ஞாயிறு, 28 ஜூலை, 2024

கந்தபுராணத்தில் இல்லாத புளுகு எந்த புராணத்திலும் இல்லை

எப்போதும் வென்றான் 

"#கந்த_புராணத்தில்லாத_புளுகு
#எந்தப்_புராணத்திலுமில்லை !"

வள்ளியின் பிறப்பு எவ்வாறு ?

தொல்கதைக் கட்டு

தமிழ நாகரிகத்தையும் மதங்களையும் ஆரியப்படுத்தற்கும் , தமிழனைத் தாழ்த்திப் பிராமணனை உயர்த்தற்கும் ,
பதினெண்(18) தொன்மங்களையும் 
(புராணங்களையும்) பதினெண் துணைத் தொன்மங்களையும் இயற்றிக் கொண்டனர்.அவற்றுள் 
" கந்தபுராணம் " என்னும் ஒன்றுமட்டும் , ஓரரசிப் பதம் பார்ப்பாக இங்கு ஆராயப்படும்.

முருகன் பிறப்பு

" இறைவன் உமையை வதுவை செய்துகொண்ட நாளிலே , இந்திரன் சென்று நீ
புணர்ச்சி தர வேண்டுமென்று
வேண்டிக் கொள்ள , அவனும்
அதற்கு உடம்பட்டு அது தப்பானாகிப் புணர்ச்சி தவிர்ந்து கருப்பத்தை இந்திரன் கையிற் கொடுப்ப ,
அதனை இருடிகளுணர்ந்து
அவன் பக்கனின்றும் வாங்கித் தமக்குத் தரித்தல் அரிதாகையினாலே , இறைவன் கூறாகிய முத்தீக்கட் பெய்து அதனைத் தம் மனைவியர் கையிற் கொடுப்ப, அருந்ததி யொழிந்த
அறுவரும் வாங்கிக் கொண்டு
விழுங்கிச் சூன் முதிர்ந்து சரவணப் பொய்கையிற் பதுமப் பாயலிலே பயந்தாராக,
ஆறு கூறாகி வளர்கின்ற காலத்து , இந்திரன் தான் இருடிகளுக்குக் கொடுத்த நிலையை மறந்து ஆண்டு வந்து வச்சிரத்தான் எறிய ,
அவ்வாறு வடிவும் ஒன்றாய்
அவனுடனே பொருது , அவனைக் கெடுத்துப் பின் 
சூரபன்மனைக் கொல்லுதற்கு
அவ் வடிவம் ஆறாகிய வேறுபட்ட கூற்றாலே மண்டிச்
சென்றதென்று , புராணங் கூறி்ற்று "என்பது திருமுருகாற்றுப்படை நச்சினார்க்கினியருரை(58)

இது,

"உமையொடு புணர்ந்த காம
                                       வதுவையுள்
..........................................................
பயந்தோ ரென்ப பதுமத்துப் 
                            பாயல் ."(5:28--49)
என்னும் பரிபாடற் பகுதியைத்
தழுவியது.

வள்ளி பிறப்பு

தொண்டை நாட்டில் , வௌ்ளிமலை யருகில் மேற்பாடி என்னுஞ் சிற்றூரை ,
நம்பியரசன் என்னும் வேடர் மன்னன் ஆண்டு வந்தான்.
அவனுக்குப் பெண்மக வின்மையால் , ஒரு பெண்மகப் பேறு வேண்டி மலைத்தெய்வத்தை வழிபட்டு
வந்தான்.

அக்காலத்தில் , சிவமுனி என்பவன் , அம் மலையருகில் 
ஐம் புலனையும் அடக்கிச் சிவன்மேல் மனத்தைச் செலுத்தித் தவஞ் செய்துகொண்டிருந்தான்.ஒரு நாள் ஓர் அழகிய பெண்மான்
அவனருகில் வந்து உலாவியது.அதைக் கண்டு ,
அவன் கரையிறந்து காமுற்று
மதிமயங்கிப் பேரிடர்ப்பட்டான்.
அவன் காமக் காட்சியினால்
அம் மான் கருவுற்று , உரிய காலத்தில் ஒரு பெண்மகவையீன்று , வள்ளிக்கிழங் ககழ்ந்த ஒரு குழியில் இட்டுச் சென்றது.
அக் குழவியைக் கண்ட நம்பியரசன் எடுத்து, வள்ளிக்
கிழங்குக் குழியிற் கிடந்ததுபற்றி வள்ளியென்றுபெயரிட்டுத் தன் தேவியிடங் கொடுத்தான்.
அவள் வளர்ந்தாள்.

சிவமுனிவன் இளம்பிணையைக் கண்டு மையல் கொண்டு பட்ட பாட்டை

" போர்தொழில் கடந்த
                                             வைவேற்
      புங்கவ னருளால் வந்த
சீர்த்திடு நவ்வி தன்னைச்
      சிவமுனி யென்னுந்
                                            தூயோன்
பார்த்தலு மிளைமைச் செவ்வி
       படைத்திடும் பிறனிற்
                                                    கண்ட
தூர்த்தனின் மைய லெய்திக்
     காமத்தான் சுழல லுற்றான்."

" ஏமத்தின் வடிவஞ் சான்ற
இலங்கெழிற் பிணையின் 
                                                  மாட்டே
காமத்தின் வேட்கை வைத்துக்
 கவலையா லவல மெய்தி
மாமத்த மளைபுக் கென்ன
     மனக்கருத் துடைந்த வேறா
யூமத்தம் பயன் றுய்த் தார்போ
லுனமத்த னாகி யுற்றான்."
(கந்தபு.வள்ளி.21 - 2) என்று ,
கச்சியப்ப சிவாசாரியார் என்னும் புலவர் சிறிதும் நாணமின்றிப் பாடியிருக்கின்றார்.இடக்கர் மிகுந்தனவும் இயற்கைக்கு மாறானவுமான இக்கதைகள்,
அகக்கரண வளர்ச்சியும் ஒழுக்க வுயர்வு மில்லாத ஒருவன் கட்டியன வாகும்.

முதலிலிருந்து முடிவுவரை ,
கந்த புராணம் முற்றும் கட்டுக் கதையாகும்.முருகனும் வள்ளியும் , குமரிநாட்டிலேயே
குறிஞ்சி மக்கள் உள்ளத்தில் தோன்றிவிட்டனர்.

" இந்தப் புளுகு கந்த புராணத்திலுமில்லையே !",
" கந்த புராணத்திலில்லாத புளுகு எந்தப் புராணத்திலுமில்லை " என்னும் பொதுமக்கள் கூற்றும் பழமொழியும் இங்கு கவனிக்கத்தக்கன.

முருகன் 'சரவணம் ' என்னும் நாணற்காட்டுப் பொய்கையிற்
பிறக்கவில்லை.அவனுக்கு ஓரே முகமும் இரு கையுந்தான்.
அவன் சூரபதுமன் என்வனைக் கொல்லவுமில்லை ; தேவயானை(தெய்வயானை)
என்பவளை மணக்கவு 
மில்லை.

காங்கேயன், சரவணன்,(சரவணபவன்)
ஆறுமுகன்,(சண்முகன்),
பன்னிரு கையன், கார்த்திகேயன் முதலிய கந்த புராணத்துப் பெயர்களெல்லாம் முருகனுக்கு ஒரு சிறிதும் ஏற்கா.நாற்றிசையுடன் மேலுங் கீழுஞ் சேர்ந்த அறுதிசைகளை,
முகமாகக் கொள்ளின் ,
ஆறுமுகம் என்னும் பெயர்மட்டும் முருகனுக்குப் பொருந்தும்.

கந்தபுராணம் போன்றே ,
ஏனைப் புராணங்களும் தமிழருக்கு வேண்டுவனவும்
ஏற்பனவும் அல்ல எனக்கூறி
விடுக்க.

பிராமணனுக்கு நல்லவன் என்று பொருள்படும் சுப்பிரமணியன் என்னும் வடசொற் பெயர் , முன்பு திருமாலுக்கும் சிவனுக்கும்
பெயராக வழங்கி , இன்று முருகனுக்குச் சிறப்பாக வங்கி வருகின்றது.

சான்று: பக்கம் 84 - 86,
" தமிழர் மதம் "
ஞா.தேவநேயப் பாவாணர்
பூம்புகார் பதிப்பகம்,
சென்னை 600 108
தொலைபேசி : 044 25267543.
- 'கிறுக்கு பூனை' முகநூல் பதிவு, 22.07.24

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக