வெள்ளி, 23 ஏப்ரல், 2021

கும்பமேளா!


 'கும்பமேளா', 'கும்பமேளா' என்று கூக்குரல் போடுகிறார்களே - இலட்சக்கணக்கில் கூடி, அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் முழுக்குப் போடுகிறார்களே! அதன் தாத்பரியம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இந்து வேதங்கள் மிகவும் மதிக்கப்பட்ட காலம். வேதம் என்றால் அதற்குமேல் ஒன்றும் இல்லை என்ற நிலைப்பாடு! அதனால்தான் வழக்கில்கூட 'அது என்ன வேத வாக்கா?' என்ற சொல்லாடல்!

திருப்பாற்கடலில் அமிர்தம் உண்டானதாக ஒரு கதை உண்டு அல்லவா!

அசுரர்களும், தேவர்களும் மந்திரகிரியை மத்தாகவும், வாசுகியைத் தாம்பாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தார்களாம். மந்திரிகிரியாகிய மலை கடலில் ஆழ்ந்துவிடாதபடி விஷ்ணு கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து, முதுகில் தாங்கிக் கொண்டாராம்.

அமிர்தம் கிடைத்ததாகவும், துர்வாச முனிவரின் சாபத்தால் கடலில் மறைந்து போயிருந்த சூரிய, சந்திராதி கிரகங்களும், காமதேனு, கற்பக விருட்சங்களும், மகாலட்சுமி முதலியவர்களும் மீண்டும் வெளிப்பட்டார்களாம்.

அமிர்தபானத்தினை சக்ஷிர சாகர பாற்கடலில் இருந்து எடுக்க முயற்சித்தபோது, அமிர்த பானம் இருந்த கிண்ணத்தினை அசுரர்கள் களவாடிச் சென்றுவிட்டனராம்.

அவர்களை தேவர்கள் 12 நாள்கள் துரத்திச் சென்றனராம். (12 ஆண்டுகளுக்குச் சமம்).

வானுலகிலும் சண்டை நடந்ததாம். அவ்வமயம் வானுலகிலிருந்து அமிர்தபானம் கொட்டி, பூலோகத்தில் நான்கு இடங்களில் விழுந்ததாம்.

அந்த நான்கு இடங்கள் அரித்துவாரம், பிரயாகை (அலகாபாத்), உஜ்ஜயினி, காசிகையாம்.

12 ஆண்டு போருக்குப் பின்னர், அது நடந்ததால், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளாவாம். அன்று நீராடினால் பாவங்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாகப் பறந்து ஓடிவிடுமாம்.

கடுகளவு புத்தியுள்ளவர்களாவது இதனை நம்ப முடியுமா?

சங்கராச்சாரியார்கள் வரை மூழ்குகிறார்களே - இவர்களும் பாவப் பிறவிகள்தானா?

சிந்தியுங்கள்!

 - மயிலாடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக