திங்கள், 5 பிப்ரவரி, 2018

அறிவா? ஆபாசமா? சீடனிடம் தன்னைத் “தாரை வார்த்த” குரு பத்தினி!



கடவுளின் ஒழுக்கம்: தாரையின் காதல்
சந்திரன் வளர்பிறை, தேய்பிறை அடைவதற்கான புராணக்கதை
குரு பகவானின் தர்ம பத்தினி தாரை.

குரு பகவானிடம் வேதங்கள், உபநிசத் துகள், நேம  நிஷ்டைகளை கற்றுக்கொள்ள சீடனாக சந்திரன் வந்து சேர்ந்தான். அவனும் குருவின் ஆசிரமத்தில் சேர்ந்து குருவுக்கும் அவருடைய தர்ம பத்தினிக்கும் தொண்டு ஊழியம் செய்து மேற்கண்ட சகல கல்விகளையும் கற்று வந்தான்.

ஆனால் குரு பத்தினி தாரைக்கு சந்திரனின் இளமை, கட்டுடல் மீது ஒரு பற்றும் பாசமும் ஏற்பட்டு அவனை அடைய வேண்டும் என்ற ஆவலும் அதிகமாகிக் கொண்டே வந்தது.

ஒரு நாள் சந்திரன் தாரையிடம் வந்து, “அம்மா நான் குருவிடம் இருந்து நான்கு வேதங்கள் மற்றும் அனைத்தையும் கற்றுகொண்டுவிட்டேன். இன்னும் நான் எவற்றையெல்லாம் கற்க வேண்டும்” என்று கேட்க....

“குருபகவானிடம் நீ கற்றுக்கொள்ள வேண்டிய அனைத்தையும்  கற்றுக்கொண்டு விட்டாய். நீ நான்கு வேதங்களையும் நன்றாக அறிவாய். இனி ஒரு வேதம் தான் பாக்கி இருக்கிறது. அந்த அய்ந்தாம் வேதத்தை குரு உனக்கு கற்றுக்கொடுக்க மாட்டார். இனி நானே அவற்றை சொல்லித்தருகிறேன்” என்று சொல்லி தினமும் சந்திரனுக்கு அவள் மீது பாசம், பற்று எற்படுவதற்கான அனைத்து செயல்பாடுகளையும் செய்துவருகிறாள். ஆனால் சந்திரன் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது தன் குருவின் சீடனாகவே நடந்து வந்தான். இருந்தாலும் தாரை அவனை விடாமல் தன் மீது காதல் உணர்ச்சியைத் தூண்டும் செயல்பாடுகளிலேயே ஈடுபட்டு வந்தாள்.

அவனை குளிப்பாட்டுவது முதல் எண்ணெய்த் தேய்ப்பது வரை அவளே செய்து வந்தாள். எண்ணெயை கிண்ணத்தில் ஊற்றி அருகில் வைத்துவிட்டு அவள் பாதி நிர்வாண கோலத்துடன் எண்ணெய்த் தேய்த்துவிடுவாள்.

அப்போது சந்திரன் எண்ணெய் கிண்ணத்தில் பார்க்கும்போது அவள் பாதி நிர்வாண கோலத்தை காண, காண, காம உணர்வு அதிகமாகி ஒருநாள் தாரையின் காதலை நிறைவேற்றிவிட்டான்.

தாரை தன் காதலை பூர்த்திசெய்து கொண்டது பற்றி அறிந்த குருபகவான் குருபத்தினியைக் கூடி களித்த சண்டாளன் இவன் என்றுசாபமிட்டு சந்திரனை தண்டிக்கிறார்.

சந்திரனை உன்கட்டுடல் படிப்படியாகக் குறைந்து கடைசியில் நீ முற்றிலும் இரண்டு நாட்கள் மறைந்து போய்விடுமாறு சபிக்கிறார்.

அதனைக்கேட்ட சந்திரன் தன்னை மன்னித்து அருள்பாலிக்குமாறு வேண்டி நின்றான்.  மீண்டும் குருபகவான் நீ படிப்படியாக வளர்ந்து பழைய நிலையை அடைவாயாக என்று அருள்பாலித்தார்.

அதன்படித்தான் வளர்பிறை, தேய்பிறை உண்டானதாக புராணக்கதை கூறுகிறது.

குறிப்பு: இந்த கதை ‘தாரசசாங்கம்’ என்ற பெயரில் வந்த திரைப்படமாகும்.

அன்னையே நீ சொன்ன 5ஆம் வேதத் தினை அன்புடன் உரைப்பீரே! என்ற பாடல் பிரசித்தமான பாடல் ஆகும்..
இதுதான் புராணக்கதை.

இதில் கொஞ்சமாவது அறிவுக்கு இடம் உண்டா அன்றி, ஆபாசத்துக்கு இடம் உண்டா?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!
பெரியார் பெருந்தொண்டர்

வை.விசுவநாதன், [வயது93]

பாபநாசம்.

- விடுதலை ஞாயிறு மலர்,20.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக