ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

சைவர்களின் மதப்பிரச்சாரம்

15.04.1928-  குடிஅரசிலிருந்து...

நாம் நாட்டுக்கோட்டை நகரத்திற்குப் போய்வந்த பிறகு அங்குள்ள சில நேயர்கள் ஒன்றுகூடி அவர் களுடைய சைவசமயத்திற்கு நம்மால் பெரிய ஆபத்து வந்துவிட்டதாகவும் உடனே அதற்குத் தக்க முயற்சி எடுத்துக் கொள்ளாவிட்டால் சைவ சமயமே முழுகிப் போகும் என்றும் கருதி பல ஆயிர ரூபாய்கள் ஒதுக்கி வைத்து சிவநேசன் என்பதான ஒரு பத்திரிகை ஆரம்பித் தார்கள். அப்பத்திரிகையை இந்து மதத்தைக் காப்பாற்ற புறப்பட்டதாகச் சொல்லி மக்களிடையே பரப்பினார்கள். அதன் முதலாவது ஆண்டு பதினாலாவது மலர் அனு பந்தத்தில் கோபிசந்தனம் என்னும் தலைப்பில் ஒரு சைவ சித்தாந்த செல்வர் எழுதுவதாவது.

தேவர்கள் முதலிய யாவரும் விபூதியை தரித்து மோட்சமடைய வேண்டும் என்னும் கருத்தினாலேயே கடவுள் மனிதனின் நெற்றியை குறுக்காகவே படைத் திருப்பதை யாவரும் காணலாம்.

இதற்கு ஆதாரம் கூர்ம புராணத்தில் சொல்லியிருப்ப தானது ஸ்ருஷ்டா ஸ்ருஷ்டி சலே ராஹர்தி புண்டசஸ்ய ரசஸ்த தாம, ஸஸர் ஜசலலாடம் ஹித்ரியக் கோர்த்துவம், நகர்த்துலம் ததாபி மாவை மூர்க்கா நகுர்வந்தித்ரி புண்டா ரகம். அதாவது பிரம்மா சிருஷ்டி தொடங்கும் போதே விபூதி மகிமை கூறி அதனை அணிந்து உய்வ தற்காகவே சர்வசனங்களின் நெற்றிகளையும் குறுக்கே ஆகிர்தியாகப் படைத்தனர். நெடுமையாகவேனும் வட்ட மாக வேனும் படைத் திலர், அப்படியிருக்க சிலர் அவ் விபூதி திரிபுண்டா மணியாமல் தீவினை வயப்பட்டு உழலு கிறார்கள் என்று விளங்குதலால் அறியலாம் என்கிறார்.

இனி கோபி சந்தனத்தைப்பற்றி வாசுதேவ உபநிஷத் தில் வாசுதேவன் மகன் அதாவது கிருஷ்ணன் கூறு வதாவது: கிருஷ்ணன் கோபிகா ஸ்தீரிகளை தழுவிக் கலந்தபோது அப்பெண்களின் ஸ்தனங்களிலிருந்தும் கிருஷ்ணன் மேனியில் ஒட்டியபின் அவர்கள் கழுவுவ தால் வழிந்தோடிய சந்தனமே கோபி சந்தனமென்று கூறப்படுகிறது. அப்பெயராலேயே அவ்வுண்மை விளங் கும் என எழுதியிருக்கிறார்.

எனவே சைவர்கள் பூசும் விபூதியாக குண்டத்தில் இருந்து வந்ததென்றும், வைணவர்கள் பூசும் கோபி சந்தனம் என்னும் நாமம் கிருஷ்ணன் கோபிகளைப் புணர்ந்த பிற்பாடு கழுவிய தண்ணீரென்றும் கருத்தை வைத்துக் கூறப்பட்டிருக்கிறது. இது உண்மையோ பொய்யோ என்று நாம் விசாரிக்க நாம் நேரம் செலவழிக்க வில்லை. ஏனெனில் அவர் சொல்வது இன்ன இன்ன சாஸ் திரத்தில் இருக்கின்றது என்பதாக அவரே எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆதலால் அதைப்பற்றி அதிகமாய் சந்தேகிக் கவும் வேண்டியதில்லை. ஆனால் ஒன்று நமக்குத் தெரிய வேண்டும். அதாவது:- கிருஷ்ணனும் கோபிகளும் கலந்த பின் கழுவினது தான் வைணவர் நெற்றியில் வைக்கும் கோபி நாமம் என்று இந்து மத ஆதாரங்களில் இருந்து சைவர்கள் எடுத்துக் காட்டுவது, சைவர்களுக்கு இந்துமத தூஷணையும், வைணவ சமய தூஷணையும் அல்ல வென்று தோன்றும்போதும் ஆண்குறியும், பெண் குறியும் சேர்ந்தபோது அறுந்து விழுந்ததின் தத்துவம் தான் லிங்கமும், ஆவுடையாரும் என்றும், அதைத்தான் சைவர்கள் கடவுளாக வணங்குகிறார்கள் என்றும், வைண வர்கள் சொல்லி இந்து மத ஆதாரங்களில் இருந்தே மேற் கோள்கள் எடுத்துக்காட்டுவது இந்து மத தூஷணையும், சைவசமய தூஷணையும் அல்லவென்று வைணவர் களுக்குத் தோன்றும்போது நாம் இவ்விரண்டையும் திரட்டி எடுத்துக் காட்டும்போது மாத்திரம் நம்மையேன் இவர்கள் இந்துமத தூஷணை, சமயதூஷணை நாஸ்திகம் என்று சொல்லுகின்றார்கள் என்பதுதான் நமக்கு விளங்க வில்லை. தவிர மதப்பித்துக் கொண்ட பெயர்களைப் பற்றியோ வயிற்றுப் பிழைப்புக்கும் கூலிக்கும் பிரச்சாரம் செய்யக் கிளம்பும் மனிதாபிமானிகளைப் பற்றியோ நாம் ஒரு சிறிதும் கவலைப்படவில்லை.

ஆனால், ஆராய்ச்சிக்காரர்கள் என்றும் பண்டிதர் களென்றும் வித்துவான்கள் என்றும் பெயர் வைத்துக் கொண்டு சமய வேஷமும் போட்டுக் கொண்டு சமய வரலாற்றுக்கும் சமய நூல்களுக்கும் தங்களையே நிபுணர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களை மாத்திரம் ஒன்று கேட்கிறோம். நாம் எழுதுவதும் பேசுவதும் நம்முடைய கற்பனையா? அல்லது இந்துமத ஆதாரங்கள் என்பவை களில் உள்ளவைகளா? உள்ள வைகளானால் அதற்கு என்ன சமாதானம் சொல்லுகிறீர்கள்? என்றுதான் கேட்கிறோம். தக்க சமாதானம் சொல்ல முன்வராமல் சூழ்ச்சிப் பிரச்சாரமும் பேடிப் பிரச் சாரமும் செய்யாதீர்கள். நபரைக் குறித்து ஆத்திரப் படாதீர்கள்.

உங்களைப் போல் பல கற்றறிந்த மூடர்கள் சேர்ந்து தான் பார்ப்பனர்களுக்கு உதவி செய்து நாட்டைப் பார்ப் பனர்களுக்கு அடிமையாக்கி, மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்தி அறிவற்ற மிருகங்களாக்கி விட்டார்கள். இது வரை செய்ததே போதும். இனியாவது உங்கள் ஆராய்ச்சி என்பதையும், சமய நிபுணத்துவம் என்பதையும், புதிது புதிதாகக் கண்டுபிடித்தல் என்பதையும் மக்களின் மனிதத் தன்மைக்கும், தன்னம்பிக்கைக்கும், சுயரிமரியாதைக்கும். அறிவு வளர்ச்சிக்கும் பயன்படும்படி செய்யுங்கள். முடியா விட்டால் சப்தத்திற்கும், எழுத்துக்கும், வார்த்தைக்கும் இலக்கணம் சொல்லும் வேலையில் உங்கள் வாழ்வை நடத்திக் கொள்ளுங்கள். சமயம் என்கிற வேலையில் புகுந்து மக்களைப் பாழ்படுத்தாதீர்கள். முட்டாள்கள் ஆக்காதீர்கள் என்றுதான் சொல்லுகிறோம்.
- தந்தை பெரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக