ஞாயிறு, 6 ஜனவரி, 2019

பார்ப்பனர் வயிற்றில் அறுத்துக் கட்டவா?

சபரிமலை சென்று இரு பெண்கள் அய்யப்பனைத் தரிசித்து விட்டார்களாம்! அடேயப்பா, எவ்வளவுக் கூச்சல்! கோயில் தீட்டுப்பட்டு விட்டதாம். சொல்லு கிறவர்கள் யார்? அர்ச்சகர்கள்தான்! இதே அய்யப்பன் கோயிலில் - அர்ச்சகர்கள் தங்கிய அறைகளில் மதுப் பாட்டில்கள் கிடந்தது எல்லாம் கண்டுபிடிக்கப்பட வில்லையா? ஒரு விபச்சாரி வீட்டில், அய்யப்பன் கோயில் பிரதம தந்திரி கண்டரரு மோகனரு கண்டு பிடிக்கப்பட்ட கதை நாற்றம் எடுக்கவில்லையா?
அப்பொழுதெல்லாம் இந்த அய்யப்பன் கடவுள் கோபித்துக் கொண்டு இடத்தைக் காலி செய்துவிட்டு வெளிநாடு ஓடி விட்டாரா? அல்லது அவமானத்தைத் தாங்க முடியாமல் தூக்க மாத்திரைதான் சாப்பிட்டாரா?
காஞ்சிபுரம் மச்சேஸ்வரன் கோயிலை தேவநாதனும், திருவல்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலை பத்ரிநாத்தும் விபச்சார விடுதியாக்கினார்களே, அந்தக் கடவுள்கள் கர்ப்பகிரகத்தைவிட்டு வெளியேறினவா?
எல்லாம் வல்லக் கடவுளுக்கு (?) ஆசாபாசம் உண்டா? ஆசாபாசம் இருந்தால் அது கடவுளா?
சிவனின் தலையிலும், பக்கத்திலும் இரு பெண்டாட்டிகள் இருக்கின்றனரே - அவர்களின் மாத விடாய்க் குறித்து சிவன் என்றைக்காவது சீறியிருப்பதாக மாதவிடாய்ப் புராணம் எழுதப்பட்டுள்ளதா?
அடப் பைத்தியங்களே! எவனோ ஒரு கிறுக்கன் எந்த காலத்திலோ உளறி வைத்ததை எல்லாம் இந்த 21ஆம் நூற்றாண்டில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு 'தை  தை' என்று ஆடுவது எந்த நோக்கத்தில்?
இதில் எல்லாம் பார்ப்பனர்களுக்குக் கொழுத்த சுரண்டல் கொடி கட்டிப் பறக்கிறது என்பதுதானே!
இப்பொழுது சபரிமலையில் என்ன நடக்கிறது? இரு பெண்கள் அய்யப்பனைக் கும்பிட்டதால் தீட்டுக் கழித்தார்களாம் - சுத்திகரிப்பு நடந்ததால் அதன் பலன் யாருக்குப் போய் சேர்ந்திருக்கிறது?
'டைம்ஸ் ஆப் இந்தியா' ஏட்டில் நேற்று வெளி வந்ததை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கருத்தூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாரே.
'பிராமணப் போஜனம்' செய்யப்பட்டதாம்; பட்டு வேட்டியும், அங்கவஸ்திரங்களும் அளிக்கப்பட்டதாம்.நல்லது நடந்தாலும் அவாளுக்கு வேட்டைதான் - அல்லது நடந்தாலும் அவாள் வயிற்றில்தான் அறுத்துக் கட்டப்படுகிறது - எத்தகைய சாமர்த்தியமான இனம்!
கோயில் கலசம் விழுந்தால், கோபுரம் இடிந்து விழுந்தால் அல்லது கோயில் தீப்பற்றி எரிந்தால் உடனே பரிகாரங்கள் என்ன - பூஜை புனஷ்காரங்கள் என்ன - யாகங்கள் என்ன! எல்லாவற்றையும் கூட்டிக் கழித்தால் அவாளின் அர்ச்சகர்களின் வருமானத்தில்தான் போய் முடியும்!


பக்தி என்ற போதை மூளையில் ஏற்றப்பட்டால் அம்மணமாக ஆடுவதற்கும் கூடக் கூச்சப்படுவ தில்லையே, வட நாட்டு சாமியார்கள் கதை  தெரிந்தது தானே! வேப்பிலையை சேலையாகக் கட்டுவதுகூட நடந்து கொண்டுதானே இருக்கிறது. (பெரியபாளையத் தம்மன்)


என்ன வெட்கக் கேடு என்றால் எச்சில் இலையில் பக்தர்கள் உருளும் அளவுக்குக் கெட்டுப் போக வேண்டுமா?
இதில்கூட இன பேதம் உண்டு, எந்தப் பார்ப்பான் எச்சில் இலையில் உருளுவான்?
சங்கராச்சாரியார் உருளுவாரா? பக்தி முற்றிய குருமூர்த்திகள் உருளுவார்களா? இராம கோபாலனோ, எச்.சிகளோ உருளுவார்களா?
இதோ ஒரு 'தினமணி' செய்தி (8.5.2006)
கரூர் அருகே நேர்த்திக் கடனை செலுத்த எச்சில் இலைகள்மீது உருளும் விநோதத் திருவிழா நடைபெற்றது.
கரூர் அருகேயுள்ள நெரூரில் ஸ்ரீசதாசிவ பிரம்மேந் திராள் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மேந்திராளுக்கு உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். 92வது ஆண்டாக உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீசதாசிவ பிரம்மேந் திராளுக்கு சிறப்பு அபிஷேகம். இலட்சார்ச்சனை செய்யப்பட்டது. அவரது திருவுருவப் படம் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, நெரூர் அக்ரஹாரத்தில் உள்ள பஜனை மடத்தில் வைத்து பூஜிக்கப்பட்டது.
இதையடுத்து அக்ரஹார வீதியில் பிரம்மாண்ட அன்னதானம் நடைபெற்றது. அதில் ஒரே நேரத்தில் சுமார் 500க்கும் அதிகமானோர் சாப்பிட்டனர்.
பின்னர் அனைவரும் எழுந்த பிறகு, மூடப்படாத எச்சில் இலைமீது சுமார் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் உருண்டனர். "நெரூரில் ஜீவ சமாதி யடைந்த ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராள். அன்னதானத்தின் போது ஒரு இலையில் அமர்ந்து உண்பார். அது எந்த இலை எனத் தெரியாததால், அனைத்து இலைகளின்மீதும் பக்தர்கள் உருண்டு நேர்த்திக் கடன் செலுத்துவது அய்தீகம்" என்றனர் பக்தர்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் நினைத்த காரியங்கள் கைகூடும். வேண்டுதல்கள் நிறைவேறியதும், இலையின் மீது உருளுவோரும் உண்டு. கோயிலுக்கு வருபவர்கள் யாராயினும் சாப்பிட மாட்டேன் எனக் கூறினால், அவரைக் கட்டாயப்படுத்தியாவது சாப்பிட வைப்பது வழக்கம். காரணம், அவரது உருவில்கூட பிரம்மேந்திராள் வந்திருக்கலாம் எனக் கருதியே. இதற்காக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட வெளியூர்களிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.
('தினமணி' 8.5.2006)
(கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்றால் மூக்குப் புடைக்கும் ஆன்மீக சிரோன்மணிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்களாம்?)
இதைவிட இன்னொரு அருவருப்பான தகவல் உண்டு. பரலோகம்போக வைக்கத்தில் சாப்பிட்ட எச்சில் இலையை விலைக்கு விற்று காசு சம்பாதிக்கும் சங்கதி.
'குடிஅரசு' இதழில் வெளி வந்த தகவல்கள் இதோ:
"வைக்கம் கோவிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலை ஒன்று சில சமயங்களில் 0.0.6 வீதம் விற்கப்படுகிறது. (அந்நாளில் இது அரையணா மதிப்பு)
வியாதியஸ்தர்களுக்கு வியாதி சவுக்கரியமாகி விடும் என்றும், சந்தானமில்லாத வர்களுக்குச் சந்தான விருத் தியாகுமென்றும் அங்குள்ள பிராமணரல்லாத ஜனங் களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது தமிழ்நாட்டில் ஒரு பிராமணனுக்கு ரூ.1000, 500 என்று விகிதம் பேசி நம்ம வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுக்குப் பணத்தைக் கொட்டி பூசை செய்துஅந்தக் கால் கழுவிய தண்ணீரைச் சாப்பிட்டால் தனது பாபம் போய் விடும் என்று நம்பும்படியாக செய்கிறதை விடப் பெரிய மோசடியல்ல"
(ஆதாரம்: 'குடிஅரசு' 9.8.1925)
இதைத் தொடர்ந்து  குடிஅரசு இதழில் 'லோகோபகாரி' ஏட்டில் வந்த செய்தி இது. இதன் தலைப்பும் 'வைக்கம் எச்சிலை" தான்.
"வைக்கத்திலே பிறந்து வளர்ந்து வாழ்பவரும் வைக்கத்திலுள்ள சத்தியாக்கிரக ஆசிரமத்தின் தற்காலக் காரியதரிசியுமான ஸ்ரீமான் கே. நாராயணன் இதுபற்றி நமக்கு  எழுதியிருக்கிறார். அவர் சொல்லுவதின் சுருக்கம்: வைக்கம் எச்சிலை சகல நோய்களையும், முக்கியமாக வயிற்று நோய்களையும், மலட்டுத்தன்மையையும் நீக்கவல்ல தென்ற நம்பிக்கை பாமர ஜனங்களுக்குள் உண்டு. வைக்கத்தம்மன் கோயில் எச்சிலைகள் பரம்பரையாக வாரியர் குடும்பத்தாருக்கு உரியன. அவர்களே கோயிலில் தாழ்ந்த வேலைகளைச் செய்கிறார்கள். அவர்களே பிராமணர்கள் சாப்பிட்ட பின் இலைகளை எடுத்து அப்புறப்படுத்துகிறார்கள். அவர்கள் இலைகளை வெளியே கொண்டு போய் மொத்தமாக நாயர்களுக்கு விற்று விடுகிறார்கள். நாயர்கள் எச் சிலைகளில் உள்ளவற்றையெல்லாம் அவற்றின் சீர் கேட்டைச் சொல்ல வேண்டியதில்லை. நன்றாகக் கலந்து கடைத் தெருவுக்குக் கொண்டு போய் பகிரங்கமாக விற்கிறார்கள். நகர பரிபாலன சபைக்கும் இந்த எச்சிலை லாபத்தில் பங்கு உண்டு. ஒரு பிராமண போஜனத்தில் வரும் எச்சிலையால் வாரியருக்குச் சுமார் 10 ரூபாய் லாபம் கிடைக்கும்.
வாரியர்களிடமிருந்து வாங்கி விற்கும் நாயர்களுக்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும். சில காலத்திற்கு முன் தெய்வ பக்தியுள்ள உயர் வகுப்பார் பலர் இதனை வாங்கித் தங்கள் நோய் தீருமென்று உட்கொண்டு வந்தார்கள். ஆனால், இப்பொழுது பக்தியை விடப் பசி காரணமாகவே தாழ்ந்த வகுப்பு ஜனங்கள் இந்த எச்சிலைகளை வாங்கி உண்கிறார்கள்."
('குடிஅரசு' 30.8.1925)
மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு என்றார் தந்தை பெரியார் ஆனால் பக்தி என்று வந்து விட்டால் மானமாவது - அறிவாவது!
சேலம் அன்னதானபட்டியில் பக்தர்கள் செருப்படி படும் செருப்படி திருவிழா இன்னும் நடைபெற்றுக் கொண்டுதானே இருக்கிறது.
இது பகுத்தறிவுக்கு அழகா என்று கேட்டால் 'சோ' போன்ற பார்ப்பனர்கள் என்ன எழுதினார்கள் தெரியுமா?
இதோ ஒரு கேள்வி - பதில்.
கேள்வி: பகுத்தறிவு என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?
சோவின் பதில்: ஏன் நிறுத்தி விட்டீர்கள்? "பித்தலாட்டம் என்றால் உங்களுக்கு ஏன் கசக்கிறது? மோசடி, ஏமாற்று வேலை, போலி வேடம் என்றெல்லாம் சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?"  என்று கேட்க வேண்டியதுதானே! இப்போதுதானே உங்கள் கேள்வி முழுமை அடையும். ('துக்ளக்' 4.3.2009).
பகுத்தறிவைப் பித்தலாட்டம் என்று சொல்லும்  ஆசாமி அவாளின் அகராதியில் அறிவு ஜீவிகளாம்!
அந்த அறிவு ஜீவிதம் என்பது - அக்ரகாரத்துப் பக்கம் வருவாய் நதி புரண்டு ஓடுவதற்காகத்தான்.
இல்லாவிட்டால் எச்சில் இலையை விலைக்கு விற்று பணத்தை எக்கில் சொருகிக் கொள்வார்களா?
ஆதாயமில்லாமல் அக்கிரகாரக் கூட்டம் ஆற்றைக் கட்டி இறைக்காது; அறிவை அழிக்கும் வேலையில் இறங்கினால்தானே அவர்களால் அறுவடை செய்ய முடியும்!
அதனால்தான் அறிஞர் அண்ணா சொன்னார் "முதலில்லா வியாபாரம், விதைக்காது விளையும் கழனி" என்று அழகாகப் படம் பிடித்துக் காட்டினார்.
இன்று "ஆஸ்திகம்" என்பது உயர் ஜாதியினரின் நலம். இன்று "நாஸ்திகம்" என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம்" என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறியதுதான் (19.2.1971) இந்த இடத்தில் நினைவிற்கு வருகிறது.
பக்தியைக் பகிஷ்கரிப்பீர்!
பகுத்தறிவைப் பயன்படுத்துவீர்!
ஏன் கொளுத்த வேண்டும் மனுதர்மத்தை?

மனுதர்மம் - அத்யாயம் 5 - சுலோகம் 148: பெண் சுயவிருப்பத்தில் வாழக்கூடாது. சிறுவயதில் தந்தை கட்டுப்பாட்டிலும், பருவ வயதில் கணவன் கட்டுப்பாட்டிலும், கணவன் இறந்தபின் பிள்ளைகள் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும். எப்போதும் தன் விருப்பத்தில் அவள் வாழக்கூடாது.
மனுதர்மம் - அத்யாயம் 5 - சுலோகம் 154: கணவன் மோசமானவனாய், கொடியவனாய் இருந்தாலும், பிற பெண்களோடு உறவு கொண்டு அலைபவனாயினும், நன்னடத்தை, நற்குணம் இல்லாதவனாயினும், பத்தினிப் பெண் என்பவள் அக்கணவனையே தெய்வமாக வழிபட்டு வாழவேண்டும்!
மனுதர்மம் - அத்யாயம் 8 - சுலோகம் 379: கொலைத் தொழில் புரிந்த மற்ற ஜாதிக்காரர்களைத் தூக்கில் போட வேண்டும், பிராமணன் கொலைக்குற்றம் செய்வானேயானால், அவனது தலை மயிரை மொட்டையடித்தலே தண்டனையாகும்.
மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 19: பெண்கள் பெரும்பாலும் விபசாரிகள் என்று அநேக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 35: ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு இவற்றில் ஆணுறுப்பே உயர்ந்தது.
மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 52: மற்றவன் மனைவியிடத்தில் மனைவியில்லாத வேறொருவன் உடலுறவு கொண்டு பிள்ளை பெறலாம்!
மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 60: கணவனை இழந்த பெண்ணை ஒரு ஆண் தன் உடல் முழுக்க நெய்யைப் பூசிக்கொண்டு, இரவில், இருட்டில் உடலுறவு கொண்டு பிள்ளை பெறலாம்!
மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 78: கணவன் சூதாடுகிறவனாய் இருந்தாலும், குடிகாரனாயிருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், மனைவி அவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். இல்லையென்றால் அவளுக்கு ஆடை, அலங்காரம், படுக்கை தராமல் விலக்கி வைக்க வேண்டும்.
மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 94: முப்பது வயது ஆண், அழகான 12 வயது பெண்ணையும், இருபத்து நான்கு வயது ஆண் எட்டு வயதுள்ள பெண்ணையும் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
பெண்களை அடிமைப்படுத்தும், இழிவுபடுத்தும் இந்தக் கேடுகெட்ட, ஒழுக்கங்கெட்ட, மோசமான மனுதர்மத்தைக் கொளுத்த வேண்டாமா? கொளுத்துவோம் வாரீர்! வாரீர்!

பிப்ரவரி 7ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மனுதர்ம எரிப்புப் போராட்டம்....

தயாராகட்டும் பட்டியல்!
தயாராகட்டும் பட்டியல்!!
- விடுதலை நாளேடு, 4.1.19

சனி, 5 ஜனவரி, 2019

விஜயபாரதத்தின் 'விளக்கெண்ணெய்' 'வெண்டைக்காய்ப்' பதில்கள்!

மின்சாரம்


ஆர்.எஸ்.எஸ். வார இதழான விஜயபாரதத்தின் (4.1.2019) கேள்வி - பதில்கள் இங்கே...

கேள்வி: ஹோம குண்டத்தில் பட்டுப் புடவைகள், பழங்கள், நாணயங்கள் போடுவது வீண்தானே?

பதில்: அக்னியில் நிவேதனம் செய்வதை தெய்வம் ஏற்று நமது எண்ணங்களை பூர்த்தி செய்யும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை. இதுதான் பதில்.

ஓ, அப்படியா? முன்னோர்கள் நம்பிக்கை எல்லா வற்றையும் அப்படியே ஏற்றுக் கொண்டுதான் வாழ் கிறோமா? முன்னோர்கள் போல்தான் முன் குடுமி வைத்துள்ளார்களா? பஞ்சகச்சம் போய் பேண்ட், சூட் வந்தது எல்லாம் எப்படி?

ஏன் கோயில்களில் தீவட்டியைத் தானே முன் னோர்கள் பிடித்து வந்தனர். இன்று வெள்ளைக்காரன் கண்டுபிடித்த நியான் விளக்கு வந்தது எப்படி?

ஆள் வடம் பிடித்து இழுத்து முட்டுக்கட்டைகள் போட்டு நிறுத்தப்பட்டத் தேர்களுக்கு ஹைட்ராலிக் பிரேக் வந்தது எப்படி?

அது சரி கடவுளுக்குத் தான் உருவம் இல்லையே. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் ஆயிற்றே! அவர் எப்படி அக்னிபகவான் ஆனார்? இரவு உணவு இல்லாமல் 20 கோடி பேர் வாழும் ஒரு நாட்டில் உணவுப் பொருள்களை நெருப்பில் கொட்டுவதும், குழவிக் கல்லுக்குப் பாலாபிஷேகம் செய்வதும்தான் முன்னோர்கள் வழியா?

பாட்டன் வெட்டியது என்பதற்காக உப்புத் தண்ணீர்க் கிணற்றைப் பயன்படுத்தி சமைக்க முடியுமா?

அக்னி - தெய்வமாம்; நாம் கொடுக்கும் பொருள்களை ஏற்று நமது எண்ணங்களைப் பூர்த்தி செய்யுமாம்.

இதற்கு அரசாங்கமே தேவையில்லையே! அரசாங்கமே அக்னியை வளர்த்து ரிசர்வ் வங்கியில் உள்ள ரூபாய்க் கட்டுகளையும், தங்கக் கட்டிகளையும் நெருப்பில் போட்டு  நமது கயிலாயநாதன் பிராந்தியங் களைக் கைவசம் வைத்துள்ள சீனாவிலிருந்து மீட்க வேண்டியதுதானே! 'ரபேல்' வம்புகள் எல்லாம் தேவையில்லையே!

என்ன சாமர்த்தியம்! முட்டாள்தனமாகவும், சிறுபிள்ளைத்தனமாகவும் ஒன்றை செய்வது - அது பற்றிக் கேள்வி கேட்டால் நமது முன்னோர்களின் நம்பிக்கை என்னும் படுதாவுக்குள் மூஞ்சைப் பதுக்கிக் கொள்வது இவை எல்லாம் முற்றிவிட்ட பைத்தியத்தின் கிழிசல் இல்லாமல் வேறு என்னவாம்?

«««


அடுத்த கேள்வி: பாவ புண்ணியம் என்பதெல்லாம் உண்மையா?

பதில்: பலரை தவறுகள் செய்யாமல் தடுப்பது இந்தப் பாவ புண்ணியம் என்ற நம்பிக்கைதான் காரணம்.

பார்த்தீர்களா - பார்த்தீர்களா? இங்கும் நம்பிக்கை வந்து குதித்துவிட்டதை.

தவறு செய்யாமல் தடுக்கிறதாம். இந்தப் பாவ புண்ணியம் நம்பிக்கை. அப்படியென்றால் காஞ்சி ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் ஏன் கம்பி எண்ணி னார்கள்?

நாதுராம் கோட்சே ஏன் காந்தியைக் கொன்றான்? கீதை வாக்கியத்தை எடுத்துக்காட்டிதானே காந்தியைக் கொன்றது தர்மம்தான் என்று நீதிமன்றத்தில் கூற வில்லையா! பாவம் செய்து விட்டு அதற்குக் கழுவாயும்/பிராயச் சித்தமும் வைத்த பின்னர் பாவம் செய்ய அஞ்ச வேண்டிய அவசியம் எங்கேயிருந்து குதிக்கிறது?

12 வருடம் பாவம் செய்தவன் கும்பகோணம் மகா மகக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டு விடுவதாலேயே பாவங்கள் போகும் என்றால் பாவம் செய்ய பயப்பட வேண்டிய அவசியம் என்ன? குறைந்த முதலீடு - கொள்ளை லாபம் தானே இந்த ஏற்பாடு (மகாமகக் குளத்தில் 28 விழுக்காடு மலம், 40 விழுக்காடு மூத்திரம் என்பது தஞ்சை மாவட்ட ஆட்சியர் பரிசோதனைக்குப் பின்னர் கொடுத்த அறிக்கை) இதனால் இ.கோலி, ஓ157-எச்7 பாக்டீரியாக்களால் உணவை நஞ்சாக்கும் - மஞ்சள் காமாலை போன்ற நோய்களை உருவாக்கும். இது அல்லாமல் என்னென்ன பொருளைக் கொடுத்தால், அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்ற பட்டியல் வேறு.

பக்தி முட்டாள்தனத்துக்கும், சுரண்டலுக்கும் - ஒழுக்கக்கேட்டுக்கும் அளவேயில்லையா?

«««




கேள்வி: திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் என்ன விசேஷம்?

பதில்: தர்பாரண்யேஸ்வரரை சனி பகவான் வழிபட்ட தலம். மேடையில் வாய் கிழிய நாத்திகம் பேசும் தி.க., தி.மு.க., கம்யூனிஸ்ட் தோழர்கள்கூட தங்களது அரசியல் வாழ்க்கையில் ஏற்படும் தொல்லைகளிலிருந்து விடுபட சனீஸ்வரரை நாடி செல்கிறார்கள்.

முதல் கேள்விக்கு அளித்த பதில்தான் இதற்கும். "ஒன்றே கடவுள் அவன் உருவம் அற்றவன்" என்று சொன்னபின் அக்னி பகவான் எங்கே வந்தான்? சனி பகவான் எப்படி வந்தான்? விநாயகன் வந்த விதம் எப்படி? அவன் சகோதரன் சுப்பிரமணியன், தோப்பனார் சிவனும், தாயார் பார்வதியும் என்று கடவுளுக்குக் குடும்பங்கள், கூத்தியாள்கள் வந்த தெல்லாம் எப்படி? (மதுரையில் அழகர் வண்டியூருக் குப் போவது, சீரங்கப் பெருமாள் உறையூருக்குப் போவது)

ஓசை உள்ள கல்லை நீர்

உடைத்து இரண்டாய் செய்துமே

வாசலில் வைத்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்

பூசனைக்கு பதித்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர்

ஈசனுக்கு உகந்தகல் எந்தக் கல்லு சொல்லுமே?

என சிவவாக்கிய சித்தரின் பாடலுக்கு 'விஜயபாரதம்' பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.

சனீஸ்வரனை எந்த தி.க.காரன் நாடி செல்லுகிறான்? விஜயபாரதத்துக்குச் சற்றேனும் அறிவு நாணயமிருந்தால் ஆளைக் குறிப்பிட்டுச் சொல் லட்டும் பார்க்கலாம். அழி - பழி என்பது ஆரியத்தின் பிதுரார்தசொத்து போலும்!

இப்படிதான் சனீஸ்வரன் கோயில் பற்றி ஒரு 'புரூடா' விட்டார்கள்!

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்குமேலே பறக்கும் செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படுகின்றன என்று ஒரு கதை கட்டி விட்டனர். இதுபற்றி 'சன்' தொலைக்காட்சி பேட்டியில் (24.11.2015 காலை 8.00 - 8.30 மணி) சந்திராயன் புகழ் மயில்சாமி அண்ணாதுரை என்ன கூறினார்? "கிட்டத்தட்ட 10 இந்திய செயற்கைக் கோள்கள் பூமியைச் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றிரண்டாவது திருநள்ளாறுக்கு மேலே போயாகனும். இது போலவே புரளிகளை செய்கிறார்கள் என்பதற்காக எங்கள் குழுவினர் ஆய்வு செய்து பார்த்தோம். திருநள்ளாறில் இந்திய செயற்கைக்கோள்கள் எதற்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டதில்லை" என்று அழுத்தமாகப் பதிவு செய்தாரே - பார்ப்பனப் பித்த லாட்டத்திற்கு உச்ச வரம்பே இல்லையா?

«««


கேள்வி: எனது விருப்பம் நிறைவேறினால் நான் கடவுளுக்கு மொட்டை போடுகிறேன் என வேண்டுதல் செய்வது சரிதானே?

பதில்: எல்லாம் நம்பிக்கைதான் காரணம் எப்படியோ பக்தி இருந்தால் சரி....

பார்த்தீர்களா - இங்கும் அந்த நம்பிக்கை மூடுதிரை வந்து குதித்து விட்டதே. நம்பிக்கையை நம்பினால் நம்ப வைத்துக் கழுத்தறுத்து விடுவார்கள்.

மொட்டை போடுவதற்கு நாணயமான பதில் உண்டா? நம்பிக்கைதான் காரணமாம். நம்பிக்கையில் இரண்டு வகை உண்டு. ஒன்று தன்னம்பிக்கை - வாழ்வை உயர்த்துவது - இன்னொன்று மூடநம்பிக்கை - இன்னும் கெட்டுப் போறேன் என்ன பந்தயம் கட்டுகிறாய் என்பது. கெட்டுப் போவது என்று முடிவு செய்து விட்டால் பந்தயம் வேறு கட்ட வேண்டுமா?

கடைசியாக என்ன எழுதுகிறது விஜயபாரதம்? எப்படியோ பக்தி இருந்தால் சரி என்கிறது. இங்கேதான் கோணிப் பைக்குள்ளிருக்கும் பூனைக்குட்டி வெளியே வருகிறது.

பக்தி வந்தால் புத்தி போய் விடும் அல்லவா! புத்தி போனால் மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் இவற்றைக் கலக்கிப் பார்ப்பானுக்குத் தட்சணை கொடுத்து மொடக் மொடக்கென்று பயபக்தி யோடு பஞ்சகவ்யம் என்று குடிப்பான் அல்லவா! அதுதான் எப்படியோ பக்தி இருந்தால் சரி என்பது.

ஆனால் ஒன்று - இந்த மூத்திரக் கலவையைக் கண்டிப்பாக சங்கராச் சாரி குடிக்க மாட்டார் - விஜய பாரதத் தார்கள் குடிக்க மாட்டார்கள். இராம. கோபாலனோ,  இல. கணேசனோ, 'எச்'சகளோ குடிக்கவே மாட்டார்கள்.

அடி மாட்டுப் பக்தி கொண்ட 'சூத்திரனும்', 'பஞ்சமனும்' தான் குடித்துத் தொலைவான். இந்த அஸ்தி வாரத்தில் தான் அவாளின் 'ரேக்ளா' ஜாம் ஜாமென்று ஓடுகிறது.



«««


கேள்வி: பெண்களின் சக்தி வாய்ந்த ஆயுதம் எது?

பதில்: பொதுவாக மனைவி, அம்மா, ஆகியோர் கடைசியில் பயன்படுத்தும் ஆயுதம் கண்ணீர்தான்.

எப்படிப்பட்ட பதில்? பெண்கள் என்றாலே கண்ணீர் தானாம். அவாளின் இந்துத்துவா அகராதியில் இதுதான் பொருள். அழுமூஞ்சி என்கிறார்களா? கோழை என்கிறார்களா? அழுது சாதிப்பவர்கள் என்கிறார்களா?

பெண்களை அய்ந்தாம் வருணத்தவர்களுக்கும் கீழேதானே வைக்கிறது இந்து மதம். மனுதர்மம் ஒன்ப தாம் அத்தியாயம் 19ஆம் சுலோகத்தைக் கேளுங்கள் - கேளுங்கள்.

"மாதர்கள் பெரும்பாலும் விபசார தோஷமுள்ளவர் களென்று அனேக சுருதிகளிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன" - இதுதான் மனுதர்மம். அதன் மறுபதிப்புதானே விஜயபாரதத்தார்கள்.

தன்னைப் பெற்ற தாயும், உடன் பிறந்த சகோதரியும், பெற்றெடுத்த மகளும் அந்தப் பெரும்பாலோரில் அடங்குவார்கள் என்றால் இந்த வெட்கக் கேட்டை என்னென்று சொல்ல! அதனால்தான் அந்த மனு தர்மத்தைக் கொளுத்தும் போராட்டத்தை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி அறிவித்துள்ளார் தமிழர் தலைவர். (பெண்களே திரண்டு எழுவீர் என்பதே கழகத்தின் வேண்டுகோள்)

«««


கேள்வி: 'தேசம் காப்போம்' என்ற பெயரில் திருமாவளவன் ஒரு மாநாடு ஏற்பாடு செய்துள்ளாரே?

பதில்: அது சரி.. 'தேசம்' என்ற சொல்லே சமஸ் கிருதமாச்சே!

இதுதான் பதில், கேள்வி எதைக் குறிக்கிறது? பதில் எங்கே போகிறது?

பந்தை அடிக்க முடியாதவர்கள் காலை அடிப்பார்களே - அந்தக் கெட்ட நடத்தைதான் (Foulgame) இவாளுடையது.

அந்த சொல்லில்தான் பிரச்சினை.... மற்றபடி அந்த மாநாட்டை 'விஜயபாரதம்' வரவேற்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

சமஸ்கிருதமாச்சே என்று அவர்கள் சொல்லுவது அவாளின் உள்ளுணர்வின் தாண்டவம் - அதனைக் கக்கி விட்டார்கள் பார்த்தீர்களா? என்னதான் மூடி மறைத்தாலும் பார்ப்பனத்தனம் முண்டியடித்துக் கொண்டு வெளியில் வந்துவிடுகிறதே!

- விடுதலை நாளேடு, 5.1.19

வனிதா மதில் - பெண்கள் சுவர்

கேரளத்தில் இடதுசாரி முற்போக்கு சக்திகள் அடங்கிய சமூக சீர்திருத்த அமைப்புகள் நடத்தும் "வனிதா மதில்" என்னும் மாபெரும் நிகழ்வு நடந்து உள்ளது...!

நீதியற்ற முறையில், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள் போன்ற வெவ்வேறு காரணங்களால் ஒடுக்கபட்டு நீதிமறுக்கப்பட்ட ஒரு பிரிவினரை, அந்த அநீதியிலிருந்து விடுவிக்க நடக்கும் முயற்சிகள் அனைத்தும் சமூக சீர்திருத்த இயக்கங்கள் ஆகும்...!

ஜாதிய ரீதியாக தாழ்த்தப்பட்டவர்கள் என்ற முறையிலும், பெண்கள் என்ற முறையிலும் இந்த கொடுமைகளை மிக அதிகமாக அனுபவித்து வரும் நிலை இந்தியாவில் இந்த நவீன காலத்திலும் நடைமுறையில் உள்ளது என்பது சமூக வளர்ச்சிக்கு முரணான விஷயங்கள் ஆகும்...

ஒரு காலத்தில் கேரளாவில்...இத்தகைய கொடுமைகள் இந்தியாவின் மற்ற பகுதிகளை விடவும் அதிகமாக இருந்து வந்தன...

ஸ்ரீ நாராயண குரு, அய்யன் காளி, சட்டம்பி சாமிகள், அய்யா வைகுண்டர் போன்றோர் இத்தகைய அநீதிகளுக்கு எதிரான சமூக சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடிகளாக செயல்பட்டனர்...

பின்னாளில் காங்கிரசிலுள்ள  முற்போக்கு  எண்ணங் கொண்டவர்கள் இத்தகைய போராட்டங்களை தொடர்ந்தனர்...

அதற்கு அடுத்த காலகட்டத்தில் காங்கிரசில் இருந்து செயல்பட்ட சோஷலிஸ்டுகள் இந்த  செயல்பாடுகளை இன்னும் வேகத்தோடு முன்னெடுத்தார்கள்...

பின்னாளில் காங்கிரசில் உள்ள சோஷலிஸ்டுகள் கம்யூனிஸ்டுகளாக மாறி செயல்பட ஆரம்பித்த பின்னர், அத்தகைய போராட்டங்கள் வர்க்க ரீதியான போராட்டமாக பண்பு வடிவான மாற்றமடைந்ததன் மூலம் நிலவுடமையின் நிழலில் சுகபோகமாக வாழ்ந்து வந்த ஜாதிய, சடங்கு, சம்பிரதாய, பெண்ணடிமைக் கொடுமைகள் என அனைத்து விதமான கொடுமைகளும் சொல்லத்தகுந்த அளவில் உடைதெறியப் பட்டன....

இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்று வந்த சுவாமி விவேகானந்தர்...
கேரளத்தில் அக்காலத்தில் நிலவிய இத்தகைய கொடுமைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்....கொடுங்கல்லூர் என்ற இடத்தில் குடிக்க தண்ணீர் கேட்ட அவரிடம் "நீ என்ன ஜாதி?" என்று கேட்ட கேள்வியின் கொடூரத்தால் ஆடிப்போன விவேகானந்தர்..."இந்த ஊர் பைத்தியக்காரர்களின் கூடாரம்" என்று கேரளத்தை  வர்ணித்தார்....பல ஊர்களிலும் சுற்றிவந்த தான்,  இத்தகைய கொடுமைகளை வேறு எங்கும் காணவில்லை என்று மனம் வெதும்பினார்...இத்தகைய கொடுமைகளை மாற்றி  இந்த சமூகத்தை மீட்பது மிகவும் கடினம் என்று கருதினார்.

கேரளத்தின் நம்பூதிரி சமூகம் என்ற பிராமணீய ஆதிக்கம் நிறைந்த ஜாதி, மேல்ஜாதி என்று கருதப்படும் நாயர் சமூகம் உட்பட மற்ற அனைத்து ஜாதியினரையும், அதுபோலவே தங்கள் நம்பூதிரி சமூகம் உள்ளிட்ட எல்லா சமூக பெண்களையும், தங்களது  அடிமைகளாகவே நடத்தினர். 

நாயர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எப்போது வேண்டுமென்றாலும் பாலியல் ரீதியாக பயன்படுத்தும் உரிமை உள்ளதாக சொல்லி, நாயர் சமூக பெண்களை பாலியல் ரீதியாக சூறையாடி வந்தனர்...நள்ளிரவில் தென்னை ஓலை இலக்குகளை சேர்த்து கட்டிய "ஓலைச் சூட்டு"  பந்தத்தை பிடித்துக்கொண்டு தனது எடுபிடி கணக்குப் பிள்ளை வழிகாட்டியவாறு முன்னே செல்ல, அவரைத் தொடர்ந்து வரும் நம்பூதிரி, முன்கூட்டியே மனதில் நினைத்திருக்கும் ஏதாவதொரு நாயர் சமூத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டின் முன் நின்றால்...அந்த கணக்குப் பிள்ளை அந்  வீட்டின் கதவைத் தட்டுவார்...உடனே அந்த வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து பார்த்துவிட்டு...வந்திருப்பவர் அந்த ஊரின் நிவுடமையாளரான நம்பூதிரி என்று அறியும் போது உள்ளே சென்று தனது பாயையும் தலயணையையும் எடுத்துக்கொண்டு வெளியில் உள்ள திண்ணையில் வந்து அமர்ந்து கொள்ளவேண்டும்...அதிகப்படியான  சலுகையாக கணக்குப்பிள்ளை கொண்டுவரும் வெற்றிலைப் பெட்டியில் உள்ள வெற்றிலையை அவருடன் அமர்ந்து   மென்றவாறே உரையாடிக் கொண்டு  நம்பூதிரியின் மிதியடியையும் குடையையும் காவல் காக்கும் நாயைப் போன்று கூனிகுருகி அமர்ந்து கொள்ளலாம்...

சமூக அந்தஸ்து பெற்ற நாயர் சமூகத்திற்கே இதுதான் தலைவிதி என்றால் மற்ற ஒடுக்கப்பட்ட சமூகங்களை எப்படி நடத்தி இருப்பார்கள்...?

இவாறான பாலியல் அத்துமீறல்களை நம்பூதிரி சமூக ஆண்கள், நாயர் சமூகப் பெண்களிடம் நடத்துவதன் மூலம் உருவாகும் வாரிசுகளுக்கு, அந்த நம்பூதிரியை அப்பா என்று அழைக்கும் உரிமை மறுக்கப் பட்டிருந்தது...நம்பூதிரிகள் மூலம் நாயர் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அப்பா என்று அழைக்கும் உரிமையை கேட்டு நாயர் சமூகமும் போராடும் நிலைமையில் கேரளம் ஒருகாலத்தில் இருந்தது என்பதிலிருந்தே பிராமணீயத்தின் நச்சு வேர்கள் எப்படி ஆழப் பரவியிருந்தது என்பது விளங்கும்...

அதுபோலவே நம்பூதிரி சமூகப் பெண்களின் நிலை...

நம்பூதிரி குடும்பத்தில் உள்ள  மூத்த ஆண் மட்டுமே முறைப்படி ஒரு நம்பூதிரி பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும்...அந்த பெண், தனது  கணவரின் உடன்பிறந்த அனைவருக்கும் பாலியல் ரீதியான தேவைகளை தீர்த்துவைக்க கடமைப்பட்டவர் என்ற அநீதியான நடைமுறை இருந்தது. தனது கணவரின் மற்ற சகோதரர்கள் யாரும் ஒரு நம்பூதிரிப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளக் கூடாது. வேண்டுமென்றால்  நாயர் பெண்ணை புடவை கொடுத்து சமந்தம் செய்து கொள்ளலாம். ஆனால் அது திருமணம் என்று அழைக்கப்படாது, மாறாக "சம்பந்தம்" என்றே அழைக்கப்படும்...அப்படியே ஒரு நம்பூதிரி பெண்ணை திருமணம் செய்தாலும் அது அங்கீகரிக்கப்படாது. அதன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடையாது..அங்கீகரிக்கப்பட்ட வாரிசுகள் வேண்டுமெனில் மூத்தவரின் மனைவியின் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளலாம்...அதுபோலவே நம்பூதிரி பெண்  குழந்தைகளை முதியவர்களுக்கு  திருமணம்  செய்து வைப்பது...அவ்வாறு நடக்கும் திருமணம் முடிந்து சிலகாலத்தில் அந்த கிழவன் இறந்து போனால் அந்த குழந்தை விதவையாக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் மூலையில்  அடைபட்டுக் கிடக்கவேண்டும்.

ஆக நம்பூதிரிப் பெண்களுக்கு கிடைக்கும் ஒரே சலுகை என்னவென்றால், தீண்டாமை என்னும் கொடுமையால் வீட்டிற்கு வெளியில் நிற்காமல் வீட்டிகுள்ளே பிரவேசிக்கலாம்...அதுவும் மாதவிலக்கு காலங்களில் நம்பூதிரி பெண்களும் தீண்டத்தகாதவர்கள் தான்...

அதுபோலவே இன்னொரு கொடுமை...நம்பூதிரி சமூகத்தில் இளம் கன்னிப்  பெண்கள் இறந்துபோனால்...அவர்கள் கன்னி கழியாமல்  தகனம் செய்யப்படக் கூடாது என்ற ஒரு கேவலமான மூடநம்பிக்கை...அதற்காக பரிகாரம் என்ற பெயரில் அநாகரிகமான சடங்கு ஒன்று இருந்தது...அந்த இளம் பெண்ணின் பிணத்துடன் சண்டாள ஜாதியைச் சேர்ந்த ஒரு ஆண் உறவு கொள்ள வேண்டும்..."சவ போகம்"  என்று அழைக்கப்படும் இந்த காட்டுமிராண்டித்தனமான சடங்கை நிகழ்த்த, தனியாக ஒரு ஜாதிப்  பிரிவினரை சண்டாளர் என்ற பெயரில் வைத்திருந்தார்கள். உயிருடன் இருக்கும் போது அந்த சண்டாளர் சமூகத்தில் உள்ள ஒரு ஆணுக்கு, சம்பந்தப்பட்ட நம்பூதிரிப் பெண்ணே விரும்பினால் கூட திருமணம் செய்ய முன்வராதவர்கள், அந்த பெண் இறந்த பிறகு சடங்கு என்ற பெயரில் பிணத்துடன் போகம் செய்ய கட்டாயப்படுத்தும் கொடூரம் உலகில் வேறு எங்கும் நிகழ்ந்திருக்க முடியாது...

அதுபோன்று தாழ்த்தப்பட்ட பெண்கள் மாராப்பு சேலையைப் பயன்படுத்த, வரிவிதித்த, மார்பின் அளவைப் பொறுத்து வரிவிதித்த கேவலமான அரசியலமைப்புச் சட்டம் வைத்திருந்த ஊராக ..."முலை வரி" என்ற  பெயரில் வசூலிக்கப்பட்ட வரியை செலுத்த முடியாமல் மாரப்பு இல்லாமல் இருந்த பெண்கள் நிறைந்த நிலையிலிருந்த கேரளம்... அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த நங்கோலி என்ற பெண் முலைவரி கேட்டு வந்தவர்களிடம் தனது மார்பை அறுத்து சேப்பம் இலையில் வைத்து கொடுத்துவிட்டு தன்னை மாய்த்த கொடூரம்...

மலையாள மொழியின் முதல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச சேர்ந்த பெண் கலைஞரான ரோசி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் நடித்த திரைப்படத்தை தானே பார்க்கமுடியாமல் போன கொடூரம் நிகழ்ந்த கேரளம்...

விவேகானந்தர், மாற்றுவது மிகவும் கடினம் என்று கருதிய  கேரளம் இன்று...

பல்வேறு சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் இத்தகைய கொடுமைகள் யாவும் பெருமளவில் தகர்த்தெறியப்பட்டுள்ளன. இந்தியாவின் முன்னோடி மாநிலமாக, ஒப்பீட்டளவில் ஜாதிவேற்றுமைகள்  ஒழிக்கப்பட்ட  மாநிலமாக, வாழ்க்கைத்தரம் உயர்ந்த மாநிலமாக  தலைநிமிர்ந்து நிற்கிறது...

ஆனாலும் பிற்போக்கு சக்திகள் காலச்சக்கரத்தை பின்னோக்கி நகர்த்த முயல்கின்றன...சபரிமலை பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அமுல்படுதவிடாமல் இரட்டை நிலைபாடுகளுடன் நின்று சமூகத்தை குழப்பத்தில் ஆழ்த்தி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட முயலும் சங்க பரிவார் சக்திகள், தொடர்ந்து பிற்போக்குத்தனமான செயல்களை செய்ய முயல்கின்றன...

அவற்றை முறியடித்து...கேரளம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் சமூக சீர்திருத்த இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற சிந்தனையை  செயல்படுத்த முன்னத்தி ஏராக கேரளம் எடுக்கும் ஒரு அரிய முயற்சியே...இந்த "வனிதா மதில்"

கேரளத்தில் உள்ள கம்யூனிஸ்டுகள் உட்பட ஏராளமான முற்போக்கு எண்ணம் படைத்த அமைப்புகள் இந்த நிகழ்வை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சீராகத் திட்டமிட்டு சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களைத் திரட்ட முயல்கின்றனர்...

கேரளத்தின் வட எல்லையான காசர்கோட்டில் துவங்கி தென் எல்லையான திருவனந்தபுரம் வரை நீண்டு கிடக்கும் சுமார் 640 கி.மீ தூரத்தை இடைவெளியின்றி, பெண்களை மட்டும், கைகளைக்கோர்த்து சங்கிலியாக அல்லாமல், தோளோடு தோள் சேர்ந்து நெருக்கமாக நின்று அணிவகுக்கச் செய்து சமத்துவம் என்ற சிந்தனையை சமூகத்தில் இன்னும் இன்னும் ஆழமாக விதைக்கச் செய்யும் இந்த முயற்சி உலக ஊடகங்களையும் கூட திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது...

BBC தொலைக்காட்சி மாலை அரைமணி நேரம் நேரலையாக ஒலிபரப்ப திட்டமிட்டுள்ளது...

பெண்கள் மட்டும் அணிதிரளும், உலகிலேயே மிகப்பெரும் இந்த நிகழ்வை பற்றி கேள்விப்பட்டவுடன் அதை  ஒரு கின்னஸ் சாதனையாக பதிவு செய்யும் செயலில் கின்னஸ் சாதனை அங்கீகரிக்கும் குழுவினர் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளனர்...கடந்த இரண்டு நாட்களாக அவர்கள் அதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டுவருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன...இந்த வனிதா மதிலின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஆராய்ந்து இடைவெளி ஏதுமுள்ளதா என்று அறிய ஒரு கிலோமீட்டருக்கு ஒரு  ஒளிப்பதிவாளர் என்ற முறையில் சுமார் 640 ஒளிபதிவாளர்களை, கின்னஸ் சாதனையை பதிவு செய்யும் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

சுமார் 50 லட்சம் பெண்கள் நிகழ்வில் பங்கேற்பதுடன் 5 லட்சத்திற்கும் அதிகமான ஆண்கள் இந்த செயல்பாடுகளுக்கு துணை நிற்பார்கள் என்றும் கணக்கிடப்பட்டது....

சமூக சீர்திருத்தப் போராட்டம் உள்ளிட்ட எத்தகைய போராட்டமென்றாலும் சமூகத்தின் சரிபாதியான பெண்களின் பங்கேற்பு மிகவும் அவசியம்...அதிலும் அவர்களே அதுபோன்ற போராட்டங்களுக்கு  துவக்கப் புள்ளியானது இன்னும் சிறப்பு...!

தமிழகம் உட்பட இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் இத்தகைய முயற்சிகள் நடக்க இது ஒரு துவக்கப்புள்ளியாக அமைந்தது...!

வென்றது இந்த முயற்சி...!

  "வனிதா மதில்" வரலாறு படைத்தது...!

#சமூக_சீர்திருத்த_இயக்கங்கள்_வெல்லட்டும்