வெள்ளி, 3 ஏப்ரல், 2020

மார்கழியில் ஆண்டால் மார்க்கச்சை


உலகப் பணக்காரர்களைத் தரம் பிரித்துப் பட்டியலிடும் பணியைச் செய்துவரும் ஃபோர்ப்ஸ் ஏடு வெளியிடும் செய்திகளை வெளியிட்டு மகிழும் இந்திய ஏடுகள் வசதியாக ஒன்றை மறந்துவிடுகின்றன. மறைத்து விடுகின்றன. மிகப்பெரிய பணக்காரன் திருப்பதியில் இருக்கிறான் என்பதைத் தெரிவிக்கவில்லை. அதனால் ஃபோர்ப்ஸ் ஏடு அதை வெளியிடுவதில்லை. முதலாளிகளைக் கடுமையாகப் பேசுவதற்காகவே பிறந்தவர்கள் அல்லது பிறப்பிக்கப்பட்டவர்கள் என்று பேசும் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் இதைப் பற்றிப் பேச மாட்டார்கள். காரணம் அந்தப் பணக்காரன், கடவுள் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறான். இவர்களுக்கு அதனிடம் அச்சம். கல் முதலாளிபற்றி வாய் திறக்க மாட்டார்கள். அது கிடக்கட்டும்.

திருப்பதியில் இருக்கும் உலக மகா பணக்காரன் பாலாஜி வெங்கடாசலபதி  _ முதல் ஏதும் போடாமலே கோடிக்-கணக்கான கோடிகள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். பணத்தைச் செலவு செய்ய வழி தெரியாமல் கல்லையெல்லாம் தங்கத்தால் மூடிக்கொண்டிருக்கிறான். மதில் சுவரையெல்லாம் தங்கத்தால் கட்டிக்கொண்டு இருக்கிறான்.

குவைத் மன்னர்களும் சவூதி மன்னர்களும் தங்கள் அரண்மனைகளில் தங்கக் குளியலறை, தங்கத் தண்ணீர்க்குழாய், தங்கத்தட்டுகள், தங்க நாற்காலி என்று வைத்திருப்பவர்கள் என்று கண்டனம் செய்பவர்கள் திருப்பதியானைப் பற்றிப் பேசுவதில்லை. பிரான்சு நாட்டின் லூயி மன்னர்களின் ஆடம்பரம்பற்றி எழுதுபவர்கள், வர்சேல் அரண்மனையின் ஆடம்பரங்கள்பற்றி எழுது-பவர்கள்கூட தங்கக்கட்டில்பற்றி எழுதுவார்களே தவிர, ஏழுமலையானைப்பற்றி எழுதுவதில்லை.

காரணம் இந்த உலக மகா பண முதலாளி கடவுளாக்கப்பட்டிருக்கிறான்.

இருந்தாலும் இவன் கடன்காரனாம். தன் கல்யாணத்திற்காகக் கடன் வாங்கினானாம். (அப்படி ஒரு கல்யாணம் இவனுக்குத் தேவையா?) கடனுக்கான வட்டியைத் தருவதற்காகத்தான் இவனுக்குக் கோடிக்கணக்கான கோடி ரூபாயைக் கொட்டிக் குவிக்கிறார்களாம்! உலக மகாபணக்காரனுக்கே கடன் கொடுத்த பணக்காரன் குபேரனாம்! இந்த கந்துவட்டிக்காரன் பிரபஞ்ச மகா பணக்காரன் என்று ஏன் ஃபோர்ப்ஸ் எழுதுவதில்லை? இவர்கள் ஏன் எழுதக் செய்வதில்லை? விசாரிக்க வேண்டும். சரி, ஏழுமலையான் விவகாரத்திற்கு வருவோம்.

இவ்வளவுப் பணம் இருந்தும் இவனை எழுப்ப ஓர் அலாரம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அறிவே கிடையாது. இவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பக் குரல் கொடுப்பதற்கு என்றே சம்பளம் கொடுத்து ஆள்களை வைத்து இருப்பதால் அவர்கள் இந்தத் தூங்குமூஞ்சியைப் பாட்டுப்பாடி எழுப்புகிறார்கள். இந்தப் பாட்டைத்தான் சுப்ரபாதம் என்று வடமொழியில் கூறுகிறார்கள். இசைத்தட்டு, இசைநாடா என்று வந்திருக்கும் இதனை எல்லாக் கோயில்களிலும் மார்கழி மாதத்தில் ஒலிக்கச் செய்கிறார்கள்.

நமக்கும் தூக்கம் கெட்டுவிடும். மார்கழி மாதக் குளிரில் கதகதப்புக்குத் துணிப்போர்வை, உயிர்ப்போர்வையுடன் தூங்கிக் கொண்டிருக்கும்-போது இக்கூச்சல் எரிச்சலைக் கிளப்பும்.

இந்த எரிச்சல் இனிமேல் ஏழுமலையானுக்கு ஏற்படாதாம். சுப்ரபாதம் இந்த மார்கழி மாதத்தில் ஏழுமலைக்கோயிலில் பாடப்பட மாட்டாதாம். பதிலுக்குத் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்படுமாம். நப்பின்னைக் கொங்கைமேல் கைவைத்துக் கிடந்தவனைத் தமிழில் பாடி எழுப்பப் போகிறார்களாம். தமிழ்த் தேசியங்களுக்குப் பக்திப் பிரவாகத்தோடு, பாஷைப் பிரவாகமும் பொங்கி ஓடும்! பாஷை, பிரவாகம் இரண்டுமே வடசொல், தமிழ்ச்சொல் அல்ல! நமக்குத் தெரியும். தமிழுக்கு அடுத்துத் தேசம், தேசியம் என்று சொல்லிக் கொள்பவர்களுக்காக எழுதவேண்டி நேரிட்டது.

நம் தமிழர்கள் க்ஷமிக்க வேணும்!

நப்பின்னையின் கொங்கைகளைப்பற்றி மட்டுமே ஆண்டாள் எனும் பெண் பாடியிருப்பதாக யாரும் கருதிக் கொள்ளாதீர்கள். நம் இலக்கியவாதிகள் மாபெரும் சபைகளிலே சிலாகித்துப் பேசும் பக்தி இலக்கியம் பலவற்றையும் பாடுகிறது. நாயகன் _ நாயகி பாவம் என்றெல்லாம் இவர்கள் வர்ணிக்கும் ஆண்டாளின் விரகதாபம் (காம வெளி என்று தமிழில் கூறலாம்) எந்த எல்லையைத் தொட்டது என்பதை ஆண்டாளின் கவிதை மூலமே பார்க்கலாமா?

அவரைப் பிராயம் தொடங்கி
ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதேன்...

என்கிறாள். பெரிய மார்பகங்கள் அவனுக்கே என உறுதிபடக் கூறுகிறாள். தமிழில், ஆண்டாள் அந்த உறுப்பைக் குறிப்பிட்டு விட்டாலும் நான் எழுத வெட்கப்பட்டு மார்பகம் எனக் குறித்துள்ளேன். இடக்கரடக்கலுக்குப் பிற-மொழிகள் வசதியாக வாய்த்திருக்கின்றன.

ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்

என்று அந்த உறுப்புகள் வளர்ந்த கதையைக் கூறுகிறாள்.

முலைகள் எனத் தம் கவிதைத் தொகுப்புக்குப் பெயர் வைத்த கவிஞரைத் தம் பாண்பாட்டுப் பாதுகாப்பு எழுதுகோல்களால் குத்திச் சீண்டிய மாரல் போலீஸ்காரர்கள் (ஒழுக்கக் காவலர்கள்) இதற்கு ஏன் மூச்சு விடுவதில்லை? ஓ! இது கடவுளின் பேரால் நடக்கிறதா?

சாயுடைவயிறும் என் தடமுலையும்
திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
தரணியில் தலை புகழ் தரக்கற்றியே
என்ன வகை ஆசை பாருங்கள், திருமணம் ஆகாத பெண்ணுக்கு! மேலேயும் கீழேயும் அவன் தடவிக் கொடுக்க வேண்டுமாம்! ஏன் தடவிக் கொடுக்க வேண்டுமாம்?
முத்தன்ன மெம்முறுவல் செய்யும் வாயும்
முலையும் அழகழிந்தேன் நான்
இவன் தடவிக் கொடுக்காததால், அந்த உறுப்புகளின் அழகே அழிந்து விட்டனவாம்! அழகைப் பெறத் தடவிக் கொடுக்க வேண்டியது தேவைதானே!

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்யும்...
என் அகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகப் புல்குவதற்கு என்புரிவுடமை செய்யுமினோ

ரங்கமன்னாரோடு உடல் உறவு கொள்ள வேண்டுமாம்! அந்த ஆசை மனதில் மேலோங்கி வளர்ந்துவிட்டதால், மார்பகம் வருந்துகிறதாம், குதூகலிக்கிறதாம், உயிரை எடுக்கிறதாம், ஆகவே எதையாவது செய்து நாள்தோறும் நாராயணனைப் புணர்வதற்கு உத்தரவாதம் கொடுங்களேன் என்று பெண் (ஆண்டாள்) கேட்கிறாள்! இது பக்தியா? ஆபாச ஆசைகளின் வெளிப்பாடு அல்லவா?

கொங்கைமேல் குங்குமத்தின் குழம்
பழியப் புகுந்து ஒரு நாள்
தங்குமேல் என் ஆவி தங்குமென்று உரையீரே
மார்பகத்தில் பூசப்பட்டிருக்கும் குங்குமம் குழைய, அழியத் தொட்டு அழுத்தினால் ஒழிய என் ஆவி உடலில் தங்காது என்பதை அரியிடம் கூறுங்களேன் என்ற வேண்டுகோளைப் பக்தர்களிடம் விடுக்கிறாள்!

குற்றமற்ற முலை தன்னைக் குமரன்
கோலப் பனைத் தோளோடு
அற்ற குற்றம் அவைதீர
அணைய அமுக்கிக் கட்டீரே
என்ற விபரீதமான வேண்டுகோளை வைக்கிறாளே! இவளுடைய மார்பகத்தோடு அவனுடைய தோள்கள் எப்போதும் சேர்ந்திருக்கும் வகையில்  சேர்த்துக் கட்டுங்களேன் என்று கேட்கிறாளே! வெட்கங்கெட்டு இப்படிப் பேசுகிற பெண்ணை யாராவது கேட்டிருக்கிறீர்களா? இந்நாட்டின் பக்தி வேகம், மோகமாகி மாறி இப்படியெல்லாம் புலம்பச் சொல்கிறதே!

அதனால்தான் பெரியார், பக்தியைவிட ஒழுக்கம் முக்கியம் என்றார்.

ஆண்டாளின் வேண்டுகோளை ஆண்டவன் நிறைவேற்றவில்லை. பக்தர்களும் கூட்டி வைக்கவில்லை கோவிந்தனோடு! என்ன செய்வாள் அவள்?

உள்ளே உருகினை வேனை
உளவோ, இவளோ என்னாத
கொள்ளைக் கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த்தனனைக் கண்டாக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்தென் அழலைத் தீர்வேனே

எனப் பாடிவிட்டாள்! இவ்வளவு ஆசை வைத்திருக்கும் என்னை இருக்கிறாளா, போய்விட்டாளா எனக்கூடப் பார்க்காத இந்த கோவர்த்தனனை (அவன் கண்ணில் கொள்ளி வைக்க...)ப் பார்த்தேன் என்றால்.... எதற்கும் பிரயோசனப்படாத இந்த மார்பகங்களை வேரோடு (மரவள்ளிச் செடியின் வேரைக்கிழங்கு என்று சொல்கிறோம்) பிடுங்கி அவன் மேலே விட்டெறிந்து, என் எரிச்சலைத் தீர்த்துக் கொள்வேன் என்றே கூறிவிட்டாள். பாவம், காமம் என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்!

அதிவீரராமனின் கொக்கோகப் பாடல்களைப் படித்துத் தெரிந்து கொண்டு பாடியிருப்பாளோ? வாத்ஸ்யாயனின் காமசூத்திரத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆண்டாள் காலத்திலேயே வந்துவிட்டதோ? இவ்வளவு அசிங்கமாக, ஆபாசமாகப் பாடிய ஆண்டாளைத்தான் ரங்கமன்னார் கல்யாணம் பண்ணிக் கொண்டாராம்! (திருவில்லிப்புத்தூரில் கடவுளின் பெயர் ரங்கமன்னார்) என்ன பாடுபட்டாரோ? என்ன பாடுபடுத்தினாரோ?

கர்ப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கிறேன் சொல்லாழி வெண்சங்கே

எனக் கேட்டவள் ஆண்டாள்! மாதவனின் வாய் நாறுமா? கர்ப்பூரம் போல் மணக்குமா? எனக்குச் சொல் என்று சங்கைக் கேட்கிறாள்! இந்தச் சங்கு (பாஞ்சசன்யம்) கிருஷ்ணன் தன் வாயில் வைத்து ஊதும் சங்கு. ஆகவே அதற்கு அவன் வாயின் நாற்றம் தெரியும் அல்லவா? பல்லாயிரம் பெண்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கடவுள் வாயில் வைத்துக் கொள்கிறாராம் சங்கை! ஆகவே இந்தச் சங்கை கெட்ட (வெட்கங்கெட்ட) கேள்வியாம்! விரிவுரை வேறு தருகிறாள் ஆண்டாள்!

பெண்ணின் வருத்தம் அறியாத
பெருமான் அறையின் பீதக
வண்ண ஆடைகொண்டு எந்தன்
வாட்டம் தணிய வீசீரே!
ஆராஅமுது அணையான்தன்
அமுதவாயில் ஊறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே
பருக்கி இளைப்பைத் தீரீரே!
நெடுமால் ஊதி வருகிற
குழலின் தொளைவாய் நீர்கொண்டு
குளிர முகத்துத் தடவீரே!
அவன் மார்பு அணிந்த வனமாலை
மார்பிற் கொணர்ந்து புரட்டீரே
அவன்
அடிபட்டான் பொடிதான் கொணர்ந்து பூசீர்காள்!
என்றெல்லாம் பாடுகிறாள் ஆண்டாள்!

கண்ணன் இடுப்புத் துணியால் வீசிறுங்கள். அவன் வாய் எச்சிலை எனக்குக் குடிக்கக் கொடுத்து என் தாகம் தணியுங்கள். அவன் புல்லாங்குழலிலிருந்து வழியும் எச்சிலால் என் முகத்தைத் துடையுங்கள். (சிவப்பழகு கிரீமா அது?) அவன் மார்பில் போட்டிருந்த மாலையை என் மார்பில் போட்டுப் புரட்டி எடுங்கள். அவன் காலடி மண்ணால் என் உடல் மீது பூசுங்கள். (லக்மே பவுடரோ?)

மனிதர்களின் உளவியல்பற்றி ஆய்ந்து சிக்மண்ட் ஃபிராய்டு எழுதிய நூல், உலகின் போக்கை மாற்றிய முப்பெரும் நூல்களில் ஒன்று என்பார்கள் அறிஞர்கள். அந்த நூலில் அவர் விளக்கிய உளவியல் ஆசைகள், கோளாறுகள் பலவகை. தம் மனதின் ஆசைகளை ஆண்களும் பெண்களும் வெளிப்படுத்தும் செயல்வகைகளை விவரித்-திருப்பார். அவையெல்லாம் ஆண்டாளின் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. அதிகமாக ஆண்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள்தான் வெளிவரும். பெண்கள் வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படுத்துவதைச் சமூகம் அனுமதிக்கவில்லை. அத்தகைய மரபு மீறிய செயலை ஆண்டாள் எழுத்து வடிவிலேயே செய்திருக்கிறாள். பக்தியின் பெயரால் அது சகித்துக் கொள்ளப்படுகிறது. அனுமதிக்கப்-படுகிறது.

இந்த காமக் கவிதைகளைக் கோதைத் தமிழ் என்கிறார்கள். பகவத் கீதை என்கிறார்கள். காமக்கொடூரன் கண்ணன் பாடியது பகவத் கீதையாம். காமவெறியள் பாடியது பகவதி கீதையாம். ஏகாதசியன்று இவளுக்கு 108 புடவைகள் போர்த்துகிறார்கள். அவள் பாடிய முலைகள் உள்பட முழுவதும் மூடப்படுமோ?

ஆனாலும் இவளை வெம்பல் எனப் பாடியுள்ளார் மணவாள மாமுனி. பாடலைப் படியுங்கள்.

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் _ பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளை பக்தியுடன் நானும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து.

பிஞ்சிலே பழுத்தது வெம்பல். அதனை யாரும் தின்பதில்லை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் திருப்பாவை, நாச்சியார் வாய்மொழி என்று தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள்.

இம்மாதிரியான தமிழ்ப் பாடல்களைப் பாடிச் சங்கீதத்தை வளர்க்க வேண்டும் என்று அண்மையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தினமணி நாளேட்டின் ஆசிரியர் பைத்தியநாதன்கூட பேசியிருக்கிறார். தமிழில் இவர் வைத்தியநாதன். வடமொழியில் (வ எழுத்து இல்லாததால்) பைத்தியநாதன். (இந்தச் சொல்லுக்கும் அவரது செயல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று நம்புங்கள்)

புரிந்த மொழியில் இந்த வகைக் கடவுள் பாடலைப் பாடுவதற்குப் பதிலாக, புரியாத மொழியில் கடவுளைப் பற்றிப் பாடலாம் என்பதாக, வருத்தப்பட்டுப் பெரியார் கூறினார்.  தமிழ் இசைக்காக 1931இல் தனி மாநாடு கூட்டியவர் பெரியார். 1941இல் அண்ணாமலை அரசர், ஆர்.கே.சண்முகம், கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை அணைத்துப் போரிட்டு வென்றவர் பெரியார்! அவர் இப்படிக் கூறிடும் வகையில் உள்ள தமிழ்ப் பாடல்களை விடுத்து நல்ல பாடல்களை எழுதலாமே! ஏற்கெனவே அப்படி எழுதப்-பட்டிருக்கும் புரட்சிக்கவிஞரின் பாடல்களைப் பாடலாமே!

பாரதியாரின் மனைவி தன் காலம் முடிவதை உணர்ந்த நிலையில் தம் மகளை அழைத்துப் பாடச் சொல்லி, அதனைக் கேட்டவாறே இறந்தார் என்ற செய்தி தெரிவிக்கும் இன்னொரு செய்தி. செல்லம்மாள்பாரதி கேட்டு, அவர் மகள் பாடிய பாடல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய பாடல் துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா

அப்பேர்ப்பட்ட இனிய, பொருள் பொதிந்த இசைப் பாடல்களை நிறைய எழுதிக் குவித்தவர் புரட்சிக் கவிஞர்.

அவற்றைப் பாடாமல் தவிர்த்தவர்கள் உண்டு. அவற்றைப் பாட மறுத்தவர்களும் உண்டு. அவற்றைத் துக்கடா என்ற தலைப்பில் இசைத்தவர்களும் உண்டு. மார்கழி மாதம் என்பதால் இதனையும் எழுதவேண்டி வந்தது.

-  உண்மை இதழ், 1-15.1.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக