சனி, 19 செப்டம்பர், 2015

விபச்சாரமும் ஜாதியும்

Image result for சாதி
பொதுவாக ஜாதி என்பது இந்துக்கள் என்பவர் களுக்குள் ஆரியக்கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர் களுக்குள் மாத்திரம் தான் கடவுளால் கிருஷ்டிக்கப்பட்டது என்கின்ற கொள்கையின் மீது நான்கு வருணங்களாக அதுவும் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.
இவை முறையே ஒன்றுக்கொன்று, தாழ்ந்ததாகவும் கடைசி ஜாதி என்பதுமிக்க இழிவானதாகவும் கருதப்படுவதாக குறிக்கப்பட்டிருக்கின்ற விபரம் யாவரும் அறிந்ததேயாகும்.
இப்படி இருந்தாலும் இப்போது அநேக ஜாதிகள் இருப்பதற்கு என்ன காரணம் என்று கவனித்துப் பார்ப்போமானால் அதற்குக்கிடைக்கும் சமாதானம் மிகமிக இழிவைத் தரத்தக்கதாகவே இருப்பதை உணரலாம்.
அதாவது ஆதியில் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட நான்கு வருணத் தாரும் தங்களில் ஜாதிமுறைதவறி கலப்பு விவாகம் செய்து கொண்டதாலும் கலப்பு விபசாரம் செய்து கொண்டதாலும் ஏற்பட்ட பிரிவுகளென்றும் அப்படிப்பட்ட பிரிவுகளுக்கு பஞ்சம ஜாதியார்கள் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்ற தென்றும் ஆதாரங்களில் இருக்கின்றன.
அப்படிச் சொல்லப்படுவதிலும் இப்பஞ்சம ஜாதிகள் என்பது இப்போது நமது நாட்டில் பெரும்பான்மையாய், இருக்கும் பல முக்கியமான ஜாதிக்காரர்கள் என்பவர்களே பெரிதும் இந்த விபசாரப் பெருக்கால் ஏற்பட்ட பஞ்சமஜாதிகள் என்றே காட்டப்பட்டிருக்கின்றன. அந்த விபரத்தை தமிழ் அகராதியில் உள்ளபடி மற்றொரு பக்கம் பிரசுரித்திருக் கின்றோம்.
ஆகவே அதில், உதாரணமாக, இன்று தமிழ் நாட்டில் பிரபல ஜாதியும் பிரமுக ஜாதியும், என்று சொல்லில் கொள்ளப்படுவதான வேளாள ஜாதியார் என்னப்படுபவர்களே பஞ்சம் ஜாதியில் சேர்ந்தவர்கள் என்றும், பஞ்சம ஜாதியிலும் பிராமணன் சத்திரிய குலப்பெண்ணை சோரத்தால் கலந்ததால் பிறந்தவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கின்றன.
இவர்களில் இந்தப் படியான வேளாளர் என்பவர்களில் விவசாயம் செய்பவர்களாயிருந்தால் அவர்களுக்கு காணியாளர் என்று பெயர் என்றும், மற்றபடி சிற்றரசு, மந்திரித்துவம் முதலிய பதவிகளில்  இருப்பவர்களாயிருந்தால்  அவர்களுக்கு வேளான் சாமந்தர் என்கின்ற பெயர் என்றும், குறிக்கப்பட்டிருப்பதுடன் இவற்றிற்காகாதாம், சுப்ரபோதகம், பிரம்ம புராணம் வைகாநசம், மாதவியம், சாதிவிளக்கம், என்கின்ற நூல்கள் என்றும், குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
தவிர மேல்கண்ட பிராமாணஜாதி ஆண், சத்திரிய ஜாதி பெண்ணை விவாகம் செய்து கொண்டதால் பிறந்த பிள்ளைகளே சவர்ணர் எனவும் தெலுங்கர் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதாவது இது தெலுங்கு பாஷை பேசும் தெலுங்கு தேசத்தவனேவரையும் குறிப்பிடத் தக்கதாகவே குறிக்கப்பட்டிருக்கிறது.
அதுபோலவே பிராமணன் வைசியப் பெண்ணுடன் கல்யாணத்தால் பிறந்த பிள்ளை அம்பட்டன் என்றும்  சோரத்தால் பிறந்த பிள்ளைகள்  குயவர் என்றும், நாவிதர் என்றும், குறிக்கப்பட்டிருக்கின்றது. அது போலவே பிராமணன். சூக்திரப் பெண்ணுடன் கல்யாணத்தால் பிறந்த பிள்ளை பரசவர், அதாவது செம் படவர் என்றும் சோரம் செய்ததால் பிறந்தவர் வேட்டைக்காரர் அதாவது வேடுகர், என்றும், குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பிராமணப்பெண்ணுடன் சூத்திரன் விபசாரம் செய்ததால் பிறந்தவர்கள் சண்டாளர்கள் என்றும் குறிப்பிடபட்டி ருக்கின்றன.
பிராமண குலப்பெண்களுடன் சண்டாளர் கூடிப்பிறந்த பிள்ளைகள் சருமகாரர். அதாவது சக்கிலிகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சத்திரியகுலப் பெண்ணுடன் சண்டாளர் முதலியவர்கள் சேர்வதால் பிறந்த மக்கள் வேணுகர், (அதாவது வேணுகானம் செய்பவர்களும்) கனகர் (அதாவது தங்கவேலை செய்பவர்களும்) சாலியர் (அதாவது சாலியர் முதலிய நெசவு வேலை செய்வோர்களும்) ஆவார்கள் என்றும்  கூறப்பட்டிருக்கின்றன.
இந்த மாதிரி கீழ்மேல் ஜாதிகள் கலந்து கலந்து வந்ததால் ஏற்பட்ட ஜாதிகளில், அயோவகச் சாதிப் பெண் இடம் நிடாதனுக்குப் பிறந்த, பிள்ளைகள் பார்த்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்த படியே இப்போது உள்ள சாதிகளையெல்லாம குறிக்கும்படியாகவே இன்றும் அநேக விஷயங்கள் காணப்படுகின்றன.
இதுபோலவே இன்னும் இரண்டொரு ஆராய்ச்சி அதாவது அபிதான கோசம் அபிதான சிந்தாமணி முதலிய எல்லா இந்து பண்டிதர்களாலும் ஆதாரமாய் கொண்டாடும் புத்தகங்களில் மற்றும் பல ஜாதிகளை இதைவிடக் கேவலமாகயும் குறிக்கப்பட்டிருக்கின்றதோடு 4 ஜாதி தவிர மற்ற ஜாதிகள் எல்லாம் மேல்கண்ட நான்கு ஜாதிக்குள் மேல் கீழாகவும், கீழ் மேலாகவும் கல்யாணம் செய்தும்,
விபச்சாரம் செய்தும் பிறந்த பிள்ளைகளாக ஏற்பட்டடவர்கள் என்றே கூறப்பட்டிருக் கின்றன. செட்டியார் மார்களையும், ஆசாரிமார்களையும் பற்றி மிக மிக இழிவாகவே கூறப்படுகின்றது.
ஆகவே ஜாதியை கட்டிக்கொண்டு அழுவது இவ் விழிவுகளை மறைமுகமாய் ஏற்றுக் கொள்ளுவதையே ஒக்குமென்பதைத் தவிர வேறில்லை.
உண்மையில் யாருக்கு யார் பிறந்திருந்தாலும் அதனாலேயே குற்றம் சொற்வதற்கில்லை என்பது நமது கொள்கையானாலும் ஒரு இழிவை கற்பித்து அதை நம்மக்கள் மீது சுமத்தி ஒரு பெரிய சமூகம் நிரந்தரமாய் அடிமையாயும் காட்டுமிராண்டியாயும் இருப்பதற்குச் செய்த காரியமே ஜாதிப்பிரிவும் பாகுபாடும் என்பதை எடுத்துக் காட்டவும் அவ்விதம் கொடுமையை ஒழிப்பதற்காகவுமே இதை எழுதுகிறோம்.
(குடிஅரசு, 1930)

மனிதன் தன் வாழ்வில் புகழைத் தேடுவதற்கு விரும்புவது என்பது இயற்கையே. புகழைத் தேடுவதற்கு விரும்பாதவன் ஒருவன்கூட இருக்க மாட்டான். ஒவ்வொருவனும் ஒவ்வொரு துறையில் முயற்சி செய்து புகழடைய விரும்புகிறான்... ஆனால், மனிதன் புகழைத் தேடுகிற வழியைப் பின்பற்றுகையில் மிகவும் தவறான முறையைப் பின்பற்றுகிறான்.
மனிதன் தன்னலத்திற்கென்று புகழைத் தேடுவதற்கு முயற்சிக்கும் அத்த னையும் உண்மையில் புகழைக் கொடுப்பது இல்லை. பிறர் நலத்துக்கென்று வைத்துச் செல்லும் பொருளே அவனுடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும்.
-விடுதலை,12.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக