ஞாயிறு, 28 ஜூலை, 2024

கந்தபுராணத்தில் இல்லாத புளுகு எந்த புராணத்திலும் இல்லை

எப்போதும் வென்றான் 

"#கந்த_புராணத்தில்லாத_புளுகு
#எந்தப்_புராணத்திலுமில்லை !"

வள்ளியின் பிறப்பு எவ்வாறு ?

தொல்கதைக் கட்டு

தமிழ நாகரிகத்தையும் மதங்களையும் ஆரியப்படுத்தற்கும் , தமிழனைத் தாழ்த்திப் பிராமணனை உயர்த்தற்கும் ,
பதினெண்(18) தொன்மங்களையும் 
(புராணங்களையும்) பதினெண் துணைத் தொன்மங்களையும் இயற்றிக் கொண்டனர்.அவற்றுள் 
" கந்தபுராணம் " என்னும் ஒன்றுமட்டும் , ஓரரசிப் பதம் பார்ப்பாக இங்கு ஆராயப்படும்.

முருகன் பிறப்பு

" இறைவன் உமையை வதுவை செய்துகொண்ட நாளிலே , இந்திரன் சென்று நீ
புணர்ச்சி தர வேண்டுமென்று
வேண்டிக் கொள்ள , அவனும்
அதற்கு உடம்பட்டு அது தப்பானாகிப் புணர்ச்சி தவிர்ந்து கருப்பத்தை இந்திரன் கையிற் கொடுப்ப ,
அதனை இருடிகளுணர்ந்து
அவன் பக்கனின்றும் வாங்கித் தமக்குத் தரித்தல் அரிதாகையினாலே , இறைவன் கூறாகிய முத்தீக்கட் பெய்து அதனைத் தம் மனைவியர் கையிற் கொடுப்ப, அருந்ததி யொழிந்த
அறுவரும் வாங்கிக் கொண்டு
விழுங்கிச் சூன் முதிர்ந்து சரவணப் பொய்கையிற் பதுமப் பாயலிலே பயந்தாராக,
ஆறு கூறாகி வளர்கின்ற காலத்து , இந்திரன் தான் இருடிகளுக்குக் கொடுத்த நிலையை மறந்து ஆண்டு வந்து வச்சிரத்தான் எறிய ,
அவ்வாறு வடிவும் ஒன்றாய்
அவனுடனே பொருது , அவனைக் கெடுத்துப் பின் 
சூரபன்மனைக் கொல்லுதற்கு
அவ் வடிவம் ஆறாகிய வேறுபட்ட கூற்றாலே மண்டிச்
சென்றதென்று , புராணங் கூறி்ற்று "என்பது திருமுருகாற்றுப்படை நச்சினார்க்கினியருரை(58)

இது,

"உமையொடு புணர்ந்த காம
                                       வதுவையுள்
..........................................................
பயந்தோ ரென்ப பதுமத்துப் 
                            பாயல் ."(5:28--49)
என்னும் பரிபாடற் பகுதியைத்
தழுவியது.

வள்ளி பிறப்பு

தொண்டை நாட்டில் , வௌ்ளிமலை யருகில் மேற்பாடி என்னுஞ் சிற்றூரை ,
நம்பியரசன் என்னும் வேடர் மன்னன் ஆண்டு வந்தான்.
அவனுக்குப் பெண்மக வின்மையால் , ஒரு பெண்மகப் பேறு வேண்டி மலைத்தெய்வத்தை வழிபட்டு
வந்தான்.

அக்காலத்தில் , சிவமுனி என்பவன் , அம் மலையருகில் 
ஐம் புலனையும் அடக்கிச் சிவன்மேல் மனத்தைச் செலுத்தித் தவஞ் செய்துகொண்டிருந்தான்.ஒரு நாள் ஓர் அழகிய பெண்மான்
அவனருகில் வந்து உலாவியது.அதைக் கண்டு ,
அவன் கரையிறந்து காமுற்று
மதிமயங்கிப் பேரிடர்ப்பட்டான்.
அவன் காமக் காட்சியினால்
அம் மான் கருவுற்று , உரிய காலத்தில் ஒரு பெண்மகவையீன்று , வள்ளிக்கிழங் ககழ்ந்த ஒரு குழியில் இட்டுச் சென்றது.
அக் குழவியைக் கண்ட நம்பியரசன் எடுத்து, வள்ளிக்
கிழங்குக் குழியிற் கிடந்ததுபற்றி வள்ளியென்றுபெயரிட்டுத் தன் தேவியிடங் கொடுத்தான்.
அவள் வளர்ந்தாள்.

சிவமுனிவன் இளம்பிணையைக் கண்டு மையல் கொண்டு பட்ட பாட்டை

" போர்தொழில் கடந்த
                                             வைவேற்
      புங்கவ னருளால் வந்த
சீர்த்திடு நவ்வி தன்னைச்
      சிவமுனி யென்னுந்
                                            தூயோன்
பார்த்தலு மிளைமைச் செவ்வி
       படைத்திடும் பிறனிற்
                                                    கண்ட
தூர்த்தனின் மைய லெய்திக்
     காமத்தான் சுழல லுற்றான்."

" ஏமத்தின் வடிவஞ் சான்ற
இலங்கெழிற் பிணையின் 
                                                  மாட்டே
காமத்தின் வேட்கை வைத்துக்
 கவலையா லவல மெய்தி
மாமத்த மளைபுக் கென்ன
     மனக்கருத் துடைந்த வேறா
யூமத்தம் பயன் றுய்த் தார்போ
லுனமத்த னாகி யுற்றான்."
(கந்தபு.வள்ளி.21 - 2) என்று ,
கச்சியப்ப சிவாசாரியார் என்னும் புலவர் சிறிதும் நாணமின்றிப் பாடியிருக்கின்றார்.இடக்கர் மிகுந்தனவும் இயற்கைக்கு மாறானவுமான இக்கதைகள்,
அகக்கரண வளர்ச்சியும் ஒழுக்க வுயர்வு மில்லாத ஒருவன் கட்டியன வாகும்.

முதலிலிருந்து முடிவுவரை ,
கந்த புராணம் முற்றும் கட்டுக் கதையாகும்.முருகனும் வள்ளியும் , குமரிநாட்டிலேயே
குறிஞ்சி மக்கள் உள்ளத்தில் தோன்றிவிட்டனர்.

" இந்தப் புளுகு கந்த புராணத்திலுமில்லையே !",
" கந்த புராணத்திலில்லாத புளுகு எந்தப் புராணத்திலுமில்லை " என்னும் பொதுமக்கள் கூற்றும் பழமொழியும் இங்கு கவனிக்கத்தக்கன.

முருகன் 'சரவணம் ' என்னும் நாணற்காட்டுப் பொய்கையிற்
பிறக்கவில்லை.அவனுக்கு ஓரே முகமும் இரு கையுந்தான்.
அவன் சூரபதுமன் என்வனைக் கொல்லவுமில்லை ; தேவயானை(தெய்வயானை)
என்பவளை மணக்கவு 
மில்லை.

காங்கேயன், சரவணன்,(சரவணபவன்)
ஆறுமுகன்,(சண்முகன்),
பன்னிரு கையன், கார்த்திகேயன் முதலிய கந்த புராணத்துப் பெயர்களெல்லாம் முருகனுக்கு ஒரு சிறிதும் ஏற்கா.நாற்றிசையுடன் மேலுங் கீழுஞ் சேர்ந்த அறுதிசைகளை,
முகமாகக் கொள்ளின் ,
ஆறுமுகம் என்னும் பெயர்மட்டும் முருகனுக்குப் பொருந்தும்.

கந்தபுராணம் போன்றே ,
ஏனைப் புராணங்களும் தமிழருக்கு வேண்டுவனவும்
ஏற்பனவும் அல்ல எனக்கூறி
விடுக்க.

பிராமணனுக்கு நல்லவன் என்று பொருள்படும் சுப்பிரமணியன் என்னும் வடசொற் பெயர் , முன்பு திருமாலுக்கும் சிவனுக்கும்
பெயராக வழங்கி , இன்று முருகனுக்குச் சிறப்பாக வங்கி வருகின்றது.

சான்று: பக்கம் 84 - 86,
" தமிழர் மதம் "
ஞா.தேவநேயப் பாவாணர்
பூம்புகார் பதிப்பகம்,
சென்னை 600 108
தொலைபேசி : 044 25267543.
- 'கிறுக்கு பூனை' முகநூல் பதிவு, 22.07.24

செவ்வாய், 2 ஜூலை, 2024

சுப்பிரமணியனது பிறப்பு

 

பெரியார் பேசுகிறார் : சுப்பிரமணியனது பிறப்பு

நவம்பர் 01-15 2019

விஸ்வாமித்திரன் சுப்ரமணியனது பிறப்பைப் பற்றி ராமனுக்குக் கூறியது:-

1. சிவபெருமான் உமாதேவியைத் திருக்கலியாணம் செய்து, மோகங்கொண்டு அவளுடன் 100 தேவ வருஷம் (மனித வருஷத்தில் பல யுகம்) புணர்ந்து கொண்டிருந்தனர். அவ்வளவு காலம் கழிந்தும் பார்வதி கர்ப்பம் அடையவில்லை. அது கண்டு நான்முகன் முதலிய தேவர்கள் சிவனிடத்தில் வந்து, இவ்வளவு காலம் புணர்ந்த உம்முடைய தேஜஸ்ஸாகிய விந்து வெளிப்படுமானால் உலகம் பொறுக்கமாட்டாது. உம்முடைய விந்துவை தயவு செய்து விடாமல் நிறுத்திக் கொள்ளும் என்று வேண்டவும், அதற்கிசைந்த சிவன் தனது விந்துவை மற்றபடி யார் தரிப்பது? எங்கு விடுவது? என்று கேட்க, தேவர்கள் பூமியில் விடும்படி சொல்ல, அந்தப்படியே சிவன் பூமியின் மீது விட்டுவிட்டார்.

பூமி அதை தாங்க மாட்டாமல் பூமி முழுதும் கொதிகொண்டு எழ, தேவர்கள் அந்த வீரியத்தை பூமி தரிக்க முடியாது எனக் கருதி அக்கினியிடம் சென்று வேண்ட, அக்கினி வாயுவின் உதவியால் அவ்வீரியத்திற்குள் பிரவேசித்து பிரமதேவன் கட்டளைப்படி அதை கங்கையில் கொண்டு சேர்த்து, அவ்வீரியத்தைப் பெற்று ஒரு குழந்தைப் பெற வேண்டுமென்று கங்கையை வேண்ட, கங்கையும் அதற்குச் சம்மதித்து அவ்வீரியத்தைப்பெற, அவ் வீரியமானது கங்கை முழுவதும் பரவி நிறைந்துவிட, கங்கை அதை தாங்கமாட்டாமல் மறுபடியும் அக்கினியை வேண்ட, அக்கினி மனமிரங்கி கங்கையை நோக்கி  ஏ கங்கையே! நீ அடைந்த சிவனின் வீரியத்தை தாங்க முடியாவிட்டால் பனிமலை அருகில் விட்டுவிடு என்று சொல்ல, கங்கையும் அவ்வாறே அவ்வீரியத்தை பனிமலையின் அருகில் விட, அங்கு அது குழந்தையாகத் தோன்ற, அதை இந்திரன் பார்த்து அக்குழந்தைக்கு பால் கொடுத்து வளர்க்க கிருத்திகா தேவிகளை ஏவ, அவர்கள் அதற்கு பால் கொடுத்து வளர்த்து வரலானார்கள். பல இடத்தில் சிவனது வீரியம் ஸ்கலிதமானதன் பலனாக அக் குழந்தை உற்பத்தியானதால் அக்குழந்தைக்கு ஸ்கந்தன் என்றும், கிருத்திகா தேவிகள் ஆறுபேர்களுடைய பால் சாப்பிட்டதால் கார்த்திகேயன் என்றும், மேல்கண்ட ஆறுபேரின் முலையிலும் ஆறுமுகம் கொண்டு ஏககாலத்தில் பால்குடித்ததால் ஷண்முகன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

இவ்வரலாறு வால்மீகி ராமாயணத்தில் “சிவன் பார்வதியை புணர்ந்தது’’ என்று தலைப்பெயர் கொண்ட 36ஆவது சருக்கத்திலும் “குமாரசாமி உற்பத்தி’’ என்கின்ற 37ஆவது சருக்கத்திலும் காணப்படுகின்றது.

இரண்டாவது வரலாறு, தேவர்கள் சிவனிடம் சென்று அசுரர்களை அழிப்பதற்கு தகுந்த சக்தி கொண்ட ஒரு குழந்தையைப் பெற்றுத்தர வேண்டுமென்று வேண்ட, சிவன் அருள்கூர்ந்து தனது அய்ந்து முகங்களுடன் மற்றும் ஒரு முகத்தையும் சேர்த்துக் கொண்டு தோன்ற அவ்வாறு முகங்களில் உள்ள நெற்றிக்கண் ஆறிலிருந்தும் ஆறு தீப்பொறிகள் வெளியாக, அப் பொறிகளைக் கண்டு தேவர்களும் மனிதர்களும் நடுங்கி பரமனை வேண்ட, பரமன் அப் பொறிகளை கங்கையில் விடும்படி சொல்ல அவர்கள் அப்படியே செய்ய, கங்கை அது தாங்க மாட்டாமல் அவற்றைக்கொண்டு சரவணத்தில் செலுத்த, அங்கு ஆறு குழந்தைகள் தோன்ற, அந்த ஆறு குழந்தைகளையும் கிருத்திகைப் பெண்கள் அறுவரும் பால் கொடுத்து வளர்த்து வந்தார்கள்.

பிறகு சிவன் பெண்ஜாதி பார்வதி தேவி இந்த ஆறு குழந்தைகளையும் சேர்த்துக் கட்டி அணைத்து முத்தமிட்டு பாலூட்டுகையில் அவ்வாறு குழந்தைகளும் ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும் கொண்ட ஒரே குழந்தையாக ஆகிவிட்டது. இதற்கு ஆறுமுகமுடையதால் ஆறுமுகன் என்றும் கங்கையாறு ஏந்திச் சென்றதால் காங்கேயன் என்றும் சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. இது கந்தபுராணத்திலும் முருகன் கதையிலும் உள்ளது.

குறிப்பு:-சுப்பிரமணியன் பிறப்புக்கு மேல்கண்டபடி இரண்டு கதைகள் காணப்பட்டாலும் கந்த புராணத்தின் கதைப்படி பார்த்தாலுமே, வால்மீகி ராமாயணத்தில் விஸ்வாமித்திரர் ராமருக்குச் சொன்னதாகச் சொல்லப்படும் மேற்கண்ட கதைதான் உறுதியாகின்றது. ஏனெனில், கந்தபுராணத்திலும் பார்வதியானவள் தன் மூலியமாய் பிள்ளை பெறுவதை தடுத்ததற்காக தேவர்கள் மீது கோபித்து தேவர்களை “பிள்ளையில்லாமல் போகக் கடவது’’ என்று சபிக்கின்றாள் என்று காணப்படுகின்றது. சிவனது நெற்றிக் கண்ணி லிருந்து தீப்பொறி வெளியாகி அதிலிருந்து பிள்ளை உண்டாகியிருக்கும் பட்சத்தில் பார்வதிக்கு தேவர்களிடத்தில் கோபம் உண்டாகக் காரணம் ஏற்பட நியாயம் இல்லை.

இந்தக் கோபம் உண்டாவதற்குக் காரணம், வால்மீகி ராமாயணத்தில் சொல்வது போல், அதாவது 100 தேவ வருஷம் சிவன் பார்வதியைப் புணர்ந்து கடைசியாக வீரியம் வெளிப்பட்டு கருதரிக்கும் சமயத்தில் தேவர்கள் குறுக்கிட்டு சிவனை தனது வீரியத்தை பார்வதி கர்பத்துக்குள் விடாமல் நிறுத்திக் கொள்ளும்படி வேண்டினதால் சிவன் அதை எடுத்துக் கொண்டதற்கு பார்வதி கோபித்து வீரியம் ஸ்கலிதமாக்கும் சமயத்தில் கொடுமை செய்ததற்காக அவர்களைச் சபித்தது, அதாவது தன்னைப் போலவே தேவர்களுடைய பெண்சாதிகள் எல்லோரும் பிள்ளையில்லாமல் மலடிகளாக வேண்டுமென்று சபித்ததாகக் காணப்படுவது நியாயமாக இருக்கின்றது.

அன்றியும் பார்வதி தனது கர்ப்பத்தில் விழ வேண்டிய வீரியத்தை பூமி பெற்றுக் கொண்டதால் பூமியையும் பார்வதி தனது சக்களத்திபோல் பாவித்து அவளையும் (பூமியையும்) பலபேர் ஆளவேண்டுமென்று சபித்ததாகவும் அதனாலேயே பூமிக்கு அடிக்கடி அரசர்கள் மாறுகிறார்கள் என்றும் வால்மீகியில் காணப்படுகின்றதும் பொருத்தமாயிருக்கின்றது.

கந்தப்புராணமோ, மேல்கண்ட சிவன் 100 வருஷம் புணர்ந்த விஷயம் ஒன்றைத் தவிர மற்றவைகளையெல்லாம் ஒப்புக்கொள்ளுகின்றது.

ஆகவே சுப்பிரமணியன் என்றும், சண்முகன் என்றும், கார்த்திகேயன் என்றும், ஸ்கந்தன் என்றும் சொல்லப்படும் சாமியானது மேல்கண்ட மாதிரி ஒரு பிறப்பு வளர்ப்புக்கு உள்பட்டது என்பது வைணவப் புராணங்களிலும் சைவப் புராணங்களிலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

( தந்தை பெரியார் – ‘குடிஅரசு’ – 2.9.1928)