ஆபாசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆபாசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 மே, 2019

ஆபாசத்தின் மூலம் எது? (வல்லப கணபதி)



இங்கே திறக்கப்பட்ட கண்காட்சியைப் பற்றி நண்பர் வீரமணி குறிப்பிட்டார். "இங்கேயிருக் கிற வல்லப கணபதி படத்தைப் போய் பாருங்கள். இது சிதம்பரத்திலே இல்லையா? அங்கே போய்ப் பார்த்து நாங்கள் சொல்வது சரியா இல்லையா என்று சொல்லுங்கள் என்று வீரமணி கேட்டார். நீங்கள் சிதம்பரத்தில் போய்ப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும் என்று சொன்னார். அங்கே இதே படம் சிலை வடிவத்திலே இருக்கிறது. ஆனால் அங்கேயிருக்கிற குருக்கள்மார்கள் துணியைப் போட்டு எந்த இடத்தை மறைக்கவேண்டுமோ, அதை மறைத்து வைத்திருக்கிறார்கள். ஆகவே நீங்கள் போய் பார்த்தால்கூட தெரியாது, திருவாரூர் கோயிலிலே சூடகமலாம்பிகை சன்னிதானத்தில் உத்திஷ்ட கணபதியைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. வல்லப கணபதி போலத் தான் - உத்திஷ்ட கணபதியும். ஆனால் இவைகளுக்கெல்லாம் கதைகள் உண்டு, என்ன கதை?

ஆபாச விநாயகன் கதை


சூரபத்மனுக்கும் சுப்பிரமணியனுக்கும் சண்டை நடந்தது. சூரபத்மனுடைய அக்ரோணிக் கணக்கான சைன்யங்களை சுப்பிரமணியரால் தோற்கடிக்க முடிய வில்லை. காரணம் ஒரு அசுரன் செத்தால் இன்னொரு அசுரன் பிறந்து கொண்டே இருக்கிறான். சூரனுடைய தாயார் வல்லபை அவளுடைய வயிற்றுக்குள்ளேயிருந்து, பிள்ளைகள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். அப்படி வருகின்ற பிள்ளைகளை கொன்று குவிக்க முடியாமல் சுப்பிரமணியர் மயங்குகிறார், தவிக்கிறார், திணறுகிறார். கடைசியாக முடியாத காரணத்தால் தன்னுடைய அண்ணனை "விநாயகா என்னை வந்து காப்பாற்று" என்று அழைக்கிறார். உடனே விநாயகர் யானை முகத்துடன் ஓடோடி வந்து வல்லபையைத் தூக்கி மடியிலே உட்கார வைத்துக்கொண்டு அந்தப் பிள் ளைகள் வெளியே வர முடியாமல் தடுத்து விடுகிறார். அவ்வளவு தான் கதையை நான் சூசகமாகச் சொல்லமுடியும்.

இதை ஒரு கதை ஆக்கிப்படிக்க வேண்டுமா? ஆலயத்தில் சிலையாகவடிக்கவேண்டுமா?'' என்று நான். படித்த பிராமண வாலிபர்களைக் கேட்கிறேன். ஆஸ்தீ கர்களைக் கேட்கிறேன். ஆண்டவன் ஒன்று என்று நம்புங்கள். நான் வேண்டாமென்று சொல்லவில்லை. திருமந்திரம் எழுதிய திருமூலர் கூடச் சொன்னார் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று. இதிலே எங்களுக்கும் திராவிடர் கழக நண்பர்களுக்கும் கூடவேறுபாடு இருக்கலாம். அது வேறு விவகாரம் - ஆனால் கடவுளின் பெயரால் மக்களை இன்றைக்கு திராவிடர் கழகத்தார் கண்காட்சி நடத்தி புண்படுத்து கிறார்கள் என்று யாராவது சொல்வார்களேயானால் இன்றைக்கு அவைகளை சிலைகளாக, ஓவியங்களாக கோயில்களிலேயே வைத்து மக்கள் பார்க்கின்ற கண்காட்சிகளாக ஆக்கியிருக்கிறீர்கள். ஆண்டவன் சாபம் கொடுப்பதாக இருந்தால் முதலில் உங்களுக்கு சாபம் கொடுத்துவிட்டு அல்லவா, பிறகு திராவிடர் கழகத்தாருக்குச் சாபம் கொடுக்க வேண்டும். அந்த அளவுக்கு அல்லவா, ஆண்டவர்களை ஆபாசப்படுத்தி வைத்திருக்கிறோம். இந்த மதத்திலே அவ்வளவு பெரிய கொடுமை செய்ய என்ன காரணம்? ஏன் இவ்வளவு ஆயிரக் கணக்கான கடவுள்கள்? இவ்வளவு கடவுள்களை வைத்துக் கொண்டு இந்தச் சமுதாயம் பெற்ற பயன் என்ன? முரண்பாடு இல்லாத எந்தக் கதையாவது எந்த வழிமுறையாவது எந்த மார்க்கமாவது இருக்கிறதா?

-  கலைஞர்

- விடுதலை: 15.10.1974, பக்கம் 3

- விடுதலை ஞாயிறு மலர் 25. 5. 2019

திங்கள், 9 ஏப்ரல், 2018

பங்குனி உத்திரம் என்ற பசப்பு பக்தியின் ஆபாசத்துக்கு எடுத்துக்காட்டு

பங்குனி உத்திரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக் குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. மாதங்களில் 12ஆம் மாதமாகிய பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர நாளாகும். நட்சத்திரங்களில் 12ஆம் நட்சத்திரம் உத்தரம். முருகன் கோயில்களில் இந்நாளில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறுகின்றது.

மீனாட்சி கல்யாணம்

சிவனுக்கும் பார்வதிக்கும் சோம சுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் கூறி, திருமணம் செய்வித்த நாள் பங்குனி உத்தரநாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களின் ஆறுதலுக்காக சிவன் பார்வதியை  மணந்தானாம்.

இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துகள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர் வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப் பார்களாம்.

பங்குனி உத்திரக் கல்யாணத் திருவிழா அன்றைய நாளில் சைவர்கள் விரதமிருப்பர். பகற் பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் இருப்பார்களாம். இத னைக் கல்யாணசுந்தர விரதம் என்கிறார்களாம்..

பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தான். ராமன், சீதையை கரம் பிடித்தான். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தான். அரங்கநாதன் ஆண்டாள் முதலிய கடவுளர்களின் திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று நடைபெற்றனவாம். இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் கூறப்படுகிறதாம்.

இளைஞர்களும், கன்னிகளும் இத்தினத்தில் சிவனையும், முருக னையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது.

அசுரர்களை முருகன் அழித்த நாளாம்

பங்குனி மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தானாம். அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. அதற்கு காரணம் இந்த மலையாகவுள்ள கிரவுஞ்சன் ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருந்ததாம். மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சியில், தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வந்தா னாம்.

அதனால், முருகன், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்து கொண்டுபோய், தாரகா சுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட,  இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். கடும் போர் நடந்தது. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர். போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப் படையின் வீரரான, வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான். இதை கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரி சூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண் டும் மூர்க்கத் தனமாக தாக்கினான். எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனை தொடர்ந்த மற்ற வீரர் களும் விடாது மலைக்குள் நுழைய, மலையின் உதவியோடு தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகனின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன. இதை நாரதன்மூலம் அறிந்த முருகன், நேர டியாக போர்க்களத்திற்கு  சென்று  கடுமையாக தாக்கினானாம்.

தாக்குதலை சமாளிக்க முடி யாமல் தாரகாசுரன் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந் தான். முருகன், தன் வேலாயுதத்தை கையில் எடுத்து வீசி எறிய, துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனை கொன்றதாம். அதன் பிறகு முருகன், தெய்வானையை மணந்தானாம். அந்த நாளே பங்குனி உத்திரமாம்.

இப்படி சற்றும் அறிவுக்கு பொருந்தாத கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு காலங்காலமாக பக்தியின் பெயரால் மக்களை அறி வுக்குருடர்களாக ஆக்கியதுடன், சிறுபிள்ளை விளையாட்டாக திருவிழாக்களை நடத்தச் செய்து, ஏமாந்த மக்களை வஞ்சித்து வருகின்ற பார்ப்பனக்கூட்டத்தின் வஞ்சகத்தைப்புரிந்து கொண்டு விழிப்பை பெறுவது எப்போது? சர்வ சக்தியுள்ளவன் கடவுள் என்றால், அவனுக்கு வேல் எதற்கு? சூலாயுதம்தான் எதற்கு?

எல்லாம் அவன் செயல் என் றால், அசுரர்களின் செயல் யார் செயல்?

அசுரர், தேவருக்குள் பிரச்சினை என்றால், தேவர்களை மட்டும் காக்க வேண்டிய அவசியம்தான் என்ன? கடவுளுக்கு எதற்கு ஆண்டு தோறும் திருமணங்கள்? வைபவங்கள்? விழாக்கள்? அதனால் விளையும் நன்மைதான் என்ன? நேரமும், பொருளும், உழைப்பும் பாழாவதைத் தவிர வேறு ஏதேனும் உண்டா? பக்தர்கள் சிந்தித்தால், பார்ப்பனர்களின் சூழ்ச்சி வலைகளிலிருந்து விடுதலை பெற்றிடலாமே!

- விடுதலை நாளேடு, 27.3.18