புதன், 15 நவம்பர், 2017

நாயன்மார்கள் - இயற்பகையார்

இயற்பகையார்

நாயன்மார்கள் ஆக செய்த நற்பணிகள்..!

நாயன்மார்கள் ஆக சிலர் செய்த நற்பணிகளில் ஒருவர் செய்த நற்பணியை இந்த பதிவில் பார்ப்போம்.

காவிரிப் பூம் பட்டினத்தில், வைசியர் குலத்தில் பிறந்த இவர், சிவனடியார்கள் அதாவது, சாமியார்கள் எதைக்கேட்டாலும் மறுக்காமல் கொடுத்து வருபவர். இவரது ஏமாளித்தனத்தை, புரிந்து கொண்ட சிவனடியார் ஒருவர், இயற்பகையாரிடம் வந்து ஒருமுறை, அவரது மனைவியைக் கேட்கிறார்!

சிவனடியாருக்கு எதற்கு அவரது மனைவி? என்று என்னிடம் கேட்காதீர்கள்! அப்படி அவர் கேட்பது நியாயமா? நல்லொழுக்கமா? என்றுகூட கேட்காதீர்கள்! சிவனடியார் உருவில் வந்து சிவனே கேட்டார் என்று இவரைப்பற்றி பெருமையுடன் கூறுகிறார்கள்! அவ்வாறு முட்டாள் தமிழன் நம்பவைக்கப்பட்டுள்ளான்.

மானமும், ரோஷமும் உள்ள மனிதன் தனது மனைவியை கேட்டவனை என்ன செய்து இருப்பான்? அப்படியெல்லாம் இயற்பகையார் மானம், ரோசம், போன்ற பண்புகளோ, ஒழுக்கமோ பற்றி கவலைப்படவில்லை! சந்தோசமாக, "என்மனைவிதான் உங்களுக்கு வேண்டுமா? இதோ, எடுத்துகொள்ளுங்கள்! அவளை உங்களுடனே கூட்டிக் கொண்டு போங்கள்!" என்று அனுப்பிவைக்கிறான்!

அவனுக்குதான் புத்தி இல்லை, ஒழுக்கம் இல்லை, சிவனடியாரான உனக்குமா அறிவில்லை? நீ எப்படி அவனது மனைவியைக் கேட்கலாம்? என்று அவனது உறவினர்கள், நல்லொழுக்கத்துடன் வாழ்ந்துவந்த தமிழர்கள் கோபப்படுகிறார்கள்! இந்த அநீதியை, அக்கிரமத்தை தடுக்கிறார்கள்!

இதைபார்த்த, "இயற்பகையார்" என்ன செய்திருக்க வேண்டும்? தனது தவறை உணர்ந்து, திருந்தி இருக்கவேண்டும்! தனது முடிவை மாற்றிக்கொண்டு மனைவியை சிவனடியாரோடு அனுப்பாமல் இருந்திருக்க வேண்டும்!அவர்தான் இயற்பகையார் ஆயிற்றே! {தமிழர் இயல்புக்கு, பழக்கத்துக்கு, நல்ல குணங்களுக்கு, பகைவர் என்றும் பொருள் கொள்வது தவறில்லை என்பது என் கருத்து.} போகட்டும்!

அடுத்தவன் மனைவியைக் கேட்ட சிவனடியாராவது என்ன செய்திருக்க வேண்டும்? முறைகேடாக, ஏதோ சபலத்தில் உன் மனைவியை கேட்டுவிட்டேன்! எனக்கு உனது மனைவி வேண்டாம் என்று சொல்லி, இயற்பகையாரின் மனைவியை அழைத்து செல்லாமல் விட்டுவிட்டு போயிருக்க வேண்டும்!

மேலே நான் சொன்னதுபோல நடந்திருந்தால், அப்படிப்பட்டவர்களை திருத்தி, நல்வழிப்படுத்தி இருந்தால், அதுபற்றிய ஒழுக்கக் கதையைக் கூறினால் பரவாயில்லை! ஆனால் அப்படி எல்லாம் இயற்பகையாரும் நடந்து கொள்ளவில்லை, சிவனடியாரும் செய்யவில்லை. நாம் எதிர்பார்ப்பது போலவும் கதை நடக்கவில்லை!

இயற்பகையார், தனது மனைவியை சிவனடியார் அழைத்து போவதை தடுத்த, தனது உறவினர்கள் அனைவருடனும் எதிர்த்து போரிட்டு, சிவனடியாருடன் தனது மனைவியை அனுப்புகிறார்! அதுமட்டுமல்ல திருச்சாய்க்காடு என்ற இடம் வரை அவர்களுக்குப் பாதுகாப்பாக பின்தொடர்ந்து செல்கிறார்! அப்படிப்பட்டவரை, இத்தகைய நற்பண்பு, நல்லொழுக்கம் உள்ளவரை, சும்மா விட்டுவிட முடியுமா? நாம் போனால் போகட்டும் என்று விட்டுவிடுவோம்! தமிழர்கள்தான், "மறக்கும், மன்னிக்கும் குணம் கொண்டவர்கள்" ஆயிற்றே ! "பகைவனுக்கும் அருளும் நன்னெஞ்சு?" கொண்டவர்கள் ஆயிற்றே!" வந்தாரை வாழவைப்பவர்கள்" ஆயிற்றே நாம்!

அரிய இந்த செயலைச் செய்த அவரது நற்பணியை நினைவு கூற வேண்டும், அவரது வழியில் நாம் நடக்க வேண்டும் என்று, அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக ஆக்கி வைத்து, போற்றி புகழ்ந்து வருகிறது! நம்மை வழிபடவும் வைத்துள்ளது! "செய்நன்றி மறவாத பிராமணீயம்!"

பொண்டாட்டியைக் கூட்டிகொடுத்தவனும், கூட்டிப்போன சிவனடியாரும் பிராமணீயத்தின் பிரதிபலிப்பா? இல்லை தமிழர்களின் உன்னத நாகரீகமா? என்பதையும், ஊராருக்கு நல்லுபதேசம் சொல்லுவதாக கூறும், இந்துமதப் பற்றாளர்களும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரிய தத்துவத்தை ராமன் சொன்னான், ராமாயணம் அதையே வலியுறுத்துகிறது, அடுத்தவன் மனைவிமீது ஆசைப்பட்டு, எடுத்து போனதால்தான் ராவணனை கொல்லவேண்டியது ஆயிற்று! என்று வியாக்கியானம் செய்யும் இந்துமத "அவதார்" களும் சிந்திக்க வேண்டும்!

இதுபோன்ற அநாகரீகங்களை கூறும் புராண நூல்களை ஒதுக்கவும் அல்லது, அவைகளை பற்றி உயர்த்திப் பேசுவதையும் தவிர்க்க முன்வர வேண்டும்! ஆனால், அப்படிசெய்ய யாரும் முன்வரமாட்டார்கள்! அப்படியே சிலர் முன்வந்தாலும், "பிராமணீயம்" அதனை அனுமதிக்காது! ஏனெனில் சமூகத்தில் உள்ள முரண்பாடுகளும், பிரிவினையும், ஒழுக்கக் கேடுகளையும் உருவாக்கி, வளர்த்து வரும் "பிராமணீயம்" அத்தகைய செயல்களால்தான், தன்னை தொடர்ந்து அதிகார, ஆதிக்க சக்தியாக, நிலைநிறுத்தி வருகிறது! இந்த சூழ்ச்சி புரியாத தமிழன் தன்னை தீண்டதகாத சூத்திரனாக ஏற்றுக்கொண்டு ஆரிய பூநூல் பார்ப்பானுக்கு சொம்பு தூக்குகின்றான்.

-Venu Gopaala Shanger
- ஆறாம் அறிவு ( முகநூல் பக்கம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக