வியாழன், 23 ஜனவரி, 2020

உடம்பெல்லாம் பெண்குறி ஆகியவன்.


உடம்பெல்லாம் பெண் குறியாக இந்திரன் என்ன செய்தான்? புராணம் கூறுவதைப் படியுங்கள்.

அரம்பையர்கோன் (எ) இந்திரன்

இந்திரன் - எல்லோருக்கும் தெரிந்த பெயர். அவன் தேவர்களின் தலைவன். அவனுக்கு அரம்பையர் கோன் என்றொரு பெயரும் உண்டு. காரணம் என்ன என்பதை அறிந்து கொள்வோமா?
அரம்பையர் உலகம் என்பது 60 ஆயிரம் அப்சரசுகள் (தேவமாதர்கள்) உள்ள ஓர் உலகம். அதில் பாற்கடலில் பிறந்த அலம்புஷை முதற்கொண்டு ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, கிருதாசி முதலிய அப்சரசுகள் நிறைந்துள்ளனர்.

இவர்கள் இளமை நீங்காது வேண்டிய உருவெடுப்பர். இங்கு இருமனப் பெண்டிரும், விரதம் தவறிய பெண்களும் சென்றடைவர். (அப்சரசு = தேவருலகத்திலுள்ள வேசிகள். பக்கம் 95. அபிதான சிந்தாமணி).

இவர்களுக்குத் தலைவன் இந்திரன். அதனால்தான் இந்திரனுக்கு “அரம்பையர் கோன்” என்று பெயர் வந்தது. அதாவது இந்திரன் தேவருலகத்திலுள்ள “வேசிகளின் அரசன்” என்று பொருளாகும். அவர்களை அவன் வேலை வாங்குவது எப்படி என்கிறீர்களா?

உலகத்தில் ‘பெருந்தவம்’ செய்வோர் இந்திர பதவியை அடைவர். பதவியில் இருக்கும் இந்திரன் தன் பதவியைக் காத்துக் கொள்ள இந்தத் “தேவருலக தாசிகளை” அனுப்பி பெருந்தவம் செய்வோர் தவத்தைக் கெடுப்பான். அதே முறையில் தான் மேனகை விசுவாமித்திரனின் தவத்தைக் கெடுத்தாள்.

இவனும் விஷ்ணுவைப் போலவே பரிஷதன் என்னும் அசுரன் மனைவி மீது ஆசை கொண்டு, எவ்வளவோ முயற்சித்தும் ஆசை நிறைவேற வசதியில்லாமல் போகவே, பரிஷதன் அசுவ மேத யாகம்

 செய்கையில் யாக முறைப்படி யாகத்தில் குதிரையைக் கொன்ற போது, அந்தக் குதிரையின் உடலுக்குள் புகுந்து, குதிரையின் ஆண் குறியை யாக கர்த்தாவின் மனைவியான விபுஷ்டையின் பெண் குறியில் வைக்கும் சமயம் பார்த்து இந்திரன் குதிரையின் ஆண் குறியாக ஆகித் தனது எண்ணத்தை முடித்துக் கொண்டான் என்று புராணத்தில் இருக்கிறது.” 
---மு.நீ.சிவராசன். : “உண்மை இதழ்” 14.1.1970.

கௌதம முனிவர் மனைவி அகலிகை. சிறந்த அழகி. கற்புக்கரசி.

தேவலோகம் சென்ற நாரதர் இந்திரனிடம் அகலிகை என்னும் அழகியைப் பற்றி வருணித்தார். இதனால் மதி மயங்கிய இந்திரன் அவளை அடைய ஒரு சூழ்ச்சி செய்தான்.

முனிவர்கள் விடியற்காலையில் ஆற்றுக்குச் சென்று நீராடி ஜபதபங்கள் செய்வது வழக்கம். இதை அறிந்திருந்த இந்திரன் அந்த நேரத்தில் அகலிகையை அடைய எண்ணினான்.

கவுதமர் ஆசிரமத்தை அடைந்த இந்திரன் நடு ஜாமத்தில் சேவலைப் போலக் கூவி கவுதமரை ஏமாறச் செய்தான்.

அது அதிகாலை என்று எண்ணிய கவுதமர் ஜபதபங்களை முடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் ஆற்றுக்கு நீராடச் சென்றார்.

அவ்வமயம் இந்திரன், கவுதமர் வடிவில் ஆசிரமத்தில் நுழைந்தான். தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்த அகலிகை கவுதமர் திரும்பி வந்து விட்டதாக எண்ணினாள். அப்போது கவுதமர் வடிவில் இருந்த இந்திரன், ``இன்னும் விடியவில்லை. ஏதோ பறவையின் ஒலியைச் சேவல் கூவியதாக எண்ணினேன்’ என்று கூறி அவளை அருகில் வருமாறு அழைத்தான்.

அருகில் கட்டிலில் அமர்ந்த அகலிகையுடன் சேர்ந்து இன்பம் துய்த்தான்.

இந்நிலையில் ஆற்றங்கரை சென்ற கவுதமர் ஏதோ தவறு நேர்ந்து விட்டிருப்பதாகக் குழப்பத்துடன் ஆசிரமத்துக்குத் திரும்பி வந்து கதவைத் தட்டினார். அக்குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அகலிகை திகைப்படைந்து நடுக்குற்றாள். ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தாள்.

இந்திரன் சுயஉருவில் தோன்றி அவள் காலில் விழுந்து கும்பிட்டான். தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினான். கதவைத் திறந்த அகலிகை தலைவிரிகோலமாக முனிவர் காலில் விழுந்து வணங்கி தன் புனிதத் தன்மையை இந்திரனால் இழந்ததாகக் கூறித் தன்னை மன்னிக்குமாறு பிரார்த்தித்தாள்.

ஞானதிருஷ்டியால் நிகழ்ந்தது அனைத்தையும் அறிந்த கவுதமர், பூனை உருவில் தப்பிக்க முயன்ற இந்திரனைக் கோபமாக அழைத்தார். அவர் கோபத்துக்கு அஞ்சிய இந்திரன் சுயஉருவில் தலை குனிந்து நின்றான்.

எனினும் கோபம் அடங்காத முனிவர் அவன் 'உடம்பெல்லாம் பெண் குறியாகட்டும்’ என்றும் `வெளியில் தலைகாட்ட முடியாமல் அவதிப்படு’ என்றும் சபித்தார்.

அகலிகையை நோக்கிக் கணவனுக்கும், அயலானுக்கும் வேறுபாடு அறியாத அவள் உடம்பு கல்லாகுமாறு சபித்தார் முனிவர். அகலிகை தெரியாமல் செய்த பாவத்துக்கு விமோசனம் அளிக்குமாறு வேண்டினாள்.

அப்போது முனிவர் `சிறீமந் நாராயணன் ராமனாக அவதரித்து விசுவாமித்திரருடைய யாகத்தை நிறைவேற்ற கானகத்துக்கு வருவார். அந்த ராமர் பாதம் பட்டு சாபம் நீங்கி சுய உருவைப் பெறுவாய்’’ என்று கூறிவிட்டு வெளியேறினார் முனிவர்.

சாபத்தின் காரணமாக இந்திரன் மறைந்து வாழ வேண்டிய அவல நிலை உண்டாயிற்று. இந்திரனுக்காகத் தேவர்கள் கவுதம முனிவரிடம் சென்று மன்னிப்புக் கோரினர். முனிவர் `இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானுடைய ஷடாட்சர மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிக்கட்டும்’’ என்று கூறினார்.

இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானின் ஷடாட்சர மந்திர உபதேசம் பெற்று ஜபித்து அவர் அருளால் அவன் உடலில் இருந்து பெண்குறிகள் கண்களாக மாறிக் காட்சி அளித்தன. எனவே அவனுக்கு ஆயிரம் கண்ணுடையான் என்ற பெயர் ஏற்பட்டது.-
-  நூல்: இந்து மதம் எங்கே போகிறது
- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
 “விடுதலை” 19.05.2007