வியாழன், 24 அக்டோபர், 2019

ஆன்மீக அரசியல் - ஆத்துமா ஆன்மிகம் ஆனது,

ஆன்மிக அரசியல்

(மோடி, அமித்ஷா இணைந்து செய்யும் அரசியல் பகுத்தறிவு அரசியல் இல்லை. நடிகர் ரஜினிக்குப்பிடித்த ஆன்மிக அரசி யல் தான்! அந்த ஆன்மிக அரசியலுக்குக் கருவாக இருக்கும் ஆத்துமா எனும் மூடநம் பிக்கை இருளை விரட்ட வெளிச்சம் தரும் பகுத்தறிவு சிந்தனைகள் இங்கே தரப்பட்டு உள்ளது)

ஆத்மா

ஆத்மா என்பதுபற்றிப் பேசப் புறப்பட் டால் பிரத்தியட்ச அனுபவத்திற்கும், அறி வுக்கும் அதீதப்பட்டதாக இருப்பவைக ளைப் பற்றியேதான் பேச வேண்டியிருக்கும்.

ஏனெனில், அது அறிவையும் அனுபவத் தையும் தூர வைத்துவிட்டு, வெறும் நம் பிக்கை மீதே ஒப்புக்கொண்டு பேசவேண் டியதாக இருக்கிறது.

எதுபோலென்றால், கடவுள் என்பதைப் போலவே. அதாவது, ஒரு வஸ்துவாக - பொருளாக இல்லாததை ஒரு சக்தியாகக் கருதி, அதாவது, “கண், மூக்கு, காது, வாய், கை, கால், உடல் ஒன்றும் இல்லாமல், கண்களுக்கும் தெரியாததாய், மனதுக்கும் அடங்காததாய் இருக்கும் ஒரு வஸ்துவே கடவுள் என்பது போல்தான் ஆத்மாவும் ஒரு வஸ்துவாக இல்லாமல், ஒரு உருவமாக இல்லாமல், சக்தியாகக்கூட இல்லாமல், “கண் களுக்குத் தெரியாததும், மனத்துக் குட்படா ததும், காரண காரியங்களைக் கொண்டுகூட ஸ்தாபிக்க முடியாததுமாய் இருக்கிற ஒரு சூட்சுமப் பொருள் என்று வழங்கப்படுகிறது. இது இந்தப்படி ஒன்று இருக்கிறது என்பதை நம்பியாக வேண்டு மேயல்லாமல், விவகா ரம், விசாரணை ஆகியவைகளைக் கொண்டு சிந்தித்துப் பார்த்து நம்புவது என்பது முடியா ததாய் இருக்கிறது.

- தந்தை பெரியார், நூல்: தத்துவ விளக்கம்

பைத்தியக்காரனுக்கு

கள் ஊற்றியது போல்

ஆத்மா இருக்கிறது; அது சாவது கிடை யாது. மனிதன் செய்த நன்மை தீமைக்கான தண்டனையை ஏற்று மோட்சம், நரகம் சென்று அனுபவிக்கிறது என்றும், அவன் ஆத்மாவானது இன்னொரு உடலுக்குச் சென்று மறு பிறவி எடுத்து இங்கு வந்து அவன் செய்த பாவத்திற்கேற்ப நாய், கழுதை, பூச்சி, புழுவாய்ப் பிறந்து அனுப விக்கிறது என்றும், மனிதன் அவனவன் விதிப்படிச் சாவான், விதிப்படிதான் நடந்து கொள்வான் என்றும் இப்படிப் பைத்தியக் காரனுக்கு கள் ஊற்றியது போல் உளறிக் கொட்டியிருக்கிறான்.

- தந்தை பெரியார்  (விடுதலை, 17,6,1970)

ஒரு பொய்யை

நிலை நிறுத்த பல பொய்

ஆத்மா என்பது ஒரு பொய். மதக் கற்பனைக்கு ஒரு பொய்ப் பாதுகாப்பே அல்லாமல் வேறல்ல. ஒரு பொய்யை நிலை நிறுத்தப் பல பொய் பேச வேண்டியிருப்பது போல், மதத் தத்துவம் என்னும் பொய்யை நிலை நிறுத்தவே ஆத்மா மோட்சம், நரகம், மறு பிறவி, விதி, தர்மம் என்பதாகப் பொய்க் களஞ்சியக் கற்பனைகளை ஏற்படுத்த வேண்டிய தாயிற்று.

- தந்தை பெரியார்

(விடுதலை, 6.3.1966)

ஆத்மா அர்த்தமற்ற வார்த்தை

ஆத்மா என்பது ஒரு வஸ்துவல்ல ; பொருள் அல்ல; அது சுதந்திரம், அறிவு, உணர்ச்சி முதலாகியவைகளை உடைய தல்ல என்பதோடு அது பெரிதும் அர்த்த மற்ற வார்த்தை என்றே நமக்குக் காணப்படு கிறது.

- தந்தை பெரியார்  (விடுதலை, 6.12.1953)

ஆத்மா எப்படி

அனுபவிக்க முடியும்?

ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியா தது என்றும் சரீரம், உருவம், குணம் இல்லா தது என்றும் சொல்லப்பட்டிருக் கிறதே சரீ ரம் உருவம் இல்லாததற்கு நாம் பார்ப்பனரி டம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனு பவிக்க முடியும்?

- தந்தை பெரியார்  (விடுதலை, 14.2.1954)

மனிதனை பயமுறுத்தவே ஆத்மா

உலகில் மனிதன் மட்டும் சாவது இல்லை; பிறப்பது இல்லை. ஏராளமான சீவன்கள், மிருகங்கள், மரம், செடி, கொடி கள் யாவும் மடிந்து சாகின்றன. மனிதனுக்கு எப்படி ஆத்மா இருக்கிறது என்கின்றானோ அது போன்று இவைகளுக் கெல்லாம் ஆத்மா இருக்க வேண்டுமே? அப்படி இல்லை யென்றால் அவைகளுக் கெல்லாம் இல்லாத ஆத்மா மனிதனுக்கு மட்டும் இருக்க வேண்டிய அவசியம் என்ன வென்று பார்த்தால் கடவுளிடம் மனிதனுக் குப் பயம் ஏற்பட வேண்டுமானால் அதற் கொரு வேலை வேண்டும். அதற்கு வேலை கொடுக்கவும் மனிதனைப் பயமுறுத்தவும் அயோக்கியனால் ஏற்பாடு செய்யப் பட்டது தான் ஆத்மா வாகும்.

- தந்தை பெரியார் (விடுதலை, 17.6.1970)

ஆத்மா - ஆத்மார்த்தம் - ஆன்மா - ஆன்மிகம்!

ஆத்மா என்பதைப் போல மனத்தைக் குழப்பும் சொல் - தத்துவம் உலகில் வேறு எதுவும் கிடையாது.

கடவுள், மோட்சம், நரகம், தேவதைகள், பிசாசுகள் என்ற வரிசையில் வைக்கப்பட வேண்டிய கற்பனைகளில் இதுவே முதல் இடத்தைப் பெற மிகவும் தகுதி வாய்ந்த ஒன்றாகும்!

இல்லாத ஒரு கற்பனை, மனித குலத்தை எத்தனை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக படாத பாடுபடுத்தி, மனிதனின் அறிவுத் திறனுக்கு விலங்கிட்டுள்ளதே என்று எண் ணுகையில் மிகவும் வேதனைப்பட வேண்டி யுள்ளது!

இது உண்மை அல்ல; மனிதனின் அச் சம் காரணமாக ஏற்பட்ட ஒன்று என்பதற்கு முதல் ஆதாரம், அது ஒவ்வொரு நாட்டில், ஒவ்வொரு கால கட்டத்தில், ஒவ்வொரு மதத்தவருக் கும் ஒவ்வொரு மாதிரியாகத் தோன்றி அதையொட்டி அவர்கள் எழுதி யுள்ளதும், பேசி வருவதும் போதித்து உள் ளதுமேயாகும்.

உண்மை என்றால் அது ஆளுக்கு ஆள் மாறுபட முடியாது; கூடாது!

ஆத்மாபற்றிய வரையறை, இலக்கணம், விளக்கம் ஒன்றுக்கு மற்றொன்று குழப்ப மாகவும், முரணானதாகவும் உள்ளதே!

ஆனால், பொதுவாக எல்லா மதங்களும் ஒப்புக் கொள்ளும் ஆத்மாவின் பலன், நல்லது, கெட்டது என்பதை அதுவே நிர்ண யிக்கிறது என்றும், மனித உடலில் தற்காலி கமாகக் குடியிருக்கும் அது (ஆத்மா) மனித னின் இறப்புக்குப் பிறகு அவனை விட்டு விட்டுப் போய் விடுகிறது என்பதே!

அதற்குப் பால் வேற்றுமை இல்லை. அது உடலி லிருந்து உயிர் பிரிந்தவுடன், எங்கோ சென்று தற்காலிக உறைவிடத் திலோ அல்லது மோட்சம் அல்லது நரகத் திற்கோ சென்று தங்கி விடுகிறது! அது மீண்டும் உலகில் வந்து புதுப்பிறவி ஆகிறது என்று --இம்மதங்களில் பல நம்புகின்றன.

ஆத்மா, மோட்சம், நரகம்,

மறுபிறப்பு, பிதிர்லோகம்

ஆகியவைகளைக்

கற்பித்தவன் அயோக்கியன்,

நம்புகிறவன் மடையன்,

இவற்றால் பலன் அனுபவிக்கிறவன்

மகா மகா அயோக்கியன்.

- தந்தை பெரியார்

மரணம் என்பது முடிவல்ல; அது உட லுக்குத்தான்; ஆத்மாவுக்குக் கிடையாது என்று மதவாதிகள் நம்புகின்றனர்; - கூறு கின்றனர்; பரப்புகின்றனர்!

ஆத்மா பற்றிய விசாரணை அது எப்படி மனித வாழ்வின் நல்லது கெட்டதுகளையும், நன்மை தீமைகளையும் புதுப்புதுப் பிறவி கள் - அடுத்து எடுக்க வேண்டியவைகளை யும் நிர்ணயிக்கிறது என்பதை பற்றியதே யாகும்

ஆத்மா என்பதற்கு ஆங்கிலத்தில் ஸ்பி ரிட்” (Spirit) என்று கூறுகின்றனர். அதனால் ஆத்மாபற்றிய விவாதத்தை   Spritual Enquiry of Discussion என்று படித்த பலரும் கூட கூற நாம் கேட்கிறோம்.

இந்த  என்ற செல்லே, ஒரு இலத்தீன் மொழிச் சொல் ஆகும்; இலத்தீனிய மொழிச் சொல்லில் மூச்சை இழுத்து விடுதல் என்பதைத் தான் குறிப்பதாகும் !

உடலில் மூச்சு உள்வாங்குதல், வெளி விடுதல் என்பதுதான் மனிதன் உயிருடன் வாழ்கின்றான் என்பதற்கு அடையாளம். மூச்சு நின்று விட்டால் “அவன் செத்துப் போய் விட்டான் என்கிறோம்! அதாவது மூச்சு நின்று விட்டது என்று அறிவிக்கிறோம்!

மதவாதிகள், சாமியார்கள், தத்துவ வாதிகள் ஆகிய மூவரும் காலங் காலமாகத் தொடர்ந்து இந்த விசாரணையைத் தங் களது தொழிலாகவும், தொடர் பணியாக வும், தங்களை மற்ற மனிதர்களிடத்திலிருந்து வேறுபடுத்தி உயர்த்திக் காட்டும் ஏணியா கவும் பயன்படுத்திக் கொள்ள நல்ல “மூல தனமாக“க் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்!

மத குருமார்கள், மதவாதிகள் மீது நாளுக்கு நாள் வெறுப்பு அதிகமாகி வருவ தால், அதே பெயரில் தங்களது சுரண்டல் வாழ்க்கையை நடத்தாது, “ஆன்மிகம்“ என்ற ஒரு சொற் றொடரை - ஆத்மார்த்தம்‘ என்பதனைத் தமிழ்ப்படுத்தி ஆன்மா வாக்கி, அது பற்றிய ஆராய்ச்சியினை ஆன்மிகம் என்று கூறி, மூடநம்பிக்கை என்ற விஷ உருண்டையை - சர்க்கரைப் பூச்சு பூசித் தந்து பெரும்பாலான மக்களை - விரக்தியிலும் வேதனையிலும் வாடு வோருக்கு - ஏதோ புதுவழி காட்டப் புறப் பட்டவர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டு நவீனச் சாமியார் வேடத்தில் நன்கு மக்களை ஏமாற்றுகின்றனர்!

- கி.வீரமணி, நூல்: ஆத்மா ஓர் ஆராய்ச்சி

மரணத்திற்குப் பிறகு மறுவாழ்வு உண்டா?

நீங்கள் நம்புகிறீர்களா?

நம்பவில்லை; நம்புவதற்கு ஆதாரமில்லை.வாழ்வை உணரும் கருவிதான் உடம்பு.

அய்ம்பூதங்களோடு உடம்புக்குள்ள தொடர்பனுவம்தான் வாழ்வு.

ஒவ்வொரு புலனும் ஓர் உலகம்.

செவிப்புலன் இழந்தால் ஒலி செத்துப் போகிறது.

விழிப்புலன் இழந்தால் ஒளி உலகம் இருண்டு போகிறது.

உடம்பேகழிந்துபோனால் உணர முடியுமா உலக வாழ்வை? மரணத்திற்குப் பிறகு என்ன நேர்கிறது உடம்புக்கு?

மூச்சு நின்ற 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டையிடுகின்றன சடலத்தில்.. 60 மணி நேரத்தில் இட்ட முட்டையிலிருந்து லார்வாக்கள் வெளிவருகின்றன. நகங்கள் கழன்று விடுகின்றன - மூன்று நாட்களில், ஈறுகள் தொலைகின்றன.

நான்கு நாட்களில். அய்ந்தே நாட்களில் திரவமாய் உருகித் தேங்கிவிடுகிறது மூளை. ஆறே நாட்களில் மொத்த உடம்பும் பச்சை பூத்துப்போக, வாயுக்களால் வீங்கி வெடிக்கிறது வயிறு கழன்று கபாலத்துக்குள் விழுந்து விடுகின்றன கண்கள்.

இரண்டே மாதங்களில் உடம்பே அழுகி உருகித் திரவப் பொருளாகிவிட என்னை அடையாளம் தெரிகிறதா என்று எஞ்சி நிற்கிறது எலும்பு

வாழ்வின் கருவியாகிய உடம்பே அழியும் போது எங்ஙனம் சாத்தியம் இன்னொரு வாழ்வு?

உயிர் அழியாது எனில் அது என்ன திடப்பொருளா திரவப் பொருளா - இன்னொரு பாண்டத்தில் இட்டு வைக்க? மரணத்திற்குப் பிறகு வாழ்வு என்பது வசதியான கற்பனை என்றே கருதுகிறேன்.

மனித குலம் வாழும்போதே வாழ்வ தற்கு என்ன வழி என்றே ஏங்குகிறேன்.

- கவிப்பேரரசு வைரமுத்து

நூல் : பாற்கடல்

- விடுதலை ஞாயிறு மலர் 19 10 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக