திங்கள், 2 செப்டம்பர், 2024

கோகுலாஷ்டமியா? - மின்சாரம்

 


Published August 26, 2024, விடுதலை நாளேடு

மின்சாரம்

இன்று கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாளாம். பிறப்பு இறப்பு அற்றவர் உருவம் அற்றவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் வாய்ப்பறை கொட்டுவோர் அதற்கு நேர் எதிராக அறிவு நாணயமற்ற முறையில் கடவுள் பிறந்தார் என்றும், இந்த உருவத்தில் உள்ளார் என்றும், அந்தக் கடவுளுக்கும் பெண்டாட்டிகள், வைப்பாட்டிகள், பிள்ளை குட்டிகள் உண்டு என்றும் கூறும் அபத்தத்தை ஆபாசத்தை என்னவென்று சொல்ல!
கடவுள் சண்டை போட்டார்; கொலை செய்தார் விபச்சாரம் செய்தார்; சூழ்ச்சி செய்தார்; தந்திரம் செய்தார் என்றெல்லாம் கடவுள்கள் இந்து மதத்தில் கற்பிக்கப்பட்ட திலிருந்து இந்து மதத்தின் சாக்கடை நாற்றத்தையும் இவ்வாறெல்லாம் தெருப்புழுதியாக எழுதி வைத்துள்ள ஆசாமிகளின் ஆபாச சேட்டைகளையும் ஆறறிவுள்ள மனிதர்கள் எண்ணிப் பார்க்கவேண்டாமா?

இன்றைக்குக் கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடு கிறார்களே இந்தக் கிருஷ்ணன் எப்படிப் பிறந்தானாம்?
தேவர்கள் எல்லாம் போய் உலகில் அதர்மம் அதிகமாகிவிட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்கவேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கறுப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயினவாம் இவ்வாறு கூறுவது இந்து மதத்தின் அபிதானகோசம்தான்.
எவ்வளவுக் காட்டுமிராண்டித்தனத்தில் கடவுளின் கீழ்த்தர உற்பத்தி நடந்திருக்கவேண்டும்?
கடவுள்தானே தேவர்களையும், ராட்சதர்களையும் படைத்தான் என்கின்றனர். அப்படி இருக்கும்போது கடவுளால் படைக்கப்பட்ட ராட்சதன், கடவுளால் படைக் கப்பட்ட இன்னொரு தேவர்களை எப்படித் துன்புறுத்துவான்? கடவுளின் வளர்ப்பு சரியில்லையா?

எந்த அவதாரம் எடுத்தாலும் ராட்சதனைக் கொன்றான் ராட்சதனைக் கொன்றான் என்று எழுதி வைத்துள்ளார் களே, அந்த ராட்சசன் வம்சம் அழிந்து போய்விட்டதா அல்லது தொடர்கிறதா?
வரலாற்று ஆசிரியர்கள் எல்லாம் பார்ப்பன பி.டி. சீனிவாசய்யங்கார் உள்பட, இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று விநியோகம் செய்து வந்த விவேகானந்தர் வரை ராட்சதர்கள் என்று இதிகாசங்களிலும், வேதங்களிலும், புராணங்களிலும் சொல்லப்படுபவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று எழுதியுள்ளார்களே இதன் பொருள் என்ன?
திராவிடர்களை இழிவுபடுத்த, மட்டந்தட்ட, கொன் றொழிக்க, இட்டுக்கட்டி எழுதப்பட்ட சரக்குகள்தான் இவை என்பது விளங்கவில்லையா?

நாட்டில் நடப்பது ஆரியர் திராவிடர் போராட்டம் என்று தந்தை பெரியார் சொன்னதும் தேவர்கள் அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை என்று சி. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) 18.9.1953 அன்று திருவொற்றியூரில் பேசியதும் இதனை நிரூபிக்கின்றனவே!
பார்ப்பனர்களுக்காகப் போரிட்டவர்களுக்கு விழா கொண்டாடும்போது அவர்களை எதிர்த்துப் போரிட்ட திராவிடர்கள் என்ன செய்யவேண்டும்? அந்தக் கடவுள் களை வீதிக்கு வீதி போட்டுக் கொளுத்தவேண்டாமா?
தந்தை பெரியார் இராமன் படத்தை எரிக்கச் சொன்னதும், பிள்ளையார் பொம்மைகளை வீதிகளில் போட்டு உடைக்கச் சொன்னதும் இந்த அடிப்படையில் தானே?
புத்த மார்க்கத்தை ஒழிக்கத்தான் கிருஷ்ண அவதாரம் கற்பிக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

புத்தர் ஒழுக்க நெறிகளைப் போதித்தார் கட்டுப் பாடுகளை, நியதிகளை வரையறுத்தார். ஆரியர்களின் யாகங்களை எதிர்த்தார். அவர்கள் வகுத்த வருணாசிரம அமைப்பை நிர்மூலப்படுத்தினார்.
அந்த ஒழுக்க நெறிகளுக்கு மாறாக ஆபாச உணர் வையும், விபச்சாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் ஒரு கதாபாத்திரத்தை (கிருஷ்ணனை) உருவாக்கி கவர்ச்சியைக் காட்டி மக்களை மதிமயங்கச் செய்த ஏற்பாடுதான் இது.
சினிமாக்காரர்களைக் காட்டியும், பாலுணர்வைத் தூண்டும் சமாச்சாரங்களை ஒளிபரப்பியும் மக்களை இப்பொழுது திசை திருப்பவில்லையா? மதி மயக்கம் செய்யவில்லையா? இந்த ஒழுக்கங்கெட்ட விவகாரங்களை இந்து மதத்தின் கிருஷ்ணாவதாரத்திலிருந்து கற்றுக் கொண்டவர்கள்தான் இவர்கள்.

குளிக்கும் பெண்களின் ஆடைகளைத் திருடிச் செல்வ தும், நிர்வாணமாகக் கரைக்கு வந்து இரு கைகளையும் உயரே தூக்கிக் கும்பிட்டால்தான் ஆடைகளைக் கொடுப் பேன் என்று அடாவடித்தனம் செய்ததும் தான் கிருஷ்ணக் கடவுளின் சிறப்பாம்.
இந்தக் கேவலமான கடவுளின் பிறந்த நாள் என்று கூறி அரசு விடுமுறை வேறு விடுகிறது. செல்வி ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த இந்த விடுமுறை இப்பொழுதும் தொடர்வது நியாயந்தானா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக