திங்கள், 19 நவம்பர், 2018

அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்- 6



(பூலோகத்திலே புதுக்கருத்துக்கள் பரவிவிட் டனவாம் பழைய நிகழ்ச்சிகளுக்கு நாம் கூறின முடிவுகள், தீர்ப்புகள் தவறு என்று புகார் கிளம்பி விட்டது. ஆகவே, இனிப் பழைய தீர்ப்புகள் செல்லு படியாகா என்று கூறிவிடுவார்கள் போலிருக்கிறது. இதை உத்தேசித்து, புனர் விசாரணைக் கோர்ட் நியமித்திருக்கிறேன் என்று ஆண்டவன் அறிவித்தார். நீதிதேவன் வழக்கு மன்றத்தைக் கூட்டினார். முதல் புனர் விசாரணையாக, இராவணன் வழக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. கம்பர், பழைய கோர்ட் தீர்ப்பின் படி இராவணன் குற்றவாளிதான். இலங்கை அழிந்தது நியாயமே. இராவணன் இரக்க மற்ற அரக்கன் என்று நீதிதேவனிடம் சமர்ப்பிக்கிறார். இராவணன் தன் வழக்கைத் தானே நடத்த இசைகிறான், கோர்ட்டிலே, நீதிதேவன் தலைமை தாங்குகிறார். கம்பர், ஓலைச் சுவடிகளுடன் தயாராக இருக்கிறார். சாட்சிகளாகச் சூர்ப்பனகையும், கைகேயியும் ஆஜராகியுள்ளனர். இராவணன், எப்போதும் போலவே கெம்பீரமாக வருகிறான். வழக்கு ஆரம்பமாகிறது.) இராவணன்: இரக்கம் என்ற ஒரு பொருள் இல்லாதோர் அரக்கர்! உமது இலக்கணமல்லவா அது? கைகேயி அம்மையிடம் அந்த இரக்கம் ஒரு துளியும் இல்லையே! என், அரக்கர் குலமாக்க வில்லையே அம்மையை! இரக்கமென்ற ஒரு பொருள் இல்லாத காரணத்தாலே நானிருந்த இலங்கை அழிந்தது என்றீரே, இரக்கத்தை எள்ள ளவும் கொள்ளாத இந்த அம்மையார் இருந்தும் அயோத்திக்கு அழிவு வராத காரணம் என்ன? என் தங்கைக்குப் பங்கம் செய்தவர்களைப் பழிவாங்க வேண்டுமென்ற எண்ணம் என் கண்முன் சீதை கதறிய போதிலும் இரக்கப்படக் கூடாது - இரக்கத் துக்காக வேண்டி அரக்கர் குல அரச மங்கையின் அங்கத்தைத் துண்டித்த ஆரியர்களை வதைக்காது விட்டோமானால் அரக்கர் குலத்தையே ஆரிய குலத்தின் அடிமையாக்கி வைக்கும் இழிசெயல் புரிந்தவனாவோம் என்று எண்ணினேன். அந்த எண்ணத்தின் முன் இரக்கம் தலை காட்டவில்லை. இரக்கம் காட்டாததற்காக நான் அழிந்துபடுவது! இரக்கமின்றி என் தங்கையைப் பங்கப்படுத்தி, வாலியை மறைந்திருந்து கொன்ற இராமன், தெய்வ மென்று கொண்டாடப்படுவது, தேன் தமிழிலே இந்தக் கம்பனுக்குப் பாட்டு கட்ட தெரிந்ததால் நீதிதேவா! இது சரியா? சீதையை நான் களவாடிச் சிறை வைத்தேன். மூவர்கள் இது போல் பலமுறை செய்திருக்கிறார்களே! நான் சீதையின் சம்மதம் கிடைக்கட்டும் என்று சிந்தையில் மூண்ட காமத்தைக் கூட அடக்கினேன். மூவர்கள் அழகிகளைக் கண்ட நேரத்தில், அடக்க முடியாத காமத்தால் ஆபாசங்கள் செய்திருக்கின்றனரே! எந்தத் தேவன் கற்பை மதித்தான்? எத்தனை ஆஸ்ரமங்கள் விபச்சார விடுதிகளாக இருந்ததற்குச் சான்று வேண்டும்? மானைக் காட்டி மயக்கினேன் என்று கூறினார்; முருகன் யானையைக் காட்டி மிரட்டினானே வள்ளியை! இங்கே உள்ள தேவரும் மூவரும் செய்யாததை நான் செய்ததாக ருஜூப் படுத்தும் பார்ப்போம்! சீதை போன்ற ஜெகன் மோகினி என் கரத்திலே சிக்கியும் சீரழிக்காது நான் விட்டதுபோல் எந்தச் சிங்காரியையாவது தேவரும் மூவரும் விட்டிருப்பாரா கூறுங்கள்! இரக்கம் இல்லை என்று குற்றம் சாற்றினது அக்ரமம்! அதற்காக இலங்கையை அழித்தது அநீதி! என் வேலை தீர்ந்தது. இனி நீதியின் வேலை நடக்கட்டும்.


(நீதிதேவன் திடீரென்று மயங்கிக் கீழே சாய்கின்றான். ஜூரிகள் எழுந்து நிற்கிறார்கள். நீதிதேவனுக்கு மயக்கம் தெளிந்த பிறகு தீர்ப்பு என்று கோர்ட் சேவகர் தெரிவிக்கிறார். அது நெடுநாளைக்குப் பிறகுதானே சாத்தியம் என்று கூறிக் கொண்டே இராவணன் போய்விட கோர்ட் கலைகிறது. கம்பர் அவசரத்திலே கால் இடறி கீழே வீழ்கிறார்)


காட்சி - 5


இடம் : தவச்சாலை இருப்போர்: சம்புகன், இராமன், சம்புகன் தாய். நிலைமை: (தவச்சாலையில் சம்புகன், தவம் செய்து கொண்டிருந்தான். சாந்தி தவழும் அவன் முகம், காண்போரை வசீகரப்படுத்தக் கூடியதாக இருக் கிறது.) தேவனின் திருப்பெயர்களைக் கூறித் துதிக்கிறான்.


இராமன் அங்கு வருகிறான். முகத்திலே - கோபக் குறியுடன்.


சம்புகனின் தவம், இராமனின் அதிகாரக் குரலால் கலைகிறது.


சீற்றத்துடன், பேசுகிறான் மன்னன் - காரணம் புரியாத வனாகிக் குழம்புகிறான் சம்புகன்.


மன்னரின் கோபம், எதன் பொருட்டு என்பதை அறிந்ததும் சம்புகனுக்குச் சிரிப்பு உண்டாகிறது.


தவம் செய்வது, தவறா! என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்கிறான். தண்டிக்க வந்த இராம னையும் கேட்கிறான்.


சம்புகன்: தரும சொரூபியே! தவம் செய்வது, குற்றமா? என் தலை மட்டும் வெட்டப்பட்டு விட்டால், கவலை கொள்ளேன், இராமா! தர்மத் தையே, வெட்டி வீழ்த்துகிறாயே, - தகுமா? இராவ ணனைக் கொன்றாய், இலங்கையை வென்றாய், என்று கூறினார்களே, அது பொய்! மன்னரின் பெருமை மங்கக் கூடாது என்பதற்காக, யாரோ, தந்திரசாலி கட்டிவிட்ட பொய்யாக இருக்க வேண்டும். இராமா! நீ, இராவணனிடம் தோற்றாய் - அவன் உன்னைத் தன் பெருந்தன்மையால், மன்னித்தான் - மணி முடியும் சுமந்து கொண்டிரு என்று சொன்னான். - ஆம்! அதுதான் நடந்தி ருக்கும் - இங்கு நீ, இராவணனுடைய பிரதிநிதியாகவே வந்திருக்கிறாய்.


இராமன்: சம்புகா! சித்த சுவாதீனமற்றவன் போலப் பேசாதே -


சம்புகன்: பொய் அல்ல! அவன் தவத்தை அழிப்பவன் - இதோ நீயும் அதே வேலையை செய்ய வந்திருக்கிறாய் - அவனாவது தவத்தை மட்டும் அழித்தான். நீயோ, தவம் செய்யும் என்னையே அழிக்க வந்தாய் - அவனுக்கு நீ பிரதிநிதிதானே! - பொய்யா - ?


இராமன்: சம்புகா! இங்கு நான் தவம் கூடாது என்று கூறி, நடத்தப்படும் தவங்களை எல்லாம் அழித்துக் கொண்டிருக்கிறேன் என்றா எண்ணு கிறாய்? தவும் நடக்கிறது - நான் அதனை ஆதரிக்கிறேன் - உதவியும் செய்கிறேன்.


சம்புகன்: இது, தவம் அல்லவா?


இராமன்: தவம்தான்! ஆனால் நீ செய்வது, தகாது - என் கோபம், தவத்தின் மீது அல்ல - அந்தக் குணம் அரக்கனுக்கு அவரவர், தத்தம், குலத்துக் கேற்ப நடக்க வேண்டும் என்ற தர்மத் தைக் காப்பாற்றவே, நான் இந்தக் கடுமையான நட வடிக்கை எடுக்க நேரிடுகிறது. அரக்கர் போலத் தவங்களைக் கெடுக்கும் துஷ்டனல்ல நான்.


சம்புகன்: யோசியாமல் பொய் பேசுகிறாய் - இராமா! கூசாது பேசுகிறாய், உன் ஆட்சியிலே, சிலருக்குத் தவம் செய்தால், ஆதரவும், என் போலச் சிலருக்குத் தலைபோகும் நிலையும் இருக்கிறது. இதை நீ நீதி என்கிறாய்.


இராமன்: தர்மம்! - நானும் மீற முடியாத தர்மம்.


சம்புகன்: இதற்குப் பெயர் தர்மம்! அரக்கர் செய்தது மட்டும் என்ன? அவர்களும், ஆரியர் செய்த தவங்களைக் கெடுத்தனரே தவிர, அவர்கள் தவத்தையே வெறுப்பவர் என்றும் கூற முடியாதே, அவர்களில் பலர் தவம் செய்தனர். - இராவணனே, பெரிய தவசி! அரக்கர் தலைவர்களெல்லாம், தவம் பல செய்து, வரம் பல பெற்றவர்கள். ஆகவே அவர்களும், தவம் என்றாலே வெறுத்து அழித்தவர்களல்ல - தவம் நாங்கள் செய்யலாம் - ஆரியர் செய்யலாகாது என்றனர். -அழித்தனர் - நீயும், இங்கு ஆரியர் தவம் புரியலாம், அநாரியனான நான் புரிதல் தகாது, தலையை வெட்டுவேன் என்கிறாய் - இலங்கையான் செய்தால் பாபம்! அயோத்தியான் அதே காரியத்தைச் செய்யும்போது அதற்குப் பெயர் ராஜ தர்மம்! இராமா! எனக்கு வெட்கமாக இருக்கிறது. இப்படிப்பட்ட அரசிலே வாழ்கிறோமே என்று - சீக்கிரம், என் தலையை வெட்டிவிடும்.


(வாதம் முடிந்தது. இராமனின் தண்டனை கிடைத்தது, வரம் வேண்டி தவம் செய்த சம்பு கனுக்கு அவன் தலை தரையில் உருண்டது.)


இராமன், தவச்சாலையை விட்டு நீங்கினான்.


இரத்தம் ஒழுகும் தலை! துடித்துத் துவண்ட உடல்! காக்கை, கழுகுகள் வட்டமிடலாயின. வழிப்போக்கர்கள், இந்தக் கோரக் காட்சியைக் கண்டனர். அலறினர்.


சம்புகனின் தாயாருக்கு விஷயம் தெரிவிக்கப் பட்டது - உன் மகன் தலையை யாரோ வெட்டி விட்டனர் என்று!


அய்யோ, மகனே! என்று அண்டமதிரக் கூவி னாள் அன்னை. ஓடோடி வந்தாள் தவச்சாலைக்கு, தரையில் உருண்டு கிடந்த தலையைக் கண்டாள். மீண்டும் கண் திறந்தாள், - தலையைக் கையிலே எடுத்தாள் - துடி துடித்தாள் - பெருங்குரலில் கூவி அழுதாள் - பெற்றவள், வேறென்ன செய்வாள்?


எடுத்துக் கொண்டாள் தலையை - எதிர்ப்பட்டோரை எல்லாம், கேட்கலுற்றாள், யார் செய்தது இக்கொடுஞ்செயலை என்று


சம்புகன் தாயார்: மகனே! இந்தக் கதியா உனக்கு? யார் செய்த சதியடா இது? எந்தப் பாதகன், எந்தப் பாவி இந்தக் காரியத்தைச் செய்தான்? கண் மூடிக் கைகூப்பிக் கடவுளைத் தொழுது கொண்டிருந்த என் மகனை, கத்தி கொண்டு, கழுத்தை வெட்டிய காதகன் யார்? மகனே! மகேசனைக் காண வேண்டும், அவன் அருளைப் பெற வேண்டும், அதற்கான ஞான மார்க்கத்தை நாட வேண்டும், என்று ஏதேதோ கூறினாயே. இந்தக் கதிக்கு ஆளானாயே! ஈவு இரக்கமற்ற இந்தச் செயலைச் செய்தவன் யார்? இலங்கையிலே இருந்து, தப்பி ஓடி வந்த அரக்கன் எவனாவது செய்திருப்பானோ இந்தக் காரியத்தை! மகனே! அருமை மகனே! வெட்டுண்ட உன் தலையை, நான் எப்படியடா கண்டு சகிப்பேன். தவம் செய்கிறேன், தவம் செய்கிறேன் என்று கூறித் தேகத்தைப் பாழாக்கிக் கொள்கிறாயே, காணும் போதே பெற்ற மனம் பகீரென எரிகிறதே, போதுமடா அப்பா உன் தவம்! இதற்கு கடவுள் அளிக்கும் அருள் நமக்குப் போதும்! எழுந்திரு. சாப்பிடு, உடலைக் கவனித்துக்கொள், என்று நான் சொன்னபோதெல்லாம், ஆசை அதிகமாகக் கொண்டு, அன்னையே! அஞ்ஞானம் பேசுகிறாயே! அவன் அருளை நாட அகோரத்தவம் செய்வது முறைதானே - நான் தவத்தைக் கைவிடேன் - மகா பாபமாகும் அதை விடப் பாபம் தவத்தைத் தடுப்பதும் கெடுப்பதும், என்று, எனக்குப் புத்திமதி கூறினாயே - இந்தக் கதி வந்ததே!


உன் முகத்தைக் கண்டபோது, ஞான ஒளி வீசியிருக்குமே! தவத்தின் களையைக் கண்டும், இந்தக் கொலையைச் செய்யத் துணிந்த பாதகன், யார்? யாரடா மகனே? அவன் குருடனா? பகவான் நாமத்தை நீ பூஜிப்பதைக் கேட்டும், உன் தலையை வெட்டிய அந்தப் பாவி, செவிடனா?


சூழ வந்திருப்போரைக் கண்டு) ஊமைகளா அய்யா நீங்கள் - யார் செய்த, அக்ரமம் இது?


இதோ, பாருங்கள் - என் மகனின் தலை - இது, தகுமா, சொல்லடா - சொல்.


ஏன், ஒடுகிறாய்? நில்லடா, நில் - எவன் செய்தான் இந்தக் காரியத்தை ?


தலையை வெட்டிய பாதகன் யார்? என் மகனைக் கொன்ற கொடியவன் யார்? தவசியைக் கொன்ற கொடியவன் யார்?என் மகனைக் கொன்ற மாபாவி யார்? இரக்கமற்ற அந்தக் கொடியவன் எங்கே இருக்கிறான்?


தொடரும்...


-  விடுதலை நாளேடு, 18.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக