ஞாயிறு, 16 அக்டோபர், 2016

யானைத் தலையுடன் பிறந்த வினாயகனாம்!

வினாயகன், கணபதி, கணநாதன், கணேசன், விக்னேஷ்வரன், கணன், பிள்ளையார் என்று பல பெயரால் வணங்கப்படும் வினாயகனின் பிறப்புக் கதைகள் ஒரே வகையாக இல்லாமல் ஒவ்வொரு புராணத்திலும் வெவ்வேறு வகையாக உள்ளது.

காணபத்யம் என்கின்ற வினாயகனை முழு முதல் கடவுளாக (பரப்பிரம்மம்) வழிபடும் பிரிவினரின் வினாயகர் புராணம் என்கிற உப புராணத்தில் மட்டுமே வினாயகனை உயர்வாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது வினாயகன்தான் முதலில் தோன்றிய கடவுள் என்றும்; சக்தி, சிவன், விஷ்ணு, பிரம்மா போன்றோரையும் படைத்து அண்ட சராசரங்களையும் படைத்ததாக கூறுகிறது.  ஆனால், வினாயகன் பிறக்கும் போதே தலையில்லாமல் முண்டமாக பிறந்ததாகவும், பார்வதியும், பரம சிவனும் யானைகள் வடிவாக மாறி புணர்ந்ததின் விளைவாக யானைத் தலையுடன் பிறந்ததாகவும், பார்வதி குளிக்கும்போது உடலில் உள்ள அழுக்கைத் திரட்டி வடிவமும் உயிரும் கொடுத்து காவலுக்கு வைத்தபோது, சிவனால் தலை அறுக்கப்பட்டு பிறகு யானைத்தலை பொருத்தப் பட்டதாகவும் இன்னும் பற்பல வகையாக வினாயகன் பிறப்பை பற்றி புராணங்கள் கூறுகின்றன.

சிவமஹா புராணத்தில் (முதல் பாகம்,ஞான சம்ஹிதை 31. கணபாலன் அவதரித்த கதை) வினாயகனின் பிறப்பு பற்றி இப்படி கூறுகிறது;
ஏவம் விசார்யஸாதேவி ஜலம் ஜக்ராஹபாணிநா
தேஹஸ்தம் ருதமாதாய த்யாத்வாரூபம் ப்ரபோஸ் ஸாபம்
நிர்மாய ப்ரணவாகாரம் சதுர்பாஹூந்த்ரி லோசனம்
ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் கஜவக்ரதம் ஸுவாக்ருதிம்
சிவனின் கணங்களே பார்வதிக்கும் பாதுகாவலாக இருப்பதால் அவர்களின் மீது நம்பிக்கையின்மை தோழியின் மூலமாக பார்வதிக்கு ஏற்பட்டது. இதனால் பார்வதி குளிக்கும் போது தண்ணீர்விட்டு உடலில் உள்ள அழுக்கை திரட்டி யானைத் தலையுடன் பொம்மை செய்து அதற்கு உயிரும் கொடுத்து காவலுக்கு வைத்தாள். யானைத் தலையுடன் காவலுக்கு வைக்கப்பட்டவனே வினாயகனாம். ஏன் மனிதத்  தலைபோல் வைத்தால் என்ன உடல் அழுக்கா குறைந்துவிடும்?

“பவிஷ்ய புராணம்“ என்கிற பாரசீக (பார்சி) மத ஆதரவு புராணத்தில் வினாய கனின் பிறப்பு வேறுவகையாக உள்ளது. பிரம்மனால் படைக்கப்பட்ட மனிதர்கள் எல்லோரும் இடையூறு இல்லாமல் நிம் மதியாக வாழ்ந்து வந்ததால், கடவுளை நினைப்பதைவிட்டுவிட்டார்களாம். ஆகையினால் அவர்களுக்குப்பாடம் புகட்டவேண்டி, பிரம்மா விக்னத்தை உண்டாக்குவதற்கு என்றே விக்னேஷ் வரன் என்கிற வினாயகனை படைத்தாராம். அதாவது தொல்லை கொடுப் பதற்கென்றே பிரம்மனால் படைக்கப்பட்டவன் தான் வினாயகனாம்.

ஒவ்வொரு புராணத்திலும் வினாயகன் பிறப்பைப் பற்றி வெவ்வேறு வகையாக கூறுவதால் புராணங்கள் அனைத்தும் அவரவர் இச்சைக்கேற்ப எழுதப்பட்டது என்பது தெளிவாகின்றது.
கொசுரு செய்தி ஒன்று, வைணவ(பெருமாள்) கோயில்களின் வாயிலில் தும்பிக்கை ஆழ்வார் (கடவுளல்ல) என்கிற பெயரில் சிறுமைபடுத்தப்பட்டு வினாயகன் சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்படி பிறந்தான் என்று அறுதியிட்டு கூறமுடியாத வினாயகனுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒருகேடா!.

- செ.ர.பார்த்தசாரதி
-விடுதலை,01.09.2016
-விடுதலை,01.09.2016,பக்கம்-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக