாழ்ந்தாரா? பல மனைவியருடன் வாழ்ந்தாரா? குந்தி தேவிக்குப் பின் சூரியனின் மனைவி யார்? போன்ற கேள்விகள் வரவும் எழவும் நியாயம் அவசியம் உண்டல்லவா! ‘பாரத் மாதா கி ஜே’ போடும் பக்த கோடிகளே இக்கேள்விகளுக்குத் தாங்கள் தரப்போகும் பதில் என்ன?

மேலும் ஒரு வினா எழ நியாயம் இருக்கிறது. நெருப்பு வடிவமான சூரியன் குந்திதேவியுடன் கூடிக் குலவிக் குடும்பம் நடத்தியது எந்தக் காலத்தில்? எந்த ஆண்டில்? வரலாற்றுக் குறிப்புகளில் ஆதாரம் ஏதும் இல்லையே! நெருப்புப் பிழம்புக்குப் பிள்ளை பிறக்குமா? பிறக்கச் செய்யத்தான் முடியுமா?
சில நாகரிகமான – நளினமான எழுத்தாளர்கள் “கதையில் வரும் சம்பவங்களும் காட்சிகளும் பெயர்களும் கற்பனையே; உண்மை அன்று” என்று முகப்புரையிலேயே சொல்லிவிடுவார்கள்.

இந்த நாகரிக நளினப் பண்பு அந்நாளைய மகாபாரத எழுத்தாளருக்கு இல்லாமல் போய்விட்டது போலும்! இதில் இன்னுமொரு பெருங்கூத்து என்னவெனில், உலக முழுமுதல் கடவுளான விநாயகப் பெருமான் சொல்ல வியாச முனிவர் கதையை எழுதினாராம். காரணம், புளுகுவதுதான் புளுகுகிறோம். அதை அண்டப் புளுகாகவும், ஆகாசப் புளுகாகவும் புளுகிவிடுவோமே என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் போலும்!
மேலும், பக்தி மார்க்கக் கடவுள் கதை என்றால் –

கடவுள் வரலாறு என்றால் அதைக் கேட்டுக் கொள்ள வேண்டுமே தவிர, எதிர் வினா போட்டுச் சிந்திக்கக் கூடாது என்றும் வாய்ப்பூட்டுப் போட்டுவிட்டார்கள்.
மேலும் ஒரு கூடுதல் செய்தி:- இராமாயணப் பாரதக் கதைகள் எதுவும் தமிழ்நாட்டில் – தென்னாட்டில் – திராவிட நாட்டில் நடந்ததாக எந்தவொரு வரலாற்றுக் குறிப்பும் கிடையாது. அனைத்துக் கதைகளுமே வடநாட்டில் வட இந்தியாவில் நடந்ததாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் மொழியில் – எழுதிய இராமாயண பாரதக் கதைகள் கற்பனைகள் நிறைந்த – பொய்மை மலிந்த கட்டுக்கதைகள் என்பதையும்; இவற்றுக்குமுன் தென்னகத் திராவிடத் தமிழர்கள் தங்கள் உயிர்மொழியாம் தமிழில் எழுதிய திருக்குறள், நாலடியார் மற்றும் சங்க இலக்கியங்கள் போன்ற செம்மை சார்ந்த நூல்கள் மட்டுமே உண்மை வரலாற்றுக்கான சான்றுகளாய் விளங்கும் எடுத்துக்காட்டுகள் ஆகும் என்பதையும் இங்கு ஈண்டு ஒப்புநோக்க வேண்டும்.

சிவன் வேறு; – ருத்திரன் வேறு! எதிர்வினை (119)


எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (119) 

நேயன்

வேதத்தில் குறிப்பிடப்படும் ருத்திரன் மனித இனத்தவன் என்பதை வேதமே உறுதி செய்கிறது.
1:64 முழுவதும் மருத்துக்களை நோக்கிப் பாடப்படும் பாடல்கள் வருகின்றன. அதில்வரும் 10ஆவது பாடல்,
‘‘மனிதர்களின் தலைவர்களுமான மருத்துக்கள்’’ என்று குறிப்பிடப்படுகிறது. ஆக மருத்துக்கள் மனிதர்களின் தலைவர்கள் என்பது உறுதியாகிறது.

ரிக்வேதம் 2ஆம் மண்டலம் 33 ஆவது அத்தியாயம் முதல் பாடல் ருத்திரனைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘‘மருத்துக்களின் தந்தையே!’’ என்று அழைக்கிறது.

அப்படியென்றால் என்ன பொருள்? மருத்துக்கள் மனிதர்களின் தலைவர்கள். அந்த மருத்துக்களின் தந்தை ருத்திரன் என்றால், ருத்திரன் மனிதன் என்பது உறுதியாகிறது. அப்படியிருக்கும் ருத்திரனைக் கடவுள் என்று காட்ட முற்படுவது தப்பான வாதம்.
‘‘சிவன் வேறு; ருத்திரன் வேறு. சிவன் திராவிடக் கடவுள்; ருத்திரன் ஆரியக்கடவுள். இவை இரண்டும் கலந்துவிட்டன என்று சொல்வோர் உண்டு. இது அபத்தமான கருத்து. ருத்திரன் ஆதித்தொன்ம வேர்களைக் கொண்ட ஒரு வடிவம். அதுவே பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெரும்

சிவதெய்வமாக விளங்குகிறது’’ என்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.

இவர் கூறுவது முற்றிலும் தப்பு என்பதை மேற்கண்ட ரிக் வேதப் பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன. ருத்திரன் மனிதர்களின் தலைவன், சிறந்த வீரன் என்ற அளவில்தான் ரிக் வேதம் கூறுகிறது. ஆனால், சிவ வழிபாடு என்பது நன்றியின்பாற்பட்ட வழிபாடாகத் தொடங்கி வளர்ந்தது.
மேலும், ரிக் வேதம் 8ஆவது மண்டலம் _ அத்தியாயம் 15ஆவது சுலோகம்,

‘‘பசு ருத்திரர்களின் அன்னையாயும், வசுக்களின் புதல்வியாயும், ஆதித்தியர்களின் சகோதரியாயும், அமிருதத்தின் நாபியாயும் இருக்கிறான்’’ என்கிறது.

இங்கு ருத்திரர்கள் என்று பன்மையில் சுட்டப்படுகிறது. எனவே, ருத்திரர்கள் ஒரு இனக்குழு என்பது உறுதியாகிறது. மனிதர்களுள் ஒரு கூட்டம்.
ஆனால், சிவ வழிபாடு என்பது வேறுபட்டது. தமிழர்களிடமிருந்த நன்றியின் பாற்பட்ட வழிபாடுகளில் ஆ-ண்-_பெண் உறுப்புகளைப் பொருத்தி வழிபாடு செய்வதும் ஒன்று. தங்களுக்குப் பயன்படுவனவற்றை வணங்குவது மட்டுமே தமிழரிடம் இருந்தது. மாறாக எந்தக் கடவுள் வழிபாடும் தென்மைத் தமிழர்களிடமில்லை.

நிலத் தலைவி வழிபாடு, நிலத் தலைவன் வழிபாடு, வீரர் வழிபாடு, பத்தினிப் பெண்டிர் வழிபாடு, குலப் பெரியோர் வழிபாடு வரிசையில் ஆண்-பெண் உறுப்பு வழிபாடும் செய்யப்பட்டது. இவையனைத்தும் பயன் தருவனவற்றை வணங்குதல் என்ற வழக்கத்தில் வந்தவை.
அந்த அடிப்படையில் வந்ததுதான் பொங்கல் விழாவும், உழவுக்கு உறுதுணையாய் இருக்கும் மழை, சூரியன், மாடு, பணியாளர்களுக்கு நன்றி சொல்வதே பொங்கல் விழா.

ஆண்-பெண் உறுப்பு இணையும் நிலையில்தான் இன்பமும் கிடைக்கும், இனமும் பெருகும். இந்த இரண்டு முதன்மைப் பயன்பாடு இதிலிருப்பதால் ஆண்-பெண் உறுப்புகளை இணைத்து வழிபட்டனர் தமிழர்கள். தமிழர்கள் உலகின் பல பகுதிகளிலும் பரவி வாழ்ந்தமையால், அவர்கள் வழிபட்ட இந்த ஆண்-பெண் உறுப்பு பொருந்திய நிலையில் உள்ள உருவங்கள், அப்பகுதிகளில் எல்லாம் கிடைத்துள்ளன.
இவ்வழிபாட்டிற்கும் ஆரியர்களின் வழிபாட்டிற்கும் எத்தொடர்பும் இல்லை. தமிழர்களுடைய தொன்மங்களைத் திரித்தும், மோசடி செய்தும், திருடியும் தங்களுடையதாக ஆக்கிக்கொண்டுள்ளவை பலப்பல.

போதி மரத்தடியில் வணங்கப்பட்ட (அரச மரத்தடியில்) புத்தர் சிலைகளை, தலையை மாற்றி, யானைத் தலையாக்கி வினாயகராக்கி, அரசமரத்தடி வினாயகர் ஆக்கியது போல, தமிழர்களுடைய பலவற்றையும் மாற்றி தங்களுடையதாக்கினர்.
அவர்கள் பிற்காலத்தில் உருவாக்கிய சமஸ்கிருதமே தமிழிலிருந்து உருவாக்கப்பட்ட
தேயாகும். ஆரியர்களுக்கென்று உரிமையானவை எதுவும் இல்லை  அவர்கள் வாழும் மண் உட்பட.

ஆண்-பெண் உறுப்புகள் வழிபாடு, உருவங்கள் தமிழர்
கள் வாழ்ந்த சிந்து சமவெளிப்-பகுதியிலும் கிடைத்துள்ளன.
ஆண்-பெண் உறுப்புகள் பொருத்தி வழிபடப்பட்ட இந்த உருவமே சிவலிங்கம் என்று பின்னாளில் ஆக்கப்பட்டது.
சிவணிய என்ற சொல்லே சிவன் என்று ஆனது. சிவணிய என்றால் பொருத்தப்பட்டது என்று பொருள். ஆண்_பெண் உறுப்பு பொருத்தப்பட்ட வடிவம். ஆகையால் அது சிவணிய வழிபாடு என்று அழைக்கப்பட்டு அதுவே சிவலிங்கம் ஆனது. லிங்கம் என்பது ஆண் உறுப்பு. பெண்ணுறுப்புக்கு முதன்மை அளிக்கப்படாமல், ஆண் உறுப்புக்கு முதன்மையளித்து லிங்கம் எனப்படுகிறது. தொல்காப்பியம் பொருளதிகாரம்,

‘‘தானே சேறலுந் தன்னொடு சிவணி
ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே’’ என்கிறது.
இதில் ‘சிவணி’ என்றால் சேர்ந்து, கூடி, பொருந்தி என்று பொருள்.
அதேபோல் தொல்காப்பியம், பொருளதிகாரம்,

‘‘ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப
வழக்கொடு சிவணிய வகைமை யானே’’ என்கிறது.
இங்கு சிவணிய என்ற சொல் பொருந்திய என்ற பொருளில் வருகிறது.
எனவே, சிவண் என்றால் பொருந்திய என்ற பொருள். அதன் அடிப்படையிலேதான் ஆண்-பெண் பொருத்தப்பட்ட உருவம் சிவண் எனப்பட்டது. அதுவே பின்னாளில் சிவன் ஆனது.

கன்னன் என்றால் கருப்பன் என்று பொருள். வடமொழியில் கிருஷ்ணன் என்று வரும். கன்னங்கரேல் என்ற சொல் வழக்கை இங்கு ஒப்பு நோக்கவேண்டும். கன்னன் என்பதே கண்ணன் என்று ஆனது போல, ‘சிவண்’ என்பது ‘சிவன்’ என்று ஆனது.
எனவே, இன்றைய சிவலிங்க வழிபாடு தொல் தமிழரின் உறுப்பு வழிபாடேயாகும். இது பயன்படுவனவற்றிற்கு நன்றி சொல்லும் வழிபாடேயன்றி கடவுள் வழிபாடல்ல.

தமிழர்களின் நன்றியின் பாற்பட்ட வழிபாடுகளையெல்லாம் கடவுள் வழிபாடாக்கி, அக்கடவுள்களுக்கு உற-வு கற்பித்து தொடர்புபடுத்தியவர்கள் ஆரிய பார்ப்பனர்கள்.
ஆரியர்களின் மேக வழிபாடு கரியமால் வழிபாடாகி, இராமன் அவதாரமாகியது _ ஆக்கப்பட்டது. தமிழர்களின் ஆண்_பெண் உறுப்பு வழிபாடு சிவலிங்க வழிபாடாக்கப்பட்டது.

நிலத்தலைவர் முருகன் கடவுளாக்கப்பட்டார். அரச மரத்து அடியில் இருந்த புத்தர் வினாயகராக்கப்பட்டார். ஆக, எல்லாவற்றையும் கடவுளாக்கி, ஒன்று சேர்த்தபோது இந்துக் கடவுள்கள் என்று காட்டுகின்றனர். எல்லாமே மோசடி. இதில் சிவனை ருத்திரன் என்பது மாபெரும் மோசடி.

தொடரும்…

சிவனும் ருத்திரனும் ஒன்றா? -எதிர்வினை (118)

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (118) – 

நேயன்

யார் இந்த தெய்வம்? வேடுவன்.கிராத உருவம் கொண்ட தெய்வம். வில்லேந்தியவன்.
ரிக் வேதத்தில், மூன்று முழுப் பாடல்கள், இந்தத் தெய்வத்தைப் பாடுகின்றன. 75 இடங்களில், ருத்ரன் குறித்த குறிப்புகள் வருகின்றன. ரௌத்ர பிரம்மன் (ரிக், 10.61.1), உக்கிரமானவன்(2.33.11), வேகமுடையவன் (1.114.4), செந்நிறத் தன்மை கொண்டவனின் காட்டுப்பன்றி (1.114.5), மருத்துக்களின் தந்தை (1.114.2.33), வேகமான அம்புகளையும் (2.33.10) வலிமையான வில்லையும் கொண்டவன் (7.46.1), வானில் ஆதவனாகவும், வளிமண்டலத்தில் மின்னலாகவும், பூமியில் நெருப்பாகவும் உறையும், அக்னி(2.1).

அவன், அழகிய உதடுகள் கொண்டவன் (ரிக்.2.33), இளைஞன் (2.33.2), மயக்குபவன்(1.114), சூரியனைப்போல் ஜொலிப்பவன்(1.43.5), பொன்னால் ஆன அணிகலன்களை அணிந்த மேனியன் (2.33), ஞானவான் (1.43.1), பாடல்களின் பதி (1.43.4), குணப்படுத்தும் மருந்துகளை வைத்திருப்பவன் (1.43.4), வைத்தியர்களுக்கெல்லாம் வைத்தியன் (2.4.4), சடாமுடி கொண்டவன் (1.114.1,5), நேரில் அமர்ந்தவன் (2.33.11), பிரபஞ்ச அதிபதி (7.46.2).
வேள்வியின் முடிவில் எஞ்சியதை ருத்திரன் ஏற்கிறான். வேள்வி முடிந்த அந்தச் சாம்பல் எஞ்சிய இடத்தில் ருத்ரன் உறைகிறான். இந்த ருத்ரனை, வேள்வியின் அரசன் என ரிக்வேதம் (4.3.1) அழைக்கிறது.

ஆனால் ருத்ரன், வாஸ்துவின் அதிபன். வாஸ்து  மிஞ்சியது. வேத வேள்வியில் எஞ்சியது மட்டுமல்ல, அதன்பின் அதுவே வேதி எனும் வேள்வித்தளமும்கூட. இது ஒரு தரிசனத்தை உள்ளடக்கியுள்ளது. நாமரூப பேதங்களுடன் விரிந்த இயக்கமான பிரபஞ்சக் காலச் சூழலின் சடங்கு குறிப்பிட, வேத வேள்வி. எனில், எது வேள்வியில் எஞ்சுகிறதோ, அதுவே சத்தியமானது. அதுவே நிரந்தரமானது. அதுவே, எல்லா சிருஷ்டிக்கும் ஆதார அடிப்படையானது. அதன் தலைவனே ருத்ரன்.
ருத்ரன், வேள்வியின் மிகுதியைக் கொள்வ-தென்பது இழிநிலை அன்று. அதுவே, மிக உயர்ந்த இறுதிச் சத்தியத்தின் குறியீடாக, பாரத மரபில் பார்க்கப்படுகிறது.

அக்னியாக ருத்ரன் இருந்து, அவனே பிரஜாபதியை சிருஷ்டியை நோக்கித் தூண்டுகிறான்.
வேள்வியில் அதுவே மீண்டும் சடங்கினைத் தொடங்கும் சக்தி கொண்ட மூலப்பொருள். முந்தைய பிரபஞ்ச சுழலில் எது எஞ்சுகிறதோ அதுவே அடுத்த பிரபஞ்ச சிருஷ்டிக்கான மூலப்பொருள்.ஒடுக்கப்பட்டனவாக, விலக்கப்பட்டனவாக, வெறுக்கப்பட்டனவாக, பெரும்பான்மைச் சமுதாயம் யாரை நினைக்கிறதோ, அந்த வடிவங்களெல்லாம் ருத்ரனுக்கு மற்ற வடிவங்களாகின்றன. சுக்ல கிருஷ்ண யஜுர் வேதத்தில் உள்ளது, ஸ்ரீ ருத்ரம்.

சிவன் வேறு; ருத்ரன் வேறு. சிவன், திராவிடக்கடவுள்; ருத்ரன், ஆரியக் கடவுள். இவை இரண்டும் கலந்துவிட்டன என்று சொல்வோர் உள்ளனர். ஆனால், ஆரிய – திராவிடக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும் இந்தியவியலாளர்கள்கூட, இந்த இரட்டைப் பார்வையை மறுத்துள்ளனர். சமஸ்கிருத அறிஞரும் வேத தொன்மவியலாளருமான ஆர்தர் பெரிடெல் கெய்த் ( (A.B.Keith), ருத்ர- சிவன் என்பதில், திராவிட ஆரிய கூறுகளைக் கண்டறியும் முயற்சிகள் பயனற்றவை என ஒப்புக்கொள்கிறார். ஜன் கோண்டா என்பவர், வேத ருத்ரனுக்கும் வேத காலத்துக்குப் பிறகு உருவாகும் சிவன் எனும் பெரும் கடவுளின் தன்மைகளுக்கு, ஒரு சீரான தொடர்ச்சியைக் காண்கிறார். தாண்டேகர் என்பவர், இன்னமும் ஆழமான ஒரு கருத்தாக்கத்தை முன்வைக்கிறார் வேத தொன்மம், ஒரு தொன்மப் பரிணாமக் களம் மட்டுமே. அதில் இருந்து பல்வேறு தொன்மங்கள் உருவாகி, கிளைவிட்டு மேலெழுந்துள்ளன.

ஆரிய -திராவிட இனவாதக் கோட்பாட்டைக் கொண்டு, சிவ இறைக்கோட்பாட்டை அணுகுவது, உண்மையில் பெரும் அபத்தம் நிறைந்த முரண்களையே உருவாக்கும். இதற்குச் சரியான ஆதாரமாக, மறைமலை அடிகளின் திருவாசக விரிவுரையைக் காணலாம். வேதங்களை, ஆரிய நூல்கள் என அவர் இழித்துக் கூறுகிறார்

‘‘ஆரிய வேதங்களும்… இறைவனருளாற் றோன்றிய நூல்களாயின், அவ்விறைவற்குரிய பேரறிவுத் தன்மை அவற்றின்கட் காணப்படுதல் வேண்டும். மற்றும், அவை தம்மோடு தொல்காப்பியம், திருக்குறள், சிவஞானபோதம் முதலிய மெய்ந்நூற் பொருள்களை ஒப்பவைத்து நடுநின்று நோக்குவாரெவர்க்கும், மற்றித் தமிழ்மறைகளுட் காணப்படும் அரும்பெரு நுண்பொருட் பற்றி, ஆரிய வேதங்களில் ஒரு சிறிதுங் காணப்படாமை எளிது விளங்கு மாகலின், இவற்றோடொப்ப அவைகளும் இறைவனருளாற் பிறந்தனவென்றால் பொருளில் புன்மொழிகளாகுமென்க.’’
ஆக, ஒரே நூலின் இரு இடங்களில், இரு முற்றிலும் வேறான நிலைப்பாடுகளை மறைமலையடிகள் எடுப்பதை நாம் காணலாம். இங்கு, ஒரு நிலைப்பாடு முழுக்க முழுக்க, ஆழ்ந்த மறைநூல் அறிவு சார்ந்தும், மற்றொன்றோ மன_முன்முடிவுகளின் அடிப்படையிலும் அமைவதையும் நம்மால் காணமுடியும்.

ஆக, ஆதித் தொன்மை வேர்களைக் கொண்ட ஒரு படிமம்தான் வேத ருத்ரன். வரலாற்று காலங்களில், பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெரும் சிவ தெய்வமாகவும், அத்தெய்வத்தின் பல உருவங்களாகவும் கிளை பரப்பி, ஒரு பெரும் மக்கள் சமுதாயத்தின் ஆன்ம லட்சியமாக சிவம் இன்று விளங்குகிறது.’’ என்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.
ஆரியர்கள் வருகைக்குமுன், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், மெசபடோமியா, எகிப்து, இலங்கை மலேசியா, பர்மா, தாய்லாந்து போன்றவற்றை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பில் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.
அப்படி வாழ்ந்த தமிழர்கள் வாழ்வில் எந்த மூடநம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் ஜாதிப் பிரிவுகளும் இல்லை.
தங்களுக்கு எவை பயன்பட்டனவோ அவற்றை மதித்தனர். வணங்கினர்.
அப்படி அவர்கள் வணங்கியவற்றுள் ஆண் – பெண் உறுப்புகளை இணைத்து வணங்கியது முதன்மையானது.
இன்பம் பெறுவதும், இனப்பெருக்கம் செய்
வதும் ஆண் – பெண் உறுப்புகள் இணைந்த நிலையில் தான் இயலும். எனவே இன்பம், இனப்பெருக்கம் இரண்டிற்கும் அடிப்படையான ஆண்_ பெண் உறுப்புகளை இணைத்து வணங்கினர்.

நிலத்தலைவர்களை மதித்து வணங்கினர். உயர் பெண்களை வணங்கினர். குலப்பெரியோர்களை வணங்கினர். இவையே தமிழர்களின் வழிபாடாக இருந்தன. இப்படி தமிழர்கள் வாழ்ந்த நிலையில், மத்திய ஆசியாவிலிருந்து தமிழர் வாழ்ந்த நிலப்பகுதிக்குள் பிழைப்பதற்காக வந்தேறினர் ஆரியர்கள். அவர்களிடமும் தொடக்கக் காலத்தில் எந்த கடவுள் வழிபாடும் இல்லை.
நெருப்பு, காற்று, மழை, சூரியன், பூமி போன்றவற்றையே வணங்கினர். பின்னர் மழைமேகங்களுக்கு கர்த்தாவாக இந்திரனை உருவகம் செய்து வணங்கினர்.

அவர்களுக்கு நெருப்பும், இந்திரனுமே முதன்மையான தெய்வங்கள். ருத்திரன் என்ற வழிபாடு ஆரியரின் வேத காலத்தில் இருந்தது. ஆனால், தற்போதுள்ள சிவன் வழிபாட்டிற்கும் ருத்திர வழிபாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டும் ஒன்று என்பது ஆரியர்கள் பிற்காலத்தில் தங்கள் நலத்துக்காக, ஆதிக்கத்திற்காக ஒன்றாக்கிய மோசடி!

அவர்கள் இதை மட்டுமல்ல, புத்தரின் உருவத்தை வினாயகராக மாற்றினர். தமிழரின் நிலத்தலைவர் முருகனை ஸ்கந்தன், சுப்ரமணியன் என்று மாற்றி அதற்குப் புராணங்களைப் புனைந்தனர். தமிழரின் தாய் தெய்வ வழிபாட்டை சக்தி, பார்வதி, துர்க்கை வழிபாடாக்கினர். மேக வழிபாட்டை திருமால் வழிபாடாக்கினர். எரிமலையை அருணாசலம் ஆக்கினர். அருண என்றால் நெருப்பு; அஜலம் என்றால் மலை. அதுவே அருணாஜலம் ஆக மாற்றப்பட்டது. திருவண்ணாமலை தீபம் எரிமலைத் தீயின் அடையாளம்தான்.
பின்னர் எல்லா கடவுளுக்கும் உறவு கற்பித்து சிவனுக்கு திருமால் மைத்துனர் என்று மாமன், மச்சான் ஆக்கினர்.
அதைப்போலவே ருத்திரனையும் சிவலிங்கத்தையும் தொடர்புபடுத்தி சிவன் ஆக்கினர்.
அதை இனி விளக்குவோம்.

(தொடரும்)

சனி, 8 ஜூன், 2024

குருவின் மனைவியை கருவுறச் செய்த சந்திரன்! – பாணன்



– பாணன்

இன்றும் சந்திரனை ஜோதிடர்கள் குழந்தை பிறந்தது முதல் திதி வரை பயன்படுத்துகின்றனர்.

‘சந்த்ர’ என்றால் பிரகாசம் என்று பொருள். சந்திரன் என்றால் பிரகாசமானவன் என்று பொருள். சந்திரன் பெண் தன்மை வாய்ந்த கிரகம். இதன் பிரியமான மனைவியின் பெயர் ரோகிணி. நன்றாகக் கவனிக்கவும். இந்த சந்திரன் பெண் தன்மை வாய்ந்த கிரகம். ஆனாலும் இதற்கு மனைவிகள் உண்டு.

இந்த சந்திரன் வைசிய வர்ணத்தைச் சேர்ந்த கிரகம். அதாவது கோள்களுக்கும் வர்ணங்கள், ஜாதிகள் இருக்கின்றன. பெண் தன்மை கொண்ட சந்திரனுடன் சேர்ந்து விஷ்ணுவும் சிவனும் பிள்ளை பெற்றிருக்கிறார்கள் என்பது தனிக் கதை.

அத்தரி மகரிஷிக்கும் அவருடைய மனைவி அனுசுயா என்பவளுக்கும் சோமன், துர்வாசன், தத்தாத்திரேயன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் சோமன் என்பவனே நவகிரகாதிகளில் ஒருவனாகிய சந்திரன். இவன் தட்சனின் இருபத்தியேழு பெண்களை மணந்து கொண்டான். தனது புகழ், கீர்த்தி, மரியாதையை நிரூபிக்க சந்திரன் ஒரு ராஜசூய யாகத்தை நடத்தினான். யாகத்தைச் சிறப்பாக நடத்தியதால் மமதை தலைக்கேறியது. ஆணவம் கண்களை மறைத்தது. மனது அறிவு சொன்னபடி கேட்க மறுத்தது. அதனால்தான், தன் குலகுருவான பிரகஸ்பதியின் மனைவி தாரையை அபகரித்துச் சென்று வாழ்க்கை நடத்தி அவளைக் கருவுறச் செய்தான்.

தேவர்களும், கடவுளர்களும், குருவும் கேட்டுக்கொண்ட பிறகும் அவன் தாரையை அனுப்ப மறுத்தான். எனவே, தேவர்கள் சந்திரனின் மீது படையெடுத்தனர். தேவர்கள் சார்பில் சிவனும், குரு பிரகஸ்பதியும், முன்னின்று போரை நடத்தினர். சந்திரனுக்கு உதவியாக அசுரர்களும், அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாரும் சேர்ந்து கொண்டனர். போர் மிகவும் கடுமையாக நடந்தது. போருக்கு “தாரகாமய சங்கிராமம்” என்று பெயரும் வைக்கப்பட்டது. இரு தரப்பிலும் பலம் சரிசமமாக இருந்ததால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியவில்லை. எனவே, பிரம்மன் இரு தரப்பினரிடமும் சமாதானம் பேசி தாரையைச் சந்திரனிடமிருந்து பிரித்து பிரகஸ்பதியிடம் ஒப்படைத்தார். ஆனால், பிரகஸ்பதியோ “தாரை கர்ப்பமாக இருக்கிறாள். எனவே, என்னால் தற்போது தாரையை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறி அக்கருவை விட்டுவிட்டு வருமாறு தாரையிடம் கூறினார்.

தாரையும் அக்கருவை ஒரு மரத்தின் நிழலில் விட, அது மிகுந்த பிரகாசத்துடனும் அழகுடனும் ஒரு சிறுவனாக மாறியது. அதனைக் கண்ட தேவர்கள் மிகவும் வியப்புற்று தாரையை நோக்கி இந்தக் குழந்தை யாருடையது என்று கேட்க, அவள் அக்குழந்தை சந்திரனுடையது என்று சொன்னாள். எனவே சந்திரன் தனக்கும் தன் குருவின் மனைவி தாரைக்கும் பிறந்த குழந்தைக்குப் புதன் என்று நாமகரணம் சூட்டினான். இப்படியாக புதன் பிறந்தான்.
குருவின் மனைவியையே அபகரித்துச் சென்று அவளுடன் வாழ்க்கை நடத்தி குழந்தையும் பெற்றுக்கொண்டதால், சந்திரன் குரு பிரகஸ்பதியின் சாபத்திற்கு ஆளானான்.

மாமனாரின் சாபம்

பிரஜாபதி தட்சனுக்கு மொத்தம் அறுபது பெண்கள். அவர்களில் பத்துபேரை தருமனுக்கும், பதின்மூன்று பேரை காசிபருக்கும் இருபத்தேழு மகள்களை சந்திரனுக்கும், மீதிப் பெண்களை ஆங்கீசர், அரிஷ்டநேமி, கிரிஷஷ்வர் வாஹுபுத்திரர்க்கு திருமணம் செய்து வைத்தான். தட்சன் தன் இருபத்தியேழு பெண்களை (அஷ்வினி முதல் ரேவதி வரை) சந்திரனுக்குத் திருமணம் செய்கையில் சந்திரனைப் பார்த்து தன் இருபத்தியேழு பெண்களையும் சமமாகப் பாவித்து அனைவரிடமும் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். சந்திரனும் அதற்குச் சம்மதித்துத் திருமணம் செய்து கொண்டான். திருமணம் நடந்த புதிதில் சந்திரன் எல்லோரிடமும் அன்பாகவே நடந்து கொண்டான். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவன் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி மற்றவர்களை வெறுக்கத் தொடங்கினான்.

இதனால் கோபம் கொண்ட மற்ற இருபத்தாறு மனைவிகளும் சந்திரனின் மீது கோபமும் ரோகிணியிடம் பொறாமையும் அசூசையும் கொண்டு தங்கள் தகப்பனாரிடம் முறையிட்டனர்.

இதைக் கேட்ட தட்சன், சந்திரன் அவனது வாக்குறுதியை மீறுவதைப் பார்த்து தன் மக்களின் நிலை கண்டு வருத்தமும் கோபமும் கொண்டான். தன் பெண்கள் கண்ணீரும் கம்பலையுமாய் நிற்பதைப் பார்த்த தட்சனின் கோபம் அதிகரித்தது. கோபம் கொண்ட தட்சன், ‘சந்திரனுடைய கலைகள் படிப்படியாய்த் தேய்ந்து போகட்டும்’ என்று சாபம் கொடுத்தான். இப்படியாக சந்திரன் தனது தவறுகள் காரணமாகவும், தனது வாக்குறுதியை மீறியதனாலும், மனைவிமார்களின் புகாரின் அடிப்படையில் தட்சனின் சாபம் பெற்று தனது கலைகளை இழக்க ஆரம்பித்தான்.

சந்திரன் என்ற சொல்லுக்குப் பொருள் இல்லாமல் தனது பிரகாசத்தை இழக்கத் தொடங்கியதால், சந்திரன் தேவர்களிடம் முறையிட, அவர்கள் அவனை பிரம்மனிடம் அழைத்துச் சென்றனர். பிரம்மன் சந்திரனுக்கு அறிவுரை கூறி புண்ணியத் தலமான பிரபாசத்திற்குப் போய் பரமசிவனை வணங்கினால் அவர் அவனது குறையை நீக்குவார் என்று கூறி மறைந்தார். சந்திரனும் உடன் பிரபாசத்திற்குச் சென்று சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து மிருத்யுஞ்ச மந்திரத்தை உச்சரித்து வணங்கினான். சந்திரன் செய்த பூசையைக் கண்டு மகிழ்ந்த சிவன் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க, சந்திரனும் தனது மாமனாரின் சாபத்தால் தனக்கு ஏற்பட்ட நிலையை எடுத்துச்சொன்னான். அதற்கு சோமசுந்தரேஸ்வரர் தட்சன் கொடுத்த சாபத்தைத் தன்னால் மாற்ற முடியாது என்றும், அந்தச் சாபத்திலிருந்து சந்திரன் தப்பவும் முடியாது என்று கூறினார்.

ஆனால் சந்திரன், சிவனிடம் தான் செய்த தவறுகளை மன்னித்து தனக்கு அருள் புரிந்து கருணை காட்டுமாறு கேட்டுக்கொண்டான்.
சந்திரனின் பக்தியில்  வேண்டுகோளில் நெகிழ்ந்த சிவன் அவனுக்கு அருள் புரியத் திருவுள்ளம் கொண்டார். எனவே, ஒரு மாதத்தில் பதினைந்து நாள்கள் சந்திரனின் கலைகள் குறைந்து (தட்சனின் சாபப்படி) மீதிப் பதினைந்து நாள்களில் அது மீண்டும் வளர பரமன் அருள் புரிந்தார். இவ்வாறாக சந்திரன் தன் இழந்த அழகைப் பெற்றான்.

சந்திரன் தன் மதிப்பையும் மரியாதையையும் தேவர்கள் மத்தியில் இழந்ததற்குக் காரணம் தன் குருவின் மனைவி தாரையை அபகரித்து அவளைத் தாயாக்கியதால்தான்.

இதை வைத்தே ‘சந்திரன் கெட்டது பெண்ணாலே‘ என்ற பழமொழி உருவாயிற்று.

இவனைப் போலவே ‘இந்திரன் கெட்டதும் பெண்ணாலே’ என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

சிவனும் விஷ்ணுவும் சந்திரனின் அழகில் மயங்கி அவனோடு கலந்து பிள்ளைகளைப் பெற்றனர் என்றும் புராணங்கள் கூறுகிறது.
தட்சனின் மகள்கள் 27 பேரைச் சந்திரனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். தட்சனின் ஒரு மகள் தான் பார்வதி. பார்வதி சிவனின் மனைவி.
பிரகஸ்பதி என்ற வியாழனின் மனைவி தாரையைக் கண்டு அவளையும் அவளது பணிப்பெண்கள் 400 பேரையும் கவர்ந்து சென்றதால் சந்திரனை மகா காமந்தகன் என்று கூறுவார்கள்.

அப்படிப்பட்ட காமந்தகனான சந்திரனைத் தலையில் வைத்து அவன் அருகிலேயே கங்கையையும் வைத்து தனது உடலில் பாதியான பார்வதியையும் வைத்துள்ளார் சிவன்.

சந்திரன் பூமியைப் போன்று ஒரு கோள். அதுவும் மண்ணால் ஆனது. ஆனால், பூமியைவிட சிறியது. மண்ணால் ஆன ஒரு கோள் பெண்களை மணந்தது, பிள்ளை பெற்றது என்று கூறுவது எவ்வளவு பெரிய மடமை!

புதன் என்பது நிலவைப்போல் ஒரு கோள். ஆனால் அது நிலவுக்கும் தாரை என்ற பெண்ணுக்கும் பிறந்த குழந்தை என்றும் இந்துமதம் கூறுகிறது. அதுமட்டுமல்ல; தாரை வியாழனின் மனைவி என்கிறது. ஆக, சந்திரன், வியாழன் முதலிய கோள்கள் பெண்களை மணந்தன, பிள்ளைகளைப் பெற்றன என்பது எப்படிபட்ட அடிமுட்டாள்தனம்.

பூமியையும் இந்த ஸனாதனிகள் விடவில்லை. பூமியும் பிள்ளை பெற்றது என்று கதை எழுதி வைத்துள்ளனர்.
இந்த அறிவுக்கு ஒவ்வாத ஆயிரம் கதைகள் முன்னமே நாறிக் கிடக்கின்ற நிலையில், பிரதமர் மோடி, சந்திரனில் சந்திரயான் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் வைத்து இந்தியாவின் மூடத்தனத்தை அகிலம் அறியச் செய்துள்ளார். சிவன் தலையில் நிலவும் இல்லை, சிவனும் இல்லையென்பதை சந்திரயான் ஓங்கி முழங்கியுள்ள நிலையில், அந்த சந்திரயான் இறங்கிய இடத்திற்கு சிவசக்தியென்று பெயர் வைப்பது எந்த அளவிற்கு அறிவியலைக் கேவலப்படுத்தும் அவலம்? சிந்தித்துப் பாருங்கள்! ♦


தீபாவளி உண்மையும் புரட்டும்!

பகுத்தறிவு : தீபாவளி

உண்மையும் புரட்டும்!
மஞ்சை வசந்தன்

ஆரியர்கள் சமண, புத்த ஆலயங்களை இந்துக் கடவுள் ஆலயங்களாக மாற்றியது போல, அவர்களின் விழாக்களையும் இந்துப் பண்டிகைகளாக மாற்றினர். அதற்கேற்ப புராணக் கதைகளைப் புனைந்தனர். இதை நாம் மட்டும் சொல்லவில்லை, அறிஞர் பெருமக்களே அழுத்திக் கூறியுள்ளனர்.

சமண சமயப் பண்டிகையே தீபாவளி
தீபாவளி சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண் மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.

வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவலி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப் படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!

சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று. அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்பதில் அய்யமில்லை.

ஆனால், இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.
ஆசிரியர்: கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி, நூல்: “சமணமும் தமிழும்’’
பக்கம் 79, 80

அறிவுக்குப் பொருத்தமற்ற கதை
வர்த்தமான மகாவீரர் கடைசி சமண தீர்த்தங்கரர். அவர் பாவாபுரி அரசன் அரண்மனையில் தங்கி அங்குக் கூடியிருந்த மக்களுக்கு-இரவு முழுவதும் அறிவுரைகள் செய்தார். நெடுநேரம் விழித்த காரணத்தால் மக்கள் அவ்விடத்திலேயே உறங்கி-விட்டனர். மகாவீரரும் தான் இருந்த இடத்திலேயே வீடு பேறு அடைந்தார். பொழுது விடிந்தது. எல்லோரும் விழித்து எழுந்தனர். மகாவீரர் வாழ்வு நீத்ததைக் கண்டனர். அரசன் சான்றோருடன் கூடி யோசித்தான்.

மகாவீரரை மக்கள் ஆண்டுதோறும் நினைத்து வழிபடுவதற்காக அவர் வீடு பெற்ற நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். (தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை, தீபாவலி = விளக்கு வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்தார். ஆதலால், தீபாவளி விடியற்காலையில் மக்களால் கொண்டாடப்-படுகிறது. இந்த உண்மை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு அறிவுக்குப் பொருத்த-மற்ற நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்துக்களால் கட்டி விடப்பட்டது என்பது அறிஞர் கருத்து.
சமண சமயம் செல்வாக்கு இழந்த காலத்தில் சமணர்கள் சைவ வைணவங்-களைத் தழுவினர். அந்நிலையிலும் தீபாவளியைக் கொண்டாடினர். அப்பழக்கம் பிற சமயத்தாரிடையேயும் நாளடைவில் புகுந்து விட்டது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் முதலியோர் இன்றும் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதற்கு இது ஏற்ற சான்றாகும்.ஆசிரியர்: டாக்டர் மா.இராசமாணிக்கனார், நூல்: “தமிழர் நாகரிகமும், பண்பாடும்’’, பக்கம்: 33, 34

பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி!

வடநாட்டில் அக்காலத்திலிருந்த தமிழ் மேன்மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப்படு வதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்டதொன்றாகும்.
பார்ப்பனர் தமது உயிர்க் கொலை வேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீப+ஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்.. ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.
ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள், நூல்: “தமிழர் மதம்’’, பக்கம்: 200-201

தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!
தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர். ஆதலின் அசரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.
ஆசிரியர்: கா.சுப்பிரமணியன் (பிள்ளை),
நூல்: “தமிழ் சமயம்’’, பக்கம் : 62

தீபாவளி விஷ்ணுவுக்குரியது அல்ல!

நரகாசுரன் என்பவனைக் கொன்ற நாள்-தான் தீபாவளி என்கிறார்கள். அறிவுக்குப் பொருத்தமில்லாத பல கதைகளைக் கூறி தீபாவளி கொண்டாடுகிறார்கள். அவற்றை-யெல்லாம் மறைந்த திருமுருக கிருபானந்த வாரியார் மறுக்கிறார். தீபாவளி சிவனுக்குரிய திருநாள் என்கிறார். இதன்மூலம் கிருஷ்ணனுக்கு உரியது (வைணவர்-களுக்கு உரியது) என்பது மறுக்கப்படுகிறது.
தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக யாண்டுங் கொண்டாடு-கின்றார்கள். ஆனால் அதன் உண்மை யறிந்தவர்கள் ஒரு சிலரே யாவார்கள். அதனைச் சிறிது இங்கு விளக்குவோம்.
பெரும்பாலோர், நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனை யழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால் கேவலம் ஒரு கொடியவனைக் கொன்ற நாளுக்கு, ஒரு கொண்டாட்டம் நிகழ்வது, யாண்டும் எக்காலத்தும் இருந்ததில்லை. அப்படி யிருக்குமாயின், இரணியனைக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனைப் _ பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே, அந்தகாசுரன், சலந்தராசுரன், இரண்யாட்சன், திருவணாவர்த்தன், இப்படி புகழ் படைத்த அரக்கர்கள் ஒவ்வொருவரையுங் கொன்ற நாட்களையெல்லாம் கொண்டாடு வதாயின், ஆயுளே அதற்குச் சரியாகிவிடும். ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்காக தீபாவளி ஏற்பட்டதன்று.
தீபம் _ விளக்கு; ஆவலி _ வரிசை.
தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெரு-மானை வழிபடுவதற்கு உரிய நாள். தீபாவளி எனவுணர்க. தீபமங்கள ஜோதியாக விளங்கும் பெருமானை, நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்கு-கின்றார்களன்றோ?
“விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்’’
என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு.
(நூல்: வாரியார் விரிவுரை விருந்து)

அகராதிக் குறிப்பில் நரகாசுரன் கதை
இரண்யாட்சதன்: இவன் கதாபாணியாக இந்திராதி தேவர்கள், இருடிகள் முதலியோரை வருத்தி ஒருமுறை பூமியைப் பாய்போற் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, விஷ்ணுமூர்த்தி சுவேதவராக (பன்றி)வுருக் கொண்டு கொம்பினால் இவன் மார்பைப் பிளந்து பூமியைப் பழைமை போல் நிறுத்தினார். (இந்தக் கருத்து பூமி உருண்டை என்னும் அறிவியல் உண்மையை மறுத்து தட்டை என்னும் மதவாதத்தை வற்புறுத்துகிறது) (169)
நரகாசுரன்: வராக (பன்றி) உருக்கொண்ட விஷ்ணுவிற்கும், பூமி தேவிக்கும் பிறந்த அசுரன் (934)
சுரர்: பிரமன் சொற்படி மது உண்டதால் இப்பெயர் அடைந்த தேவர் (705)
அசுரர்: சுரராகிய தேவர்க்கு (அதாவது மது அருந்தும் ஆரியப் பார்ப்பனர்க்கு) விரோதிகள் (அதாவது தென் நாட்டைச் சேர்ந்த திராவிடத் தமிழர்கள்) (24)
– நூல்: அபிதான சிந்தாமணி, ஆசிரியர்: சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார்
மிகவும் புகழ்பெற்ற தமிழ் அகராதியான ‘அபிதான சிந்தாமணி’ கூறியுள்ள மேற்கண்ட கதை ஆரியர்களால் புனையப்பட்டது.
தீபாவலி என்பதே தீபாவளி ஆனது. தீபம் +ஆவலி = தீபாவலி. தீப வரிசை என்பது அதன் பொருள். அது சமணப் பண்டிகைக்கே பொருந்தும். நரகாசுரன் கதைக்குப் பொருந்தாது.

இந்த மண்ணின் மைந்தன் நரகாசுரன். எனவே, பூமியை பாதுகாத்தவன். ஆரியர் கைப்பற்றாமல் நம் மண்ணை பாதுகாத்தவன் என்பதால் அவனை ஆரியர்கள் வெறுத்தனர். அந்த வெறுப்பின் வெளிப்பாடே மேற்கண்ட புராணம்.
சமணப் பண்டிகையை, விஷ்ணு பண்டிகையாக மாற்றி, இந்துப் பண்டிகை என்று கொண்டாடுவது மோசடியாகும்.
வாரியார் வைஷ்ணவ பண்டிகை என்பதை மறுக்கிறார். மற்ற அறிஞர்கள் தீபாவளி சமணப் பண்டிகை என்று உறுதி செய்துள்ளனர்.
எனவே, ஆரியப் புரட்டான இத் தீபாவளிப் பண்டிகையை நாம் புறக்கணிப்போம். நம்மை இழிவுபடுத்தும் பண்டிகையை நாம் கொண்டாடக் கூடாது என்று முடிவு எடுப்போம்! அதுவே அறிவுக்கும், மானத்திற்கும் உகந்த செயல் ஆகும்.


வெள்ளி, 7 ஜூன், 2024

சரஸ்வதி பூஜை


உண்மை இதழ்

தந்தை பெரியார்

சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை, கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி, அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து, அதை பூஜை செய்தால் கல்விவரும், வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்க சொந்த முயற்சி இல்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு நம்மை படிப்பு வரமுடியா மக்குகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்கள் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மாவாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மாவைத் தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண்மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேட உருவெடுத்து ஆண் மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மாவுக்கு மனைவியாக சம்மதித்ததாக சரஸ்வதி உற்பவக் கதை சொல்லுகிறது. அதாவது தன்னைப் பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது.- மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப் படுகின்றது அதாவது, பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஆசைப்பட்டபோது, வெளியான இந்திரியத்தை ஒரு குடத்தில் விட்டுவைக்க அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாக, அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது. இதனால் பிரம்மாவுக்குச் சரஸ்வதி மகன் வயிற்று பேத்தி ஆகிறாள். எனவே, சரஸ்வதியின் பிறப்பும் வளர்ப்பும் நடவடிக்கையும் கூடி பார்ப்பனப் புராணப்படி மொத்த ஆபாசமும் ஒழுக்க ஈனமுமானதாகும்.

நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால் வித்தையின் பயன் தொழிலென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் கருதிக் கொண்டு, சரஸ்வதி பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் ஒரு நாளைக் குறித்துக் கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புஸ்தகங்களையும் ஆயுதங்களையும் வைத்து பூஜை செய்கிறார்கள். இந்தப் பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், திராசு,படிக்கல், அளவு மரக்கால்படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும் தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும் இயந்திரச் சாலைக்காரர்கள் இயந்திரங்களையும், மாணாக்கர்-கள் புத்தகங்களையும், குழந்தை-கள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியக்காரர்கள் வாத்தியக்கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவர்களும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள்.

இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை ஓய்வு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தைச் செலவு செய்தும், போறாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாகச் சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது. ஆயுதத்தை வைத்துப் பூஜை செய்து வந்த, வருகின்ற அரசர்கள் எல்லாம் இன்றையதினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்துப் பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்து கொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய, ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜைகள் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களைக் காணோம்.

சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய்க்கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ குறை அளவு அளக்காமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத்தொழிலாளிகளும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகு பக்தியாய் அவைகளைக் கழுவி விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர, ஒருவராவது நாணயமாய் நடந்து கொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்குத் தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக்கிறார்கள். அதுபோலவே புஸ்தகங்களையும் பென்சிலையும் கிழிந்த காகிதக் குப்பைகளையும் சந்தனப் பொட்டுப் போட்டு பூஜை செய்கின்றார்களே அல்லாமல், காலோ கையோ பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களே அல்லாமல், நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள். இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும் இவ்வளவு விரதங்கள் இருந்தும், நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள். நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக் கருதி வேறு நாட்டிற்குக் குடிபோகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக்கின்றார்கள். சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.

இதன் காரணம் என்ன?
நாம் செய்யும் பூஜைகளைச் சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய்க்கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்க-வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம். வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய்க் கிடையாது. அன்றியும் நாம் காகிதத்தையும் ஒழுக்கத்தையும் சரஸ்வதியாய்க் கருதித் தொட்டு கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்குக் கல்வி இல்லை. ஆனால் வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண்களும் நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மையிலேயே சரஸ்வதி என்ற ஒரு தெய்வமிருக்குமானால் பூஜை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும். கல்விவான்களாகவும் செய்யுமா? என்பதை தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத் தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகள் உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூஜை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும் தொழிலற்றும் வியாபாரமற்றும், கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூஜை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும், வியாபாரிகள் அரசாட்சியுடனும் தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள்! இந்த பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்!

ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது. இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, நேரம் செலவு செய்வது, அறிவு செலவு செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள் சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை பொரி, சுண்டல்வடை, மேளவாத்தியம், வாழைக் கம்பம், பார்ப்பனர்-களுக்குத் தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜு ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப்பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்று தான் கேட்கின்றோம். ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும் நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணியதினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும். இதை எந்த பொருளாதார, இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.
– ‘குடிஅரசு’ – சொற்பொழிவு – 20.10.1929