ஞாயிறு, 22 நவம்பர், 2020

தேவனுக்கு, கடவுளுக்குக் குமாரன் எதற்கு?


கிருஸ்துவ மதத்தலைவர் ஏசு கிருஸ்து
என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன் தகப்பனில்லாமல்,
பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம்.
ஆகவே
அவர் கடவுளுக்கு மகனாம்
(தேவகுமாரனாம்) ஆகவே அவர்
சிலுவையில்
அறையப்பட்டுக்) கொல்லப்பட்டாராம்.
செத்தவர் மறுபடியும் பிழைத்தாராம்.
பல
அற்புதங்களைச் செய்தாராம்.
வியாதிகளைப் பார்வையால்
சவுகரியப்படுத்தினாராம். ஒரு
ரொட்டித் துண்டை ஆயிரக்கணக்கான
பேர்களுக்குக் கொடுத்துப்
பசியாற்றினாராம். குருடர்களுக்கு
கண்ணைக்
கொடுத்தாராம். இப்படி பல
காரியங்கள் செய்தாராம்.
இவற்றையெல்லாம்
நம்பினால் தான் கிருஸ்தவ மதம் இருக்க
முடியும். அறிவைக் கொண்டு
பார்த்தால் தேவனுக்கு, கடவுளுக்குக்
குமாரன் எதற்கு? கடவுள் ஒருவனை
மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன்?
கடவுள் தோன்றி எத்தனையோ காலம்
ஆனபிறகு
அப்போது (2000 வருடங்களுக்கு முன்)
மாத்திரம் எதற்காக மகனை
உண்டாக்கினார்? அதற்கு முந்தின
காலத்தில் ஏன் உண்டாக்கவில்லை?
அப்போதெல்லாம் செத்தவர்கள்
இல்லையா? குருடர்கள் இல்லையா?
பசித்தவர்கள்
இல்லையா? அந்த (கி.பி. 1 – ஆவது)
வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது?
கடவுள்
செய்யவேண்டியதை – சொல்ல
வேண்டியதை ஒரு மனிதனைக்
கொண்டு மாத்திரம் ஏன்
சொல்ல வேண்டும்? அதுவும் ஒரு
சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன்
சொல்ல
வேண்டும்? அந்தக் காரியங்கள்
இப்போது ஏன் நடப்பதில்லை? இன்று ஏன்
அவர்
வரவில்லை? இப்போது கிருஸ்துவை
ஏற்காதவர்கள், நம்பாதவர்கள்,
வழிபடாதவர்கள்
ஏனிருக்கிறார்கள்? தேவகுமாரனுக்கு
இவ்வளவு தான் சக்தியா?
ஒரு சர்வசக்தியுள்ள தெய்வம், தெய்வத்தால்
அனுப்பப்பட்ட அவதாரம், அம்சம்,
மகன், குமாரன், தூதர், வேதம் ஏன்
உண்டாக்க வேண்டும்? இருந்தால்
இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம்,
தூதர்கள், சமயங்கள், மதங்கள்,
போதகர்கள் இருக்க வேண்டிய
அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால்
இவையெல்லாம்
மூட நம்பிக்கை, அதாவது அறிவைக்
கொண்டு சிந்திக்காமல்
கண்முடித்தனமாய்
நம்ப வேண்டியவை ஆகின்றனவா
இல்லையா? இது மனிதர்
என்பவர்களுக்கு ஏற்றதா
என்று கேட்கிறேன். இதற்காகக்
கோபிப்பதில் பயன் என்ன?
மூடநம்பிக்கை ஒழிய வேண்டுமானால்
மக்களிடம் உள்ள இப்படிப்பட்ட
கருத்துக்கள் ஒழியாமல் எப்படி ஒழிய
முடியும்? அறிவுள்ளவர்களே!
பகுத்தறிவாதிகளே!
சிந்தித்துப்பாருங்கள்! இது சந்திர
மண்டலத்திற்கு
மனிதன் போய் வரும் காலம்;
காட்டுமிராண்டிக் காலமல்ல. எனவே
சிந்தித்துப்பாருங்கள்! பின் சந்ததி
மக்களை மடையர்களாக்காதீர்கள்!
--------------14-06-1971 "உண்மை" இதழில்
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய
தலையங்கம். "பெரியார் களஞ்சியம்" -
தொகுதி: 2 … பக்கம்:57-62