புதன், 24 அக்டோபர், 2018

துக்ளக் (24.10.2018) பதிலுக்குப் பதிலடி!

கேள்வி: நாத்திகர்களை அடையாளம் காண்பதெப்படி?


துக்ளக் பதில்: ஹிந்து கடவுள்களையும், ஹிந்து நம்பிக்கைகளையும் கேவலப்படுத்தி, மற்ற மதங்களைப் பெருமைப்படுத்தி, தங்கள் தலைவர்களையும், அவர்களின் சிலையையும், சமாதியையும் வழிபடுகிறவர்களை நாத்திகர்கள் என்று அடையாளம் கண்டுகொள்ளலாம்.

நமது பதிலடி: ஹிந்து மதப்படி ஹிந்துக் கடவுள்களை கேவலப்படுத்தினால் அது நாத்திகமல்ல, அப்படியானால் எதுதான் நாத்திகம்?

வேதம் (சுருதி), தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண்டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகனாகின்றான்.

(மனுதர்மம், அத்தியாயம் 2; சுலோகம் 11)

இதைத்தான் மறைந்த சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதியும் வழிமொழிகிறார். (‘‘தெய்வத்தின் குரல், தொகுதி-2, பக்கம் 407-408)

“நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீச்வரவாதம் என்றுதானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தப்பு. ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டே கூட ஆஸ்திகர்களாக இருக்க முடியும்.’’

“அப்படிப்பட்ட பல பேர் இருக்கிறார்கள். இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? அப்படியானால் ஆஸ்திகம் என்றால் என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்றுதான் அர்த்தம்.’’

“வைதீக வழக்கை ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதே ஞானசம்பந்தரின் கொள்கையாகவும் இருந்திருக்கிறது. ஈசுவர பக்தி இல்லாமலிருப்பதுங்கூட அல்ல” என்று சூப்பர் சீனியர் காஞ்சி சங்கராச்சாரியார் கூறுகின்றார்.

கடவுள் இல்லை என்பதைக் கூடப் பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். அதே நேரத்தில் வேதத்தை எதிர்ப்பதையும், அறிவு கொண்டு ஆராய்வதையும் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

காரணம் வேதங்கள்தானே பிரம்மாவின் படைப்பில் பார்ப்பானுக்கு ஒசந்த இடம்!

ஹிந்துக் கடவுள்களைக் கேவலப்படுத்துவது பற்றியும் ‘துக்ளக்‘ பேசுகிறது.

உண்மையிலேயே ஹிந்துக் கடவுள்களைக் கேவலப்படுத்துபவர்கள் ஹிந்துக்களே! அவர்களால் கற்பிக்கப்பட்ட கடவுள்கள் ஆயிரக்கணக்கில் - ஒன்றையாவது ஆபாசமற்றதாக - ஒழுக்கமுள்ளதாக அவர்களால் படைக்க முடிந்திருக்கிறதா?

முழு முதற்கடவுளான சிவன் தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளைக் கற்பழித்தான் - முனிவர்கள் சாபமிட, சிவனின் சிசுனம் (ஆண்குறி) அறுந்து விழ - அதனை பார்வதி பெண்ணுறுப்பால் தாங்கிப் பிடிக்க சிவலிங்கமானது என்று எழுதியவர்கள் நாத்திகர்களா?

படைப்புக் கடவுள் என்று கூறும் பிரம்மாவின் மனைவியும், மகளும் சரசுவதியே! காத்தல் கடவுள் என்று கூறிக் கொள்ளும் விஷ்ணு - பிருந்தா கதை சென்னைக் கூவம்தான். விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். பதினாயிரம் மனைவிகளாம் -

ஹிந்து மதத்தில் இப்படியெல்லாம் கடவுளை ஆபாசமாகவும், அருவருப்பாகவும் கற்பித்துவிட்டு, நாம் ஏதோ அந்தக் கடவுள்களை தூஷிக்கிறோம் என்பது எத்தகைய அருவருப்பான குற்றச்சாட்டு.

உண்மையிலேயே கடவுள்களைக் கேவலப்படுத்துபவர்கள்  ஹிந்துக்களே!

தலைவர்களின் சிலைகளை நாத்திகர்கள் ஒன்றும் வழிபடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், மூட நம்பிக்கை ஒழிப்பு வாசகங்களையும், பகுத்தறிவுச் சிந்தனைகளையும், அந்தத் தலைவர்களின் சிலைகளின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை. இதுதான் இவர்களின் கண்களை உறுத்தோ உறுத்தென்று உறுத்துகிறது.

***


கேள்வி: பகவானை சதா வழிபடுபவர் களுக்குக்கூட கிடைக்காத ‘ஏகாதசி’யில் மறைந்து துவாதசியில் அடக்கம் செய்கிற பாக்கியம் கலைஞருக்குக் கிடைத்துள்ளதாக, நாத்திகம் பேசுபவர்கள் மேடைதோறும் பெருமை பீற்றிக் கொள்கிறார்களே, இதுபற்றி...

துக்ளக் பதில்: ‘நாத்திகராக இருந்தும் எங்கள் தலைவருக்குக் கடவுள் எப்படி அருளியிருக்கிறார் பார்த்தீர்களா?’ என்று சொல்லி அவர்களின் ‘பகுத்தறிவை’ வெளிப்படுத்துகிறார்கள்.

நமது பதிலடி: அப்படிப் பேசியவர்கள், பேசுபவர்கள் யார் என்று அறிவு நாணயத்துடன் தெரிவிக்கவேண்டும்.

சரி... அவர்கள் வழியிலேயே சொல்லுவோம் - நாத்திகர்களாக இருந்தால், நல்ல பாக்கியம் கிடைக்கும் என்பதுதான் அவர்களின் பதிலானால், அவர்களும் தாராளமாக நாத்திகர்களாக வேண்டியதுதானே! யார் கையைப் பிடித்து இழுத்துத் தடுத்தது?

***


கேள்வி: கிறித்துவ மத போதகர் ஒருவர் ஹிந்து மதம்பற்றியும், வழிபாடு குறித்தும் இழிவாகப் பேசியுள்ளார். இதுவும் பேச்சு சுதந்திரம் என்பார்களா அறிவுஜீவிகள்?

துக்ளக் பதில்: தி.க.., தி.மு.க.வைச் சேர்ந்த நாத்திகவாதிகள் ஹிந்து மதம், அதன் நம்பிக்கைகளைக் கேவலப்படுத்திப் பேசுவதை பகுத்தறிவு என்றும், பேச்சு, சுதந்திரம் என்றும் கொண்டாடும் அறிவுஜீவிகள் மற்ற மதத்தவர்கள் ஹிந்து மதத்தைக் கேவலமாகப் பேசுவதை ஏன் நியாயப்படுத்தமாட்டார்கள்?

நமது பதிலடி: ஹிந்து மதத்தை தி.க., தி.மு.க. நாத்திகர்கள் ஏன் பேசுகிறார்கள்? இந்த ஹிந்து மதம்தானே பிறப்பு அடிப்படையில் மனிதர்களைக் கேவலப்படுத்துகிறது!

ஓர் ஆண் கடவுளான பிரம்மாவின் நெற்றியிலிருந்து பிராமணன் பிறந்தான், காலிலிருந்து சூத்திரன் பிறந்தான் என்று எழுதி வைத்திருப்பது ஹிந்து மதம்தானே. பிராமணனுக்காகவே இந்த உலகத்தைப் பிரம்மா படைத்தான் என்பதும், அந்தப் பிராமணனுக்குப் பணிவிடை செய்து கிடப்பதே சூத்திரனின் தர்மம் என்றும், அந்த சூத்திரன் ஏழுவகைப்படுவான் - அதில் ஒன்று விபச்சாரி மகன் என்றும் எழுதி வைத்துள்ள ஹிந்து மதத்தை தலையில் தூக்கி வைத்துக் கொஞ்ச வேண்டுமா?

இன்னும் சொல்லப்போனால் இந்த இழிநிலையை எதிர்த்து இன்னும் வேகமாக எரிமலையாக வெடித்துக் கிளம்பியிருக்கவேண்டும்.

இங்கர்சாலும், ரசலும் கிறித்துவ மதத்தைப்பற்றித்தான் விமர்சிக்கிறார்கள்? நீங்கள் ஏன் இந்து மதத்தை விமர்சிக்கவில்லை என்று அவர்களிடம் யாரும் கேட்டதில்லையே!

அதையும் கடந்து, இங்கர்சாலின் ‘கடவுள்’, ஜீன்மஸ்லியரின் ‘‘மரண சாசனம்‘’, ரசலின் ‘நான் ஏன் கிறித்தவன் அல்ல’ என்பது போன்ற நூல்களையும் திராவிடர் கழகம் வெளியிட்டுக் கொண்டுதானே வருகிறது. எந்த விவரமும் இல்லாமல் எழுதுவதுதான் ‘துக்ளக்‘ கும்பலின் துன்மார்க்க புத்தி!

உ.பி.யில் என் கவுண்டர்களும், ‘துக்ளக்‘கின் பொய் மூட்டையும்


கேள்வி: உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்றது முதல் இதுநாள் வரை 1,500 என்கவுண்டர்கள் நடந்துள்ளனவே?

துக்ளக் பதில்: 15 ஆண்டுகளாக சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் அரசுகள் செய்யத் தவறியதைச் சேர்த்து செய்யவேண்டியிருப்பதால், யோகி அரசின் என்கவுண்டர் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.

நமது பதிலடி: என்கவுண்டர் குற்றத்திற்காக சிறையில் இருந்து வந்தவர்தானே இன்றைய பி.ஜே.பி.யின் தேசிய தலைவர் அமித்ஷா.

இவர்கள் நடத்திய போலி என்கவுண்டர்தான் சிரிப்பாய்ச் சிரிக்கிறதே!

நொய்டாவை சேர்ந்த ஜித்தேந்தர் யாதவ் முன்னாள் உடற்கட்டு வீரர் ஆவார். அவருடைய சகோதரியின் திருமண விழாவில் கலந்துகொண்ட பிறகு தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அந்தவழியே மாருதி காரில் நான்கு காவல்துறையினர் வந்துள்ளனர்.

அவர்கள் ஜித்தேந்தர் யாதவ் மற்றும் நண்பர்களிடம் அவர்கள் எதற்கு இங்கே நிற்கின்றனர் என அதட்டி உள்ளனர். ஜித்தேந்திர யாதவ் நடந்ததைக் கூறி உள்ளார்.   அப்போது அந்த காவலர்களில் ஒருவர், “யோகி ஆதித்ய நாத்தின் புதிய சட்டத்தின் படி நான்கு பேர் ஒன்றாக நடு இரவில் நின்று பேசக்கூடாது. நீங்கள் சட்டத்தை மீறுகிறீர்கள்” என்று கூறி உள்ளார். அந்தக் காவலர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும்  ஜித்தேந்தர் யாதவ் மற்றும் அவருடைய நண்பர்களை பின் இருக்கையில் அமர வைத்து அவர்கள் காரை செலுத்திக் கொண்டு சென்றுள் ளனர். யாதவ் அதுபோல ஒரு சட்டம் புதியதாக இயற்றப் பட்டதாக தமக்குத் தெரியாது என கூறி உள்ளார்.

மேலும் தங்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு அந்த காவலர், “நான் உன்னை காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறேன். அதற்கு முன்பு என் பதவி உயர்வுக்காக உங்களில் ஒருவர் அல்லது இருவரை என்கவுண்டர் செய்கிறேன்” எனச் சொல்லி பின்னால் திரும்பிப் பார்க்காமலே துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த குண்டு யாதவின் கழுத்தில் பாய்ந்து முதுகுத் தண்டு வழியே வெளி வந்துள்ளது.

பிறகு வேண்டுமென்றே வாகனத்தை மெதுவாக செலுத்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.   அதற்குள் யாதவ் இறந்து விடுவார் என நம்பியவர்களுக்கு அதிர்ச்சியாக அவர் பிழைத்துள்ளார். ஆனால் கழுத்துக்கு கீழே இயக்கத்தை இழந்ததால் தற்போது படுத்த படுக்கையாக இருக்கிறார்.

போலி என்கவுண்டருக்கு ஆளான ஜித்தேந்திர யாதவ் நீண்ட காலமாக படுத்த படுக்கையாக உள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை செய்த காவல்துறையினர் என்கவுண்டர் செய்த விஜய்தர்ஷன் சர்மா என்ற உதவி காவல் ஆய்வாளரை பணி இடைநீக்கம் செய்துள்ளனர்.மேலும் இந்த என்கவுண்ட தொடர்பாக 3 காவலர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசம் நொய்டாவில் பணிபுரியும் விஜய்தர்ஷன் சர்மா கடந்த 2017ஆம் ஆண்டு 22 என்கவுண்டர்களைச் செய்துள்ளார். இவரால் சுட்டுக் கொல்லப்பட்ட பலர் மீது காவல் நிலையத்தில் எந்த ஒரு குற்றவழக்கும் கிடையாது, அனைவரும் ஏழைகள் மற்றும் அப்பாவிகள் ஆவார்கள். மேலும் உத்தரப் பிரதேச காவல்துறையினரால் இதர பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர்கள் மட்டுமே காவல்துறையினரால் என்கவுண்டர் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பொதுநல அமைப்புகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களின் பின்னணி குறித்த உண்மையை அரசு வெளியிடவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

தற்போது உத்தரப்பிரதேசத்தில் போலி என் கவுண்டர்கள் அதிகமாகியுள்ளதால் மனித உரிமை ஆணையம் இவ்விவகாரத்தில் தலையிடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
-  விடுதலை நாளேடு, 24.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக