வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

விடை உண்டா விஜயபாரதமே!



- மின்சாரம் -

பல ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆள் நடமாட்டம் இல்லாத சின்னஞ்சிறு சிறிய கோயில்களில் உண்டியல் திருட்டு நடைபெற்று வந்தன - இப்பொழுது பழைமையான பெரிய கோயில்களில் சாமி நகைகளே காணாமல் போகின்றன. பல கோயில்களில் சாமி திருமேனிகளே திருட்டுப் போய் விட்டன. கோயில்களுக்கு நமது முன்னோர்கள் எழுதி வைத்த ஏராளமான நிலங்கள், சொத்துக்கள் கொள்ளை போகின்றன. அரசும் காவல்துறையும் கோயில் சொத்துகளைப் பாதுகாக்கத் தவறி கோட்டை விட்டுள்ளனர்.

(‘விஜயபாரதம்’ ஆர்.எஸ்.எஸ்.

வார இதழ்) 27.7.2018, பக்கம் 3)

விஜயபாரதத்துக்கு ஒன்று தெரியுமா? கோயிலைக் கொள்ளையடிப்பவர்களும் பக்தர்களே என்று சொல்லியிருப்பவர் இந்துமதத்தின் தலைவரான சாட்சாத் சங்கராச் சாரிதான். காஞ்சி காமக்கோடிப் பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதிதான் என்ன சொல்லு கிறார்?

அவர் வாயாலேயே கேட்டால் விஜயபாரத கும்பலுக்கு ருசியாக இருக்குமே!

குமுதம் கேள்வி: பெரிய மற்றும் சிறு கோயில்களில் அடிக்கடி கொள்ளை, கொலை போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுகின்றது. இதற்கு என்ன காரணம்? மக்களுக்கு கடவுள்களின் மீதுள்ள பக்தி போய் விட்டதா?

ஜெயேந்திரர் பதில்: கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்களில் அனேகப்பேர் பக்தர்களாகவே இருந்து, ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழிதேடுகிறார்கள். நாத்திகத் திற்கும், இப்படி எடுத்து போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. பொதுவாக பேராசை ஜாஸ்தியாக விட்டது. பணமுடை அதிகரித்துள்ளது.

(பேட்டி: பால்யூ)

(‘குமுதம்’ - 12.9.1996)

என்ன ‘விஜய பாரத’ வீராதி வீரர்களே! வாயடைத்து நிற்கிறீர்களே என்ன சங்கதி? 150கோடி ரூபாய் மதிப்புள்ள ராஜ ராஜ சோழன், அவரின் மனைவி உலகமகாதேவி சிலைகளை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்திற்கு கடத்தியது யார்? - இப்பொழுது கையகப்படுத்தப்பட்டு தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது அல்லவா!

அந்த சிலையைக் கடத்தியவர்கள் யார்? விலைக்கு விற்றவர்கள் யார்? வாங்கிய வர்கள் யார்? அவையும் விஜயபாரதத்தின் விலா எலும்பைக் குத்துவதாகவே இருக்கிறது.

கோயிலில் பணிபுரிந்த அதிகாரிகள் சிலர் தஞ்சையில் உள்ள சலுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரி மூலமாக சென்னைக்குக் கடத்தப்பட்டது. பின்னர் கவுதம் சாராபாய் என்பவருக்கு கோடிக் கணக்கான ரூபாய்க்கு இரு சிலைகளும் விற்கப்பட்டன. இதை சிலை தடுப்புப் பிரிவு அய்.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர். (விகடன் இணையம் -30.5.2018) (‘டெக்கான் கிரானிக்கள்’ - 2.6.2018)

ராவ்பகதூர் சீனிவாச கோபாலாச் சாரியாராம். இந்தப் பூணூல் திருமேனிக்கு விளக்கம் வேறு தேவையா? ‘விஜய  பாரதங்கள்’ தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைக்கப்போகின்றன?

கேள்வி: முயற்சியும் கடும் உழைப்பும் இருந்தால் தெய்வத்தின் அருள் இல்லாமல் போனாலும் வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்பது சரியா?

பதில்: முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட இறைவன் அருள் இருந்தால் மட்டுமே நடைபெறும் என நம்புகிறதோ!

மார்க்சும், ஏங்கல்சும், விஞ்ஞானிகளும், தந்தைபெரியாரும், அண்ணல் அம்பேத் கரும் பெரிய தலைவர்களாகி இன்று வரை மதிக்கப்படுவதெல்லாம் கடவுள் அருளால் அவர்கள் பெற்ற முயற்சிதானா? அப்படி என்றால் அவர்கள் கடவுள், மதம் உள்ளிட்ட வற்றிற்கு சவுக்கடி கொடுத்து தோரணமாய்த் தொங்க விட்டார்களே - அதுவும் இறைவன் அருளால் தானா?

‘தெய்வத்தான் ஆகா தெனினும்  முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்’

என்பது குறள் (619)

கேள்வி: அடிக்கடி கனவில் பாம்பு வருகிறது. அதைத் தவிர்க்க ஏதாவது பரிகாரம் உண்டா?

பதில்: ‘நாகதோஷம் உள்ளது என்று பொருள். பாம்பு கடிப்பதாக கனவு கண்டால் செல்வம் சேரும். அருகில் உள்ள கோயி லுக்குச் சென்று நாகர் சிலைக்கோ, புற்றுக்கோ பால் ஊற்ற வேண்டும்’ என்று விஜயபாரதத் தின் ஆஸ்தான ஜோதிடர் தெரிவித்தார்.

அப்படியா! பாம்பு கடித்ததாக கனவு கண்டாலே செல்வம் சேருமா? கனவில் காணும் போதே செல்வம் சேரும் என்றால் நிஜமாகக் கடித்தால் பெரும் செல்வம் குவியுமோ!

பாம்புப் புற்றுக்கு பால் ஊற்ற வேண்டுமாம்!

இந்த ‘விஜயபாரதங்களுக்கு’ பொது அறிவோ, விஞ்ஞான அறிவோ அறவே யில்லை என்பதற்கு இந்தப் பதில் ஒன்றே போதுமே!

புற்றில் பால் ஊற்றினால் பாம்பு பால் குடிக்குமா? பிளவுண்ட நாக்கையுடைய பாம்பால் பால் குடிக்க முடியாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாததுகள் எல்லாம் பேனா பிடிக்கின்றன.

கேள்வி: ‘கீதை’, ‘திருவாசகம்’, ‘திருக்குறள்’ சிறப் பென்ன?

பதில்: இறைவன் மனிதனுக்கு அருளியது கீதை. மனிதன் இறைவனிடம் வேண்டியது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்.

“நான்கு வருணங்கள் என்னால் உண் டாக்கப்பட்டவை; அவரவர்களுக் குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம உற்பத்தியாள னாகிய என்னால் கூட முடியாது”

(கீதை அத்தியாயம்-4, சுலோகம் 13)

“பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்”

(கீதை, அத்தியாம் 9, சுலோகம் 32)

விஜயபாரதக்குஞ்சுகளே! இந்தக் கீதையை சூத்திரர் களும், பெண்களும், வைஸ்யர்களும் எரிக்க வேண்டுமா? ஏற்க வேண்டுமா? விவேகம் இருந்தால் பதில் சொல் பார்க்கலாம். அது ஒருபுறம் இருக் கட்டும். இந்து மதத்தை அமெரிக்கா வரை ஏற்றுமதி செய்த உங்கள் விவேகானந்தர் கீதைப்பற்றி  என்ன கூறுகிறார்?

கீதையைப் படிப்பதை விட கால்பந்து விளையாடுவது

நல்லது என்று சொன்னவரும் விவேகானந்தரே!

“கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கீதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

முதன் முதலில் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக-  அதாவது வேத வியாசர் எழுதி யதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா?

இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா?

மூன்றாவதாக கீதையில் கூறப்படுவது போல் குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா?

நான்காவதாக அர்ஜூனனும் ஏனைய வர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள் தானா? என்பன. கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத்தினார் என்று சிலர் கருதுகிறார்கள்.

எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளி யிட்டிருந்தாலும் சரி - குருசேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண்டா என்ற பிரச்சினை எழுகிறது.

அர்ஜூனன், ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளனவே தவிர, இவர்கள் இருந்தனர் என்றோ, குரு சேத்திர யுத்தம் செய்தனர் என்றோ கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

(விவேகானந்தர் - ‘கீதையைப்பற்றிக் கருத் துகள்’ என்ற நூலில் (ஆதாரம்: ஏ.எஸ்.கே. எழுதிய ‘பகுத்தறிவுச் சிகரம் பெரியார்’ என்ற நூலில் - பக்கம் 117)

கீதை முட்டாள்களின் உளறல் என்றாரே- அண்ணல் அம்பேத்கர்!

பரவாயில்லையே - குறளையாவது மனிதனுக்கு மனிதன் சொன்னது என்று ஒப்புக் கொண்டதே. திருக்குறளை மனுதர்மத்தின் பிழிவு என்று சொன்ன திலிருந்து புத்தி மாறியிருப்பது வரவேற்கத்தக்கதே..

- விடுதலை ஞாயிறு மலர் 4. 8. 18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக