திங்கள், 24 ஏப்ரல், 2017

கடவுளைப் பகடி செய்த சங்க காலப் பெண்கள் சங்க இலக்கியங்களில் வைதீக எதிர்ப்பு

மழைக்கு ஓர் கடவுளைப் படைத்ததுவைதீகம். மழை என்பது இயற்கையின் கொடை. அதனைப் பெறும்போது பாதுகாத்து வைத்துக்கொள்ள மனிதர் களான நாம் முயற்சிசெய்ய வேண்டும். திட்டமிட வேண்டும். ஆனால் வருண பகவானுக்கு மழை வேண்டி யாகம் வளர்க்கும் அவலத்தை இன்றும் நாம் காண்கிறோம். ஆனால் சங்க காலப் புலவரான குடபுல வியனார்,

நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம் 
(புறநானூறு  18)

என்று நீரின், உணவின் இன்றியமையாமையை எடுத்துரைக்கிறார். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்று வான், அதாவது இயற்கையில் கிடைத்ததை உண்டு வாய்ப்பு கிடைத்தவரை வாழ்ந்த காலத்திலிருந்து மாறி, உணவு உற்பத்தி சேமிப்பு என்றகால கட்டத்திற்கு வந்துசேர்ந்த காலம் சங்ககாலம் என்பதை இதனால் அறியமுடிகிறது.

உணவு உற்பத்திற்கு உயர் தேவையாக இருப்பது தண்ணீர். அந்தத் தண்ணீரைப் பாதுகாப்பது மன்ன னின் கடமை என்று அறிவுறுத்துகிற நிலையில் இருக் கிறார் புலவர்.இயங்கிக் கொண்டிருக்கிற உலகத்தில் செல்வவளம் வேண்டும் என்றாலும் இந்த உலகில் தனிப்பட்ட வல்லமை கொண்ட அரசாக (வல்லரசு என்கிறார்களே அது போல) விளங்க வேண்டும் என்றாலும் சிறந்த புகழை நிலைநிறுத்த வேண்டும் என்றாலும் என்ன செய்ய வேண்டும். நான் சொல் வதைக் கேள் என்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்குப் புலவர் குடபுல வியனார் என்ன அறிவுரை கூறினார் தெரியுமா?நிலம் நெளிந்து கிடக்கின்ற இடத்தில் பள்ளமாக இருக்கும் இடத்தில் தண்ணீரைப் பாதுகாக்கும் பணியைச் செய். அது தான் உனக்கு செல்வத்தையும் ஆட்சி வல்லமை யையும் நிலைத்த புகழையும் தரும் என்றுஅவர் கூறுகிறார்.

இன்றைய மனநிலையோடு இந்தப் பாடலையும் கருத்தையும் அணுகினால் மிகச் சாதாரணமாகவே தெரியும். ஆனால் எல்லாம் இறைவன் செயல் என்ற வைதீகக் கருத்தை நிலைநாட்டி மன்னனைப் போற்றி பாடி கொடைபெற்று வாழ்ந்துவிட்டதோடு போகாமல் இன்றுவரை சிக்கலாக இருக்கும் தண்ணீர்த் தேவையை நிறைவு செய்வது பற்றி ஆலோசனை கூறியிருப்பதை அறிவியலின் ஒரு பகுதியாகவே காணவேண்டும். இப்படிப்பட்ட அறிவுறுத்தல்களின் பயனாகத்தான் இன்றைக்கும ஒரே உதாரணமாக, சொல்லப்படும் கல்லணை உருவாகியிருக்கும். மழை வேண்டி யாகம் செய்துகொண்டிராமல் அணைக்கட்டி நீர்தேக்கி நெடுவயல் கண்டதும் வேத வைதீக எண் ணத்துக்கு இடம் கொடாமையின் வெளிப்பாடே எனலாம்.

இந்த உலகத்தில் நல்லவை செய்தால் மேலுலகத்தில் நன்மைகள் கிடைக்கும். சொர்க்கத்தில் இன்பங்களை அனுபவிக்கலாம். இல்லாவிட்டால் நரகம்தான் கிடைக்கும் என்றெல்லாம் இன்றும் சொல்லப்படுகிறது. நம்பவும் படுகிறது.. இப்படிப்பட்ட எண்ணத்தை சங்க காலப் புலவர் ஒருவர் மறுதலிக்கிறார் என்றால் அது வியப்புக்குரியது மட்டுமல்ல, பெருமதிப்பிற்கும் உரி யது அல்லவா? கடையெழுவள்ளல்களில் ஒரு வனாக வைத்தெண்ணப்படுபவன் ஆ அய் அண்டிரன்.

இவனது கொடைச் சிறப்பைஎடுத்துரைக்கின்றார் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர். ஆஅயின் வள்ளல் குணம் அவனது முன்னோர் வழிவந்ததாகும். அதுவன்றி இந்தப் பிறவியில் செய்யும் கொடை அடுத்த பிறவிக்கு உதவியாக இருக்கும் என் பதற்காகச் செய்கின்ற வணிக (வியாபார) குணத்தால் அல்ல என்கிறார்.

இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே
(புறநானூறு  134)

இம்மை மறுமை என்ற கருத்து நிலையை மறுத்த தோடு, அறச் செயலை விலை பேசும் வணிக நிலைக் குத் தள்ளிவிடுகின்ற வைதீகத்திற்குப் பெரும் எதிர்ப்பை இதன் வழி காட்டியிருக்கிறார். மலையமான் திருமுடிக்காரி பற்றிய கபிலரின் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் (124) மூடநம்பிக்கை எதிர்ப்பு முளை விட்டிருக்கிறது.

மன்னனிடம் பரிசில் பெறச் செல்பவர்கள் நல்ல நாள், நேரம் பார்ப்பார்கள். இந்தப் பறவை இடம் போகக் கூடாது; இந்தப்பறவை வலம் போகக் கூடாது என்றும் சகுனம் பார்ப்பார்கள். ஆனால் காரியிடம் பரிசு பெற செல்பவர்களுக்கு இதெல்லாம் தேவையே படாது. பரிசு நிச்சயம் என்பதாக அவரது பாடல் அமைந்துள்ளது. மூடநம்பிக்கை என்பது தன்னம் பிக்கை இல்லாததாலும் வினைமீதும் வினையற்றுவார் மீதும் நம்பிக்கை இல்லாததாலும் உருவாகிற எண்ணம் என்பதை சங்ககாலப் புலவர் ஒருவர் குறிப்பில் உணர்த்தியிருப்பது கவனிப்புக்குரியது.இந்த உலகம் அழியாமல் பாதுகாக்கப்படுவதற்குக் காரணம் என்ன என்று ஒரு சனாதனியிடம் கேட்டால் ஆக்கல் காத்தல் அழித்தல் எனும் முச்செயலையும் முக்கடவுள் முறை யாகச் செய்துவருவதால்தான் என்று பதில் சொல்வார்.

அவைதீகரை அல்லது கடவுள் மறுப்பாளரைக் கேட்டால் அழிவுக்கு எதிராகத் தொடர்ந்து சமர் புரிகின்ற மனிதர்களால் என்றுதான் சொல்வார். தான் என்கிற அகம்பாவ எண்ணம் கொண்ட மனிதர்களா லும், அத்தகையோரின் தலைமையிலான அரசுகளா லுமே அழிவுகள் ஏற்படுகின்றன. சாதி, சமயம், இனம், மொழி என்பதோடு நிற்காமல் முதலாளித்துவத்தின் லாபவெறியும் மனிதகுல அழிவுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. இதையெல்லாம் கண்டிராத காலமாக இருந்தாலும் சங்கப் புலவர் ஒரு பொது விதியைக் கூறுகிறார்.அமிழ்தம் இனிது என்றாலும் தனித்து உண்ணாமல் பகிர்ந்து கொள்வோரால் - கண்துஞ்சாது உழைப்போரால் - பிறர் அஞ்சுகின்ற தீயவற்றுக்கு அஞ்சுவோரால்- நல்லதுக்காக உயிரையும் ஈகம் செய்வோரால் - பழிவரும் செயல் என்று தெரிந்தால் உலகத்தையே தருகிறேன் என்றாலும் அத்தகைய செயலைத் தவிர்ப்போரால் - இவற்றுக்கெல்லாம் மேலாக தன்னலம் கருதாதுப் பிறர் நலம் கருதுகின்ற பெரியோரால் இந்த உலகம் நிலைத்து இருக்கின்றது என்று சொல்கிறது . இந்தப் பாடலைப் பாடியிருப்பவர் ஒரு புலவர் அல்ல.

கடலுள்மாய்ந்த இளம் பெரும் வழுதி என்கின்ற மன்னன் ஆவான். மன்னனைக் கடவுளுக்கு நிகராக வைத்துப் போற்றிய பண்டைச் சமூகத்தில் ஒரு மன் னனே இந்த உலகம் நிலைத்திருப்பதற்குக் காரணம் சுயநலம் கருதாது பொதுநலன் நாடும் மனிதர்கள் இருப்பதால் தான் என்று கூறியிருப்பது கடவுள் மறுப்புக்கு சரியான எடுத்துக் காட்டேயாகும்.சங்க இலக்கியங்களைத் தொகுத்து நோக்கும்போது புல வர்கள் கடவுள் வாழ்த்து என்ற நிலையைக் கைக் கொள்ளாதது மிக முக்கியமானது. எட்டுத் தொகை நூல்கள் பல புலவர்கள் பாடிய அல்லது எழுதிய பாடல் களின் தொகுப்பு என்பதால் கடவுள் வாழ்த்தினைத் தனியொரு புலவர் பாடாதிருந்திருக்கலாம். இருப் பினும் தொகுக்கப்பட்ட பின் வந்தவர்கள் இதனைஒரு குறையாகக் கருதும்போக்கு உருவாகியிருக்கிறது. எனவே பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற புலவர் வலிந்து கடவுள் வாழ்த்து என்ற செய்யுளை எழுதி எட்டுத்தொகை நூல்களில் இணைத்திருக்கிறார். இவர் பாடியதாக வேறெந்தப் பாடலும் சங்க இலக்கியங்களில் இல்லை. பத்துப் பாட்டு என்பது தனித்தனிப் புலவர் களால் நூல்போல் ஆக்கப்பட்டவை என்றாலும் எந்தப் புலவரும் கடவுள் வாழ்த்து என்ற காப்புச் செய்யுளைப் பாடவில்லை என்பது எண்ணத்தக்கது. இதனால் பத்துப் பாட்டு தொகை நூலில் முதலாவதாக திருமுருகாற்றுப்படையை வைத்து அதையே கடவுள் வாழ்த்தாகக் கருதிக் கொள்ளுமாறு விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. எதை எழுதினாலும் செய்தாலும் ஏன் கல்வி பயின்ற காலத்தில்கூட கடவுள் வாழ்த்தோடு தொடங்க வேண்டும் என்ற வைதீக மரபை நமது சங்க கால முன்னோர்கள் கடைப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது,கடவுளைக் கேலி செய்கிற - கடவுள் பெயரால் சடங்கு செய்வோரை நேரடியாகவே கிண்டல் பேசுகின்ற போக்கினையும் சங்க இலக்கியங்களில் காண்கிறோம்.

இளம்பெண்கள் காதல் வயப்பட்டபின் காதலனை சந்திக்க முடியாமல் தடை ஏற்படுத்தப்பட்டால் மன நிலை பாதிக்கப்படுவது இயல்பு. இதற்கு ஒன்றும் அறி யாதவர்கள் உண்மை உணராதவர்கள் பெண்ணுக்குப் பேய் பிடித்து விட்டதாகச் சொல்வார்கள். இதற்குத் தீர்வாக மாந்திரீகம் செய்வது, பூசாரியைக் கொண்டு பேயோட்டுவது போன்ற நிகழ்வுகள் இன்றும் காணப் படுகின்றன. இதனை எள்ளி நகையாடியத் தமிழ் மரபு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் காணப்படுவது பெரு மைக்குரியது அல்லவா?முற்கால இளம்பெண்களுக்கு காதல் மயக்கத்தால் ஏற்படும் மனப் பிறழ்வைப் போக்க வெறியாட்டு நடத்தப்பட்டதாக இலக்கியங்கள் கூறு கின்றன. இதற்கு வேலன் என்ற பூசாரி வருவான். இவன் மீது முருகக் கடவுள் இறங்கிவந்து பெண்ணுக்குப் பேய் ஓட்டுவதாகக் கருதப்பட்டது.
- மயிலைபாலு
நன்றி: தீக்கதிர், 10.4.2017

-விடுதலை,12.4.17
சங்க இலக்கியங்களில் வைதிக எதிர்ப்பு

புராணப் புரட்டுகளைச் சாடும் காப்பியங்கள்

- மயிலை பாலு -

10.4.2017 அன்று வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி...

இதற்கு நெல்லினைப் பரப்பி வைத்து அதிலே ஒரு குட்டி ஆட்டினை நிறுத்தி வைத்திருப்பார்கள். பின்னர் வேலன் என்ற அந்த பூசாரி மீது முருகன் ஏற அவன் குட்டிஆட்டினை அறுத்து அதிலிருந்து வெளிப்படும் இரத்தத்தைஎடுத்துப் பெண்ணின் நெற்றியில் தடவுவான். இப்படிச் செய்வதால் பெண்ணிடமிருந்து பேய் அகன்று ஓடி விடும் என்பது மூட நம்பிக்கை. இதனை அப்படியே பதிவு செய்திருந்தால் நாம் பேச வேண்டிய தேவை இருக்காது. ஆனால், இளம் பெண்ணின் தோழி இந்த வெறியாடும் வேலனைப் பகடி செய்வதாக இலக்கியம் படைக்கப்பட்டிருப்பது மிக முக்கியமானது.

‘‘முருகு அமர்ந்து வந்த முதுவாய் வேல

சினவல் ஓம்புமதி வினவுவது உடையேன்

பல்வேறு உருவின் சில்அவிழ் மடையொடு

சிறுமறிக் கொன்று இவள் நறுநுதல் நீவி

வணங்கினை கொடுத்தி ஆயின் அணங்கிய

விண்தோய் மாமலைச் சிலம்பன்

ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே!’’

(குறுந்தொகை  362)

நான் கேட்கிறேன் என்று கோபித்துக் கொள்ளாதே. முருகனுக்குப் பலி கொடுப்பதாகச் சொல்லி ஆட்டுக் குட்டியைக் கொன்று அந்த இரத்தத்தைத் தலைவியின் நெற்றியில் தடவுகிறீர்களே! இந்தப் பலியிடுதலை குறிஞ்சி நிலத் தலைவனான சிலம்பனின் மார்பு உண்ணுமோ? என்று தோழி கேட்கிறாள். எவ்வளவு நாசூக்கான நக்கலான மொழியில் தோழி பேசுகிறாள் பார்த்தீர்களா? தலைவிக்கு நோய் தந்தவன் குறிஞ்சி நிலத் தலைவன். அவனை அழைத்து மணமுடிப்பதை விடுத்து முரு கனுக்குப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களே என்று நேரடியாகப் பளிச்சென பேசவேண்டியதைத் தான் அடக்கமாக மாற்றிப் பேசுகிறாள்.

ஒரே ஒரு புலவர் மட்டுமல்ல, வெறிபாடிய காமக் கண்ணியார் பாடல்களும் (அகநானூறு 22, 98) குறுந்தொகை (111, 263, 360) அய்ங்குறுநூறு (138, 156, 232, 272) நற்றிணை (34) ஆகிய பாடல்களும் வெறியாட்டினை இகழ்ந்தே பாடப்பட்டுள்ளன. குறிஞ்சி நிலத் தெய்வம் முருகன் என்று ஒரு பக்கம் கூறினாலும் மறு பக்கம் அந்த முருகனின் பெயரால் நடக்கும் மூடச் சடங்குகளைப் பெண்களே பகடி செய்ததாகப் புலவர்கள் பதிவு செய்திருப்பது அவைதிக மரபுகளை அவர்கள் உள் வாங்கியிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. அவற்றை வெளிப்படுத்தியும் இருக்கிறார்கள்.

சங்க இலக்கியங்களுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இயற்றப்பட்டதான காப்பியங்கள் பெரும்பான்மையும் சமண, பவுத்த சார்புடைய புலவர்களின் படைப்பு களாகும். இவற்றில் நமக்கு முழுமையாகக் கிடைத்தி ருப்பவை சிலப்பதிகாரம் , மணிமேகலை, சீவக சிந்தாமணி, நீலகேசி ஆகியவையே. மற்றவை பெரும் சிறும் காப்பியங்கள் என்றபட்டியலில் இருந்தாலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. கிடைத்திருப்பதிலும் மணிமேகலைக் காப்பியமேமுழுக்க முழுக்க தத்துவ விளக்க நூலாக இருக்கிறது. சிலப்பதிகாரத்தின் கணிகைப் பாத்திரமான மாதவி கோவலனைப் பிரிந்தபின் புத்தமதத்தைத் தழுவுகிறாள். அவளது மகள் மணிமேகலையும் புத்த பிக்குணியாகிறாள். மணிமேகலையின் மூலமாக புத்த சமயக் கருத்துகள் நிலை நாட்டப்படுகின்றன. பலவகையான சமயவாதங் களை வாதத்தால் நிராகரிக்கும் பகுதியாக சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதை விளங்குகிறது.

மணிமேகலை காப்பியத்தின் மய்யநோக்கமாக விளங்குவது மனித சமுதாயத்தின் பசிப்பிணி தீர்ப்பது. இந்தப் பிணிக்கு மருந்தாக அவளுக்குக் கிடைப்பது அட்சய பாத்திரமாகும். இந்தப் பாத்திரத்தின் மூல நாயகனாக இருப்பவன் ஆபுத்திரன். அதாவது பசுவின் மைந்தன். இந்த ஆபுத்திரன் கதை வழியே வைதிக மரபுகளை அம்பலப்படுத்தி அவைதிக கருத்துகளை நிலைநாட்டுகிறார். பெண்களின் வாழ்நிலை, உளவியல் சிக்கல்கள், தீர்வுக்கு மாற்றாக பாப விமோசன பாசாங்கு போன்றவையும் இலைமறை காயாக இடம் பெற்றுள்ளன. வேத சமயத்தின் மீதும், வேள்வி முறைகள் மீதும் கடுமையான நேரடித் தாக்குதலைத் தொடுக்கிறது ஆபுத்திரன் கதை.

வாரணாசியில் அபஞ்சிகன் எனும் மறையோன் இருந்தான். இவனது பார்ப்பன மனைவி சாலி அவள் ஒழுக்கம் தவறியதால் குமரியில் நீராடப் புறப்படுகிறாள் வருகிற வழியில் முறைகேடாக உற்ற கருவிலிருந்து குழந்தை பிறக்கிறது. அதனை சிசுக்கொலை செய்யாமல் மறைவான ஓரிடத்தில் போட்டுவிட்டுப் போகிறாள் . பின்னர் குழந்தைபசியால் அழுகிறது. அழுகுரலுக்கு இரங்கிய பசு ஒன்று அங்கு வந்து குழந்தைக்குப் பால் கொடுத்துப் பாதுகாக்கிறது. இப்படி வளர்ந்த குழந்தை தான் ஆபுத்திரன் எனப்படுகிறான்.

பின்னர் இளம்பூதி என்கிற மறையோனும் அவனது மனைவியும் ஆபுத்திரனை வளர்க்கிறார்கள். அவன் வாழ்ந்த ஊரில் மறையவர்களால் வேள்விக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த யாகத்தீயிலே போடுவதற்கு பசு ஒன்று கட்டப்பட்டுள்ளது . அந்தப் பசுவின் நிலையையும், ஆபுத்திரனின் தவிப்பையும் இப்படி சொல்லோவியம் ஆக்குகிறார் சீத்தலைச் சாத்தனார்.

‘‘கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி

வலையிடைப் பட்ட மானே போன்று

அங்கு அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு

நெஞ்சு நடுக் குற்று நெடுங்கணீர் உகுத்தான்’’

ஆபுத்திரன் - மனம் பொறுக்காத அவன் அந்தப் பசுவைஇரவோடு இரவாக அவிழ்த்துச் சென்று விடு கிறான். மறையவர்கள் அவனையும், பசுவையும் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.

தாய் தந்தையின் பெயர் அறியாததால் அவனைப் ‘‘புலைச் சிறுமகனே’’ என்று இழிவாக விளிக்கிறார்கள். கொன்று விடுவோம் என்று கோல் கொண்டு அடிக் கிறார்கள்.

அருமறை நன்னூல் அறியாது இகழ்ந்தனை என்று வேதங்கள் - அரியவை நன்னூல் (நல்லநூல்) என்றெல்லாம் புகழ்ந்து கூறி அஃதறியாமல் இகழ்ந்து விட்டாய் என்றும் கோபப்படுகிறார்கள். பசுமாட்டினை வேள்வியில் இடச் சொன்னதுதான் அருமறை நன்னூல் என்பதை இங்கே நினைவில் நிறுத்த வேண்டும். இதற்கிடையே அந்தப் பசு அங்கே இருந்த தலைமை மறையவனைக் கொம்பால் குத்தி தள்ளிவிட்டு காட்டுக்குள் ஓடி விடுகிறது. வேதங்களின் அருமை பெருமைகளை இவன் அறியாததற்குக் காரணத்தையும் கண்டறிந்து விட்டவர்கள்போல் ‘‘ஆமகன் அதற்கு ஒத்தனை அறியாய்’’ என்கிறார்கள். இதுவரை பொறுமை காத்த ஆபுத்திரன் ஆவேசம் அடைகிறான். வைதிகமரபில் சொல்லப்பட்டுள்ள மறையவர்களின் பிறப்புத் தன்மைகளைப் பட்டியலிட்டு சொல்கிறான்.

இருடி (ரிஷி) கணங்கள் என்று உங்கள் குலத்தில் உயர்வாக சொல்லப்படுகிற அசலன் என்பவன் பசுவின் மகன். சிருங்கி என்பவன் மானின் மகன். விரிஞ்சி என்பவன் புலியின் மகன். கேசகம்பளன் என்பவன் நரியின்மகன் என்ற பட்டியலைச் சொல்லி விட்டு பசு வளர்த்தால் நான் மட்டும் இழிந்த குலம் ஆகிவிடுவேனா? நான்கு வேதங்களை நல்ல நூல் என்றீர்களே, அதில் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறதா? என்று சாடுகிறான்.

அது மட்டுமல்ல வேதங்களில் அறிவு நிறைந்தவர்கள் என்று சிலரைச் சொல்கிறீர்களே அவர்களின் நிலை என்ன?அகத்தியர் வசிஷ்டர் என்று கூறப்படும் இரண்டு அந்தணர்களும் யாருடைய பிள்ளைகள்? (திலோத்தமை என்ற) கணிகைக்குப்  பிறந்தவர்கள். சொல்லுங்கள் நான் சொல்வதில் ஏதாவது பொய்யிருக்கிறதா? நிலைமை இப்படி இருக்கும்போது என்தாய் சாலி என்ன தவறு செய்து விட்டாள்? என்று கேள்விகளை அடுக்குகிறான்.

‘‘ஆன்மகன் அசலன் மான்மகன் சிருங்கி

புலிமகன் விரிஞ்சி புரையோர் போற்றும்

நரிமகன் அல்லனோ கேச கம்பளன்

ஈங்கு இவர் நும்குலத்து இருடி கணங்கள் என்று

ஓங்குயர் பெருஞ்சிறப்பு உரைத்ததும் உண்டால்

ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ

நான்மறை மாக்காள் நன்னூல் அகத்து

மாமறை மாக்கள் வருங்குலம் கேண்மோ

முதுமறை முதல்வன் முன்னர்த் தோன்றிய

கடவுட் கணிகை காதலஞ்சிறுவர்

அருமறை முதல்வர் அந்தணர் இருவரும்

புரிநூல் மார்பீர் பொய்யுரை யோமோ

சாலிக்கு உண்டோ தவறு’’

மணிமேகலை ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை; வரிகள் 63, 69, 93, 99 என்று கோபம் கொப்பளிக்கப் பேசும் ஆபுத்திரன் பாத்திரத்தின் வழியாக வேள்வி களை அம்பலப்படுத்தியும் ரிஷிகள் என்றும் வேத விற்பன்னர்கள் என்றும் போற்றப்படுவோரின் பிறப்புண் மைகளை வெளிப்படுத்தியும் பாடுகிறார் சீத்தலைச் சாத்தனார்.

பசுக்களைப் பாதுகாப்பதற்காகவே பிறந்திருப்பது போல் இப்போதும் காட்டிக் கொள்வோரின் முன் னோர்கள் வேள்விகளில் இளம் பசுக்களைக் கொல் வதற்கு என்னமாய்த் துடித்திருக்கிறார்கள்! பசுவைக் காப்பாற்றிய ஆபுத்திரனை எப்படித் தாக்கியிருக்கிறார்கள்! இழிவு படுத்தியிருக்கிறார்கள் என்பதை மணிமேகலைக் காப்பியம் எடுத்தியம்புகிறது.

சென்ற நூற்றாண்டில் தந்தை பெரியார் அவர்கள் வேதமரபினரின் பிறப்புகளை இழிவுபடுத்திப் பேசிய தாகக் கூறுவோர் இத்தகைய எதிர்கருத்து நிலையை சொல்வது காலம் காலமான மரபு தான் என்பதை உணரச் செய்கிறது. பண்டையச் சமூக மரபில் கடவுள் மறுப்பு என்பதோடு கடவுளை நிலை நாட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கருவிகளான வேத மறுப்பு, சடங்குமறுப்பு என்பதுதான் நாத்திகத்தின் வேராக பார்க்கப்படுகிறது.

வேதாந்தங்களான உபநிடதங்களும் பிறவும் கடவுளின் கிருபை அவற்றிற்குச் செய்ய வேண்டிய சடங்குகளை விரித்துரைக்கின்றன. இவற்றையெல்லாம் வேதமறுப்பாளர்கள் பகடி செய்ததற்கான தரவுகள் இலக்கியங்களில் ஏராளமாக இருக்கின்றன.

இறந்த பின் வானுலகம் சென்றதாக நம்புகின்ற உறவினர்கள்வீட்டில்சடங்குசெய்துஉணவுபடைக் கிறார்கள். மேலுலகத்தில் இருக்கும் உறவினர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறார்கள். அப்படியென்றால் வீட்டின் தரைத் தளத்தில் ஒருவன் உணவுண்டால் முதல் தளத்தில் இருப்பவனுக்கு பசி போய்விடுமா என்று பேசி வைதீகச் சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இதனைச் சகித்துக்கொள்ள முடியாதவர்கள் வாதத்தால் வென்றதில்லை. மாறாக வசை மாரி பொழிந்திருக்கிறார்கள். சூழ்ச்சி அதிகாரத்தில் இருப்போரின் துணையோடு வன்செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அய்ஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசியில் கதைத் தலைவியான நீலகேசி பூதகனுடன் வாதிடுகிறாள். ‘‘சாத்திரமாவது வேதமன்றோ; அதுதான் சுயம்பு’’ என்பது பூதகனின் வாதம்.

ஆனால் வேதங்களும் அவற்றிற்கு விளக்கங்களாக வந்த பிற நூல்களும் முரண்பட்டுக் கிடக்கின்றன. அவற்றால் பயனில்லை என்றாள் நீலகேசி. ஆத்திரமடை கிறான் பூதகன். வேத வேதாகமங்களை மறுத்துப் பேசிய நீலகேசி பற்றி பூதகன் எடுத்து சொல்லும் வார்த்தை மிகவும் கவனிக்கத்தக்கது. ‘‘சூத்திரி நீ அது வல்லை அலாமையின் சொல்லுகிறாய்’’ வாதிட்டு வெல்ல முடியாதவன் வர்ணாசிரமத்திற்குள் புகுந்து விடுகிறான்.

நீ சூத்திரி என்பதால் உனக்கு வேதத்தில் வல்லமை இல்லை. அதனால்தான் அப்படிச் சொல்கிறாய் என்கிறான். இப்படித்தான் வாதிட்டு வெல்லமுடியாத வைதிகமரபினர் வசை மொழியை வன்முறையைக் கையிலெடுக்கிறார்கள். அவைதிகர்கள் காலந்தோறும் உண்மைகளை உரக்கப் பேசிக்கொண்டே இருக் கிறார்கள். அதனால் கோவிந்த் பன்சாரே போன்றோரை அண்மைக் காலத்தில் இழந்திருக்கிறோம். இடைப் பட்ட காலத்தில் எட்டாயிரம் சமணர்களை கழு வேற்றிக்கொன்றிருக்கிறார்கள். அதற்கும் முற்பட்ட காலத்தில் எதுவும் நடக்கவில்லை என்று எண்ணிவிடக் கூடாது.

‘‘ஒன்று புரிந்த ஈரிரண்டின்

ஆறுணர்ந்த ஒரு முது நூல்

இகல்கண்டோர் மிகல் சாய்மார்’’

(புறநானூறு 166)

என்ற ஆகூர் மூலங்கிழாரின் புறநானூற்றுப் பாடல் வரிகளுக்கு விளக்கம் அளிக்க வந்த பழைய உரையாசிரியர் ‘‘வேதத்திற்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோராகிய புத்தர் முதலான புறச் சமயத்தோரது மிகுதியைச் சாய்க்கவேண்டி என்கிறார் (சாய்த்தல் / வீழ்த்துதல்). சாய்த்தல் என்பது கருத்துகளை அல்லது கருத்துக் கொண்டிருந்தவர்களைக் கொள்கை பரப்பிய வர்களை வீழ்த்துதல் என்பதை வரலாற்றின் வழி அறிந்து கொள்கிறோம். அவைதிக (நாத்திக) மரபுகளை முன்னெடுத்தல் என்பது எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதையும் அதற்கு ஆதரவானவர்கள் வசை பொழியப்பட்டிருக்கிறார்கள், களப் பலியாகியிருக்கிறார்கள் என்பதையும் தொல்காப்பிய காலம் தொடங்கி நீலகேசி காலம் வரை வரலாறு நெடுகக் காண்கிறோம். அதன் நீட்சியை வளரவொட்டாமல் வெட்டத் துடிப்பவர்கள் வைதிக மரபினர்.. வெட்ட வெட்ட மேலும் கிளர்ந்து துளிர்த்துக் கொண்டே இருப் பார்கள் அவைதிக மரபினர். ஏனெனில் அவைதிகம் என்பது அறிவின்பாற்பட்டது, அழியாது.

(நிமிர்வோம் - மார்ச் - 2017 இதழுக்கு

எழுதப்பட்ட கட்டுரை)

நன்றி: ‘‘தீக்கதிர்’’, 17.4.2017

-விடுதலை,20.4.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக