செவ்வாய், 17 மே, 2016

முஸ்லீம் விதவைகளின் நிலைமை!

(தோழர் அல்ஹாஜ்சுபாகு மொ)

முஸ்லீம்கள் தங்களுக்கு முஹம்மது நபியவர்களைத் தலைவராகக் கொள்ளுகின்றனர். குர்ஆனைத் தங்களுக்கு தெய்வ வழி காட்டியாக நம்புகின்றார்கள்கள். ஆனால் இவர்கள் தங்கள் தலைவரையும், தங்கள் வழிகாட்டியாகிய குர்ஆன் சட்டபுத்தகத்தையும் நிராகரித்துவிட்டு வருகின்றார் கள் என்பதை நிரூபிக்க இவர்கள் தங்கள் பெண்மக்களை அடிமையினும் அடிமைகளாகவும், உயிரற்ற பிராணிகளாகவும் நடத்திவரும் ஒரு செயலே போதுமானதாகும். முஸ்லீம் விதவைகளின் நிலமையைப்பற்றியாகும்.
முஸ்லீம்களில் இந்த உண்மையை அறியாதார் எவருமில்லை. இவர்கள் தங்களுக்குத் தலைவராகக் கொண்ட நபி முகமது நபியவர்கள் காலத்தில் அராபிய விதவைகளின் இல்லை பொதுவாக பெண்களின் நிலைமை எப்படியிருந்தது? என்று இவர்கள் தெரியாதவர்கள் போல் நடந்து, கொள்ளு கின்றார்கள்.
1350 வருஷங்களுக்கு முன், நபியவர்கள் பிறந்த காலத்தில் அராபியர்கள் தங்களுக்குப் பெண் பிள்ளைகள் பிறப்பதை அபசகுணமாகவும், குலத்துக்கு பங்கத்தை விளைவிக்க பிறப்பதாகவும் கருதிவந்தனர். இதற்காகப் பிறந்த பெண் மக்களை யெல்லாம் குழிதோண்டி அதில் உயிருடன் போட்டு மூடிவிடுவார்கள்.
இதிலிரு ந்து மட்டும் பெண்களின் அந்தஸ்து எப்படிப் பட்டது? என்பதை விளக்காமலே உணரும் சக்தியுள்ளவர்கள் விளங்கிக் கொள்ளுவார்கள். ஏனையவர்கள் நபியவர்களின் சரித்திரத்தைப்படித்து விளங்கிக்கொள்ளட்டும். இப்படிப்பட்ட அந்தஸ்து படைத்த பெண்களில் விதவைகளுக்கு எவ்வித அந்தஸ்தளிக்கப்பட்டிருந்திருக்கும் என்பதையும் விளக்க வேண்டியது அவசியமில்லை.
இந்த விதவைகளின் அந்தஸ்தை உயர்த்தும் பொருட்டு பகுத்தறிவே உருவாக ஜனித்த நபிகளின் நாயகம்தான்  25 வயதுடைய பரிசுத்த யௌவன புருஷராயிருத்து கொண்டு, முன்னரே பலபுருஷர்களுக்கு வாழ்க்கைப் பட்டுப் பிள்ளைகள் பெற்று புருஷர்களை இழந்து  விதவையாக வாழ்ந்து வந்த தாய் கதிஜாஅம்மாள் என்னும் 40 வயதுடைய விதவையைக் காதல் மணமுறையில் தனக்கு முதல் துணைவியாகக் கொண்டார்கள்.
ஆனால் இந்த நபியவர்களின் காலடியைப் பின் பற்றி நடந்து கொள்ளுவதாகப் பெருமை பேசிக்கொள்ளும், முஸ்லீம்கள் என்போர்கள் வீட்டு இளம்விதவைகளை மறு விவாகம் செய்து, கொள்ள நடைமுறையில் அனுமதிக்காது அடிமைப்படுத்தி அனாச்சார வாழ்வு வாழும்படி செய்வதுடன் நில்லாது.
விதவா விவாகம் செய்து கொள்ளுபவர்களை இகழவும் செய்கிறர்கள் என்றால், இவர்களுக்கு அந்தோ இதை நிரூபிக்க எங்கள் குடும்பத்தினர் இது விஷயமாய் நடந்து கொண்ட விதத்தை இங்கு உண்மையை விளக்கும் முகத்தான் விவரிக்கின்றேன்.
எனது ஒரு சுற்றத்தாரின் மகள் ஒரு இளம் விதவையாக இருந்து வந்தார். இந்த விதவையை மறுமணம் செய்து கொள்ள விடாது எனது  சிற்றப்பனார் வைத்துக் காத்து வந்தார். இவர் மத பக்தி நிறைந்தவர். தன் நெற்றியில் கரும்புள்ளி விழும் முறையில் முஹமது நபியவர்கள் சொன்னபடி நடந்து கொள்ளுவகாக உலகம் போற்றுவதற்காகத் தொழுது வந்தார். ஜபமாலை உருட்டுபவர் வேதமோதுபவர்.
ஆனால் தன் தலைவரைப் பின் பற்றாமல் தன் இளங் குமாரியை இயற்கைக்கு முரணாக விதவையானவுடன் கைதியாக்கி வைத்திருந்தார். இதை குடும்ப கௌரவத்தை உயர்த்தும் குணமாகக் கருதப் பட்டு வந்தது. எங்கள் குடும்பத்தில் விதவா விவாகம் கிடையாது, என்று பெருமை பாராட்டி வந்தார்கள். இவருடைய மற்றோர் மணஞ்செய்த குமாரி இறந்து விட்டார்.
இந்தம்மாளின் கணவர் உலகாநுபவமும் பகுத்தறிவும் கொண்டவர். கைதியாக்கப்பட்டுள்ள தன் கொழுந்தியாளான விதவையை மணந்துகொள்ள விரும்பினார். பொங்கிற்று கோபம் எங்கள் உறவினருக்கு குடும்ப கவுரவத்துக்கு இழிவு படுத்தும் எண்ணம் என்று பிதற்றினார்.
ஆனால் பகுத்தறிவு பெற்ற இவருடைய ஏக புத்திரன் தன் விதவை சகோதரியை கைதிக் கூடத்திலிருந்து அப்புறப்படுத்தி மனைவியையிழந்த தன் மச்சானுக்கு மனைவியாக்கி வைத்தார். இது கேட்டு அடங்காக் கோபங்கொண்ட என் உறவினார் சீறிக் கொண்டு தான் வெகு பெருமையுடனும் செல்வத்துடனும் வளர்த்து வந்த ஏக புத்திரனை வீட்டை விட்டு அப்புறப்படுத்தி விட்டார்.
இதைப்போல் பல உதாரணங்களைக் காட்டுவேன். எவ் வளவு தான் பர்தாவுக்குள் அடைத்துவைத்தாலும் இயற்கை உணர்ச்சியை சாந்தி செய்து கொள்ள இளம் வித வைகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்காமலில்லை. ஹிந்து விதவைகளின் நடவடிக்கைகள் பகிரங்கமாய் விட்டாலும் கோஷாவுக்குள்ள விதவைகளின் நடவடிக்கைகள் அதிக பஹிரங்கமாவதில்லை.
இதுதான் வித்தியாசம் இருவர்களும் தங்கள் இயற்கைக் கிளர்ச்சியை சாந்தி செய்து கொண்டேதான் வருகின்றர்கள் பெற்றோர்களும் மற்றோர்களும் அறிந்தும் அறியாதவர்களைப் போல் நடித்துக் கொள்ளுகின்றார்கள். வேறு விதியில்லை.
முடிவாக முஸ்லிம் விதவைகளின் நிலைமை எவ்விதத் திலும் போற்றத் தக்க தல்ல என்பதை விளக்கி விட்டேன். முஸ்லிம்கள் பெருமை பாராட்டிக்கொள்ளுவதெல்லாம் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளுவதுதான். ஹிந் துக்கள் தங்கள் குற்றங்குறைகளை பஹிரங்மகாக வெளியிட்டு சீர் செய்து கொள்ளுகிறார்கள்.
முஸ்லிம்கள் பிளவையை மூடி மூடி வைத்துக்கொண்டு எங்கள் நபி, எங்கள் மதம், எங்கள் இஸ்லாம் பெண்களுக்கு வேண்டிய உரிமைகள் அனைத்தையும் அளித்து விட்டது. என்ற பெருமை யென்னும் முலாம் பூசிக்கொண்டே வருகிறார்கள்.
(புரட்சி - 1933)
-விடுதலை,22.1.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக