புதன், 25 ஜூலை, 2018

மாதவிலக்கு – யோனி பூஜை நடக்கும் அம்மன் கோயில்!


Patrikai
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாதவிக்கு பருவத்தில் உள்ள பெண்கள் செல்லக்கூடாது என்கிற தடை குறித்த விவாதம் இன்று இந்தியா முழுதும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நெறியாளுனர், “கோயில்களில் இருக்கும் பெண் தெய்வங்கள் மாதவிலக்கு காலங்களில் எங்கே செல்லும்” என்கிற கவிதை ஒன்றை குறிப்பிட்டு பேச.. சர்ச்சை உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இந்த நிலையில், “கோயிலில் வீற்றிருக்கும் அம்மனுக்கு மாதவிலக்கு நடப்பதும், அதையொட்டி பிரம்மாண்டமான சடங்குகள் நடப்பதும் ஒரு கோயிலில் வழக்கமாக உள்ளது” என்ற தகவல் கிடைத்தது.

அசாம் மாநிலம் – கௌஹாத்தியில் நீலாச்சல் மலைச் சாரலில் அமைந்துள்ள ‘காமாக்யா’ சக்தி பீடத்தில்தான் இந்த சடங்குகள் நடக்கின்றன.

ஆம்…

இங்கு வருடம் ஒரு முறை பார்வதிக்கு மாதவிலக்கு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. இது ஓரு யோனி பூஜை.

இதற்கு காரணமாக ஒரு புராணக்கதை உண்டு.

கைலாயத்திலிருக்கும் சிவன் சொன்னதை புறக்கணித்து, அவர் மனைவி பார்வதி தேவி தன் தந்தை தக்‌ஷனின் யாகத்தில் கலந்து கொள்கிறாள். அவமானப்படுகிறாள். அது பொறுக்காமல் தற்கொலை செய்து கொள்கிறாள்
அவள் தற்கொலையைத் தடுக்க ஓடி வருகிறார். அதற்குள் பார்வதி தற்கொலை செய்துகொள்ள.. அவளது உடல் 51 பாகங்களாக சிதறிப்போய்விடுகின்றன.

தன் தேவியின் உடலில் யோனி விழுந்த இடம் தெரியாமல் அல்லாடுகிறார். பிறகு காமதேவன்உதவியுடன் கண்டுபிடிக்கிறார். அந்த யோனி வழிபாட்டு ஸ்தலம் தான் இக்கோவில்!

பார்வதியின் யோனி விழுந்த இந்த சக்திபீடம்தான், இதர. சக்தி பீடங்கள் அனைத்திற்கும் முதன்மையானது என்று புராணங்கள் போற்றுகின்றன.

அதனால் அந்தயோனி மட்டுமே இங்கு வழிபடு கடவுள். இது கற்பாறையில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. .

ஆண்டுக்கு ஒரு முறை இந்தப் பெண் குறியில் `மாத விலக்கு’ ஏற்படுகிறது என்பது ஐதீகம். அப்போது நான்கு நாட்கள் உதிரப் போக்கு ஏற்படுகிறது என்றும், இதை மாத விலக்கு என்று சொல்லாமல் வருஷ விலக்கு என்று கூற வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

இந்தக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் கோவில் வாசலை அடைத்துவிடுவார்கள். இது தேவி மாதவிலக்காகும் நாட்கள். அந்நாட்களில் திருக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது நான்கு நாட்கள் முடிந்தப் பிறகு மீண்டும் கோவில் வாசல் திறக்கப்படும்.

குறிப்பிட்ட அந்த நாட்களில் அம்மனை நீராட்டும் நீரில் சிவப்பு சாயத்தைக் கலக்கிச் ரத்தம்வழிவது போல செய்கிறார்கள்.

இந்த நீர் பக்தர்களுக்கு (புனித நீராக) அளிக்கப்படுகிறது. உலகெங்கும் இருந்து இந்த மூன்று நாள்களிலும் பத்து லட்சம் பக்தர்கள் அங்கே கூடுகிறார்கள். சன்னியாசிகளும், சன்னியாசினிகளும் இந்த நாட்களில் வந்து வழிபடுவார்கள்.

இந்த நாட்களில் பூசாரிகளும் பக்தர்களும் செவ்வாடைதான் அணிய வேண்டும். இறைவி`காமாக்யாவுக்கும் செவ்வாடை தான் அணிவிக்கப்படும்.

மூன்றாம் நாள் அம்மனுக்கு `சடங்கு செய்யப்பட்டுக் கழுவிக் நீராட்டி அதன்பிறகுதான் கோயில் கதவுகள் திறக்கப்படும்.

கோயில் கிணற்றின் மேல் சிகப்புத் துணி போர்த்தப்படுகிறது. நான்கு நாள்கள் முடிந்ததும் நாடெங்கும் வந்திருந்த பக்தர்களுக்கு சிவப்புத்துணியில் ஒரு பகுதி அல்லது ஒரு நூலிழை பிரசாதமாக அளிக்கப்படும். இது . மாதாவின் மாத விலக்கு ரத்தம் படிந்தது எனக் கருதப்படுகிறது.

இதை வாங்கிப் பூஜை செய்து வந்தால் – நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோயிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் உண்டு. கருவறையிலேயே ஆடு, கோழிகொடுக்கப்படும். 19-ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோயிலில் மனிதர்களைப் பலி தருவது வழக்கம். ஆங்கிலேயே அரசு, இதை தடை செய்து விட்டது.

“கேரளாவில் செங்கண்ணூர் பகவதி அம்மனுக்கும் மாதா மாதம் மாதவிடாய் நாட்கள் அனுசரிக்கப்படுகிறது.

நாகப்பட்டினத்தில் நீலாய தாட்சி என்னும் கோயில் அம்மனுக்கு ருது சாந்தி விழா நடப்பது உண்டு.

மனிதன் தன்னுடைய உருவாகவே கடவுளை நினைத்து வழிபடுகிறான் என்று அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தில் கவியரசு கண்ணதாசன் கூறியிருப்பார்.அதைத்தான் இந்த யோனி வழிபாடுகளும் ருது பூஜைகளும் உணர்த்துகின்றன” என்கிறார்கள் இந்து மத பக்தர்கள்.
- கட்செவி பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக