வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

கடவுளும் மதமும்



11.08.1929 - குடிஅரசிலிருந்து...

மனிதன் உலகத் தோற்றத்திற்கும் நடப்பிற்கும் சம்பவங் களுக்கும் காரணம் கண்டு பிடிக்க முடியாத நிலையில் கடவுள் சக்தி என்றும், கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்ளுவதும், உதாரணமாக அவற்றிற்குக் காரண காரியம் தோன்றிய பின்பு அந்நினைப்புக் கொஞ்சம் கொஞ்சமாக மாறி விடுவதும் சகஜம் என்பதாகக் குறிப்பிட்டு இருந்தோம். இந்த முறையிலேயே கொஞ்ச காலத்திற்கு முன் அநேக விஷயங்கள் கடவுள் செயல் என்று எண்ணியிருந்த மக்கள் விஞ்ஞான (சையன்ஸ்) ஆராய்ச்சி ஏற்பட்ட பிறகு அவ்வெண்ணத்தை மாற்றிக் கொண்டு அநேக விஷயங்களை மனிதன் செயல் என்று சொல்ல தைரியம் கொண்டுவிட்டார்கள். உதாரணமாக, கம்பியில்லாத் தந்தி விஷயத்தை எடுத்துக் கொள்ளுவோம்.

கம்பியிமில்லாத் தந்தி ஏற்படுத்தி இருக்கும் விஷயமும், அது எப்படிச் செய்யப்படுவது என்கின்ற சையன்ஸ் உணர்ச்சியும் நமக்குத் தெரியாமல் இருக்குமானால் நாம் இன்னமும் அதை ஒரு தெய்வீக சக்தி என்றும் பழைய காலத்து ரிஷிகள் பேசிக் கொண்டிருந்ததாய் சொல்லப்படும் ஞானதிருஷ்டி சம்பாஷனை என்றுமே சொல்லித் தீருவோம்.

ஆதலால் மக்களுக்கு அறிவும் ஆராய்ச்சியும் வளர வளர கடவுள் உணர்ச்சியின் அளவு குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம். அதுபோலவே அறிவும் ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக் கொண்டாக வேண்டும். இப்போதும் பகுத்தறிவு குறைந்த மக்களிடமே தான் அநேகமாக தொட்டதற்கெல்லாம் கடவுளும், அவர்தம் செயல்களும் தாண்டவமாடுவதைப் பார்க்கின்றோம். அவர்கள் மேலேயே கடவுள் வருவதைக்கூடப் பார்க்கின்றோம். காட்டுமிராண்டிப் பக்குவமுடையவர் களிடமே அநேகமாக கடவுளைப் பற்றிய கதைகள் என்பவைகளும், புராணங்கள் என்பவைகளும் மதிப்புப் பெற்று இருப்பதையும் பார்க்கின்றோம்.

கொஞ்ச காலத்திற்கு முன் அக்கதைகளை அப்படியே அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக் கொண்டி ருந்தவர்கள்கூட இப்போது அப்படியே நம்புவதற்கு வெட்கப் பட்டுக்கொண்டு தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத் தன்மையை மறைத்துக் கொண்டு சையன்சின் மூலம் அக் கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டு கஷ்டப்படுகின்றார்கள்.

இதிலிருந்து என்ன ஏற்படுகின்றதென்றால், மக்கள் வரவர இப்போது சையன்ஸ்க்குப் பொருத்த மில்லாததை ஏற்க மறுக்கக்கூடிய நிலைமைக்கு வந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது விளங்குகின்றது. மழையை வரச் செய் வதும், செத்தவனை மறுபடியும் பிழைக்கச் செய்வதும், பேச்சுகளையும் நாட்டியங் களையும் யந்திரங்களில் பிடித்துக் காட்டுவதும் போன்ற காரியங்கள் மனிதனால் செய்யக்கூடும் என்கின்ற நிலை ஏற்பட்ட பிறகு மிக்க பாமரஜனங்களுக்குகூட இவையெல்லாம் கடவுள் செயல் என்கின்ற குருட்டு நம்பிக்கை மறைந்து வருவதில் ஆச்சரியமொன்று மில்லை.

எனவே ஒரு காலத்தில் அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சிக் கவலையும் இல்லாதபோது ஏற்பட்ட கடவுள் சம்பந்தமான எண்ணங்கள் இனியும் இருந்துதான் தீர வேண்டுமா என்றால், எப்படியும் அது ஒரு அளவுக்காவது இருந்துதான் தீரும் என்றே சொல்லுவோம்.

ஏனெனில், மனிதன்தான் எல்லாம் அறிந்தவன் என்கின்ற ஆணவத்தை உடையவனாதலால் தன் புத்திக்கு எட்டாததைத் தனக்குத் தெரியவில்லை என்று கண்ணியமாய் ஒப்புக் கொள்ள சுலபத்தில் சம்மதிக்க இஷ்டபட மாட்டானாகையால், அங்கு அதாவது தனக்கு அறிவு கட்டையாய்ப் போனபோது அவனுக்குக் கடவுள் நம்பிக்கையும் கடவுள் செயலும் வந்துதான் தீரும். இதை மாற்றுவது சுலபமான காரியமல்ல.

பூரண அறிவு வளர்ச்சி பெற்றால்தான் முடியும். அன்றியும் சிலர் உண்மை அறிந்திருந் தாலும் சுயநலமோ, மூடப்பிடிவாதமோ காரணமாகத் தங்களுக்கே புரியாதவற்றைப் பேசி பாமர மக்களை மயக்கிக் கொண்டு இருப்பார்கள்.

ஏனெனில் மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பதாலேயே அவர்கள் பிழைக்கக் கூடியவர்களாக இருப்பதால்தான், எது எப்படி இருந்த போதிலும் உலகத்தில் கடவுள் சம்பந்தமான குருட்டு நம்பிக்கைக்கு இருந்த மதிப்பு குறைந்துவிட்டதால் கடவுள் உணர்ச்சியும் எப்படியும் மக்களுக்கு வரவர குறைந்துகொண்டு தான் போகும் என்பதில் சந்தேக மில்லை.

அதற்காக வருத்தப்படுவதிலோ, யார் மீதாவது குற்றம் சொல்லுவதிலோ, பயனில்லை, ஆனால், அவ்வித குருட்டு நம்பிக்கையும் மூடப்பிடிவாதமும் ஒழிந்த காலத்தில் தான் உலகத்தில் ஒழுக்கமும் சமத்துவமும் நிலைபெறும் என்பது மாத்திரம் உறுதி. 

-விடுதலை,24.2.17

சிவராத்திரி

20-10-1929- குடிஅரசிலிருந்து...

மாசி மாதம் வந்தால் சிவராத்திரி என்று கண்டபடி கிழங்கு வகைகளையும் தானியவகை களையும் பலகார வகைகளையும் ஒரே நாளில் செய்து அளவுக்கு மேல் தின்று குழந்தைகளையும் தின்னச் செய்து அஜீரணத் தையும் வயிற்று வலியையும் உண்டாக்கிக் கொள்வதோடு இதனால் ஏற்படும் செலவு எவ்வளவு என்பதை யாராவது யோசித்துப் பார்க்கின்றார்களா? என்று கேட்கின்றோம். இப்படியே ஒவ்வொரு மாதமும் உற்சவமும், பண்டிகை களும், விரதங்களும், சடங்குகளும் ஏற்பட்டு மொத்தத் தில் வருஷத்தில் எவ்வளவு கோடி ரூபாய்கள் செலவு, எவ்வளவு வியாதிகள் வரவு, எவ்வளவு உயிர்கள் போக்கு என்பவைகளை யார் கவனிக்கின்றார்கள்? இந்தப் பணம் எல்லாம் தேசிய பணமல்லவா? ஏழைத் தேசம், தரித்திர தேசம், அடிக்கடி பஞ்சம் வரும் தேசம், வேலையில்லாமல் தொழிலில்லாமல் கூலிக்காரர்கள் கும்பல் கும்பலாய் பட்டினி கிடந்து மடிவதுடன் பெண்டுபிள்ளை குழந்தை களுடன் வெளிநாட்டிற்குக் கூலியாக கப்பலேறும் தேசம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற நாம் எத்தனை நாட்களை, எத்தனை ரூபாய்களை எத்தனை ஊக்கங் களை இந்த பாழும் அர்த்தமற்ற பொய்யான ஒரு காசுக் கும் உதவாததான நமக்கு இழிவையும் அவமானத் தையும் தருவதான பண்டிகைக்கும் உற்சவத்திற்கும் பூஜைக்கும் சடங்குக்குமாக ஒவ்வொரு வரும் செலவு செய்கின்றோம் என்பதை கவனித்தால் இந்த நாடு பணமில்லாத நாடா அல்லது புத்திஇல்லாத நாடா என்பது நன்றாய் விளங்கும்.
இது யார் சூழ்ச்சி?

எனவே, இப்படிக்கெல்லாம் சொல்வதைப்பார்த்தால் இந்த பண்டிகை களையும் உற்சவம் முதலியவைகளையும் ஏற்படுத்தியவர்கள் எல்லோரும் அறிவில்லாதவர்களா என்கின்ற கேள்வி பிறக்கலாம். நான் அவர்களை அறிவில்லாதவர் என்று சொல்ல இஷ்டப்படமாட்டேன். மற்ற படியோ, என்றால் பெரும்பாலும் அவர்களைச் சுயநலக் காரர்களும், தந்திரக்காரர்களும் அதிகார ஆசை உடைய வர்களுமாயிருக்க வேண்டுமென்றே சொல்வேன்.  என்புத்திக்குட்பட்ட வரையில் இந்த பண்டிகை உற்சவம் முதலியவைகள் எல்லாம் புரோகிதர்களான பார்ப்பனர் களும் ஆட்சிக்காரர்களான அரசர்களும் கலந்து கண்டு பிடித்து செய்த தந்திரமென்பதே எனது அபிப்பிராயம். உலகத்தில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அறியாமைக்கும் கொடுமைக்கும் புரோகிதர்களும் அரசர்களுமே சேர்ந்து கூட்டுப் பொறுப்பாளர் களா வார்கள். சாதாரணமாக உலக சரித்திரத்தில் கொடுமைக் காரர்களும் சூழ்ச்சிகாரர்களாய் இருந்தவர்களே புரோகிதர்கள் என்கின்ற உயர்ந்த ஜாதிக்காரர்களாகவும் கொள்ளைக் காரர்களும் மூர்க்கர் களுமாயிருந்தவர்களே அரசர்களாகவும் ஏற்பட்டு இருக்கிறார்கள். இவ்விருவரும் ஜனங்களை ஏய்த்து ஆதிக்கம் செலுத்த வகை கண்டு பிடிக்கவேண்டிய அவசியமுடையவர்கள்.

அந்தப்படி மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வாழ வேண்டுமானால் அந்த மக்களை அறிவினாலும் செல்வத்தினாலும் தாழ்மைப்படுத்தி வைத்திருந்தால் தான் முடியும். ஒரு மனிதன் அறிவுடையவனா யிருப் பானானால் புரோகிதர்களுக்கு ஏமாற மாட்டான். செல்வ மிருக்குமானால் அரசனுக்குப் பயப்படமாட்டான். ஆகையால் அறிவும் செல்வமும் இல்லாமல் செய் வதற்கே கோயில் உற்சவம் பண்டிகை சடங்கு ஆகிய தான செலவுக்கு ஏற்றவழிகளை ஏற்படுத்தி இருக் கிறார்கள். மக்கள் சம்பாதிக்கும் பணங்களில் கணக்குப் பார்த்தால் பெரும்பாகமும் இவைகளுக்கே செலவு செய்யும்படியாகவும் மற்றும் மேல் கொண்டு மீதி ஆவதெல்லாம் இவர்கள் சமுகத்திற்கே பயன்படும் படியாகவும் மற்றும் மேற்கொண்டு ஒவ்வொரு குடும் பமும் அதாவது நூற்றுக்குத் தொண்ணூறு குடும்பங்கள் இவைகளின் பயனாய் கடன்காரர்களாக இருக்கவுமே இருந்து வரப்படுகின்றது. எனவே, நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும் செல்வமுள்ள நாடாகவும், சுயமரியாதை உள்ள நாடாகவும் இருக்க வேண்டுமானால் முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில் பூஜை ஆகியவைகள் ஒழிந்தாக வேண்டும்.

இவைகளை வைத்துக் கொண்டு மலைகளை எல்லாம் தங்கமும் வைரமுமாக ஆக்கினாலும் சமுத் திரங்களை யெல்லாம் பாலும் நெய்யும் தேனுமாக ஆக்கினாலும் மேல்கண்ட உற்சவம், சடங்கு, கோவில் பூஜை, பண்டிகை ஆகியவைகளே சாப்பிட்டு விடும்.

ஆதலால் இனி மேலாவது இம்மாதிரியான காரியங் களுக்கு அடிமையாகி வீண் செலவு செய்யக் கூடாது என்பதே எனது ஆசை. 

கம்பராமாயணக் கதை வெறும் பொய்க் களஞ்சியமேயாகும். அதன் கற்பனையை எடுத்துக் கொண்டால் அது ஒரு சிற்றின்பச் சாகரம். ஒரு மாதிரி காமத்துப்பால் ஆகும். நடப்பை எடுத்துக் கொண்டால் காட்டுமிராண்டித் தனத்தின் உருவகமே அது.

- தந்தை பெரியார்

-விடுதலை,24.2.17

வியாழன், 23 பிப்ரவரி, 2017

சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்கும் முறை பாகிஸ்தான் இஸ்லாமிய நீதிமன்றம் அங்கீகாரம்

இஸ்லாமாபாத், பிப்.23 சோத னைக் குழாய்கள் மூலம் கருத்த ரிக்கும் முறைக்கு பாகிஸ்தானின் இஸ்லாமிய நீதிமன்றம் சட்டப் பூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதையடுத்து, அங்கு மருத் துவக் குறைபாடுகள் காரணமாக கருத்தரிக்க முடியாமல் தவித்து வரும் ஏராளமான தம்பதியருக்கு செயற்கைக் கருத்தரிப்பு முறை யில் குழந்தை பாக்கியம் கிடைப் பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானின் ஷரியா நீதிமன்றம் செவ்வாய்க் கிழமை தெரிவித்ததாவது:

கணவரின் விந்தணுவும், மனைவியின் அண்ட அணுவும் மருத்துவமுறையில் பிணைக்கப் பட்டு கரு உருவாக்கப்பட்டு, அந்தக் கரு மீண்டும் அந்த மனைவியின் கருப்பைக்குள் வைக்கப்பட்டால் அது சட்டத் துக்கு உள்பட்டதே ஆகும்.

அந்த மருத்துவமுறையை குரானின் போதனைகளுக்கு எதிரானதாகக் கருத முடியாது

சோதனைக் குழாயில் உரு வாக்கப்படும் கரு, முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ள கணவன் - மனைவியின் உயிரணுக் களால் உருவாக்கப்பட்டால் மட் டுமே, அந்த முறைக்கு சட்டப் பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும்.

பரிந்துரைக்கப்பட்ட மருத் துவ முறைகளைக் கொண்டு கணவரும், மனைவியும் செயற் கைக் கருத்தரிப்பு முறையைக் கையாண்டால், பிறக்கும் குழந்தை அவர்களது சட்டப் பூர்வமான குழந்தை என்ற அங்கீகாரத்தைப் பெறும் என்று அந்த நீதிமன்றம் தெரிவித்தது.
-விடுதலை, 23.2.17

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

பவுத்த திருப்பதிகள் இந்துக் கோவில்களான சூழ்ச்சி!


காஞ்சீபுரத்தில் கச்சீஸ்வரர் கோவிலென்று வழங்கும் ஆலயம் பூர்வத்தில் புத்தர் கோவில் எனத் தெரிகிறது. இக்கோவிலின் முன் கோபுரத்தின் அஸ்திவாரக் கல் கட்டடத்தில் சில புத்த விக்கிரகங்கள் இப்போதும் இருக்கின்றன. இன்னும் சில, முன்பு இருந்த உருவம் தெரியா மலிருக்குமாறு அழிக்கப்பட்டிருக் கின்றன.
கோவில் உள்மண்டபத் திலும்` சில கல்தூண்களில் புத்த விக்கிரகங்கள் இப்போதுமிருக்கின்றன. இது புத்தர் கோவில் என்பதற்கு மற் றொரு ஆதாரமிருக்கிறது. அஃதாவது: இக்கோவில் மேல்புறம் வீதிக் கடைசியிலிருந்து வரும் ஏரிக்கு புத்தேரி என்றும், வீதிக்கு புத்தேரித்தெரு என்றும் பெயர்கள் ஏற்பட்டு இப்போதும் வழங்கி வருகின்றன.
கச்சீஸ்வரர் கோவிலுக்கு நான் சென்று பார்த்த போது, தூண்களில் மட்டும் புத்தர் உருவங்களைக் கண் டேன், கோபுர அஸ்திவாரத்தில் இருந்த புத்த விக்கிரகங்கள் காணப்படவில்லை. புத்தேரித்தெரு என்று இப்போது வழங்கப்படுகிற தெரு முற்காலத்தில் புத்தர் தெரு என்று வழங்கப்பட்டு அவ்வாறே விக்கிரயபத்திரங்களிலும் எழுதப்பட்டு வந்தன.  புத்தேரித் தெருவின் மேற்குக் கோடியில் உள்ள கயிலாசநாதர் கோவில் என்னும் இராஜ சிம்மேச்சுரம் ஆதியில் புத்தர் கோவி லாக இருக்க வேண்டும் என்பதற்கு அக் கோவிலின் புராண ஆதாரங்களால் யூகிக்கப்படுகிறது.
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் வெளிமதில் சுவரில் சில புத்த விக்கிரகங்கள் பலகைச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜயநகர அரசனான கிருஷ்ணதேவராயரால் 1509இல் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோவில்களை இடித்து அக்கற்களைக் கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும். அதனால்தான் இப்புத்த விக்கிரகங்கள் இச்சுவரில் காணப் படுகின்றன.
காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் ஒரு புத்த விக்கிரகம் இருக்கிறது. இது பூமியைத் தோண்டியபோது கிடைத்தது. புத்தர் பரிநிர்வாணம் அடையும் நிலை யில் உள்ளதுபோன்ற கற்சிலையொன்று ஏகாம்பர ஈசுவரர் கோவில் மதிற்சுவ ரின் கீழே வைத்துக் கட்டப்பட்டி ருக்கிறது.
காஞ்சீபுரத்தில், கச்சிக்கு நாயகர் கோவில் என்னும் புத்தர் கோவில் இருந்தது. அதற்கு மானியமாக செங் கற்பட்டு ஜில்லாவில் உள்ள நாவலூர் கிராமம் விடப்பட்டிருந்தது. இந்தக் கோவில் இப்போது காணப்படவில்லை. காஞ்சி, கருக்கினில் அமர்ந்தாள் கோவில் என்னும் கோவிலில் இரண்டு புத்தர் சிலைகள் உள்ளன; அவை, முன்பு காஞ்சி மேட்டுத் தெருவில் இருந்தனவாம்.
காமாட்சியம்மன் கோவில் ஆதியில் பவுத்தரின் தாராதேவி ஆலயம். இவ்வாலயத்தில் பல புத்தவிக்கிரகங்கள் இருந்தன. அவைகளில், 6 அடி உயரம் உள்ள நின்ற வண்ணமாக அமைக்கப்பட்ட சாஸ்தா (இது புத்தர் உருவம்) என்னும் உருவம் இப்போது சென்னைப் பொருட்காட்சி சாலையில் இருக்கிறது. காமாட்சி அம்மன் குளக்கரையில் இருந்த புத்தர் சிலைகள் இப்போது காணப்படவில்லை. இக்கோவிலில் இருந்த வேறு புத்தவிக்கிரகங்கள் (கருங்கல் சிலைகள்) சில ஆண்டு களுக்குமுன் நன்னிலையில் இருந்ததைக் கண்டேன். ஆனால் அவை பிறகு துண்டு துண்டாக உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டேன். இப்போது அவை இருந்தவிடமே தெரியவில்லை.
காமாட்சி யம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் புத்தவிக் கிரகம் ஒன்று இப்போதும் நன்னி லையில் இருக்கிறது. இத்தோட்டத்தில் உள்ள மண்டபத்தைக் காட்டியபோது, அதன் அடியில் சில புத்த விக்கிரகங் களைப் புதைத்து இருக்கிறார்களாம்.


(நூல்: பவுத்தமும் தமிழும் மயிலை சீனிவேங்கடசாமி பக்கம் 53,54,55)
-விடுதலை ஞா.ம.,6.9.14

நூல் - சிகை - யறுத்தல் - நன்றே! திருமந்திர விளக்கம்


குடுமி வைத்துப் பூணூல் மாட்டிக் கொண்டதனால் மட்டும் ஒருவன் பிரா மணனாகான்.
நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ? நூலது வேதாந்தம்:
நுண்சிகை ஞானமாம்
குடுமி, மயிர்; பூணூல், பருத்தி மயிரும் பருத்தியுமே இறையறிவிற்கு இலக்கண மாகுமா? ஆகா ஒழுக்கமில்லா வேடம் போலித்தனமாகும். வாழும் வேதாந்தத்தால் அவாவறுத்தலே பூணூலாகும். கடவுள றிவே சிகையாகும். நெஞ்சில் மடமையிருள் குடி கொண்டு சிகை வைத்துப் பூணூலும் போட்டு நான் பிராமணன் என்று பொய்வேடம் பூணுவோரால் நாடு கெடும், புவிவளம் குறையும். பெரு வாழ்வும், அரசும் பெருமையிழக்கும். ஆதலால் அந்த ஆடம்பரப் போலிகளின் பூணூலை யும், சிகையையும் அரசன் அறுத்தெறிதல் நன்றாகும்; ஞான நூல் பூண்டு அந்தண் ஞானிகள் எனவும் நடித்து உலகை ஏமாற்றுவர். அரசன் மெய்ஞ்ஞானிகளைக் கொண்டு அவர்களைச் சோதித்து; ஞான முண்டாக்கி நல்வழிப்படுத்த வேண்டும். அதுவே நாட்டிற்கு நலமாகும். (பக்கம் 100)
ஞான மிலாதார் சடை சிகை நூல் நண்ணி
ஞானிகள் போல நடிக்கின்றவர் தம்மை
ஞானிகளாலே நரபதி சோதித்து ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே
நூல்: திருமந்திர விளக்கம் (முதற்பாகம்) கழக வெளியீடு
-விடுதலை ஞா.ம.,23.8.14

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

சுவாஹா பன்னுவதுன்னா என்ன??

-புலேந்திரன் தமிழ்மொழி(முகநூல்,6.2.17)
அப்படியே முழுசா முழுங்குறதை தான் சுவாஹா பன்றதுன்னு சொல்லுவாங்க அதுக்கு ஏன் சுவாஹா பன்றதுன்னு சொல்றாங்க…. அதுக்கு அத்தமுள்ள இந்து மதம் தரும் விளக்கம் இதோ !!!!
சுவாஹாதேவி அக்னி தேவனின் பத்தினி மனைவியாவார்
தட்ஷன் என்னும் மன்னனை ஞாபகம் இருக்கிறதா?... பார்வதி... தாட்சாயினியாக அவதரித்தபோது அவருக்கு தந்தையாக இருந்தவர் 

இந்த தட்ஷனுக்கும், பிரகதி என்னும் குமரிக்கும் பிறந்தவள் சுவாஹாதேவி.

இவளது இளமையும் அழகும் எடுப்பும் நடையும் நளினமும்  எம மகராஜனை மயக்கவே சுவாஹாதேவி மீது காதல் கொண்டான் எமன்.(கள்ளக்காதல்தான்)  அதற்காக திட்டம் போட்டான். சுவாஹாதேவியை தன் சக்தியால் எலுமிச்சை பழமாக்கினான். அந்தப் பழத்தை விழுங்கி தன் வயிற்றுக்குள்ளேயே வைத்துக் கொண்டான். அதுதான் சுவாஹா!!!  தேவைப்படும் போது வெளியே எடுத்து அவளை அனுபவிப்பான். பிறகு விழுங்கி விடுவான்.

இப்படித்தான் ஒருமுறை சுவாஹாதேவியை வெளியே எடுத்து நந்தவனத்தில் உலவவிட்டு கொஞ்சிக் குலவினான் எமன். இருவரும் காமக் களியாட்டங்களில் கரைபுரண்டதால்  எமனுக்கு ஏற்பட்ட பயங்கர களைப்பால் அப்படியே நந்தவனத்திலேயே தூங்கிவிட்டான்.

சுவாஹாதேவியோ தன் செழித்த அழகோடு நந்தவனத்தில் தனித்து விடப்பட்டாள். காம இச்சை அடங்காமல்இருந்தவள் அப்போது அந்த வழியே நடந்து வந்த அக்னிதேவனை  பார்த்துவிட்டாள்.

ஏய் அக்னி இங்கே வா... என்னிடம் சுகத்தைக் குடி. எனக்குள் எரியும் மோக நெருப்பை நீதான் தணிக்க முடியும் என அழைத்து எமன் விழிப்பதற்குள் அவனை ஆசையோடு அணைத்து தழுவி ஆலிங்கனம் செய்து கொண்டு ... அந்த நந்தவன மெத்தையிலே மன்மத நர்த்தனமாடினர். கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து உயிர் நடுங்க உவகையாய் புணர்ந்து பூரித்தான் அக்னி

சுவாஹா - அக்னி - சுகானுபவம் நடந்து முடிந்ததும் அக்னியின் விளையாட்டுகளில் மயங்கிய சுவாஹாதேவி அந்த எலுமிச்சை வித்தையை கையிலெடுத்தாள்

இந்த அக்னி நமக்கு பூரண சுகம் தருகிறான். நாம் இவனை எலுமிச்சைப் பழமாக்கி விழுங்கிவிட்டால் வேண்டும்போது வெளியே எடுத்து தீண்டிக் கொள்ளலாம். ஆசைக் கோட்டை தாண்டிக் கொள்ளலாம். என திட்டம் போட்ட சுவாஹா அக்னியை ஒரு எலுமிச்சை பழமாக்கி விழுங்கிவிட்டாள்.

இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு ஆசுவாசமாக விழித்தான் எமதர்மன். சுவாஹாதேவி எதுவுமே நடக்காதது போல தன் கச்சைகளை சரிசெய்து கொண்டு கச்சிதமாக உட்கார்ந்திருந்தாள்.

எமன் விழித்ததும் இளமை ததும்ப நின்ற சுவாஹாதேவியை வழக்கம் போல்  எலுமிச்சை பழமாக்கி விழுங்கிவிட்டான்.

சுவஹாதேவியோ அக்னியை எலுமிச்சை பழமாக்கி ஏற்கனவே விழுங்கி விட்டாள். அப்படிபட்டவளை எமன் ஒரு பழமாக்கி விழுங்கி விட்டான். பகலில்  எமனின் வயிறு அக்னிக்கும் சுவாஹாவுக்கும் பள்ளியறையானது. 

இதனால் என்ன ஆனது? அக்னி தேவன் சுவாஹாதேவிக்குள் சென்று விட்டதால் உலகில் அசாதாரண நிலை ஏற்பட்டது.
தாய்மார்கள் சமைக்க முடியவில்லை. ஏனென்றால் அடுப்புக்கு அக்னியில்லை. அடுப்புக்கு அக்னியில்லை என்றால் உலகம் எப்படி இயங்கும்?

விஷ்ணுவுக்கு விவரம் தெரிந்தது.

எமன் அசந்த வேளையில்...சுவாஹா அக்னியோடு ஆனந்தக் கூத்தாடியதையும்... பிறகு எலுமிச்சம் பழமாக்கி தன் வயிற்றுக்குள் வைத்துக் கொண்டதையும் அறிந்து கொண்டார் விஷ்ணு.

இப்போது சுவாஹாதேவி எலுமிச்சை பழமாக எமன் வயிற்றில் இருப்பதையும் அறிந்தார் விஷ்ணு. அனைவரையும் விருந்துக்கு அழைத்த விஷ்ணு விருந்து மண்டபத்தில்  எமனை அழைத்து... உனக்குள் எலுமிச்சை பழம் போல இருக்கும் சுவாஹாதேவியை வெளியே விடு என்றார்.

அப்படியே செய்தான்.

வெளியே வந்த சுவாஹாதேவியிடம் ‘உன் வயிற்றுக்குள் இருக்கும் அக்னிதேவனை வெளியே விடு’ என்றார் விஷ்ணு. தர்மசங்கடமடைந்த சுவாஹா வேறு வழியில்லாமல் அக்னியை வெளியே விட்டாள் நிறைவாக விஷ்ணு இவர்களுக்கு பஞ்சாயத்து செய்ததில் சீனியராக இருந்தாலும் எமனைவிட ஜூனியரான அக்னியின் செயல்பாடுகள் பிடித்திருந்ததால் சுவாஹாதேவி ஆசைப்பட்டது போல்... அக்னிதேவனை அவளுக்கே மணமுடித்து வைத்தனர்.  யாகத்தில் சொல்லப்படும் சுவாஹா என்பது இந்த பத்தினியின் பெயர்தான்