திங்கள், 26 ஜூன், 2017

மகா விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் நடந்த சம்பாஷணை





- சித்திரபுத்திரன் -
16. 03. 1930 - குடிஅரசிலிருந்து...
மகா விஷ்ணுவான சிறீரங்க ரங்கநாதர்:- அடி என் அருமைக் காதலியாகிய லட்சுமி! இந்த உலகத்திலும், மேல் உலகத்திலும் உள்ளவர் களுக்கெல்லாம் அய்ஸ்வரியம் கொடுத்துவரும் செல்வ தெய்வமாகிய உன்னையே நான் மனைவியாகக் கொண்டு இருந்தும் என்னையே நீ சாப்பாட்டிற்கே லாட்டரி சீட்டு போடும்படியாய் செய்து விட்டாயே இது யோக்கியமா?
லட்சுமியான சிறீரங்கநாயகி:- நாதா என் பேரில் என்ன தப்பு? நீங்கள் என் ஒருத்தியோடு மாத்திரம் இருந்தால் பரவாயில்லை. இன்னமும் எத்தனையோ பேர்களை மனைவியாகக் கொண்டிருக்கிறீர்கள். இதெல்லாம் நீர் நன்றாய் நெய்யும் தயிரும் சாப் பிட்டதால் உமக்கு கொழுப்பு ஏறியதினால்தானே? உங்கள் பக்தர்களுடைய பெண்களையெல்லாம்கூட கைவைத்துவிட்டீர். இப்படிப்பட்ட உம்மைச் சாப் பாட்டுக்கே லாட்டரி போடும்படியாக ஏன் செய்யக்கூடாது?
விஷ்ணு:- அய்யய்யோ! அதனாலா இப்படிச் செய்துவிட்டாய்! நான் இதை ஒரு தப்பாக நினைக்கவே இல்லையே. அப்படிச் செய்வதும் ஒரு லட்சுமி கடாட்சம் என்றுதானே நினைத்திருந்தேன். உனக்குக் கோபமாயிருந்தால் நாளைய தினமே அவர்களையெல்லாம் விரட்டி அடித்து விடுகிறேன்.
லட்சுமி:- விளையாட்டுக்குச் சொன்னேன். கோபித்துக் கொள்ளாதீர்கள். இன்னும் எத்தனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.
விஷ்ணு:- பின்னயேன் லாட்டரி சீட்டு போடச்செய்தாய்?
லட்சுமி:- வேறு சிலருக்கு அதாவது லாட்டரி சீட்டு போடுபவர்களுக்குச் செல்வத்தைக் கொடுப்ப தற்காக லாட்டரி சீட்டின் மூலமாய் செல்வத்தைச் சேர்ப்பதற்கு இப்படிச் செய்யச் சொன்னேன்.
விஷ்ணு:- அப்படியானால் அது எனக்கல்லவா அவமானமாய் இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் சிறீரங்கம் ரங்கநாதர் லாட்டரிச் சீட்டு, ரங்கநாதர் லாட்டரி சீட்டு என்று அல்லவா பணம் வசூல் செய்கின்றார்கள். இந்த அவமானத்தில் உனக்கும் பங்கில்லையா?
லட்சுமி:- அடேயப்பா இதில்தானா உமக்கு பெரிய அவமானம் வந்துவிட்டது? உங்கள் பேருக்கு முன்னால் பொட்டுகட்டி உங்கள் தாசியென்று பெயரும் செய்து கண்டகண்ட பசங்கள் எல்லாம் கொளுத்துகிறார்களே, அதிலில்லாத அவமானம் தானா  உமக்கு லாட்டரி சீட்டில் வந்துவிட்டது? பக்தர்களின் பெண்களைத் தாங்கள் கைப்பற்றுவதும், தங்கள் தாசிகளைப் பக்தர்கள் அனுபவிப்பதும் தங்களுக்கும் பக்தர்களுக்கும் உள்ள பந்துத்து வமாகும்.
விஷ்ணு:- அதெல்லாம்தான் இப்போது நமது உண்மை பக்தர்களாகிய சுயமரியாதைக்காரர்கள் தோன்றி சட்டசபை மூலமும், குடியரசு மூலமும் நிறுத்தி நமது மானத்தைக் காப்பாற்றி விட்டார்களே. இனி என்ன பயம். ஏதோ சில கெழடுகிண்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு இருக்கும். அப்புறம் நம்ம பேரால் இந்த அவமானமான காரியமாகிய அக்கிரமங்கள் நடக்காது.
லட்சுமி:- அப்படியானால் அது போலவே இந்தக் காரியமும் (அதாவது லாட்டரி சீட்டு போட்டு நமக்குச் சோறுபோடும் காரியமும்) அவர்களாலேயே சீக்கிரம் நிறுத்தப்பட்டுவிடும் கவலைப்படாதீர்கள், இன்னும் கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொண்டிருந்தால் போதும். 


-விடுதலை,16.6.17

பெரியார் உலகம்: சைனா - சைவம்

பெரியார் உலகம்: சைனா - சைவம்: 09.02.1930 - குடிஅரசிலிருந்து... சைவன் : - அய்யா தாங்கள் இப்போது மலேயா நாட்டுக்குப் போய் வந்த பிறகு சைவமாய் விட்டீர்களாமே உண்ம...

ஞாயிறு, 25 ஜூன், 2017

ஒழுக்கம் கெட்ட மாணிக்கவாசகனுக்கு குரு வழிபாடாமே!


இந்து மதத்தில் ஏதாவது ஒரு விசேஷம் என்று ஏற்பாட செய்து பார்ப்பனீய சுரண்டலுக்கு வாசல் திறந்து வைப்பார்கள். பக்திப் போதையில் சிக்கி மக்களோ ஏன் எதற்கு என்று கேட்காமல் கண்களை மூடிக் கொண்டு ஆட்டு மந்தையாய் அவற்றையெல்லாம் நம்பி பாடுபட்டு உழைத்த பொருளை எல்லாம் புரோகிதத்  தொப்பைக்குள் அறுத்துக் கட்டுவார்கள்.
வரும் ஜூன் 28ஆம் தேதி சிறீ மாணிக்கவாசகர் குரு வழிபாடாம். அதுபற்றிய புராண அளப்புகள் இதோ:
மாணிக்கவாசகரின் குருவழிபாடு
இந்துமத பண்டிகைகள் தகவல்கள் என்கிற பெயரில்  கையேடுகளில் மத, புராணக் குப்பைகளை அடிப்படையாகக் கொண்டு  ஒவ்வொரு மாதத்திலும் சில நாள்களைக் குறிப்பிட்டு அதற்குரிய பண்டிகை, மத புராண கதைகளையொட்டி அந்த நாள்கள் இடம்பெற்றுள்ளன.
28.6.2017 அன்று சிறீ மாணிக்க வாசகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 32 வயது வரை மட்டுமே வாழ்ந்தவரான மாணிக்கவாசகர் முதல் முதலில் சிவ பெருமானை குரு வடிவாக குருந்த மர நிழலில் கண்ட தாக பாடுகின்றார்.
‘குருவடி வாகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்து
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்’
மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகர் பாட அதை தன்னுடைய கரங்களி னாலேயே தமிழில் எழுதி கொடுத்தான் சிவன்! அது தான் திருவாசகமாம்.
பரி, நரி- கதை
மதுரையை ஆண்ட இரண்டாம் வரகுண பாண்டியன் அவையில் அமைச்சராக இருந்ததாகவும், (காலம் 863 -911) 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராக பணியாற் றினார் என வரலாறாக காலத்தையும் குறிப்பிட்டுவிட்டு,
மாணிக்கவாசகர் - சிவன் குரு சிஷ்யக்  கட்டுக்கதை களையும் அவிழ்த்துக் கொட்டுகிறார்கள்.
ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படிப் பாண்டிய மன்னன் பணித்தான். மாணிக்கவாசகர் பொன்னோடு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். பொறுப்புள்ள அமைச்சரான(-?) மாணிக்கவாசகர் அங்கே இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்ததைக் கண்டு, சிவன்முன் சென்று மாணிக்கவாசகர் பணிந்து, குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்.
'சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித் தால் நான் உமது அடிமையாவேன்' என்ற மாணிக்க வாசகருக்கு சிவஞானத்தை போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தாராம் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவன். தன் அமைச்சர் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன்  நின்ற மாணிக்கவாசகரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தும், அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டாராம் பொறுப்புள்ள அமைச்சரான(-?) மாணிக்கவாசகர்.
பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆணை தாங்கிய ஓலை) கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகர் அழைத்துவரக் கட்டளையிட்டான்.
'குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை' என்று கூறி மாணிக்கவாசகர் அதனைக் குருவிடமே கொடுத்து விட்டார். அதைப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து 'குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாதம் மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்' என்று அரசனிடம் திருப்பி அனுப் பினார்.
சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்ன னுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதி ரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச் சொல்லி அனுப்பினான். அவர்கள் 'எங்குமே குதிரைகள் தென்படவில்லை' என்ற செய்தியோடு திரும்பினர்.
ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. 'இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெயிலில் நிறுத்துவேன்' என்று கூறிப் பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை எரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசைய வில்லை. இரும்புக் கிட்டியால் (iron clamps) இறுக் கினர். மாணிக்கவாசகர் சிவனை தஞ்சம் அடைந்தார்.
உடனே சிவனின் சிவகணங்களை குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். இதனாலே இறைவனுக்கு பரிமேலழகர் எனும் காரணப் பெயர் ஏற்பட்டது. ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான்.
குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, 'இவை உன்னுடையவை' என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி, குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.
அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூ ராரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.
வைகை வெள்ளமும் வந்தியும்
சிவனுக்கு அவன் அடியவரின் துன்பம் பொறுக்க வில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்தார். கரையை உடைத்துக்கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது. உடனே பாண்டிய மன்னன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான். வந்திக் கிழவி எனும் ஒரே ஒருவள் மட்டும் வீட்டிலும் யாருமில்லாமலும், ஏவலாளரும் இல்லாமல் யோசித்துக் கொன்டிருக்கையில் சிவனே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா என்று கேட்கிறான். "செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன்" என்று வந்தி கூறு கிறாள். அதற்கு உடன்பட்ட சிவன் தனது 'வேலையைத்' தொடங்குகிறான்.
அன்றைய நாளில் வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது.
பிரம்படி
கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப் பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான்.
அப்போது சிவனின் குரல் அசரீரியாய் கேட்டது, 'மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத்திருவிளை யாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்' என்று அக்குரல் சொல்லிற்றாம்.
மன்னன் மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு அமைச்சராக இருக்க வேண்டினான். அவருக்கு அந்த ஆசை சிறிதும் இல்லாமையால், சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்துப் பின் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தாராம்.
பார்ப்பனராக சிவன்
சிதம்பரத்திலும் சிவன் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வர வேற்று வணங்கி 'தாங்கள் யாரோ?' என்று வாதவூரார் கேட்டார்.
'நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்' என்று பார்ப்பனர் கூறினார்.
'நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும்' என்று கூறினார் திருவாதவூரார்.
அதற்கு ஒப்புக்கொண்ட பார்ப்பனர் பலப்பல செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார்.
முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்க வாசகன் சொற்படி அம்பலவாணன்' என்று கையொப் பமிட்டு, திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து விட்டு மறைந்தார்.
அதைப் பார்த்த ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும், திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது.
மிகவும் மனம் மகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள் என்ன என்று வாத வூராரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்ற வாதவூரார் பொருள் இதுவே என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி மறைந்தார்.
இந்தப் புராண அளப்புகளை கடுகு மூக்கு அறிவுள் ளவர்களால்கூட ஏற்றுக் கொள்ளப்பட முடியுமா?
அரசன் குதிரை வாங்கப் பொன் கொடுத்து அனுப் பினால், அமைச்சர் அந்தக் கடமையைச் செய்யாதது எந்த வகையில் யோக்கியமானது?
தன் பக்தனுக்காக நரியைக் குதிரையாக்கி அனுப் பியவன் கடவுளாம் - சிவனாம் இது அசல் ஒழுக்கக் கேடு அல்லவா?
அப்படிதான் நரிகளை குதிரையாக்கி அனுப்பி னானே அதிலாவது ஒரு நாணயம் இருக்க வேண்டாமா! அவை இரவோடு இரவாக ஊளையிட்டு நரிகளாக ஓடின என்றால். இந்தப் பித்தலாட்டத்தை என்னென்று சொல்ல!
இந்தக் கதைகளையும், புராணப் புளுகுகளையும், பக்தியையும் ஏற்றுக் கொள்பவன் ஒழுக்கம் உள்ளவ னாக நாணயம் உள்ளவனாக நடக்கத்தான் முடியுமா?
சுடு மணலில் நின்ற பக்தனைக் காப்பாற்ற வைகையில் வெள்ளத்தை ஏற்படுத்தினானாம்.
சிவன் என்ன அடி முட்டாளா? சுடு மண்ணில் தன் பக்தனை நிறுத்தினாலும் அந்தச் சுடுமணல் அவனை சுடாதவாறு அருள்பாலிக்க வேண்டியதுதானா?
கூலி வாங்கிக் கொண்டு வேலை செய்யாமல் படுத்துத் தூங்குவதுதான் பண்பாடா? அதனால் அரசர் அவனை  அடித்தபோது, உலகில் உள்ள ஒவ்வொரு உயரின்மீதும் அந்த அதிர்வு ஏற்பட்டதாம். (அப்படி அதிர்வு ஏற்பட்டதாக எந்த அமெரிக்கக்காரனும் ஆஸ் திரேலியக்காரனும் புராணம் எழுதி வைக்கவில்லையே!
ஆமாம். இந்த மதக் கடவுள்கள் இப்பொழுது எல்லாம் அது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாதது ஏன்? கோயில்களில் சிலைகளாக, பொம்மைகளாக அடித்து வைப்பதைத்தவிர வேறு எந்த நடவடிக்கையை யும் காண முடியவில்லையே ஏன்? ஓ, பெரியார் என்ற ஒரு 'மாமனிதர் தோன்றியதால் ஓடி ஒளிந்து விட்டாரா?
அட வெட்கக் கேடே!
ஒழுங்கீனமும், மோசடியும், பித்தலாட்டமும்தான் இந்து மதமா?
கடைசியாக ஒரே ஒரு கேள்வி சிவனின் பேரருள் பெற்ற  அந்த மாணிக்கவாசகர் முப்பத்திரெண்டே வயதில் மண்டையை போட்டது ஏனாம்?
- கருஞ்சட்டை -
-விடுதலை,25.6.17

வியாழன், 22 ஜூன், 2017

இராமானுஜர்: புனைவும் உண்மையும்

இராமானுஜர்: புனைவும் உண்மையும் - முனைவர் இரா.நாகசாமி (2008)


விவரங்கள்எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்தாய்ப் பிரிவு: உங்கள் நூலகம்பிரிவு: உங்கள் நூலகம் - செப்டம்பர் 2015 வெளியிடப்பட்டது: 13 அக்டோபர் 2015


படித்துப் பாருங்களேன்...


RAMANUJA MYTH AND REALITY - Dr.R.NAGASWAMY

இந்தியத் தத்துவ வரலாற்றில் அத்வைத மரபை உருவாக்கிய ஆதிசங்கரர், துவைத மரபை உருவாக்கிய மத்துவர், விசிஷ்டாத்துவ மரபை உருவாக்கிய இராமானுஜர் என்ற மூவருக்கும் குறிப்பிடத்தக்க இடம் உண்டு. பிரம்ம சூத்திரம் என்ற நூலுக்கு மூவரும் உரை எழுதப் புகுந்து மூன்று வகையான தத்துவக் கோட்பாடுகளை உருவாக்கியமை அனைவரும் அறிந்ததுதான். இவர்கள் மூவரையும் மையமாகக் கொண்ட தத்துவ விவாதங்கள் ஒருபுறம் இருக்க, வாய்மொழி வழக்காறுகள் பலவும் இவர்களைக் குறித்து உருவாகியுள்ளன. வரலாற்று நிகழ்வு களுடனும் வரலாற்று மாந்தர்களுடனும் இவை இணைந்து நின்று, புனைவு எது? உண்மை எது? என்ற மயக்கத்தை உருவாக்கியுள்ளன.

இராமானுஜரைப் பற்றிய செய்திகளில் அழுத்தம் பெறுவது, அவர் ஒரு சீர்திருத்தவாதி என்பதாகும். இத்துடன் தமிழக வைணவர்கள் ‘கோவில்’ என்ற சொல்லால் குறிக்கும் திருவரங்கம் கோவிலில் அறங்காவலர் குழுவுடன் இவரைத் தொடர்புபடுத்தும் செய்திகளும், சோழ மன்னனின் பகைமைக்கு ஆளாகி அல்லல்பட்டது குறித்த செய்திகளும் வாய்மொழியாக மட்டுமின்றி எழுத்து வடிவிலும் இடம்பெற்றுள்ளன. இவற்றை எல்லாம் கேள்விக்குட்படுத்தியுள்ளது இந்நூல்.

நூலாசிரியர் தமிழ்நாடு அரசின் தொல் பொருள் துறையின் இயக்குநராகவும் காஞ்சிபுரம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். தொல்லியல் அறிவைப் பரவலாக்கிய பெருமை இவருக்குண்டு. தமிழக நடுகற்கள் குறித்த கருத்தரங்கு ஒன்றைத் தமிழ்நாட்டில் முதல் முறையாக நடத்தியவர். ‘கல்வெட்டு’ என்ற பெயரில் ஆய்வு இதழ் ஒன்றையும் நடத்தியவர்.

இந்நூலின் முன்னுரையில் இராமானுஜரைப் பற்றிப் புனையப்பட்ட புனைவுகளும் பழமரபுக் கதைகளும் எவ்வித வரலாற்றுச் சான்றுகளும் இல்லாதவை என்று குறிப்பிடுவதுடன் தம் நூலானது கல்வெட்டு, ஆவணங்கள் ஆகியனவற்றின் துணை யுடன் எழுதப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் தாம் வலியுறுத்தும் அல்லது வெளிப் படுத்தும் உண்மைகள் எவை என்பது குறித்து அவர் வரையறைப்படுத்துவன வருமாறு:

* இராமானுஜர் திருவரங்கம் கோவில் நிர்வாகத்தில் எவ்விதப் பங்கையும் செய்ய வில்லை.

* சமூக சீர்திருத்தத்தில் ஆர்வம் காட்டி யவர் அல்லர். அடிப்படையில் அவர் ஒரு வேதாந்தி மட்டுமே.

திருவரங்கம், காஞ்சி, திருப்பதி ஆகிய வைணவத் தலங்களில் உள்ள மூல ஆவணங்கள், கல்வெட்டுக்கள் ஆகியனவற்றின் துணையுடன் இராமானுஜரின் உண்மை வரலாற்றைத் தாம் எழுதியுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

இச்செய்திகளின் பின்புலத்தில் இந்நூல் நுவலும் செய்திகளை இனிக் காண்போம்.

வாழ்க்கை

மூன்றாம் இராஜேந்திரசோழனின் திருவரங்கம் கோவில் கல்வெட்டு, விஜயகந்த கோபாலன் என்ற தெலுங்குச் சோழனின் திருப்பதிக் கோவில் கல் வெட்டு, காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் கல்வெட்டு ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது இராமானுஜர் பிறந்த ஆண்டு கி.பி. 1017 ஆகும்.

அவர் 120 ஆண்டுகள் வாழ்ந்ததாகச் சொல்லப் படுகிறது. அப்படியானால் 1137 வாக்கில் அவர் இறந்திருக்க வேண்டும். அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான ஆதாரங்களுள் ஒன்றாக ‘குரு பரம்பரை’ என்ற நூல் குறிப்பிடப்படுகிறது. விஜயநகரப் பேரரசின் ஆட்சியின்போது 16ஆம் நூற்றாண்டில் இது தொகுக்கப்பட்டுள்ளது. தமிழக வைணவர்களிடையே நிலவும் ‘வடகலை’, ‘தென் கலை’ என்ற இரு பிரிவுகளின் அடிப்படையில் இந்நூலும் இருவகையில் உள்ளது. பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள், இந்நூலில் இடம்பெறும் கதைகள் நம்ப முடியாதனவாய் உள்ளன என்பதை உணர்ந்துள்ளார்கள். இவ்வுண்மையை இந்நூலைப் பதிப்பித்துள்ள கிருஷ்ணசாமி அய்யங்காரும் தம் முன்னுரையில் வெளிப்படுத்தியுள்ளார்.

குருபரம்பரை நூலில் இராமானுஜர் வரலாறும் இடம்பெற்றுள்ளது. இவ்வரலாறானது, கற்பனை வளத்துடன் வாய்மொழிச் செய்திகளை அடிப் படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள காலவரிசை வரலாற்றுடன் தொடர்புடையதல்ல. முற்றிலும் புராணச் சார்பு உடையது.

இராமானுஜர் தம் மனைவியுடன் முரண் பட்டுத் துறவியானவர். இது குறித்துச் சில கதைகள் உள்ளன. சாதி வேறுபாட்டை வெறுத்து வந்த இராமானுஜர் திருக்கச்சி நம்பி என்ற சூத்திரரைத் தன் வீட்டிற்கு விருந்தினராக அழைத் துள்ளார். அவரும் அழைப்பை ஏற்று இராமானுஜர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இராமானுஜர் வீட்டில் இல்லை. திரும்பிப் போகும் அவசரத்தில் நம்பி இருந்ததால் தன் கணவனது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இராமானுஜரின் மனைவி அவருக்கு உணவு படைத்தார். உணவுண்டபின் தான் பயன்படுத்திய இலையைத் தாமே எடுத்து வெளியில் போட்டார்.

இராமானுஜர் திரும்பி வரும்போது அவரது மனைவி திருக்கச்சி நம்பி உணவுண்ட இடத்தைச் சாணத்தால் மெழுகிக் கொண்டிருந்தார்.

இக்கதையின் மற்றொரு வடிவப்படி திருக் கச்சி நம்பி தான் உணவுண்ட இலையை எடுக் காமல் போய்விட்டார். இராமானுஜரின் மனைவி குச்சி ஒன்றினால் அதை அப்புறப்படுத்தலானார். அச்சமயம் அங்கு வந்த இராமானுஜர் திருக்கச்சி நம்பி தன் வீட்டில் உணவு உண்டு திரும்பிச் சென்றதை அறிந்துகொண்டார்.

இவ்விரு கதை வடிவங்களிலும் இராமானு ஜரது மனைவியின் சாதிய மேலாண்மை வெளிப் படுகிறது. இராமானுஜரும் இவ்வாறே கருதினார். இதனால் தன் மனைவியை அவளது பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டுத் துறவியானார்.

மற்றொரு கதை வடிவின்படி நம்பி, தன் மனைவியுடன் இராமானுஜர் வீட்டில் சில காலம் தங்கி இருந்தார். இதை விரும்பாத இராமானுஜரின் மனைவி, நம்பியின் மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டிருந்தார். இதனால் மனம் நொந்து போய் இராமானுஜரின் வீட்டை விட்டு நம்பி வெளியேறினார்.

இந்நிகழ்வைப் பொறுக்க இயலாது தம் மனைவியை அவளது பிறந்த வீட்டிற்கு அனுப்பி விட்டு இராமானுஜர் துறவறம் மேற்கொண்டார்.

இக்கதை வடிவங்களில் இடம் பெற்றுள்ள ஒரு பொதுவான செய்தி, தம் மனைவியைப் பின்னர் அழைத்துக் கொள்வதாகப் பொய் கூறிவிட்டு பிறந்த வீட்டிற்கு அனுப்பியதாகும். இப்பொய்யை உண்மை என்று நம்பியே அவரது மனைவி பிறந்த வீட்டிற்குச் சென்றுள்ளார். மனைவியிடம் கூறாமலேயே இராமானுஜர் துறவறம் மேற்கொண்டுள்ளார்.

இச்செயல் அவரது பொய்மையை வெளிப் படுத்துகிறது என்பது ஆசிரியரின் வாதமாகும்.

கொலை முயற்சிகள்

இராமானுஜரின் வாழ்வில் அவரைக் கொலை செய்ய முயன்ற சில நிகழ்வுகள் நடந்துள்ளன. முதலாவது கொலை முயற்சி அவரது குருவான யாதவப் பிரகாசரால் நிகழ்ந்துள்ளது. இக்குரு அத்வைத நெறி சார்ந்தவர். இராமானுஜரைக் காசிக்கு அனுப்பி, கங்கையில் மூழ்கடித்துக் கொல்ல வேண்டும் என்பது இவரது திட்டமாக இருந் துள்ளது. தம் உறவினன் கோவிந்தன் என்பவனது உதவியால் குருவின் சதியில் இருந்து இவர் தப்பி காஞ்சிபுரம் வந்தார். மீண்டும் அதே குருவிடம் கல்வி பயின்று அவருடன் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து வந்துவிட்டார்.

இதுபோன்ற, அவரைக் கொலை செய்ய நடந்த முயற்சிகள் அவரது வரலாற்றில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு முயற்சியிலும் ஒரு குறிப் பிட்ட பிரிவினர் கொலைகாரர்களாகச் சித்திரிக்கப் படுகின்றனர். திருவரங்கம் கோவில் பெரிய அர்ச்சகர் அவரைக் கொலை செய்ய முயற்சி செய்கிறார். சைவம் சார்ந்த மன்னன் ஒருவனும் இத்தகைய கொலை முயற்சியில் ஈடுபடுகிறான். இறுதியாக திருவரங்கம் கோவிலில் பணிபுரியும் அவரது சமயப் பிரிவைச் சேர்ந்தவர் கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். வன்முறையான வழியில் கோவில் பணியில் இருந்து அவரை இராமானுஜர் நீக்கி விடுகிறார்.

கொலை முயற்சி தொடர்பான செய்திகள் அனைத்தும் அவர்மீது அனுதாபம் ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டவை என்பது நூலாசிரி யரது கருத்தாகும். அவர்மீது மரியாதை உணர்வை இவை ஏற்படுத்தவில்லை என்று கூறி இச் செய்திகள் அனைத்தையும் புனைவுகள் என்று ஒதுக்கி விடு கிறார்.

சோழ மன்னன் இராமானுஜரைக் கொல்ல முயன்ற போது அவர் தன் சந்நியாச உடையைக் களைந்து வெள்ளுடை தரித்து தப்பியோடியதாக ஒரு செய்தி உண்டு. இந்நிகழ்வில் அவரது சீடனான கூரத்தாழ்வானின் கண்கள் சோழ மன்னனால் பறிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இடம்பெறும் சோழ மன்னனாக முதலாம் குலோத்துங்கச் சோழனை வைணவ வரலாற்றாசிரியர்கள் முதலில் குறிப்பிட்டார்கள். இராமானுஜரின் மத்திய காலத்தில் அவர் திரு வரங்கம் கோவிலில் வாழ்ந்த போது இது நிகழ்ந்த தாகக் கூறினார்கள்.

திருவரங்கம் கோவிலில் ஏறத்தாழ எண்பது கல்வெட்டுக்கள், முதலாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்தவை. நிலம், தங்கம், கால் நடைகள் ஆகியன ரங்கநாதரின் வழிபாட்டிற்கும், திருவிழாச் செலவுகளுக்கும் வழங்கப்பட்டதை இக்கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

முதற் குலோத்துங்கன் ஆட்சிக்கு வந்தது தொடங்கி அவன் ஆட்சி முடியும் வரையிலான காலத்தைச் சார்ந்தவை இக்கல்வெட்டுக்கள். தான் பிறந்த பூச நட்சத்திரத்தில் ரங்கநாதருக்குத் திரு விழா நடந்த அவன் சொத்துக்களைக் கொடை யாக வழங்கிய செய்தியும் இக்கல்வெட்டுக்களில் இடம்பெற்றுள்ளது. ரங்கநாதர் மீதான அவனது பக்தி உணர்வை இது வெளிப்படுத்துகிறது. அவன் மட்டுமின்றி அவனது பட்டத்தரசியரும் தளபதி களும், பிற அதிகாரிகளும், குலோத்துங்கன் ஆட்சிக் காலம் முழுவதும் திருவரங்கம் கோவிலுக்குக் கொடைகள் வழங்கியுள்ளமை இக்கல்வெட்டு களில் பதிவாகியுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக அரங்கநாதர் கோவில், முதலாம் குலோத்துங்கனது நேரடிக் கண்காணிப்பில் இருந்துள்ளது. ‘ஸ்ரீ காரியம்’ என்ற பெயரிலான நிர்வாக அதிகாரிகளை அவனே நியமித்துள்ளான்.

இச்செய்திகள் எல்லாம் வைணவ ஆச்சாரி யரான இராமானுஜரை முதலாம் குலோத்துங்கன் கொல்ல முயன்றான் என்ற கருத்துக்கு எதிராக உள்ளன. ‘கோவில் ஒழுகு’ நூலைப் பதிப்பித்த கிருஷ்ணசாமி அய்யங்கார் இராமானுஜரைக் கொல்ல முயற்சி செய்தவன் முதலாம் குலோத்துங்க சோழன் அல்லன் என்பதை ஒத்துக்கொண்டுள்ளார். முதற் குலோத்துங்கனுக்கு எதிரான சான்றுகள் இல்லாத நிலையில் கொலை முயற்சி இரண்டாம் குலோத்துங்கனுக்கு மாற்றப்பட்டு விட்டது.

இராமானுஜர் 1017இல் பிறந்தவர் என்பதை வைணவ வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர். 120 வயது வரை வாழ்ந்த அவர் தன் மீதான கொலை முயற்சியில் இருந்து தப்பிக்க கர்நாடகம் சென்று அங்கு 12 ஆண்டுகள் வாழ்ந்து பின் திருவரங்கம் திரும்பி தமது 120 ஆவது வயதில் சமாதியடைந்ததாக நம்புகின்றனர். இரண்டாம் குலோத்துங்கன் 1133இல் தான் ஆட்சிக்கு வந்தான். அப்போது இராமானுஜருக்கு வயது 116.

அவன் ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் அவர் மரணமடைகிறார். இதனால் சோழநாட்டில் இருந்து அவர் வெளியே கர்நாடகத்தில் 12 ஆண்டுகள் வாழ்ந்தார் என்ற செய்தி வலுவிழந்து போகிறது.

* * *

‘கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தார சரித்திரம்’ என்ற நூலின் வரலாற்று மதிப்பு குறித்து ஆராய்ந்து, அதில் இடம்பெறும் இராமானுஜர் சரித்திரம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்ற முடிவுக்கு நூலாசிரியர் வருகிறார். இம்முடிவின் ஊடாக இஸ்லாமியர்கள் இந்துக்கோவில்களை இடித்துப் பள்ளிவாசல் கட்டினர் என்று குறிப்பிடுகிறார். இது ஆட்சியாளர்கள் சிலரின் வழக்கமான செயல் தான் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. மகேந்திர பல்லவன் சமணர்களின் பாழிகளை இடித்துச் சைவக் கோவில் கட்டியதை சேக்கிழார் பெரிய புராணத்தில் பதிவு செய்துள்ளாரே! நாகப் பட்டினம் பௌத்தப்பள்ளி ஒன்று சைவக் கோவி லாக மாற்றப்பட்டதே! இன்று சைவக் கோவிலாக விளங்கும் நாகர்கோவில் நாகராஜர் கோவிலுக்கு வழங்கப்பட்ட கொடை ‘பள்ளிச் சந்தம்’ என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதே! சமண பௌத்தப் பள்ளிகளுக்கு வழங்கும் கொடை தானே ‘பள்ளிச்சந்தம்’ என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும்.

சிறந்த வரலாற்றறிஞரான ஆசிரியர் இச் செய்திகளை அறிந்தவர்தான். ஆனால், அவரது இஸ்லாமிய எதிர்ப்பு இச்செயல்களை மறக்கும் படி செய்துவிட்டது.

சீர்திருத்தவாதி

ஒரு சீர்திருத்தவாதி என்ற அடையாளம் இராமானுஜருக்கு உண்டு. சாதிய மேலாண்மை யினால் அவரது காலத்தில் கோவில் நுழைவென்பது சில சாதியினருக்கு மறுக்கப்பட்டிருந்தது. அனுமதி மறுக்கப்பட்ட சாதியினரைக் கோவிலுக்குள் அழைத்து வந்தவர் இராமானுஜர் என்ற கருத்து உண்டு.

ஆன்ம விடுதலையென்பது அந்தணர், வைசியர், சத்திரியர் என்ற மூன்று சாதியினருக்கு மட்டுமே உரியதாய் இருந்தது. இதை ராமானுஜர் தம் ஸ்ரீ பாஷ்யத்தில் குறிப்பிட்டுள்ளார். சூத்திரர்கள் இத்தகுதிக்கு உரியவர்கள் அல்லர் என்றும் குறிப் பிட்டுள்ளார். இதில் அவர் எவ்வித சமரசமும் செய்து கொள்ளவில்லை என்பது நூலாசிரியரின் கருத்தாகும்.

இராமானுஜருக்கு முன்பே இப்பிரச்சினை விவாதிக்கப்பட்டுள்ளது. ‘வியாச பிரம்மசூத்திரம்’ என்ற வடமொழி நூல் சூத்திரர்கள் மோட்சம் செல்ல அனுமதி கிடையாது என்று கூறியுள்ளது. ஏனெனில் வேதம் அறிந்தவர்கள் மட்டுமே மோட்சம் செல்ல முடியும். வேதம் கற்க சூத்திரர்களுக்கு அனுமதி கிடையாது.

இக்கருத்தைக் கூறும் சுலோகத்திற்கு விளக்க உரை எழுதிய சங்கரர், வேதங்களைக் கற்றறிந்து சூத்திரர்கள் மோட்சம் அடைய வழியில்லை என் பதில் அய்யம் கொள்ளவில்லை. இருந்தாலும் மாற்று வழியாக இதிகாசங்களையும் புராணங் களையும் கேட்பதன் வாயிலாக மோட்சம் அடை யலாம் என்று வழிகாட்டியுள்ளார். தாம் காட்டிய வழியை மகாபாரதம் வெளிப்படுத்தியுள்ளதாகவும் சங்கரர் குறிப்பிட்டுள்ளார். (ஏன் புராணப் பிரசங்கங்கள் வீதிகளிலும், வேதக் கல்வி பாது காப்பான மடங்களிலும் நடைபெறுகிறது என்பது இப்போதுதான் புரிகிறது.)

* * *

திருக்கோஷ்டியூர் நம்பி என்பவரைச் சந்தித்து “ஓம் நமோ நாராயணாய” என்னும் புனித மந்திரத்தை ராமானுஜர் கற்றறிந்தார். இம் மந்திரத்தை யாருக்கும் ராமானுஜர் கூறக்கூடாது என்று அவர் கூறியதை ஏற்றுக்கொண்டு, “அவ்வாறு கூறமாட்டேன்” என்று உறுதிமொழி அளித்தார். ஆனால், உறுதிமொழியை மீறி இம்மந்திரத்தை அனைவருக்கும் கூறினார்.

திருக்கோஷ்டியூர் நம்பி இது குறித்து அவரிடம் கேட்ட போது, “குருவுக்கு அளித்த வாக்குறுதியைத் தாம் மீறியதால் நரகத்திற்குச் சென்றாலும் இதைக் கேட்டறிந்தவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்” என்று விடையளித்தார். இதுவும் இராமானுஜரின் சீர்திருத்த உணர்வுக்கு எடுத்துக்காட்டாகக் கூறப் படுகிறது. ஆனால் ராமானுஜரின் இச்செயல் வாக்குறுதியை மீறும் பண்புக்கு எடுத்துக்காட்டு என்பது நூலாசிரியரின் வாதமாகும்.

ராமானுஜருக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருமழிசை ஆழ்வார் “ஓம் நமோ நாரா யணாய” என்ற அஷ்ட சக்ர மந்திரத்தைக் கூறு பவர் சொர்க்கத்தை அடைவர் என்று குறிப்பிட்டு உள்ளார். இம்மந்திரம் இருக்கும்போது ராமானுஜர் “ஓம் நமோ நாராயணாய நமக” என்ற மந்திரத்தை உரக்கக் கூற வேண்டிய அவசியமில்லை என்பதும் நூலாசிரியரின் கருத்தாக உள்ளது.

நாலாயிர திவ்விய பிரபந்தத்தை வைணவக் கோவில்களில் ஓதவும் பாடவும் இராமானுஜர் ஏற்பாடு செய்ததாகக் கூறுவர். குறிப்பாகத் திரு வரங்கம் கோவிலில் திருவாய்மொழி ஓத அவர் ஏற்பாடு செய்தார் என்ற செய்தியுண்டு. இச் செய்திகள் உண்மையல்ல என்பதையும், அவருக்கு முன்பே இப்பழக்கம் நடைமுறையில் இருந்தது என்பதையும் கல்வெட்டுச் சான்றுகளின் துணை யுடன் ஆசிரியர் நிறுவியுள்ளார்.

கோவிலை நிர்வகித்தல், பிரபந்தத்திற்கு விருந்தியுரை எழுதுதல், சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ளல் என உலகியல் சார்ந்த நடவடிக் கைகளில் இராமானுஜர் ஈடுபடவில்லை. ஆனால் இவற்றை எல்லாம் அவர் மேற்கொண்டதாக அவரது சீடர்கள் கூறியுள்ளார்கள். சீடர்களின் கூற்றுக்கு வரலாற்றில் இடமில்லை. இதுவே இராமானுஜர் குறித்த நூலாசிரியரின் இறுதி மதிப்பீடாக உள்ளது.

நூலின் செய்தி

இந்நூலை முழுமையாகப் படித்தவுடன் இந்நூல் ஆசிரியர் குறித்தும், நூலின் செய்தி குறித்தும் சில அவதானிப்புகள் தோன்றுகின்றன. அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

நூலாசிரியரின் ஆழ்ந்த வரலாற்றறிவு. குறிப்பாகக் கல்வெட்டியலில் அவரது புலமை.


வைணவ சமயம் தொடர்பான அவரது அறிவு.


வடமொழி, வேதச் சார்பான நிலைப் பாடு.


சமூக சீர்திருத்தங்கள் குறித்த புறக்கணிப் புணர்வு.


இராமானுஜர் என்ற வரலாற்றுப் பாத்திரத்தின் மீதான புனைவுகளை நீக்கி அவரது உண்மையான உருவத்தைக் காட்டுவது என்பதையே இந்நூலின் அடிப்படை நோக்கமாக அவர் கொண்டுள்ளார். இதன் பொருட்டு அவரைக் குறைகூற முடியாது. இம்முயற்சியில் அவர் முன்வைக்கும் சில கருத்துகள் கடுத்த வைணவர்களைக் கோபப்படுத்தும் தன்மையன. அவை குறித்து இங்கு விவாதிக்கவில்லை. இது அவர்கள் பாடு.

புனைவுகள் என்று தாம் கருதுவனவற்றை வரலாற்றுச் சான்றுகளின் துணையுடன் ஆசிரியர் நீக்கியுள்ளார். இம்முயற்சியில் கல்வெட்டுச் சான்று களை அவர் பயன்படுத்தியுள்ளார். வரலாற்று ஆண்டுகளை மட்டுமே சான்றாகக் கொண்டு ஏனையவற்றை வெறும் புனைவுகள் என்று ஒதுக்கி விட்டு எழுதும் வரலாற்று வரைவு இன்று கேள்விக் குள்ளாக்கப்படுகிறது.

புனைவுகளில் புதைந்துள்ள உளவியல் பதிவு களையும் எதிர்க்குரலையும், மேட்டிமை ஆதரவுப் போக்கையும் குறியீட்டுப் பொருளையும் அகழ்ந் தெடுக்கும் ஆய்வு முறை உருவாகிவிட்டது. வாய் மொழிக் கதைகளுக்குள்ளும் புராணங்களுக்குள்ளும் பொதிந்துள்ள உண்மைகளை கோசாம்பி, ரொமிலா தாப்பர் போன்ற சிறந்த வரலாற்றறிஞர்கள் வெளிக் கொணர முயன்றுள்ளனர். சான்றாக விருத்தா சுரன் என்ற அசுரனின் பிடியில் இருந்து ஆறுகளை இந்திரன் விடுவித்ததாகக் குறிப்பிடும் புராணக் கதைக்கு கோசாம்பி தரும் பின்வரும் விளக்கத்தைக் குறிப்பிடலாம்.

“விபாலி நதியை அதன் இயல்பான போக்குக்கு மீட்டு வந்ததற்கு இந்திரன் பாராட்டப் படுகிறான். அதனால் அந்த நதி வெள்ளம் அதன் கரையெங்கணும் பாய்ந்து அதனை வெள்ளக் காடாக்கியது. அதன் மூலம் அந்தப் பிரதேசத்தின் விவசாயத்தையும் நகர வாழ்க்கை நெடுங்காலம் நீடிக்கக்கூடிய மற்றும் நகர மக்களைப் பராமரித்து வரக்கூடிய சாத்தியப் பாட்டையும் அழித்தது. இந்த அழிவு பற்றிய உண்மை மறுக்க முடியாதது. இதற்கான காரணங்களை மொகஞ்சதாரோ அகழ் வாய்வில் கண்டறியப்பட்ட எண்ணற்ற பெரு வெள்ளங்களின் வண்டல் படிவங்கள் உட்பட நமக்குக் கிடைக்கக்கூடிய சகல விவரங்களி லிருந்தும் கண்டுணர வேண்டும்.”

திராவிடர்களின் சிந்து சமவெளி நாகரி கத்தில் உருவான அணைக்கட்டுக்களை ஆரியர்கள் உடைத்து அந்நாகரிகத்தை அழித்ததாக, கோசாம்பி பொருள் கொள்கிறார்.

இதுபோல் ராமானுஜர் தொடர்பான புனைவு களின் உள்ளார்ந்த பொருளை ஆராய இட முள்ளது. ‘அரசு மதம்’ என்று கூறத்தக்க அளவில் சைவம் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் இப்புனைவுகள் உருவாகியுள்ளன என்பதையும் கருத்தில் கொள்வது அவசியம்.

-'கீற்று' இணையம்