செவ்வாய், 2 ஜனவரி, 2018

கௌரவர்கள் எப்படிப் பிறந்தார்கள் தெரியுமா?

கௌரவர் பிறப்பு

குந்திக்கு தருமன் பிறந்ததைக் கேட்ட திருதராட்டிரன் மனைவி காந்தாரி தான் இரண்டு ஆண்டுகள் கர்ப்பம் (கரு) தரித்தும் குழந்தை பிறக்காததைக் கண்டு வயிற்றில் இடித்துக் கொண்டாள்.

இதில் இரண்டு செய்திகளை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

1. இரண்டு ஆண்டுகள் குழந்தை பிறக்காமல் கருவாகவே இருந்தது.

2. கலைந்த கருவை கலயத்தில் அள்ளி வைத்ததும் 101 குழந்தைகள் பிறந்தன என்கிறது இந்து மதத்தின் மகாபாரதம்.

கரு 10 மாதத்திற்குமேல் வயிற்றில் இருக்காது. 10 மாதத்திற்கு முன்புகூட குழந்தை பிறந்துவிடும். அப்படிப் பிறக்காமல் போனால் தாயும் குழந்தையும், இறந்து போவர். இதுதான் உலகம் அறிந்த அனுபவ உண்மை.

ஆனால், இந்து மதம் என்ன சொல்கிறது தெரியுமா? இரண்டு வருடமாக காந்தாரி வயிற்றிலே கரு அப்படியே இருந்ததாம். இதுதான் அறிவியலா? மகப்பேறு அறிவியல் இப்படித்தான் சொல்கிறதா? இக்கருத்து மகப்பேறு அறிவியலுக்கு எதிரானது, மூடத்தனமானது அறியாமையில் பிதற்றியது என்பது விளங்கவில்லையா?

அடுத்து, கருவைச் சுமந்து கொண்டுள்ள பெண் தன் வயிற்றில் அடித்தால், கரு கலையும். கலைந்த கரு இறந்துபோகும் இதுதான் அறிவியல்.

ஆனால், இந்துமதம் என்ன சொல்கிறது தெரியுமா? கலைந்த கரு இரத்தமாக வெளிவர அதை 101 கலயங்களில் அள்ளி மூட 101 குழந்தைகள் பிறந்தன.

வயிற்றில் உள்ள ஒரு கரு கலைந்தால், 100 குழந்தைகள் எப்படி பிறக்கும்? கரு கலைந்தால் அக்கரு இறந்துபோகும் என்பதே அறிவியல். ஆனால், கலைந்த கருவை 101 கலசத்தில் அள்ளி வைத்தார்களாம்? ஏன் கலசத்தில் அள்ளி வைக்க வேண்டும். கலைந்த கருவை குப்பையில்தானே போடுவார்கள்?

ஒரு கருவுற்ற பெண் தடுமாறி கீழே விழுந்தால் அவள் வயிற்றிலுள்ள கரு கலைந்து போகும். அந்தக் கருவை அள்ளி ஒரு கலயத்தில் போட்டு மூடினால், அது குழந்தையாக மாறுமா?

அப்படியிருக்க இப்படியொரு அறிவுக்கும், உண்மைக்கும், நடப்பிலும் பொருந்தாக் கருத்தைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?

அது மட்டுமல்ல, கலைந்த கரு கலசத்தில் அள்ளி வைக்கப்பட்ட முறையைக் கொண்டுதான் குளோனிங் முறையைக் கண்டுபித்தார்கள் என்பது அதைவிட அறிவற்ற பிதற்றல் அல்லவா?
குளோனிங் என்பது ஒரு உயிரணுவைக் கொண்டு அந்த உயிரினத்தை உருவாக்குதல் ஆகும். அதற்கும் கலசத்தில் அள்ளி வைப்பதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

இன்னும் வேடிக்கை என்னவென்றால் குழந்தை பிறப்பது பற்றி இந்து மதம் கூறுவதுதான்.
ஒரு பெண்ணுடன் ஓர் ஆண் உடலுறவு கொண்டு அவனது விந்தணு பெண்ணின் கருப்பையில் உள்ள சினை முட்டையுடன் சேர்ந்து கருவுண்டாகி அது வளர்ந்து குழந்தை பிறக்கும்.
ஆனால், இந்து மதம் குழந்தைகள் எப்படிப் பிறந்தன என்கிறது தெரியுமா?

கிருபர், கிருபி பிறப்பு

கௌதம முனிவரின் பிள்ளை சரத்வான். ஒருமுறை ஜாலவதி என்ற தேவகன்னிகை அவர் ஆசிரமத்தருகில் ஒற்றைத் துணியுடன் சென்றாள். முனிவர் கண்டார். விந்து வெளிப்பட்டது. அது நாணல் தண்டில் விழுந்தது. இரண்டு கூறுகளாகப் பிரிந்தது. அவற்றிலிருந்து ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை யொன்றும் பிறந்தன. காட்டிற்கு வேட்டையாடச் சென்ற சந்தனு அவர்களை எடுத்து ‘கிருபை’யோடு வளர்க்கிறார். ஆண் குழந்தை கிருபாச்சாரியாகிறது. பெண் குழந்தை கிருபியாகி பின்னர் துரோணரை மணக்கிறாள்.

துரோணர் பிறப்பு

கங்கை பிறக்கும் இடத்திற்கு அருகில் பரத்வாஜ முனிவர் வாழ்ந்து வந்தார். ஒருமுறை அவர் கங்கையில் நீராடிக் கொண்டிருந்த ‘க்ருதாசி’ என்ற தேவகன்னிகையைக் கண்டு காமுற்றார். வெளிப்பட்ட விந்தை அந்த முனிவர் ‘துரோணம்’ என்ற பாத்திரத்தில் ஏந்திக் கொண்டார். அதிலிருந்து பிறந்தவரே துரோணர். ‘அயோநிஜனாக’ப் பிறந்தவர். (யோனி ஙீ அயோனி)

அசுவத்தாமா பிறப்பு

துரோணர் மனைவியாகிய கிருபியின் கற்பினை நாரதரால் அறிந்த ருத்திரன், அதனையறிய நிருவாண பிச்சை கேட்டு அவள் அழகினைக் கண்டு விந்தைத் தட்டிலிட அதனை அவள் துரோணர் குதிரையிடம் வைத்ததனால் குதிரையின் முதுகைக் கிழித்துக்கொண்டு அசுவத்தாமன் பிறந்தான். (அசுவம் _ குதிரை)

(அபிதான சிந்தாமணி, பக்கம் 24, 1934 _பதிப்பு)

துருபதன் எப்படிப் பிறந்தான்?

மகனில்லாத பாஞ்சால அரசன் தனக்கு மகன் வேண்டித் தவம் செய்ய காட்டிற்குச் செல்கிறான். பல ஆண்டுகள் கடுந்தவம் செய்கிறான். அப்போது மேனகை அசோக மரங்களினூடே மறைந்து மெல்ல நடந்து வந்தாள். அரசன் அவளைப் பார்த்து விட்டான். அவள் இவனருகில் வந்தபோது இவனது விந்து வெளிப்பட்டு கீழே விழுந்துவிட்டது. அவ்வரசன் வெட்கத்துடன் கால்களினால் அதனை மறைத்தான். அதிலிருந்து ஒரு மகன் தோன்றினான். அங்கிருந்த முனிவர்கள் அந்தப் பிள்ளைக்குத் துருபதன் எனப் பெயரிட்டனர். (த்ரு _ மரத்தடியில், பதன் _ கால் வைத்ததனால் உண்டானவன்) அவனே பின்னர் பாஞ்சால நாட்டு அரசன் ஆகிறான்.

எப்படிங்க இப்படி அறிவற்று உளறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
இவை மட்டுமல்ல கர்ணன் பிறப்பு பற்றியும், பாண்டவர்கள் பிறப்பு பற்றியும் இந்து மதம் என்ன சொல்கிறது தெரியுமா?

பாண்டவர் பிறப்பு

சூரியனை தியானித்து கர்ணனைப் பெற்றாள். பாண்டுவின் அனுமதியின் பேரில் குந்தி எமதர்ம தேவனுக்குத் தருமரையும், வாயுதேவனுக்குப் பீமனையும், இந்திரனுக்கு அருச்சுனனையும் பெற்றாள். மாத்திரி அசுவின் தேவர் மூலம் நகுல சகாதேவர்களை ஈன்றாள்.

இதில் முக்கிய செய்தி என்னவென்றால் குந்திதேவி எமனுடன், வாயுவுடன், இந்திரனுடன், மாத்திரி அசுவினி தேவர்களுடன் உடலுறவு கொண்டு பெறவில்லை. இவர்களை மனதால் தியானித்தாளாம் (நினைத்தாளாம்). உடனே குழந்தை பிறந்தவிட்டதாம்! எப்படிங்க?

ஒருவரை மனதால் நினைத்தாலே வயிற்றில் கருவுண்டாகும் என்று உலகில் எந்த அறிவியல் கூறுகிறது? சொல்லுங்க! இதைவிட ஓர் அறிவில்லா உளறல் உலகில் வேறு இருக்க முடியுமா? இந்த இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
-சிகரம்
- உண்மை இதழ்,16-31.!7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக