திங்கள், 16 மே, 2016

எதார்த்தவாதியும் - கிறிஸ்தவ மத போதகரும் பேசியது: ஓர் சம்பாஷணை

சனி, 11 அக்டோபர் 2014 16:03
எதா : அய்யா தங்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது?
போதகர் : பழைய காலத்திலே தேவ ஆவியால் ஏவப்பட்ட பல தீர்க்க தரிசிகளைக் கொண்டும் கிறிஸ்துவின் சீடர்களைக் கொண்டும் பிந்திய அப்போஸ்தலரைக் கொண்டும் எழுதப்பட்டது.
எதா : சரி தீர்க்கதரிசிகள் என்பவர் சிலவிடங்களில் தெய்வத்திற்கு பயப்படாதவர்கள் தானே?
போதகர் : இல்லை சார் எப்பொழுதும் தெய்வத்துக்கு பயப்படுகிறவர்கள்தான்.
எதா : நல்லது அப்படியானால் ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசிதானே?
போதகர் : ஆம். வாஸ்தவம்தான். ஆனால், அவனை(ரை) சில ஆராய்சி யாளர் தன் தகப்பனின் மறு மனையாட்டியின் மகளைக் கல்யாணம் செய்ததாகக் குறை கூறுவார்கள்
எதா : அதைப்பற்றி இப்பொழுது கவலை இல்லை. மானிடன் இயற்கையில் சகோதரியைக் கல்யாணம் செய்தேதான் உற்பத்தி ஆகி இருக்கலாம்.
போதகர் : அப்படியானால் ஆபிரகாமைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதென்ன?
எதா : உண்மையாக அவன் ஒரு தீர்க்கதரிசிதானே.
போதகர் : ஆம், வாஸ்தவம்தான். ஆதியாகமம் 2ஆம் அதிகாரம் 7ஆம் வசனத்தில் (கடவுளே) தேவனே அவன் ஒரு  தீர்க்கதரிசி என்பதாய் சொல்லியிருக்கிறார்
எதா : அந்த ஆபிரகாமே தானே ஆதியாகமம் 21ஆம் அதிகாரம் 11ஆம் வசனத்தில் இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும் பொருள்படப் பேசியதை தாங்கள் வாசித்ததுண்டா?
போதகர் : அ. ஆ.. ஆம் வாசித்ததுண்டு ஆனால், அவன் மனைவி  சாரா அழகுள்ளவள். அதற்காகப் பயந்து சொல்லியதுண்டு.
எதா : மனைவி அழகானால் மனிதர்கள் மனிதர்களுக்குப் பயந்து தெய்வத்திற்குப் பயப்பட வேண்டியதில்லையா?
போதகர் : சார் அது பழைய ஏற்பாட்டில் உள்ளது. புதிய ஏற்பாட்டில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.
எதா : சரி அய்யா நான் படிக்கிறேன். அப்படிப்பட்டவர் களாலேதானே உங்கள் பைபிள் எழுதப்பட்டது.
போதகர்: தெய்வமில்லாத காலமிது (என்பதாய் முணுமுணுத்துக்கொண்டு  நழுவி விடுகிறார்.)
எதா: பைபிள் காலத்தில் தெய்வப் பயமில்லாத இடமிருந்து இப்பொழுது காலம்  வந்து விட்டது  என்பது உங்கள் அனுபவம். ஆனால் எங்களுக்குத் தெய்வ கவலையில்லாத (காரியமே) வாழ்க்கையே வேண்டும்  என்பது எங்கள் துணிபு.
குடிஅரசு - கற்பனை உரையாடல் - 05.04.1931
-விடுதலை,17.12.10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக