சனி, 7 ஜனவரி, 2017

கார்த்திகை தீபத்தின் கர்த்தா யார்? (2)&(3)

- இரா.கண்ணிமை -

நேற்றையத் தொடர்ச்சி....
சிவனைப் பற்றி - ஆராய்ச்சியில் ஜைனமதத்தில் காணும் சில செய்திகள்: இக்காலத்திலுள்ள ஜைன பக்தர்களைப்போல் - முற்காலத்தில் இருந்த ஜைனர்கள் சிவனை தெய்வமாய்த் தொழுதார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏன் எனில் ஜைனர் வணங்கும் சிவனுக்கும் - சைவர் வணங்கும் சிவனுக்கும் உள்ள வேறுபாட்டை கீழ்வரும் சமஸ்கிருத சுலோகத்தால் - ஒரு ஜைனன் - சைவ மதத்தைக் கண்டிப்பதைக் காணலாம்.
சுலோகம்
தத்தம்யேன புரத்ரயம் சரபுவா தீவ்ராச்சி ஷாவஹ்கினா
யோவந்ருத்யதி மத்தவத் பித்ருவனே யாத்வ யாத்ந் கோவாகுஹ
சோயம் கிம்மம சங்கரோ பயத்ருசாரோ ஷார்த்தி மோஹக்ஷயம்
க்ருத்வாய ஸ்துர் ஸர்வ வித்தனுப்ருதாம் ஷேமங்கர சங்கர
பொருள்: சுடுகாட்டிலிருந்தெழும் கடும் ஜூவாலை வீசும் அக்னியால் எவன் திரிபுர சம்மாரம் செய்தானோ  - (விஷ்ணு மாயைக்குட்பட்ட பக்தன் என்று அறியாமையால் சுட்டெரித்தான் என்று பொருள்)
பித்தன்போல், எவன் சுடுகாட்டில் ஆடுகிறானோ அவன் என் வணக்கத்திற்குரியவன் அல்ல என்பதாம்.
சுலோகம்
ஈசாகிம் சின்ன லிங்கோய திவிகதபய
சூலபாணி கதம்ஸ்யாத்
நாதகிம பை க்ஷசாரி யாதிரி  ஸகதம்
ஸாங்கன ஸாத்ம ஜங்ச
ஆர்த்ராக கிம்த்வஜன்மா ஸகல விவதி
கிம்வேந்தி நாத்மாந்த்ராயம்
ஸம்க்ஷோபாத் ஸ்ம்யருக்தம் பசுபதிம பசு
கோத்ரதீ பானு பாஸ்தே!
பொருள்: முறிந்தலிங்கம் (ஆண் குறி) கடவுளாகுமோ? தீரவீரனானால் சூலம் கரம் தாங்குவதேன்? உலகிற்கே இறைவனானால் பிச்சையேற்று (யாசித்து) உண்பதேன்? மனைவி மக்களுடன் கூடியிருப்பவன் துறவி (யதிதி) யாவதெப்படி? பிறப்பு இறப்பு அற்றவன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தான் என்றால் அர்த்தம் என்ன? தனக்கு எதிர்காலத்தில் வரவிருக்கும் இடையூறை அறியும் வகையற்றவன் தெய்வம் என்றால் எப்படி? - என்பதாம்.
- ஜைனர் வணங்கும் சிவனின் அடையாளங்கள்-
சுலோகம்
மயாநாஸ்தி ஜடாக பாலமுகுடம் சந்த்ரோர்ண மூர்த்தாவி கட்வாங்கம் நசவாசுகிர் நசதனு சூலம் நசோகீரம் முகம் காமோ யாஸ்ய நகாமினி நசவ் ருஷோகீதம் நந்ருத்யம்புன யோஸ்பர்ன பாது நிரஞ்சனோ நிருபம்  ஸர்வத்ரஸீக்ஷம சிவ.
பொருள்: மாயையற்றவனும், யாசகம் எடுக்கும் பாத்திரம், ஜடை தலையோடு இல்லாதவனும், கிரீடம், இளம்பிறை, தண் ணீர், கட்வாங்கம், வாசுகி, வில் சூலாயுதம், கடுகுமுகம், காமம், அழகிய பெண், ரிஷபம், பாட்டு, கூத்து முதலியன இல்லாதவனும் ஆனவனே - எங்களைக் காக்க வந்தவன் சிவன் என்பதாம்.
ஜைனர்கள் - ஜீவதேவனை வழிபட்டு வணங்குகிறார்கள். ஜீனன் என்றால் உலகத்தைக் கடந்த முழுமுதற் கடவுள் என்று அர்த்தமாம். இதனால் சைவர் வணங்கும் சிவன் மனிதன் என்றும், ஜைனர் வணங்கும் சிவன் இதற்கு முற்றும் வேறு பட்டவர் என்றும் விளக்குகிறது.
சிவனின் முக்கிய தலங்கள்
திருவண்ணாமலை, திருக்காளாஸ்திரி, திருவொற்றியூர், திருவிடைமருதூர், திருவாரூர், திருவாலங்காடு, திருக்கழுக் குன்றம், திருக்கோணமலை (இலங்கைத் தீவில் உள்ளது), சீர்காழி, சிதம்பரம், காசி, காஞ்சிபுரம் முதலியனவாம்.
ஜைன மதத்திலுள்ள சுலோகத்தில் இரண்டு சிவன்கள் உண்டு என்றும், சைவம் வணங்கும் சிவனுக்கும், ஜைனர் வணங்கும் சிவனுக்கும் பெரும் வேறுபாடு உண்டு என்றும் சொல்லப்பட்டிருப்பது போல் -  ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதப்பட்டுள்ள சிவஞான சித்தியாரின் சைவ சித்தாந்த நூலிலும் விளக்கப்பட்டிருக்கிறது.
பிர்மா முதல் மற்றுமுள்ள எல்லா தேவர்களும் அரன் உருவுக்கு சமத்துவமாவதெப்படி என்றால் அவர்கள் அனைவரும் தங்கள் தாங்கள் அலுவல்களை நடத்துவதே காரணம். இவ்வாறு இத்தேவர்களே அலுவல்களை நடத்திக் கொள்வதானால் அரன் என்னும்மற்றொருதெய் வம் வேண்டியதில் லையே?பிர்மாவும்,விஷ் ணுவும்பிரபஞ்சபர கிருதிக்குமேல் எழ முடியாமலும், ருத்திரனும், மகேஸ்வரனும் அசுத்தா மாயைக்கு மேல் எழ முடியாமலும் உள்ளவர்கள். ஆதலால் அனைத்தையும் காண வல்லவருமான ஒருவன் மிகமிக அவசியம் என்ப தாம். (சிவஞான சித்தியார் - சைவ சித்தாந்த நூல் சுபக்கம் 53ஆம் பக்கம்)
இதன் உண்மையை விளக்கும் கவி - திருவாசகத்தில் உள்ளது. சிவஞான சித்தியாரின் சுபக்கம் என்னும் நூலில் 32 ஆம் பக்கம் பார்க்கவும்.
- கவி -
மூவரும் முப்பத்தி மூவரும் மற்றொழிந்த
தேவரும் காணாச் சிவபெருமான் - மாலேறி
வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே இன்பம் மிகும்.
பொருள்: பிர்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூம்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் கண்டிராத சிவபெருமான் வந்துதித்த வரலாற்றை பார்த்தோம் என்பதாம்.
இத்தனை சுலோகங்களின் பொருளையும் கூர்ந்து பார்க் கையில், அரன் என்னும் வார்த்தை (பதம்) மும்மூர்த்திகளில் ஒருவனான சிவனைச் சுட்டிக்காண்பிப்பதற்காக அல்ல. சிவனையல்லாது வேறொரு தெய்வத்தையே காட்டுவதாக தெரிகிறது. அது எது? இந்த சிவன் தனிமுதற்கடவுளான தேவன் அல்ல, என்னும் நிலையை உறுதிப்படுத்துகிறது. இதுவன்றி இம்மும்மூர்த்திகளுக்கும் உலக மனிதரைப் போலவே ஜாதி வேற்றுமை உண்டென்றும், இத்தேவர்களின் ஜாதி வகுப்பின்படியே, மனித ஜாதியார் அவர்களை வணங்க வேண்டுமாம். இது மகாபாரதத்தில் உள்ளது.
“Siva was the god of the upper classes, Brahamanas and Kshatriya and Manu in mentioning the caste of the gods. Make out that Siva is Brahman, Vishnu kshatriya and Brahama Vaisya and Indra Sudra and their worship by the respective castes are Recommended’ (Sivagnana Siddiyar - Subakkam 48. Found in Mahabarat).
இதன் பொருள்:
சிவன் பிராமண சத்திரியரான மேல் குல மக்களுக்கு தெய்வம். மேலும் மனுவென்பார் ஜாதி வரலாற்றை சொல்லும் போது சிவனை பிராமண ஜாதி என்றும், விஷ்ணுவை சத்திரய குலமென்றும், பிர்மாவை வைசிய குலமென்றும், இந்திரன் சூத்திர குலமென்றும் வகுத்துப் பிரித்து அந்தந்த குலத்தார் அந்தந்த குலக்கடவுள்களையே வணங்க கட்டளை விதித்திருக்கிறது - (சிவஞான சித்தியார் சுபக்கம் 48ஆம் பக்கம்). முழு விவரங்களை மகாபாரதத்தில் காணலாம்.
ஒரு விருத்தம்
கிருபையழகு கண்டே நெறிகெட்டு விரகங் கொண்டு
உரை செய்யும்படி நினைத்திடிலெங்கள் உள்ள மிகு
பயங்கொள்ளும் வேலை செய்தான் சிவன்.
பொருள்: “சிவன் - துரோணாச்சாரி மனைவியாகிய கிரு பையை பார்த்தவுடனேயே அவள் மேல் ஆசை கொண்டு அடாத செயலைச் செய்தானே! அய்யோ அந்த காரியத்தைச் சொல்ல நினைத்தால் மனம் திடுக்கிட்டு அச்சத்தைக் கொடுக்கிறதே!” என்பதாம். இக்கதையை சமஸ்கிருத பாரதத்தில் அறியலாம். இதை ஆதிபருவம் வாரணாவதச்சுருக்கம் 41 முதல் 44 ஆம் பாடல் வரை, பாரதத்தில் பார்க்கலாம். மேலும் கந்த புராணம் கயமுகனுற்பத்தி படலம் 160 முதல் 174 ஆம் பாடல் வரையும், உத்திரப்படலம் 30, 33, 34, 37, 38, 40, 43, 45, 53, 66, 89, 91, 92, 94ஆம் பாடல்களையும் பார்க்கவும்.
(தொடரும்)
-விடுதலை,11.12.16

நேற்றையத் தொடர்ச்சி....
கார்த்திகை தீபத்தின் கர்த்தா யார்? (3)
-இரா.கண்ணிமை
ஒரு சமயம் இலங்கா சூரனாகிய இராவணன் - சிவனின் கைலாயமாகிய வெள்ளி மலையை தன் கையால் பிடித்துக் குலுக்கினானாம். அதைக் கண்ட சிவன், தனக்குத் திரிபுர அரன் என்ற பெயர் வைத்துக்கொண்டு யுத்தம் செய்தானாம். பூமியை ரதமாக்கி, பிரமதேவனை சாரதியாக்கி, வேதங்களை குதிரைகளாக்கி, விஷ்ணுவை அம்பாக்கி, மேருவை வில்லாக்கி, ஆதிசேடனை நாணாக்கி பாணத்தைக் கொளுத்தி திரிபுரங்களை எரித்தானாம் - என்று பாகவதம் ஒன்பதாம் சல்லாபத்தில் சொல்லியிருப்பதைக் காணலாம்.
உண்மையில் - இன்று உலகெங்கும் நடக்கும் மிகப்பெரிய போர்களுக்கு இது எம்மாத்திரம் என்பது சிந்திக்கத் தக்கது.
மேலும் சிவன் பூமியை ரதமாகவும், வேதங்களை குதிரைகளாகவும், பிர்மாவை சாரதியாகவும், விஷ்ணுவை அம்பாகவும், மலையை வில்லாகவும், ஆதிசேட பாம்பை நாணாகவும் ஆக்கியது உண்மையானால், சிவன் பூமியை ரதமாக்கிக் கொண்டபோது சிவன் போர் செய்யப்போன அந்த மூன்று புரங்களும் எந்த பூமியிலிருந்தன? ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்ததா? அதில் வசித்த ராட்சதர் எங்கே போனார்கள்? இந்த திரிபுரங்கள் ரதமாக்கப்பட்ட பூமிக்குள் அடக்கமல்லவா? அது உண்மையானால் குதிரை, வில், அம்பு ஆயுதம் ஏன்? பூமியே ரதமானால் சிவன் இந்த ரதத்தை எந்த பூமியில் ஓட்டினான்? யுத்தம் நடத்திய இடமெங்கே? வேதங்களை குதிரையாக்கியதேன்? விஷ்ணுவைத் தவிர வேறு வகையில் அம்பு செய்யக்கூடாதா? மேருமலை வில்லானதெப்படி? இதுநின்ற பூமி ரதமானபோது - பூமியை சுமந்து கொண்டிருந்த ஆதிசேடனைத் தவிர வேறு நாண் கிடைக்கவில்லையா? அப்போது பூமியை சுமந்து கொண்டிருந்தது யார்? ஆதிசேடன் பூமியை தன் தலை மீது தாங்கியது உண்மையானால் - அது எதன்மேல் நின்று பூமியைத் தாங்கிக் கொண்டிருந்தது? - என்பதற்கெல்லாம் எந்த விளக்கமும் இல்லையே? இந்த பொருத்தமற்ற சிவபுராணச் செயல்களை இக்காலத்தில் உண்மையென்று நம்புவோர் யார்?
இன்று கடல், தரை, விண் ஆகியவற்றில் வியத்தகு விஞ்ஞான விளைவுகள் நடக்கின்றன. பூமியையே சிவன் ரதமாக்கி ஓட்டியது உண்மையானால் எந்த பூமியின்மேல் ஓட்டினான் என்பதை புராணங்கட்குக் பொருள் கூறினோர் ஏன் உணர்ந்து எழுதவில்லை.
இந்த சிவனை ஒரு சமயம் வானாசூரன் என்னும் அரக்கன் மிக பலம் உள்ளவனாதலால் - தனக்கு வாயிற் காவலனாக வைத்துக் கொண்டானாம். இவனை மீட்க விஷ்ணு, விநாயகன், வீரபத்திரன், சுப்பிரமணியன் ஆகியோரை அனுப்பி வானா சூரனோடு போர் புரிந்து சண்டையிடும்போது சூரன் அவர்களுக்கு எதிராய் சிவனை அனுப்பி தேரிலேறி விஷ்ணுவோடு யுத்தம் செய்யும்போது சிவன் தேர் அடிபட்டு உடையவே, சிவன் விழும் சமயம் விஷ்ணு பார்த்து இவன் நம்முடையவன் என்று கண்டு ரிஷபமாகத் தாங்கி தப்பி ஓடச் செய்யவே - ஓடிப்போன சிவனுடன் வானாசூரன் தன் படைகளோடு சென்று போர் புரிந்தானாம்! (திருவரங்கக் கலம் பகம் 36ஆம் பாடலில் உள்ளது.)
கவி
அய்ங்கரன் முருகியோட, முருகனோட
முக்கனீசன் மக்களைத் தேடியோட
வாணணாயிரம் புயங்கள் குருதிநீர் சிந்தியோட
நேமி தொட்ட திருவரங்கராசரே!
இந்த நிகழ்வுகள் தேவர்களின் செயல்களை எவ்வளவு - பட்டவர்த்தனமாக பகர்கிறது, பாருங்கள்.
கலித்துரை
குண்டக் கழுத்தனை கூத்தாடும் பேயனைக் குண்டணியைக்
கண்ட கருத்தனை பிள்ளையைத் தின்ற காண வையன்
மண்டக்கரத்தனை கண்ணப்ப னெச்சிலை வாரியுண்ட
மண்டப் பறையனையோ தேவனென்றெப்படி பாடுவேனோ?
சிவவாக்கியர்
தேவர் தேவரென்று நின்று தேடுகின்ற மூடர்காள்
தேவர் யாவரென்றறிந்து தேடவு மறிகிறீர்
மூவர்தேவர் என்று நீர் பொழிந்ததென்ன நியாயமோ
மேவதாக உம்முளே, விரித்துணர்ந்து கொள்ளுமே!

அரியுமல்ல, அயனுமல்ல, அரனுமல்ல, அப்புரம்
கருமை செம்மை, வெண்மையும் கடந்து நின்ற காரணம்
பெரியதல்ல, சிறியதல்ல, பெண்ணு மாணுமல்லவே
கரியமுங் கடந்து நின்ற தூரதூர தூரமே!
அமரர் புராணச் சுருக்கம்
பல கலைகள் ஓதுவகை நாலுந் தானும்
பண்ணியதோர் நால்வதே மாறு சாஸ்திரம்
புலையுடனே தத்துவங்கள் தொண்ணூற் றாறும்
அவைகளிலே பொய்களவு அதர்மஞ் சேரும்
மலையரசன் சிவன், பிர்மா, விஷ்ணு, தானும்
மாசில்லா நாதனுட வழியுங் காணார்
நிலைபெருக மோட்ச வழி காணா தாலே
நீதியற்ற மனிதரென்று நிகழ்த்தி னோமே!
பெரிய சித்தர் ஞானக் கோவை
முச்சுடரும் ஒன்றாகும் மும்மூர்த்தி யல்ல
மூவருமே ஆளுருவம் ஒன்றே யாகும்
அச்சுதா யிவர்களுமே ஆண்பெண் அல்ல
அரனுமல்ல, லிங்கமல்ல, அநாதியான
சட்சிதானந் தனையே வணக்கஞ் செய்து
சற்குருவை தரிசித்துப் பாதம் போற்றி
எச்சரிக்கை கொண்டு நட அப்பா, அப்பா!
எண்ணில்லா முக்திவழி யெய்து வாயே!
அகஸ்தியர் ஞானம் - 30
ஓடுகின்ற வகைகளெல்லாம் உரைத்துப் போட்டேன்
உலகுதனில் மார்க்கமெலாம் உகந்து சொன்னேன்
தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன்
சிவன் பிர்மா விஷ்ணுவெல்லாம் பேயே என்றேன்
ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசத்தி என்றேன்
அஞ்ஞானம் பண்ணுகின்ற அகந்தை என்றேன்
பாடுகின்ற முப்பதுக்குள் அடக்கிப் போட்டேன்
பரமகுரு சொன்னபடி பாடினேனே!
அகத்தியர் ஞானம் 30 இல் பாடல் 9
கருதினாரிப்படியே சொன்னாரப்பா
கைலாய விடமெங்கே கருவூர் எங்கே
பருதியடா உலகமது பணியின் வாழ்வு
பராபரனாராறு சொயம் பகர்ந்த சோதி
ஒருவருமே நிகராத வஸ்துவுப்பா
ஓகோ, கோ, மயங்காதே யூன்றிப் பார்த்து
திரிபொருளை யறிவினாலுணர்ந்து பார்த்து
தெரிசிப்பாய் நெறிபத்துந் தெரிவிப்பாயே!
ஔவையார் - வெண்பா
மாலும் மனிதன் மலரோனும் தான் மனிதன்
ஆலமுண்ட கண்டன் - அவன் மனிதன்
சீலமுடன் உற்று உணர்ந்த உகந்த பெரியார்
கற்றும் அறிந்தார் இல்லைகாண்.
இப்பாடல்களின் பொருள் அனைத்தும் சிவன் முதலான மும்மூர்த்திகளும், எவ்வகையிலும் வணக்கத்திற்குரிய தேவர்கள் அல்ல. இவர்கள் நம்மைப் போன்ற வெறும் மனிதர்கள். வேறு எந்த சக்தியும் இல்லை. அறிவினால் உணர்ந்து பார்ப்பீர் என்று கூறுகின்றன.
ஜைன மதத்தில் ஒரு சிவன், சைவ (இந்து) மதத்தில் ஒரு சிவன். இந்த இரட்டை சிவன்களில் யார் பெரியவன்? யார் கடவுள்? என்று ஜைனமும் - சைவமும் மோதிக் கொள்கின்றன. ஆதாரங்களைக் (பொய்யுரைகள்) கூறி போட்டி போடுகின்றனர். அத்தனையும் அலசிப் பார்த்தால் அண்டப்புளுகு - ஆகாசப்புளுகு!
சிவாய நமஹ என்றுச் சொல்லி மொட்டையும், பட்டையும் போட்டுக் கொண்டு கொட்டை உருட்டிச் செல்லும் சிவபக்தர்களே! காடை விளக்கேற்றி- கார்த்திகை தீபத்தை கொண்டாடும் சிவபக்தர்களே! சிவக்கொழுந்துகளே! நீங்கள் வணங்கும் சிவபெருமானின் சிவபுராணத்தை - ஓரளவு விளக்கியுள்ளோம்.
திருநீரணிந்தது! என்ன.. என்ன? என்று திக்கெட்டும் ஓடி திருவண்ணாமலையில் கால் பதித்து சிவ - பார்வதி லிங்கத்தை (ஆண் குறி - பெண் குறி) தொழுதிடும் சிவனடியார்களே! போடுங்கள் - போடுங்கள் - விண்ணதிர முழங்கிடுங்கள்! அண்ணாமலைக்கு அரோகரா!
(நிறைவு)

விடுதலை,12.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக