புதன், 23 டிசம்பர், 2020

சிவ_மகாபுராணம்_கூறும்_முருகனின்_பிறப்பு


பார்வதி கல்யாண வைபவத்தைக் கேட்டுப் பரவசப்பட்டிருந்த நைமிசாரண்யவாசிகள் சூத புராணிகரை நோக்கி, மகா ஞானியே! மாபெரும் புண்ணிய சீலரே! சிவபபருமான் பார்வதி தேவியாரை மணஞ்செய்த பிறகு புத்திரனைப் பெற்று, தாராகாசுரனை எப்படி வதைத்தார் என்பதையும் கேட்க வேண்டும் என்று நாங்கள் மிகவும் ஆவல் கொண்டிருப்பதால் அதையும் விபரமாகக் கூறியருள வேண்டும் என்று கேட்டார்கள். சூதமாமுனிவர் சொல்லத் தொடங்கினார்.

நைமிசாரணிய வாசிகளே உமையாளான பார்வதிதேவியாரை திருமணஞ் செய்துகொண்ட பிறகு பார்வதி தேவியோடு  அந்தப்புரமடைந்து  வெகுகாலம் வரைக்கூடி மகிழ்ந்து லீலாவினோதங்கள் புரிந்து கொண்டேயிருந்தார்கள். தாரகாசுரனால் மிகவும் தொல்லைகளுக்குப்  பாத்திரமாகித் தாரகாசுரவதத்திற்கு  எப்போது சிவகுமாரன் உற்பத்தியாவானோ என்று ஏங்கி கிடந்த தேவர்களோ தங்கள் வேதனைகளுக்கு விமோசனம் தேடவேண்டி துடிதுடித்தார்கள். ஆனால் அந்தப்பரத்திலுள்ள தேவியோடு கூடி மகிழ்ந்து கொண்டேயிருக்கும் சிவபெருமானைக் கண்டு விண்ணப்பஞ் செய்ய  சந்தர்ப்பம் வாய்க்காததைக் கருதி பெருந் துயரத்தில்ந்தார்கள். அநேக வருஷங்கள் கழித்து தங்களைத் தாங்களே நிந்தனை செய்து கொண்டு தாரகாசுரனின் கொடுமைக்கு எப்படியும் ஒரு முடிவு கண்டாக வேண்டுமென்று தீவிர எண்ணங் கொண்டு, அக்கினி பகவானை அணுகி அக்கினி தேவனே! சிவபெருமான் பார்வதி தேவியாரை அணுகி தாரகனை சம்ஹாரம் செய்ய இன்னும் புத்திரோற்பத்தி செய்யவில்லையே  நீர் எங்களிலும் சிறந்தவராதலால் எங்கள் கவலையைச் சிவபெருமானிடம் சொல்லி தாரகனை வதைக்க வழி செய்யும்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டார்கள். தேவர்கள் வேண்டுகோளைத் தாமதப்படுத்த மனமில்லாத அக்கினித்தேவன் உடனே ஒரு புறா வடிவமெடுத்து சிவபெருமான் லீலா விநோதத்தில்  மூழ்கியிருந்த அந்தப்புறத்தினுள் புகுந்து சென்றான்! அப்போது சர்வாந்தாமியான சங்கரர் அந்தப் புறா வடிவத்தை கண்டு, யாரடா அவன் கபோத வடிவோடு வந்திருப்பவன்? என் வீரியத்தை இவனே தாங்கட்டும் என்று கூறி வீரியத்தை விட புறா வடிவிலிருந்த அக்கினி தேவன் அவ் வீரியத்தை வாயில் கவ்விக்கொண்டு பறந்து சென்றான்.ஆனால் சிவனாரின் வீரிய வெப்பத்தைத் தொடர்ந்து தாங்கிப் பறக்க வலுவில்லாமல் போகவே கங்கா நதியில்  விட்டு விட்டான். கங்காநதியும் அதைத் தாங்க  முடியாமல் அதைத் தருப்பைப் புல்லில் விட்டது. அந்த தருப்பைப் புல்லில் விடப்பட்ட வீரியத்திலிருந்து அதிசுந்தரத் தோற்றமாய் கண்டதும் சகல சுகங்களையும் கொடுக்கத்தக்க வன்மையும்  உடையவராய்க்  குமார ரூபத்தில் திருமுருகன் தோன்றினார். அப்தபாது நீராட வந்த ஆறு இராஜ கன்னியர்கள் அக்குழந்தையைக் கண்டு என் குழந்தை இது! என் குழந்தை இது என்று ஒவ்வொருவரும் கூறி,அக்குழந்தைக்குப் பால் கொடுத்தார்கள். அப்போது  குமாரக் கடவுளான முருகப்பபருமான் ஆறுமுகத்தோடு ஆறு இராஜ கன்னியரிடமும் பால்பருகினார்.  இதனால்தான்,முருகக் கடவுளுக்கு  ஷாண்மாதுரன்(அறுவர் புதல்வன்) என்றும் ஆறுமுகன் என்றும் பெயர் வந்தது. 

-சிவமகா புராணம்-ஞான சம்ஹிதை

குறிப்பு: நைமிசாரண்ணியம் என்பது ஒரு வனத்தின் பெயர்.பிண்ணூட்டத்தில் நூலின் பகுதி இணைக்கப்பட்டுள்ளது.
- ஆறாம் அறிவு, தினகரன் செல்லையா முகநூல் பதிவு, 23.12.20


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக