வெள்ளி, 29 ஜூன், 2018

இந்து மதம்

07.06.1931 - குடிஅரசிலிருந்து...

இந்து மதம், இஸ்லாமானவர்களுக்கும், கிறிஸ்தவர் களுக்கும் கொள்கையில் எவ்வளவு கெடுதியோ அதைவிடப் பல மடங்கான கெடுதிகளை பார்ப்பன ரல்லாத மக்களுக்கு  காரியத்தில் விளைவிக்கின்றது.  அதைவிடப் பன்மடங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விளைவிக்கின்றது.

இஸ்லாம் ஆனவர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இந்து மதத்தால் யாதொரு கெடுதியும் இல்லை என்று சொல்லலாம்.  இஸ்லாமி யரையும், கிறிஸ்தவரையும். இந்துக்கள் வேறாகக் கருதுகின்றார்கள்.  தங்கள் சமுகத்திற்கு எதிராய் கருது கின்றார்கள் என்பதைத் தவிர வேறில்லை.  பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பயனாய் அவர்கள் பார்ப்பனரொழிந்த இந்துக்களைவிட சற்று அதிகமாக நிலையில் லாபமே அடைந்திருக்கிறார்கள்.  ஆனால், இந்துமதம் காரணமாக பார்ப்பனரல்லாதாரும் தீண்டாதாரும் இழிவாய் நடத்தப்படுவதுடன் சுயமரி யாதை இல்லாத முறையிலும், சுதந்திரமில்லா மலும் நடத்தப்படு கிறார்கள். மேலும் இவர்களைப் பார்ப்பனர்கள் அடிமையாக்கிக் கொண்டும், இவர் களது கஷ்டத்தின் பயன்களை அனுபவித்துக் கொண்டும் இவர்களைத் (பார்ப்பனரல்லாதாரையும், தீண்டாதாரையும்) தலை யெடுக்கச் செய்யாமலும் செய்து வருகிறார்கள்.

இந்து மதம் என்பதாக ஒன்று இருப்பது இஸ்லாமான வர்களுக்கும், கிறிஸ்துவர் களுக்கும் மற்றொரு விதத்தில் லாபகரமான தென்றே சொல்லலாம். எப்படியெனில் மேற்கண்ட இரண்டு மதமும் இரண்டு சமுக எண்ணிக்கையிலும் பெருக்க மேற்படுவதற்கு இந்து மதமே காரணமாயிருக்கின்றது.  இந்தியாவில் இந்து மதமில்லாமல் வேறு புத்த மதம், கிறிஸ்து மதம் ஆகியவை இருந்திருந்தால் இஸ்லாம் மதம் சமுக எண்ணிக்கை இவ்வளவு பெருகி இருக்காது. அது போலவே, வேறு மதங்கள் இருந்திருந்தால் கிறிஸ்து மத சமுக எண்ணிகையும் இவ்வளவு பெருகி இருக்காது.

ஆகவே அவ்விஷயத்தில் இந்து மதம்  இருப்பது முஸ்லீம், கிறிஸ்தவ மதங்களுக்கு லாபமேயாகும். ஆகையால், இந்து மதத்தை ஒழிக்க வேண்டியதென்பது இந்திய பார்ப்பனரல்லாத மக்களுக்கும், அவர்களில் தீண்டப்படாதார் என்கின்ற மக்களுக்கும் தான் மிகவும் அவசியமானது என்று சொல்லுவோம். இதோடு ஏழைகளுக்கும், தொழிலாளர் களுக்கும் கூட சமத்துவமும், பொது உடைமை தத்துவமும் ஏற்பட வேண்டுமானால் முதலில் இந்து மதம் ஒழிய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

 - விடுதலை நாளேடு, 22.6.18

வியாதிக்கும் கடவுளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை


21.9.1930 - குடியரசிலிருந்து...

சீனாவையும், ஜப்பானையும், பிரஞ்சையும், இங்கிலாந்தையும், அமெரிக்காவையும், நினைத்துப் பாருங்கள். எந்த நாட்டுக்காரானாவது அவனுடைய வாழ்நாளையும், சொத்தையும், நேரத்தையும், இந்த மாதிரிக் கடவுளையும், மதத்தையும் காப்பாற்றுகின்ற முட்டாள் தனமானதும், பயனற்றதும், நாச வேளை யானதுமான வேலையின் ஈடுபடுத்துயிருக்கின்றார்களா என்பதை நடுநிலையில் இருந்துயோசித்துப் பாருங்கள்.

கடவுள் போய் விடும் என்று பயந்த மக்களால் வேறு என்ன வேலையாகும் என்று நினைக்கிறீர்கள்.  அவர்களை விட பயங்காளிகள், அறிவிலிகள் வேறு யார் இருக்கக்கூடும்? என்று எண்ணுகிறீர்கள்.  கடவுளுக்கும், சமயத்திற்கும், அடிமையான நாடு ஒரு நாளும் சுதந்திரத்திற்கு அருகதையுடையதாகவே ஆகாது. ஆகவே, நீங்கள் முதலில் அந்தப் பயத்தை ஒழியுங்கள். சமயத்தை வணங்க வேண்டாம் அதற்குப் பூசை செய்ய வேண்டாம் என்றால், உங்கள் மார்க்கம் போய்விடுமா? அப்படியானால் இந்து மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும் வித்தியாசமென்ன? இந்து மதச் சம்பந்தமான கோவில் களெல்லாம் பெரிதும் சமாதுதான்.

அந்தக் கடவுளெல்லாம் அநேகமாய் அந்தச் செத்துப் போன ஆண்களைதான் என்பதே எங்கள் ஆராய்ச்சிக் காரர்கள் துணிவு.   அதனால்தான் பல புண்ணியஸ் தலங்களும், பல கடவுள்களும் ஏற்பட வேண்டியதாயிற்று.

அதையொழிப் பதற்குத் தோன்றியதுதான் இஸ்லாம் மார்க்கம் ஆகும். இஸ்லாம் மார்க்கத்தில்தான் ஒரே ஒரு கடவுள் என்பதும், அதற்கும் உருவமில்லை என்பதும்.  அதைத் தவிர வேறொன்றையும் வணங்கக் கூடா தென்பதுமான கொள்கைகள் சொல்லப்படுகிறது. அதற்கு நேர்விரோதமான நீங்கள் சமாதுகளையெல்லாம்  வணங் கவும், பூசிக்கவும், ஆரம்பித்துவிட்டீர்களானால் நீங்கள் எப்படி மற்றவர் களைக் குற்றம்சொல்ல யோக்கியதை யுடையவர்களா வீர்கள்? அது மாத்திரமல்லாமல், அல்லா சாமி பண்டிகையிலும், கூண்டு முதலிய திருவிழாக்களிலும் இஸ்லாமானவர்கள் சிலர் நடந்துகொள்வதும் மிகவும் வெறுக்கத்தக்கதாகும்.

இப்படிப்பட்டவர்களைக் கொண்ட மார்க்கம் எப்படி பகுத்தறிவு மார்க்கமென்றும், இயற்கை மார்க்க மென்றும் சொல்லிக் கொள்ளக்கூடும்?  என்பதை யோசித்துப் பாருங்கள்.

இவைகளையெல்லாம் ஒரு மார்க்கக் கட்டளை என்று சொல்லுவதானால் இந்த மார்க்கம் ஒரு நாளும் அறிவு மார்க்கமாகவோ உண்மையில் நன்மை பயக்கும் மார்க்கமாகவோ இருக்க முடியவே முடியாது.  அதோடு மாத்திரமல்லாமல் மார்க்கத் தலைவருக்கும், மார்க்க வழிகாட்டி யார்க்கும் கூட இது அவமானமும் வசைச் சொல்லுமாகும் என்றே சொல்லுவேன்.

இன்று இந்துவும், கிறிஸ்தவரும், பகுத்தறிவைக் கண்டால் பயப்படுகின்றார்கள்.  இஸ்லாம் மார்க்கத்தில் தான் தங்கள் மார்க்கம் பகுத்தறிவுக்கு ஏற்றது என்று நிரூபிக்க பந்தயம் கட்டி வருகிறார்கள்.

ஆனால், இப்படிப்பட்ட  சமாதான வணக்கமும், பஞ்சா வணக்கமும், கொடி வணக்கமும் கூண்டு உற்சவம், அல்லா சாமி பண்டிகையையும்  கொண்ட மக்களை ஏராளமாய் வைத்துக்கொண்டு அவற்றையும் மார்க்கக் கொள்கையோடு சேர்த்துக் கொண்டிருக்கின்றவர் களையும் வைத்துக்கொண்டு இஸ்லாம்மார்க்கம், பகுத்தறிவு மார்க்கமென்று எப்படி சொல்லிக்கொள்வது என்பது எனக்குத் தெரியவில்லை.

திராவிடச் சமுதாயத்திற்குச் சிறப்பாகத் தமிழ் மக்களுக்கு இன்று சமயம் இல்லை; வேத சாத்திரங்கள் இல்லை. அவை மாத்திரம் அல்லாமல் கடவுளும் இல்லை. கண்டிப்பாக இல்லை. அப்படி இருந்தும் திராவிடன் சமயத் துறையில் மேற்கண்ட வைகள் பேரால் கீழ்மகன் - சூத்திரன், சூத்திரச்சியாக இருந்துகொண்டு பெருந்தொல்லைகளையும் ஏழ்மையையும் அனுபவித்துக் கொண்டு காட்டுமிராண்டியாய் இருந்து வருகிறான். பூசைக்கும் பூச்சுக்கும் அள வில்லை; கோவில் குளத்திற்கும் கணக்கு இல்லை; அவைகளுக்காகச் செலவாகும்

பணம், நேரம், ஊக்கம் ஆகியவைகளுக்கும் எல்லை இல்லை.-      - தந்தை பெரியார்

- விடுதலை நாளேடு, 22.6.18

எதார்த்தவாதியும் கிறிஸ்தவ மத போதகரும் பேசியது


- ஓர் சம்பாஷணை -

05.04.1931 - குடிஅரசிலிருந்து...

எதா : அய்யா தங்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது.

போதகர் : பழைய காலத்திலே தேவ ஆவியால் ஏவப்பட்ட பல தீர்க்க தரிசிகளைக் கொண்டும் கிறிஸ்துவின் சீடர்களைக் கொண்டும் பிந்திய அப்போஸ்தலரைக் கொண்டும் எழுதப்பட்டது.

எதா : சரி தீர்க்கதரிசிகள் என்பவர் சிலவிடங்களில் தெய்வத்திற்கு பயப்படாதவர்கள் தானே

போதகர்: இல்லை சார் எப்பொழுதும் தெய்வத்துக்கு பயப்படு கிறவர்கள்தான்.

எதா : நல்லது அப்படியானால் ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசிதானே.

போதகர் : ஆம். வாஸ்தவம்தான். ஆனால், அவனை(ரை) சில ஆராய்ச்சியாளர் தன் தகப்பனின் மறு மனையாட்டியின் மகளைக் கல்யாணம் செய்ததாகக் குறை கூறுவார்கள்.

எதா : அதைப்பற்றி இப்பொழுது கவலை இல்லை. மானிடன் இயற்கையில் சகோதரியைக் கல்யாணம் செய்தேதான் உற்பத்தி ஆகி இருக்கலாம்.

போதகர் : அப்படியானால் ஆபிரகாமைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதென்ன?

எதா : உண்மையாக அவன் ஒரு தீர்க்கதரிசிதானே.

போதகர் : ஆம், வாஸ்தவம்தான். ஆதியாகமம் 2ஆம் அதிகாரம் 7ஆம் வசனத்தில் (கடவுளே) தேவனே அவன் ஒரு  தீர்க்கதரிசி என்பதாய் சொல்லியிருக்கிறார்.

எதா : அந்த ஆபிரகாமே தானே ஆதியாகமம் 21ஆம் அதிகாரம் 11ஆம் வசனத்தில் இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும் பொருள்படப் பேசியதை தாங்கள் வாசித்ததுண்டா?

போதகர் : அ. ஆ.. ஆம் வாசித்ததுண்டு ஆனால், அவன் மனைவி  சாரா அழகுள்ளவள். அதற்காகப் பயந்து சொல்லியதுண்டு.

எதா : மனைவி அழகானால் மனிதர்கள் மனிதர்களுக்குப் பயந்து தெய்வத்திற்குப் பயப்பட வேண்டியதில்லையா?

போதகர் :  சார் அது பழைய ஏற்பாட்டில் உள்ளது. புதிய ஏற்பாட்டில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.

எதா : சரி அய்யா நான் படிக்கிறேன். அப்படிப்பட்டவர்களாலேதானே உங்கள் பைபிள் எழுதப்பட்டது.

போதகர்: தெய்வமில்லாத காலமிது (என்பதாய் முணுமுணுத்துக் கொண்டு  நழுவி விடுகிறார்.)

எதா:  பைபிள் காலத்தில் தெய்வப் பயமில்லாத இடமிருந்து இப்பொழுது காலம்  வந்து விட்டது  என்பது உங்கள் அனுபவம். ஆனால் எங்களுக்குத் தெய்வ கவலையில்லாத (காரியமே) வாழ்க் கையே வேண்டும்  என்பது எங்கள் துணிபு.

- விடுதலை நாளேடு, 22.6.18

வியாழன், 21 ஜூன், 2018

பிரம்ம ஞான சங்கமும் பார்ப்பனரல்லாதாரும்

09.12.1928. - குடிஅரசிலிருந்து...

உலகத்திலுள்ள மக்கள் மனித சக்தியை உணராததற்கும், அறிவின் அற்புதத்தின் கரை காணாததற்கும் பல்வேறு பிரிவுகளாய் பிரிந்து ஒற்றுமையை கெடுத்திருப்பதற்கும், சுயநலம், பிறர் நல அலட்சியம், துவேஷம் முதலியவைகள் ஏற்பட்டு பரோபகாரம், இரக்கம், அன்பு முதலியவைகள் அருகிப் போனதற்கும், இயற்கை இன்பங்களும் சுதந்திர உரிமைகளும் மாறி துக்கத்தையும், நிபந்தனை அற்ற அடிமைத் தனத்தையும் இன்பமாகவும், சுதந்திரமாகவும் நினைத்துக் கொள்ள வேண்டியதான நிர்ப்பந்தமுள்ள செயற்கை இன்பத்தையும் சுதந்திரத்தையும் நினைத்துக் கொள்ள வேண்டியதான நிர்ப்பந்தமுள்ள செயற்கை இன்பத்தையும் சுதந்திரத்தையும் அனுபவித்துக் கொண் டிருக்க வேண்டியதற்கும் முக்கிய காரணம் மதங்கள் என்பதே எமது அபிப்பிராயம்.

இந்த மதங்களேதான் மக்களுக்குக் கொடுங்கோன் மையான ஆட்சியை ஏற்படுத்துவதற்கும் காரணமாயிருந்ததென்றுகூட சொல்ல வேண்டியிருக்கின்றது.

உலகத்தில் பல காரணங்களால் ஏற்படும் பூகம்பம், எரிமலைக்குழம்பு, பூமிப்பிளவு, மண்மாரி, மழை, வெள்ளம், புயல்காற்று, இடி, மின்னல் ஆகியவைகள் போலவும், காலரா, பிளேக்கு முதலிய ரோகங்கள் போலவும் மனித சமுக வீழ்ச்சிக்கு அடிக்கடி வேறு வேறு வேஷத்தின் பேரால் மதங்கள் என்பவைகளும் தோன்றிக் கொண்டே வரு வதுமுண்டு.

இம்மதக்கேடுகளை உணர்ந்த அநேகரும் உண்மையி லேயே அக்கெடுதல்களை ஒழிப்பதற்கென்று வேலை செய்தவர்கள் அநேகரும் அந்த மதத்தை அப்படியே வைத்துக் கொண்டு கொள்கைகளுக்கு வேறு வித வியாக் கியானம் செய்தும், மற்றும் அம்மதத்திற்கு வேறு கொள்கை களைப் புகுத்தியும் மற்றும் வேறு மதத்தை ஏற்படுத்தி கொள்கைகளையே வேறு ரூபத்தில் வைக்கும் பலவித மாய வேலை செய்தும் வந்து ஒரு விதத்திலும் வெற்றி பெறாமல் பழைய நிலையிலேயே இருந்திருக்கின்றார்கள்.

மற்றும் சிலர் சுயநலம் கொண்டு தங்கள் சமுக உயர் வுக்கும் வகுப்பு ஆதிக்கத்திற்கும் ஆதாரமாக சூழ்ச்சிகள் செய்து மக்களை ஏமாற்றி பல தந்திரங்கள் மூலம் பழைய கொள்கைகளையே நிலைநிறுத்தி வஞ்சித்து வருகின் றார்கள். இந்த இரண்டிற்கும் தோற்றத்தில் வித்தியாசமி ருந் தாலும் காரியத்தில் ஒரே பலனைத்தான் கொடுத்து வந்திருக் கின்றன.

இந்த நிலையிலேயே, அதாவது மக்களை அறியா மையில் ஆழ்த்தவும் சிலரின் ஆதிக்கத்தை வலுப்படுத்த வுமாக இது சமயம் நமது நாட்டில், சிறப்பாக தமிழ் நாட்டில், கற்றறிந்த கூட்டத்தார் என்னும் பார்ப்பனரது உதவி கொண்டு ஒருவாறு நாட்டில் உலவுகின்ற புதிய மத தோற்றங்களில் பிரம்ம ஞான சங்கம் அல்லது தியசாபிகல் சொசைட்டி என்பதும் ஒன்று அது தலைமைப் பேராசையும் கீர்த்தி வெறியும் கொண்ட ஒரு அய்ரோப்பிய மாதின் ஆதிக்கத்திலும் வெள்ளைக் காரர்களின் பண வலிமை யிலும் ஒருவாறு செல்வாக்குப் பெற்று உலவுவதுடன் ஏற்கனவே பல காரணங்களால் உயர்வு தாழ்வு கொள்கை யால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மூடநம்பிக்கையால் அறிவு வளர்ச்சி பெறாத மக்களுக்கும் பெரிதும் இடையூறாக தோன்றி இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். இச்சபை செல்வமும் செல்வாக்கும் கொண்ட ஒரு ஸ்தாபன மாயிருப்பதால் மேல் கண்ட இரண்டிலும் ஆசையுடைய வர்களான பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக் கத்திற்கு இதை ஒரு சாதனமாய் உபயோகித்துக் கொள்ளக் கருதி ஒருவாறு அதில் போய் குவிந்து கொள்ளுகின்றார்கள் - அதனால் பலனும் அடைந்து வருகின்றார்கள்.

நிற்க, இதன் கொள்கைகள் என்ன என்று பார்ப்போ மானால், சத்தியம், சகோதரத்தன்மை ஆகியவைகள் முக்கியமானவையாகும்.

அன்றியும் கடவுள்கள், ராம, கிருஷ்ணாதி அவதா ரங்கள் தேவர்கள், மகாத்மாக்கள், தேவாத்மாக்கள், உலகத்தை ரட்சிக்க உலக குரு தோன்றப் போகிறார் என்பது, மகாத் மாக்களுடனும், தேவர்களுடனும் சம்பாஷனை நடத்துவது என்பது, புராணம், இதிகாசம் கீதை ஆகியவைகளில் சிலவற்றை முழுவதும் சிலவற்றை ஒரு அளவுக்கும் ஒப்புக் கொள்வது, முன் ஜென்மம், அதன் நடவடிக்கைகளை அறிவது மற்றும் இது போன்றவைகளில் நம்பிக்கை யுடையவர்களும் இதை நேரில் தினம் அனுபவிக்கின்றவர்கள் என்பவர்கள் இம்மதஸ்தராவார்கள் என்று சொல்லப் படுகின்றது.

ஆனால், காரியத்தில் இவர்கள் நடவடிக்கை எப்படிப்பட்டது என்று பார்க்க வேண்டுமானால், அதை இந்த சங்கத்தில் சேர்ந்து இருக்கும் நபர்களைக்கொண்டு தெரிந்து கொள்ளலாம். இதில் சேர்ந்திருப்பவர்களில் பார்ப்பனர்களே முக்கியமானவர்கள். அதிலும் வருணா சிரமக்காரரும், வேத சாஸ்திர, இதிகாச, புராண முதலி யவைகளில் நம்பிக்கையும் பக்தியும் உடையவர்களாம். அவர்கள் நடவடிக்கைகளைக் கவனிப்போமானால் பேச்சுக்கும் நடவடிக்கைக்கும் சிறிதும் சம்பந்த மற்றவர்கள் என்பதும் மக்களை ஏய்க்க வெளியில் ஒரு கொள்கையும் தங்கள் ஆதிக்கத்துக்கு உள்ளுக்குள் ஒரு கொள்கையும் உடையவர்கள் என்பதும் விளங்காமல் போகாது.

சுமார் இரண்டு வருஷத்திற்கு முன்பாக திருநெல் வேலியில் கூட்டப்பட்ட திருநெல்வேலி ஜில்லா சுயமரி யாதை மகாநாட்டில் கொண்டுவரப்பட்ட எல்லா இந்துக் களுக்கும் கோவில் பிரவேசம் கொடுக்க வேண்டும் என் கின்ற தீர்மானத்தை உரமாய் எதிர்த்தவர் பிரம்ம ஞானசங்கத்தில் அதிக பக்தியும் நம்பிக்கையும் பற்றுதலும் யுடையவரான நண்பர் திருவாளர் நெல்லையப்ப பிள்ளையே ஆவார்கள். அவர்கள் சொன்ன ஆட்சேபம் என்னவென்றால்,

ஆதி திராவிடர்கள் முதலியவர்கள் அசுத்தமுள்ளவர் களானதால் கடவுளின் அருகில் செல்லவோ பூஜை முதலி யவைகள் புரியவோ அருகதை அற்றவர்கள் என்றும், கடவுளின் அருகில் அவர்களைச் செல்லவிடக் கூடாது என்றும் சொன்னார்கள். அதை ஆட்சேபித்து அவ்வூர் பிரபல சைவ மக்களும், சைவ தேசிகர்களும் தக்க காரணம் காட்டி மறுத்தார்கள். முடிவில் ஓட்டு எடுக்கும் போது பிரம்ம ஞான சங்கத்தைச் சேர்ந்த பிரபலஸ்தரான திருவாளர் பென்ஷன் தாசில்தார் நெல் லையப்ப பிள்ளை அவர்கள் ஒருவர் மாத்திரமே எதிரி டையாக கைதூக்கினார். இந்த விஷயத்தில் அச்சங்கத்தின் ஏக தலைவரான ஸ்ரீமதி பெசண்டம்மாள் அவர்களும் அதே அபிப்பிராயத்தையே சொல்லி இருக் கின்றார்கள் அதாவது,

ஆதிதிராவிடர் முதலியவர்கள் பரிசுத்தமற்றவர் களாதலால் அவர்கள் தீண்டப்படாதவர்கள் ஆனார்கள் என்று சொன்னார். அது மாத்திரமல்லாமல் இவர்கள் சமீபத்தில் காசியில் பல்கலைக்கழகத்தில் மாணாக்கர்களின் முன்பு பேசிய காலத்தில் ஜாதிப்பிரிவுகளை அதாவது வருணா சிரமத்தை ஆதரித்து தேச நன்மையை உத்தேசித்து அது அவசியம் என்றும் பேசியிருக்கின்றார்கள்.

ஆகவே வருணாசிரம தர்மமும் தீண்டாமையும் ஆதரிக் கப்பட்ட ஒரு ஸ்தாபனத்தால் நாட்டுக்கு எந்த விதத்தில் சகோதரத் தன்மையும் ஒற்றுமையும் அன்பும் சத்தியமும் உண்டாக்கக் கூடும் என்பதை அறிவாளிகள் யோசித்துப் பார்க்க வேண்டுமாய் விரும்புகின்றோம். மற்றபடி இந்த ஸ்தாபனத்தில் நடை பெறும் மற்ற விஷ யங்களை நாம் இந்த வியாசத்தில் புகுத்து இஷ்டப்பட வில்லை. ஆதலில் அதைப் பற்றி நாம் எழுதவரவில்லை. அரசியல் துறையில் பார்ப்ப னரல்லாதார்களுக்கு இந்த சங்கத்திலுள்ள வருணாசிரம பார்ப்பனர்களின் தொல்லையும் வகுப்பு ஆதிக்கப் பேராசையும் தலைவலியால் பார்ப்பனரல்லா தார்களுக்கு ஏற்படும் கொடுமையும் அளவிடற்பாலதல்ல.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், பிரம்ம ஞான சங்கம் என்பது ஆதிக்கம் என்பது, ஆரிய தர்மப்பிரச்சாரம், வருணாசிரம பரிபாலனம், பிராமண மகா சபை என்பன போன்ற பார்ப்பனாதிக்க பிரசாரச் சபைகளில் ஒன்றே ஒழிய வேறல்ல, அதில் மேல் கண்ட சபைகளாவது வெளிப்படை யாய் நம்முடன் போர் புரிகின்றன என்று ஒருவாறு சொல்லலாம். ஆனால் இந்த பிரம்ம ஞான சங்கம் என்பதோ சூழ்ச்சியின் மூலம் நம்மைக் கழுத்தறுத்து வருகின்றது. ஆதலால் பார்ப்பனரல்லாதார் பிரம்ம ஞான சங்கத்தில் சேருவது தற்கொலைத் தன்மை பொருந்தியது என்றே சொல்லுவோம்.

சமத்துவக் கொள்கையை அழித்துப் பார்ப்பனீயத்தைப் புகுத்த திருஞான சம்பந்தர் என்ற பார்ப்பனர் உதித்து சைவத்தைக் காப்பாற்றிய கதையைப் போலவே நமது பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை அழித்துப் பார்ப்பனீயத்தை பரப்ப பெசண்டம்மை என்னும் லோக மாதா வந்து பிரம்ம ஞான சங்கத்தால் மக்களுக்குப் பிரம்ம ஞானம் புகட்டுகின்றார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சமயம் அந்த ஸ்தாபனத்திற்கு ஏற்பட்டிருக்கிற செல்வாக்கால் தங்களது சுயநலத்திற்கு ஏதாவது வழி செய்து கொள்ளலாம் எனக்கருதி பார்ப்பனரல் லாதாரில் சிலர் அதில் சேருவதானாலும் சுயமரியாதைக் கொள்கையை ஒப்புக் கொள்ளுபவர்கள் அதில் கலந்து கொள்ளுவது சிறிதும் பொருந்தாததாகும். அதில் உள்ளவர்களில் பெரும்பான்மையோர்களின் மனப்பான்மையும் முக்கியஸ்தர்களில் தனித்தனி நபர்களின் மனப்பான்மையும் அறிந்தே நாம் இந்தப்படி எழுதுகிறோம்.

-  விடுதலை நாளேடு, 1.6.18